என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.பி.எல்.லில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணணையாளர்கள் என 38 பேரை கிரிக்கெட் வாரியம் மாலத்தீவுக்கு அனுப்பி வைத்தது.

    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே ஒத்தி வைக்கப்பட்டது. வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த முடிவை எடுத்தது.

    இதைத்தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வந்த வெளிநாட்டு வீரர்களை அவர்களது நாட்டுக்கு கிரிக்கெட் வாரியம் பத்திரமாக அனுப்பி வைத்தது.

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேச வீரர்கள் அவர்களது நாடுகளுக்கு திரும்பி இருந்தனர். இந்திய பயணிகள் விமானத்துக்கு ஆஸ்திரேலியாவில் வருகிற 15-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஐ.பி.எல்.லில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணணையாளர்கள் என 38 பேர் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரையும் கிரிக்கெட் வாரியம் மாலத்தீவுக்கு அனுப்பி வைத்தது. மாலத்தீவில் அவர்கள் தனிமையில் இருந்த பிறகு தங்களது நாட்டுக்கு திரும்ப முடிவு செய்து இருந்தனர்.

    இதற்கிடையே மாலத்தீவில் உள்ள மதுபாரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் டேவிட் வார்னரும், முன்னாள் வீரரும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான மைக்கேல் சிலாட்டர் சண்டையிட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

    முதலில் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

    இதை சிலாட்டர் மறுத்துள்ளார். இது முற்றிலும் வதந்தியான தகவல் என்று அவர் தெரித்துள்ளார். இது தொடர்பாக சிலாட்டர் கூறும்போது, ‘நானும் டேவிட் வார்னரும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் சண்டை வருவதற்கான வாய்ப்பே இல்லை. இதுமாதிரியான தகவல் எங்கிருந்துதான் வருகிறது என்று தெரிய வில்லை’ என்றார்.

    ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணியின் தொடர்தோல்வியால் வார்னர் கேப்டன் பதவியை இழந்தார். வில்லியம்சனுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.

    டெலிவி‌ஷன் வர்ணனையாளரான சிலாட்டர் ஆஸ்திரேலிய பிரதமரை கடுமையாக சாடி இருந்தார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமானதை தொடர்ந்து ஆஸ்திரேலியர்கள் இந்தியாவில் இருந்து நாடு திரும்ப பிரதமர் தடை விதித்ததால் அவர் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    சிலாட்டர் தான் முதலில் மாலத்தீவு சென்றார். அதன்பிறகுதான் மற்ற ஆஸ்திரேலிய குழுவினர் அங்கு சென்றனர். 

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்தால் ஐக்கிய அரபு எமிரேட்சில் எஞ்சிய ஆட்டங்களை நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

    லண்டன்:

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது.

    இந்த ஆண்டுக்கான 14-வது ஐ.பி.எல். போட்டி ரசிகர்கள் இன்றி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, பெங்களூர் ஆகிய 6 நகரங்களில் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    கடந்த மாதம் 9-ந்தேதி இந்த போட்டி தொடங்கியது. சென்னை, மும்பையில் போட்டிகள் நடைபெற்று முடிந்தன.

    டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்த வீரர்கள் பாதிக்கப்பட்டதால் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

    52 நாட்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐ.பி.எல். போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற்று இருந்தன. ஆனால் 24 நாளில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றது.

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய வீரர்களில் இதுவரை 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு சி.எஸ்.கே. அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்ஹஸ்சி, பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி ஆகியோரும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர்.

    ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதால் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2,500 கோடி இழப்பு ஏற்பட்டது. இதனால் எஞ்சிய ஆட்டங்களை எப்படியாவது நடத்துவது என்பதில் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக இருக்கிறது.

    செப்டம்பர் மாதத்தில் எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது. அதாவது உலக கோப்பைக்கு முன்பு நடத்தி முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்தால் ஐக்கிய அரபு எமிரேட்சில் எஞ்சிய ஆட்டங்களை நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

    இதற்கிடையே இங்கிலாந்தில் உள்ள 4 கவுண்டி கிளப்புகளும், இலங்கை கிரிக்கெட் வாரியமும் ஐ.பி.எல். போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன.

    இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டிகளை இங்கிலாந்தில் நடத்தலாம் என்று அந்நாட்டு முன்னாள் வீரரும் டெலிவி‌ஷன் வர்ணணையாளருமான கெவின் பீட்டர்சன் யோசனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்துவது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஐ.பி.எல். போட்டிகளை இங்கிலாந்தில் நடத்த வேண்டும் என்று கருதுகிறேன்.

    இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு சிறிது இடைவெளி இருக்கிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகளின் அனைத்து முன்னணி வீரர்களும் இங்கிலாந்தில் இருப்பார்கள். இதனால் செப்டம்பர் இறுதியில் ஐ.பி.எல். போட்டியை நடத்தினால் அற்புதமாக இருக்கும்.

    மான்செஸ்டர், லீட்ஸ், பர்மிங்காம், லண்டனில் இரு மைதானங்கள் ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். ஐ.பி.எல். ஆட்டங்களுக்கு ரசிகர்களை அனுமதிக்கவும் வாய்ப்பு உள்ளது.

    லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடி உள்ளேன். இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தால் வெளிநாட்டில் விளையாடுவதுபோல் இருக்கும். அந்த அளவுக்கு இங்கிலாந்தில் இந்திய வீரர்களுக்கு ஆதரவு இருக்கும்.

    இவ்வாறு பீட்டர்சன் கூறியுள்ளார். 

    டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்களை மொத்தம் 18 நாட்கள் தனிமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் அடுத்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. அதைத் தொடர்ந்து இந்திய அணி அங்கு இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் நாட்டிங்காமில் ஆகஸ்டு 4-ந்தேதி தொடங்குகிறது. இவ்விரு போட்டிகளுக்கான விராட் கோலி தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. 4 மாற்று வீரர்களும் உடன் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    கொரோனா பரவலுக்கு மத்தியில் போட்டி நடைபெற இருப்பதால் வீரர்களுக்கான பாதுகாப்பு நடைமுறை குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் நேற்று கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக வருகிற 25-ந்தேதி முதல் இந்திய வீரர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் (பயோ-பபுள்) இணைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் அவர்கள் 8 நாட்கள் கடுமையாக தனிமைப்படுத்தப்படுவார்கள். ஓட்டல் அறையிலேயே முடங்கி இருக்க வேண்டியது இருக்கும். தனிமைப்படுத்துதலின் போது 3 நாள் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

    அதன் பிறகு ஜூன் 2-ந்தேதி இங்கிலாந்துக்கு கிளம்புகிறார்கள். அங்கு சென்றதும் நமது வீரர்கள் மேலும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஏற்கனவே இந்தியாவில் தனிமைப்படுத்துதலில் இருந்து விட்டு தனிவிமானத்தில் பயணித்து உடனடியாக மற்றொரு பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைவதால் இந்த முறை பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அடிக்கடி கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்து அடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்க 1 மாத கால இடைவெளி இருந்தாலும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக வீரர்கள் வெளியே சுற்ற முடியாது. அதே சமயம் இது நீண்ட தொடர் என்பதால் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை உடன் அழைத்து செல்லலாம்.

    18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே வீரர்கள் தடுப்பூசியின் முதலாவது டோஸ் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் 2-வது டோஸ் போடுவதில் தான் கேள்வி எழுகிறது. ஏனெனில் அந்த சமயத்தில் வீரர்கள் இங்கிலாந்தில் இருப்பார்கள். எனவே வீரர்களுக்கு 2-வது டோஸ் செலுத்துவதில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளோம். ஒரு வேளை இங்கிலாந்து அரசு தடுப்பூசி போட ஒப்புதல் அளிக்காவிட்டால், இந்தியாவில் இருந்து 2-வது டோஸ் பெற்றுக்கொள்வோம்.

    இவ்வாறு கிரிக்கெட் வாரிய நிர்வாகி கூறினார்.
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் பிரசித் கிருஷ்ணா, டிம் செய்பெர்ட் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    ஆமதாபாத்:

    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ பபுள்) மீறி கொரோனா தொற்று வீரர்களை தாக்கியதை அடுத்து கடந்த 4-ந் தேதி ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோர் முதலில் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். அடுத்து விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா (ஐதராபாத் சன்ரைசர்ஸ்), பயிற்சியாளர்கள் எல்.பாலாஜி, மைக் ஹஸ்சி (சென்னை சூப்பர் கிங்ஸ்), சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா (டெல்லி கேப்பிட்டல்ஸ்) ஆகியோர் தொடர்ச்சியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் வேறு வழியின்றி 31 ஆட்டங்கள் மீதம் இருக்கும் நிலையில் இந்த போட்டி நிறுத்தப்பட்டது.

    இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அனைவரும் வீடு திரும்பி விட்டனர். இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும் பத்திரமாக தங்களது தாயகம் சென்று விட்டனர். இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் இங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானங்கள் செல்ல அந்த நாட்டு அரசு வருகிற 15-ந் தேதி வரை தடை விதித்துள்ளது. இதனால் வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள், போட்டி அதிகாரிகள் உள்ளிட்ட 40 ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்ப முடியாமல் மாலத்தீவுக்கு சென்று தங்கி உள்ளனர். 15-ந் தேதிக்கு பிறகு விமான தடையை ஆஸ்திரேலிய அரசு நீக்கியுள்ளதால், அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து தங்கள் நாட்டுக்கு செல்வார்கள் என்று தெரிகிறது.

    டிம் செய்பெர்ட்

    இதே போல் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்ற நியூசிலாந்து வீரர்கள் கடந்த 2 நாட்களாக விமானங்கள் மூலம் தங்கள் நாட்டுக்கு திரும்பினார்கள். நாட்டுக்கு திரும்பும் முன்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான டிம் செய்பெர்ட்டுக்கு (நியூசிலாந்து) நடத்தப்பட்ட பரிசோதனையில் மிதமான கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. கடந்த 10 நாட்களில் 7 முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்து இருந்தது.

    கடைசியாக நடத்தப்பட்ட இரண்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் அவர் தங்கள் நாட்டு வீரர்களுடன் இணைந்து நாடு திரும்ப முடியவில்லை. இதையடுத்து டிம் செய்பெர்ட் ஆமதாபாத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். அங்கிருந்து அவர் சென்னை அழைத்து வரப்பட்டு இங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு 2 முறை பரிசோதனை முடிவு ‘நெகட்டிவ்’ என்று வந்த பிறகு தான் டிம் செய்பெர்ட் நாடு திரும்ப முடியும். அத்துடன் அவர் தனது நாட்டுக்கு சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை முடித்த பிறகு தான் குடும்பத்தினருடன் இணைய முடியும்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த 25 வயது இந்திய வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணாவும் கொரோனாவில் சிக்கி இருக்கிறார். இதன் மூலம் கொரோனாவால் பாதித்த கொல்கத்தா அணி வீரர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. ஐ.பி.எல். போட்டி தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனைகள் எல்லாம் முடித்து கொண்டு பிரசித் கிருஷ்ணா ஆமதாபாத்தில் இருந்து தனது சொந்த ஊரான பெங்களூருக்கு கடந்த 5-ந் தேதி விமானம் மூலம் திரும்பினார். அடுத்த நாளில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு இருக்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் மாற்று வீரராக தேர்வாகி இருக்கும் பிரசித் கிருஷ்ணா அதற்குள் குணமடைந்து அணியுடன் இணைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெண்களுக்கான 50 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா 2-1 என்ற புள்ளி கணக்கில் அன்னா லுகாசிக்கை (போலந்து) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
    சோபியா:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான கடைசி தகுதி சுற்றான உலக மல்யுத்த போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 50 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா 2-1 என்ற புள்ளி கணக்கில் அன்னா லுகாசிக்கை (போலந்து) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் சீமா பிஸ்லா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் பங்கேற்க தகுதி பெற்ற 8-வது நபர் சீமா பிஸ்லா ஆவார். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியா சார்பில் மொத்தம் 8 பேர் தகுதி பெற்றதே அதிகபட்சமாகும். அது இந்த முறை சமன் செய்யப்பட்டுள்ளது.

    இறுதி ஆட்டத்தில் சீமா பிஸ்லாவை எதிர்த்து ஆட இருந்த லூசியா யாமிலெத் (ஈகுவடார்)காயம் காரணமாக விலகினார். இதனால் களம் இறங்காமலேயே சீமா தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார்.
    அபித் அலி இரட்டை சதமடித்து அசத்த, ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 510 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
    ஹராரே:

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி டி 20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
     
    பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹராரேயில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 90 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்துள்ளது. அபித் அலி 118 ரன்னுடனும், சஜித் கான் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    அசார் அலி 126 ரன்னில் ஆட்டமிழந்தார். அபித் அலி, அசார் அலி ஜோடி 236 ரன்கள் குவித்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. 118 ரன்னுடன் களத்தில் நின்ற அபித் அலி சிறப்பாக விளையாடி இரட்டை சதமடித்து அசத்தினார்.

    சஜித் கான்20 ரன், ரிஸ்வான் 21 ரன், ஹசன் அலி ரன் எடுக்காமல் அவுட்டாகினர்.

    97 ரன்னில் ஆட்டமிழந்த நவ்மன் அலி

    அடுத்து இறங்கிய நவ்மன் அலி கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடினார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 97 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 147.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 510 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அபித் அலி 215 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் முசாராபனி 3 விக்கெட்டும், சிசோரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஜிம்பாப்வே அணியினரின் முன்னணி வீரர்களை விரைவில் பெவிலியனுக்கு அனுப்பினர்.

    இரண்டாம் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 30 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 52  ரன்கள் எடுத்துள்ளது. சகாப்வா 28 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
    24 மணி நேரத்தில் ரூ.3 கோடியே 60 லட்சம் நிதி வசூல் ஆகி உள்ளதாக விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
    மும்பை:

    கொரோனாவில் பாதித்தவர்களுக்கு உதவிடும்வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் ‘கெட்டோ’ என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஆன் லைன் மூலம் ரூ.7 கோடி நிதி திரட்டி அளிக்க முடிவு செய்தனர். முதற்கட்டமாக ரூ.2 கோடியை அவர்கள் நன்கொடையாக வழங்கினர். மற்றவர்களும் கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி வழங்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

    இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் ரூ.3 கோடியே 60 லட்சம் நிதி வசூல் ஆகி உள்ளதாக விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘நிதி திரட்டும் முயற்சிக்கு கிடைத்துள்ள பெரிய அளவிலான ஆதரவு எங்களை திகைக்க வைக்கிறது. நமது இலக்கை எட்ட தொடர்ந்து போராடுவோம். தேசத்துக்கு உதவிடுவோம’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜாவில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடைபெற்றது.

    கொழும்பு:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொரோனா பாதிப்பு காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜாவில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடந்தது.

    கோப்புப்படம்

    இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி கடந்த மாதம் 9-ந்தேதி தொடங்கியது. சென்னை, மும்பையில் போட்டி முடிந்த நிலையில் டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்று கொண்டு இருக்கும்போது 4 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் (கொல்கத்தா), விருத்திமான் சகா (ஐதராபாத்), அமித் மிஸ்ரா (டெல்லி), ஆகியோருக்கு பாதிப்பு இருந்தது. அதோடு சி.எஸ்.கே. அணியை சேர்ந்த பயிற்சியாளர்கள் எல்.பாலாஜி, மைக் ஹஸ்சி ஆகியோருக்கும் தொற்று உறுதியானது.

    இதனால் கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டியை பாதியில் நிறுத்தியது.

    இந்த ஐ.பி.எல். சீசனில் 29 ஆட்டங்கள் முடிந்திருந்தது. 31 ஆட்டங்கள் இன்னும் எஞ்சியுள்ளன. எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை செப்டம்பர் மாதம் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

    20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பு இந்த போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தன்மையை பொறுத்து இறுதி முடிவு செய்யப்படும்.

    இதற்கிடையே ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த தயாராக இருப்பதாக இங்கிலாந்தில் உள்ள 4 கவுண்டிங் கிளப்புகள் அறிவித்திருந்தன.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அர்ஜூன டி.செல்வா கூறியதாவது:-

    எங்களால் ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை நடத்த முடியும். இதற்காக செப்டம்பரில் போட்டியை நடத்த மைதானங்கள் தயாராகிறது.

    ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை நடத்துவதற்கான வாய்ப்பு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால் அனைத்து காரணங்களுக்காகவும் இலங்கையை புறக்கணிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டும் ஐ.பி.எல். போட்டியை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்தது. ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு முன்னுரிமை கொடுத்தது.

    கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்தால் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களையும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தவே கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

    அசார் அலி மற்றும் அபித் அலி ஆகியோர் சதமடித்து அசத்த, ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் நாளில் பாகிஸ்தான் அணி 268 ரன்கள் எடுத்துள்ளது.
    ஹராரே:

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி டி 20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
     
    முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 116 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹராரேயில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இம்ரான் பட், அபித் அலி களமிறங்கினர்.

    சதமடித்ததும் பேட்டை உயர்த்தும் அசார் அலி

    இம்ரான் பட் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய அசார் அலி அபித் அலியுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடியது.

    இருவரும் சிறப்பாக விளையாடி சதமடித்தனர். அணியின் எண்ணிக்கை 248 ஆக இருக்கும்போது அசார் அலி 126 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 236 ரன்கள் குவித்தது.

    அடுத்து இறங்கிய கேப்டன் பாபர் அசாம் 2 ரன்னிலும், பவாத் ஆலம் 5 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

    முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 90 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்துள்ளது. அபித் அலி 118 ரன்னுடனும், சஜித் கான் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    ஜிம்பாப்வே அணி சார்பில் முசாராபனி 3 விக்கெட்டு வீழ்த்தினார்.
    ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வாகி உள்ளது.
    புதுடெல்லி:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வாகி உள்ளன. இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதாத்தில் ஜூன் 18-ம் தேதி முதல் ஜூன் 22-ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்துள்ளது. 

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

    இதற்கான டெஸ்ட் அணியில், விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, மயங்க் அகர்வால், விஹாரி, ரிஷப் பண்ட், ஜடேஜா, அக்சர் படேல், வாசிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சமி, சிராஜ், சர்துல் தாகூர், உமேஷ் யாதவ். 

    பேக் அப் வீரர்களாக கே எல் ராகுல், சகா இடம் பெற்றுள்ளனர். காத்திருப்பு வீரர்களாக (Standby players) அபிமன்யு ஈஸ்வரன், பிரசீத் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்சான் நாக்வஸ்வல்லா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
    இந்தியாவில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியா செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு வீரர்கள் மாலத்தீவில் இருந்து சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது கொல்கத்தா மற்றும் டெல்லி அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் உடனடியாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது.

    வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்பி கொண்டிருக்கின்றனர். உள்நாட்டு வீரர்கள் அவர்களுடைய வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வீரர்கள், சொந்த நாடு திரும்புவதில் சிக்கல் ஏதுமில்லை. இந்தியாவில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு வர ஆஸ்திரேலியா தடைவிதித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய நாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    மேக்ஸ்வெல்

    அவர்களை மாலத்தீவிற்கு அனுப்பி, அங்குள்ள ஓட்டல்களில் தனிமைப்படுத்த வைத்து அதன்பின் ஆஸ்திரேலியா அனுமதியுடன் சொந்த நாடு திரும்ப பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. முதற்கட்டமாக ஆஸ்திரேலியா வீரர்களை வாடகை விமானம் மூலம் மாலத்தீவிற்கு அனுப்பி வைத்துள்ளது.

    மாலத்தீவு சென்றடைந்த ஆஸ்திரேலிய வீர்ரகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அதன்பின் ஆஸ்திரேலியா அரசின் அனுமதி கிடைத்த பின் சொந்த நாடு திரும்புவார்கள்.
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பால் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், விராட் கோலி தம்பதி 2 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.
    இந்தியாவில் கொரோனா 2-வது அலை உக்கிரமாக உள்ளது. இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. 2-வது அலையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது.

    இதனால் மிகப்பெரிய அளவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன. 

    இந்தியாவில் உள்ள பெரும்பாலானோரும் மருத்துவ உபகரணங்கள் வாங்க தங்களால் முயன்ற நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

    இந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி- பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதி 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. மேலும், ‘Ketto’ நன்கொடை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 7 கோடி ரூபாய் நன்கொடை வசூலிக்க திட்டமிட்டுள்ளது. நன்கொலை அளிக்குமாறு கேட்டுக்கொண்ட கோலி 2 கோடி ரூபாயும் வழங்கியுள்ளார்.
    ×