என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொங்கல் பண்டிகைக்கு பிறகு கவர்னர் கிரண்பேடியை கண்டித்து பந்த் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்தும், அவரை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும் கடந்த 8-ந் தேதி முதல் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

    புதுவை அண்ணாசிலை பின்புறம் மறைமலை அடிகள் சாலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த போராட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

    இரவு, பகலாக போராட்ட களத்திலேயே உணவு அருந்தியும், தூங்கியும் முதல்-அமைச்சர் நாராயணசாமி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். 4 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

    துணை ராணுவம், போலீசாரின் கெடுபிடியாலும், நகரின் பிரதான சாலையில் போராட்டம் நடந்ததாலும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் போக்குவரத்து நெரிசல் உருவானது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தை தொடர வேண்டாம் என காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் முடிவு செய்தனர்.

    பொங்கலுக்கு பிறகு மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனால் ஒரு நாள் முன்னதாகவே நேற்று இரவு போராட்டம் நிறைவு செய்யப்பட்டது. அப்போது பேசிய முதல்-அமைச்சர் நாராயணசாமி, பொங்கல் பண்டிகைக்கு பிறகு கவர்னர் கிரண்பேடியை கண்டித்து பந்த் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்தார்.

    இதன்படி வருகிற 22-ந் தேதி கையெழுத்து இயக்கம், 29-ந் தேதி அனைத்து தொகுதியிலும் கண்டன ஆர்ப்பாட்டம், அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி உண்ணாவிரதமும், அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 15 முதல் 20-ந் தேதிக்குள் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டமும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருக்கனூர் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு திடீர் நகரை சேர்ந்தவர் ராமையா (வயது 57) கூலித் தொழிலாளி. தமிழக பகுதியான மதுரப்பாக்கத்தில் இருந்து திருக்கனூர் ஏரிக்கு வரும் வாய்க்காலில் கே.ஆர்.பாளையம் புளியந்தோப்பு அருகே நேற்று மதியம் கால் கழுவ சென்றபோது, தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாய்க்காலில் பிணமாக கிடந்த ராமையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு ெசய்து விசாரித்து வருகின்றனர்.
    புதுவை அரசை சீர்குலைக்க நினைத்தால் கவர்னர் கிரண்பேடி பதவியில் நீடிக்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிரு‌‌ஷ்ணன் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக அண்ணா சிலை அருகே நேற்று 3-வது நாளாக நடந்த தர்ணா போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிரு‌‌ஷ்ணன் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். அவர் பேசியதாவது:-

    கவர்னர் கிரண்பேடி தனது பாதுகாப்புக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக புதுவை அரசு, காவல்துறை, மக்கள் மீது நம்பிக்கை இல்லாமல் துணை ராணுவத்தை வரவழைத்து நாடகமாடுகிறார். டெல்லியில் 45 நாட்களுக்கு மேலாக வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அங்குள்ள ஆட்சியாளர்கள் யாரும் பாதுகாப்புக்கு அஞ்சி துணை ராணுவத்தை அழைக்கவில்லை.

    புதுவை மட்டுமின்றி இந்தியா முழுவதும் பா.ஜ.க. அல்லாத ஆளும் அரசுகளை கவிழ்க்க கூடிய மோசமான கூட்டாட்சிக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுவையை ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பல முயற்சி நடந்தது. ஆனால் முடியவில்லை. மத்திய அரசின் கருவியாகவும், பிரதிநிதியாகவும் கவர்னர் கிரண்பேடி செயல்படுகிறார். இங்கு பா.ஜ.க. கால் ஊன்ற முடியாது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக கிரண்பேடி தனியாக ஆட்சி நடத்துகிறார். புதுவைக்கான சுதந்திரம், சுயமரியாதை மற்றும் அரசை சீர்குலைக்க நினைத்தால் அவர் கவர்னர் பதவியில் நீடிக்க முடியாது. அதற்கான அனைத்து போராட்டத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    லாஸ்பேட்டையில் ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை பாக்குமுடையான்பேட் வன்னியர் வீதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 74) ஓய்வுபெற்ற ஆசிரியர். நேற்று முன்தினம் மாலை அவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென்று சுந்தரமூர்த்தியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சங்கிலியை கட்டியாக பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். உடனே அவர்கள் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடினர். இதில் பாதி சங்கிலி சுந்தரமூர்த்தியின் கையில் சிக்கியது. மீதியை அவர்கள் பறித்து சென்றனர்.

    இது குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் தர்ணா போராட்டம் நடந்து வருகிறது.

    புதுவை மறைமலையடிகள் சாலையில் நேற்று முன்தினம் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் தொடங்கிய தர்ணா போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்தது.

    போராட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. போராட்டத்தில் பங்கேற்க வில்லை.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
    ஜனவரி 22ஆம் தேதி கவர்னர் கிரண்பேடிக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். பிப்.1ஆம்தேதி உண்ணாவிரதம் நடத்தப்படும் என்றார். 
    புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வரும் முதல்- அமைச்சர் நாராயணசாமி திமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் தர்ணா போராட்டம் நடந்து வருகிறது.

    புதுவை மறைமலையடிகள் சாலையில் நேற்று முன்தினம் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் தொடங்கிய தர்ணா போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.

    போராட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. போராட்டத்தில் பங்கேற்க வில்லை.

    போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 2-ம் நாள் போராட்டம் நேற்று இரவு 9 மணிக்கு முடிந்தது.

    முடிவில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    போராட்ட களத்தை சுற்றி ராணுவ வீரர்களை கிரண்பேடி குவித்துள்ளார். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். மக்களுக்காக உயிரை கொடுக்க கூட தயாராகி விட்டேன். கிரண்பேடிக்கு தான் பயம். அதனால் தான் கவர்னர் மாளிகையை சுற்றி ராணுவத்தை குவித்துள்ளார்.

    நீங்கள் பாதுகாப்பு வைத்து கொள்ளுங்கள். ஆனால் மக்கள் அதிகமாக வரும் மணக்குள விநாயகர் கோவில், தலைமை தபால் நிலையம் மற்றும் சட்டமன்றத்திற்கு தடை போட கூடாது என போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளேன். இதனை மீறினால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுப்பேன்.

    போராட்டத்துக்கு தி.மு.க.வினர் ஆதரவை கேட்டுள்ளேன். கவர்னர் மாளிகைக்குள் ஏன் நுழைய கூடாது என சிலர் கேட்கின்றனர். அராஜகத்தின் மீது நம்பிக்கை இல்லை. காந்திய வழியிலேயே போராட்டத்தை நடத்துவோம்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    நேற்று இரவு உணவாக இட்லி மற்றும் பால் வழங்கப்பட்டது. முதல்- அமைச்சர் நாராயணசாமி 2-வது நாளாக போராட்ட பந்தலில் படுத்து தூங்கினார். அவருடன் காங்கிரஸ் தலைவர் மற்றும் நிர்வாகிகள் 100 பேர் படுத்து தூங்கினார்கள்.

    போராட்டம் 3-வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்தது. நாராயணசாமியின் அழைப்பை ஏற்று தி.மு.க.வினர் இன்றைய போராட்டத்தில் பங்கேற்பார்களா.? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    நாளையுடன் (திங்கட்கிழமை) தர்ணாவை முடிக்க போராட்ட குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கவர்னர் மாளிகையில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் போராட்டத்தை தொடரலாமா.? என்ற ஆலோசனையில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

    கவர்னர் கிரண்பேடி ஊழலுக்கு எதிரானவர் போல் நாடகமாடுவதாக தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
    புதுச்சேரி:

    கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் புதுவை அண்ணா சிலை அருகே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று 2-வது நாள் போராட்டத்தின்போது விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுவை கவர்னர் கிரண்பேடி மக்களுக்கு எதிராக உள்ளார். அவரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும், அரசாணை பிறப்பித்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார். நாட்டுக்கு கவர்னர் பதவியே தேவையில்லை என்பதுதான் இங்குள்ள அனைவரின் கருத்து. இந்தியா முழுவதும் அந்த பதவியை காலி செய்யவேண்டும்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் இருந்தும் அரசின் திட்டங்களை தடுக்கிறார். மக்கள் முதல்-அமைச்சரைத்தான் கேள்வி கேட்பார்கள். கவர்னரை கேட்கமாட்டார்கள். தனிப்பட்ட நபருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்றால் பிரதமர் மோடி டெல்லியிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்.

    அன்னாஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்தான் இந்த கிரண்பேடி. இவர் ஊழலுக்கு எதிரானவர், நேர்மையான அதிகாரி போன்ற தோற்றத்தை உருவாக்கி நாடகம் நடத்தினார். ஆர்.எஸ்.எஸ். கும்பலால் தூண்டிவிடப்பட்டு கட்சி சார்பற்றவராக வெளிக்காட்டினார்.

    நாட்டில் இப்போது ஊழல் நடக்கவில்லையா? அன்னாஹசாரே இப்போது எங்கு போனார்? நாட்டு மக்களை ஏமாற்றும் மோசடி பேர்வழிகள் இவர்கள். பாரதீய ஜனதாவால் இயக்கப்படும் கிரண்பேடியும் ஒரு சங்கிதான்.

    நாட்டிலேயே உயர்ந்த சிலையை பட்டேலுக்கு வைத்தார்கள். பட்டேல் ஒரு காங்கிரஸ்காரர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்தவர். நேருவுடன் மிக நெருங்கிய தொடர்புடையவர். காந்தியின் புகழை மறைக்க பாரதீய ஜனதா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காந்தியை சுட்டுக்கொன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான். அவர்கள்தான் இப்போது நாட்டை ஆள்கின்றனர்.

    ஆளும் அரசின் முடிவுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவேண்டும். ஆனால் அவர் ஒப்புதல் அளிப்பதில்லை. அரசுக்கு இடையூறு, நெருக்கடி தருகிறார். கவர்னரின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்ததான் இந்த போராட்டம். நாம் போராடுவதால் கவர்னரை திரும்பப்பெறுவார்களா? என்பது நிச்சயமில்லை.

    இந்தியாவில் பெரும்பான்மை சமூகம் இந்துக்கள்தான். காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க., அ.தி.மு.க., விடுதலை சிறுத்ததைகள், விவசாயிகள் என அனைத்திலும் இந்துக்கள்தான் அதிகம் உள்ளனர். ஆனால் நாம் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். வேளாண் சட்டங்களால், நீட் தேர்வினால், சரக்கு மற்றும் சேவை வரியினால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் இந்துக்கள்தான்.

    முருகன் தமிழ்க்கடவுகள் என்கிறார்கள். அவரது அண்ணன் விநாயகர் தமிழ் கடவுள் இல்லையா? அவர்களை பெற்ற சிவன், பார்வதி தமிழ் கடவுள்கள் இல்லையா? பாரதீய ஜனதா கட்சியினர் கடவுள் பெயரை சொல்லி அரசியல் நடத்துகிறார்கள். மக்களை சாதி, மதங்களின் பெயரால் பிரிப்பதுதான் அவர்களது வேலை. இந்து தேசம் என்று கூறி மதவெறியை தூண்டுகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் நாளை முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்குகிறார்கள்.
    புதுச்சேரி:

    மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மின்துறையை கார்ப்பரேசனாகவோ, தனியார் மயமாகவோ மாற்றக்கூடாது என கடந்த ஆண்டு மே மாதம் மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். தொழிற்சங்கங்கள் கருத்தினை கேட்டறிந்து சட்டசபை கூட்டத்தில மின்துறையை தனியார் மயமாக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினார்.

    ஆனால் கவர்னர் கிரண்பேடி எடுத்த முடிவின் அடிப்படையில் மத்திய அரசானது கடந்த நவம்பர் மாதம் அனுப்பிய கடிதத்தில் புதுவை மின்துறையை கார்ப்பரேசன் அல்லது தனியார்மயமாக்க தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

    இதை கண்டித்து மின்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் வேலைநிறுத்தத்திற்கான கடிதத்தினை கடந்த 24-ந்தேதி நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி உள்ளோம். அதன்படி மின்துறை தலைமை அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்க உள்ளோம். இதற்காக பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இந்த போராட்டத்தை ஒட்டுமொத்த புதுவை மக்களின் போராட்டமாக கருத்தில்கொள்ள வேண்டும். மின்துறை என்பது நுகர்வோரின் பொது சொத்து. அதனை தனியாருக்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
    புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் 3-வது நாளாக போராட்டம் நடத்துகின்றனர்.
    புதுச்சேரி:

    ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாகவும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக்கூறி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நேற்றுமுன்தினம் காலையில் அண்ணாசிலை அருகே தர்ணா போராட்டத்தை தொடங்கினர். நேற்று 2-வது நாளாக நீட்டித்தப்போராட்டம் இரவிலும் நீடித்தது.

    கொட்டும் மழையிலும் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சாலையில் படுத்து உறங்கினர். காங்கிரஸின் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

    இந்நிலையில் இன்று 3-ம் நாளாக காங்கிரசாரின் போராட்டம் தொடர்கிறது. சுமார் 300-க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் போராட்டக்களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
    காரைக்கால் திருமலைராயன்பட்டினம் போலகம் பகுதியில் கஞ்சா விற்ற 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை திருமலைராயன்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் அருகே திருமலைராயன்பட்டினம் போலகம் பகுதியில் 2 பேர் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், திருமலைராயன்பட்டினம் போலீசார், அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கஞ்சா விற்றது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்த பவித்ரா (வயது 21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும் கஞ்சாவை, நாகப்பட்டினத்தை சேர்ந்த தேவேந்திரன் (35) என்பவரிடம் வாங்கி வந்து, காரைக்காலில் விற்றதை ஒப்புகொண்டனர்.

    பின்னர் அவர்கள் கூறிய தகவலின் போில் தேவேந்திரனும் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், நாகப்பட்டினம் சிந்தாமணி, வீரையன் ஆகியோரிடம் கஞ்சா வாங்கியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி செந்தமிழ்ச்செல்வன் 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், 3 பேரையும் போலீசார் புதுச்சேரி சிறைச்சாலையில் அடைத்தனர். இதையடுத்து சிந்தாமணி மற்றும் வீரையனை போலீசார் தேடி வருகிறார்கள்.
    திருக்கனூர் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
    திருக்கனூர்:

    திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, சந்தை புதுகுப்பம், லிங்கா ரெட்டிபாளையம், சோரப்பட்டு, விநாயகம்பட்டு, செல்லிப்பட்டு, வாதானூர், மண்ணாடிப்பட்டு, காட்டேரிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ளைப்பொன்னி, பொன்மணி உள்ளிட்ட நெல் ரகங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.

    நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.

    இதுதவிர சங்கராபரணி ஆற்றங்கரையோரம் மற்றும் ஏரிக்கரை ஓரங்களில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்களும் தண்ணீர் மூழ்கி நாசமடைந்தன. வயல்களில் தண்ணீர் வடிய ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என்பதால் நெற்பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இதுமட்டுமின்றி சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த உளுந்து, காராமணி பயிர்களும் நீரில் மூழ்கின. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    முதல்- அமைச்சர் நாராயணசாமி தொகுதியில் தனது மகன் போட்டியிடுவார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. அறிவித்திருப்பது புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    2016 சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிடாமல் மாநிலம் முழுவதும் நாராயணசாமி பிரசாரம் செய்தார்.

    தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவரை முதல்-அமைச்சராக தேர்வு செய்தனர். முதல்- அமைச்சர் பொறுப்பேற்ற நாராயணசாமி 6 மாதத்தில் எம்.எல்.ஏ.வாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    அப்போது நெல்லித் தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்தொகுதியில் நாராயணசாமி போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்- அமைச்சராக தொடர்கிறார்.

    புதுவை சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

    நாராயணசாமிக்கு தொகுதியை விட்டுக் கொடுத்த ஜான்குமாருக்கு காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளித்தது.

    இதில், அவர் வெற்றி பெற்று காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஜான்குமார் அதிருப்தியில் இருந்து வந்தார்.

    கடந்த மாதம் புதுவை மாநில பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவை, ஜான்குமார் சந்தித்து பேசினார். இதனால் அவர் கட்சி மாறப்போவதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து ஜான்குமார் வகித்து வந்த பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தனது சொந்த தொகுதியான நெல்லித்தோப்பு தொகுதியில் தனது மகன் ரிச்சர்ட் போட்டியிடுவார் என ஜான்குமார் அறிவித்துள்ளார்.

    முதல்- அமைச்சர் நாராயணசாமி தொகுதியில் தனது மகன் போட்டியிடுவார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. அறிவித்திருப்பது புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தனது வீட்டில் ஆதரவாளர்கள் கூட்டத்தில் மகன் ரிச்சர்டை அறிமுகம் செய்து ஜான்குமார் எம்எல்ஏ பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நெல்லித்தோப்பு தொகுதியில் செய்த பணிகளை மக்களிடம் கொண்டு சென்றதால் நான் புகுந்த வீடான காமராஜர் நகர் தொகுதியில் 18 நாட்களில் பிரசாரம் செய்து அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இதற்கு நெல்லித்தோப்பு தொகுதி நிர்வாகிகள்தான் காரணம்.

    வரும் புதிய ஆட்சியில் உங்கள் விருப்பப்படி நான் அமைச்சராக வேண்டும். அதற்கு நமக்கு விசுவாசமான தொகுதிகள் தேவை. கடந்த தேர்தலில் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற நான் காரணமாக இருந்தேன். 3 பேருக்கு உதவி செய்தேன். இதனால் எனக்கு அமைச்சர் பதவி தருவதாக உறுதியளிக்கப்பட்டது.

    ஆனால், அவர்கள் விசுவாசமாக இல்லை. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் சொந்த தொகுதியான நெல்லித் தோப்பு, நான் போட்டியிட்டு வென்ற காமராஜர் நகர் தொகுதியில் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது.

    நெல்லித்தோப்பு தொகுதியில் எனது ரத்தமான மகன் ரிச்சர்ட் தேர்தலில் போட்டியிடுவார். என்னைப்போலவே அவர் தொகுதியையும், தொகுதி மக்களையும் நன்றாக பார்த்துக்கொள்வார். நானும், அவருடன் இணைந்து தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன். என் மகன் வெற்றிக்கு நீங்கள் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முதல்- அமைச்சர் நாராயணசாமி தொகுதியில் தனது மகன் போட்டியிடுவார் என பகிரங்கமாக ஜான்குமார் அறிவித்துள்ளது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதேநேரத்தில் ஜான்குமார் காங்கிரஸ் கட்சியில் நீடிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே கவர்னரை கண்டித்து நாராயணசாமி தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் போராட்டத்திலும் அவர் பங்கேற்று வருகிறார்.

    சட்டமன்ற தேர்தலை முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் சந்திக்க உள்ள நிலையில் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ×