என் மலர்
புதுச்சேரி
காரைக்காலை அடுத்த திருபட்டினம் போலகம் பகுதியில், கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், திரு-பட்டினம் போலீசார், அப்பகுதியில் ரோந்துசென்றபோது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா பொட்டலங்களை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்தபோது, காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த பவித்ரா (வயது 21), அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ஆளும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சார்பில் 4 நாள் தொடர் தர்ணா போராட்டம் நேற்று தொடங்கியது.
புதுவை மறைமலையடிகள் சாலையில் அண்ணா சிலை அருகே நடந்த போராட்டத்துக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத், புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க.வினர் பங்கேற்கவில்லை.
காலை 10.30 மணிக்கு தொடங்கிய போராட்டத்தில் மதியம் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு அங்கேயே சாப்பிட்டனர். இரவிலும் போராட்டம் தொடர்ந்தது.
போராட்ட களத்திலே முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் கூட்டணி தலைவர்கள் தங்கினர். இரவு உணவுக்கு பின் போராட்டக் களத்திலேயே அவர்கள் தூங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அங்கிருந்த சேர்கள் அகற்றப்பட்டு படுக்கை மற்றும் விரிப்புகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் தரையில் படுத்து தூங்கினார்கள். இரவு சாரல் மழை பெய்தது.
மழை மற்றும் குளிரை பொருட்படுத்தாமல் நாராயணசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் போராட்ட களத்தில் தரையில் படுத்து தூங்கினார்கள். இன்று (சனிக்கிழமை) 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.
புதுச்சேரி:
புதுவை மறைமலை அடிகள் சாலையில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் கவர்னரை கண்டித்து தர்ணா போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டத்தில் பங்கேற்கும் கட்சி தலைவர்கள், நிர்வாகிகளுக்கு காலை, மதியம், மாலை சிற்றுண்டி, இரவு உணவு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் அவ்வப்போது டீ, காபி, பிஸ்கெட் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் பானி பூரி, ஆம்லெட், ஆப்பாயில் ஆகியவை சுடச்சுட அங்கேயே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
புதுவையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து இன்று போராட்டம் நடந்தது.
போராட்டத்தையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வழுதாவூர் ரோட்டில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பூர்வா கார்க் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு தனியார் நிறுவனத்தின் குடிநீர் பாட்டில் வழங்கப்பட்டது. இதில் கலெக்டர் பூர்வா கார்க் தனக்கு வந்த பாட்டிலை திறந்தபோது எரிசாராய வாசனை அடித்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த கலெக்டர் பூர்வா கார்க் அதனை அருந்தாமல் அலுவலக அதிகாரிகளிடம் விசாரிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மற்ற பாட்டில்களை பரிசோதித்த போது அவற்றில் குடிநீர் இருந்தது. கலெக்டருக்கு வழங்கப்பட்ட பாட்டில் குடிநீர் மட்டும் விஷ தன்மையுடன் இருந்தது. குடிநீர் தண்ணீர் போலவே இருந்ததால் ஊழியர்கள் குடிநீர் பாட்டில் என நினைத்து விநியோகம் செய்திருந்தனர்.
இதுகுறித்து கலெக்டரின் சிறப்பு அதிகாரி சுரேஷ் ராஜ் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் வழக்கு பதிவு செய்து அந்த பாட்டிலை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
குடிநீர் பாட்டிலில் விஷம் கலக்கப்பட்டதா? அல்லது எரிசாராயம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதா? எனவும், குடிநீரை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தவர்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பெண் கலெக்டருக்கு நச்சுத்தன்மை கலந்த திரவம் வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கவர்னர் கிரண்பேடி தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் கடந்த 4½ ஆண்டாக அதிகாரம் தொடர்பான மோதல் இருந்து வருகிறது.
யூனியன் பிரதேசமான புதுவையில் கவர்னருக்கே அதிகாரம் என்பதால் அரசின் அன்றாட செயல் பாடுகளில் கவர்னர் கிரண்பேடி தலையிட்டு வருகிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சரவை எடுக்கும் முடிவுகள், சட்டமன்ற அறிவிப்புகள், கொள்கை முடிவுகளில் கூட கவர்னர் கிரண்பேடி தலையிட்டு உள்துறைக்கு கோப்புகளை அனுப்புகிறார். கிரண்பேடி தடையால் மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
2019 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கருப்புச்சட்டையுடன் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு நாராயண சாமி போராட்டம் நடத்தினார். 6 நாட்கள் நீடித்த இந்த போராட்டம் கவர்னர், அமைச்சர்களின் பேச்சுவார்த்தையால் முடிவுக்கு வந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்ட கோரிக்கைகள்கூட நிறைவேறவில்லை.
இலவச அரிசி, துணி, மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு, தனியார் மருத்துவக்கல்லூரியில் 50 சதவீத அரசு ஒதுக்கீடு, பொங்கல் பரிசு என அரசு பரிந்துரை செய்த பல திட்டங்கள் கிடப்பில் கிடக்கிறது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ளதால் திட்டங்கள் நிறைவேறாமல் போனதற்கு மாநில அரசு காரணமில்லை. கவர்னர்தான் காரணம் என மக்களுக்கு தெளிவுபடுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.
இதனால் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி மீண்டும் கவர்னர் மாளிகை முன்பு இன்று முதல் (வெள்ளிக்கிழமை)தொடர் போராட்டம் தொடங்க முடிவு செய்தனர். கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த கலெக்டர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். தடையை மீறி போராட்டம் நடத்தினால் தொற்றுநோய் பரப்புதல் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. எச்சரித்தார்.
காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை அழைத்து கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் நகர பகுதியில் மறைமலை அடிகள் சாலையில் அண்ணா சிலையிலிருந்து வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் வரை போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதனையேற்று மறைமலை அடிகள் சாலையில் போராட்ட பந்தல் நேற்று இரவு அமைக்கப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் தொடங்கியது.
போராட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் புதுவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கூட்டணி போராட்டத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக கேரளா, தெலுங்கானா விலிருந்து 350 பேர் கொண்ட 3 கம்பெனி மத்திய அதிரடிப்படை படை வீரர்கள் புதுவைக்கு வந்தனர். நேற்று முதல் கவர்னர் மாளிகை, சட்டமன்றம், தலைமை செயலகம், முதலமைச்சர் நாராயணசாமியின் வீடு, மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கவர்னர் மாளிகை, சட்டமன்ற வளாகத்தை சுற்றிலும் தடுப்புகட்டைகள், பேரிகார்டுகள் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. கவர்னர் மாளிகையை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இன்று காலை 7 மணிக்கே 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பணிகள் ஒதுக்கப்பட்டது.
மேலும் சாதாரண உடையில் போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்களின் வீடுகள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் ஆகியவற்றையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். காங்கிரஸ் போராட்டத்தால் புதுவையில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது.
புதுவை மாநிலத்தின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் கடந்த பருவமழை காலமான நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் பலத்த மழை பெய்தது. பருவமழை தவறி குளிர்காலமான ஜனவரி மாதத்திலும் மழை பெய்து வருகிறது.
நிவர், புரெவி புயலால் தொடர்ந்து பெய்த கன மழையால் பாகூர் பகுதியில் உள்ள 24 ஏரிகளும், தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட 3 அணைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக புதுவை நகரம் மற்றும் கிராம பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் பாகூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளான கரையாம்புத்தூர், சோரியாங்குப்பம், இருளன்சந்தை, கன்னியக்கோவில், மணப்பட்டு, கிருமாம்பாக்கம், தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்கள் மற்றும் வீடுகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பாகூர், கரிக்கலாம்பாக்கம், கரையாம்புத்தூர், கிருமாம்பாக்கம், அபிஷேகப்பாக்கம் பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது அறுவடை செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்த சுமார் 500 ஏக்கருக்கு மேல் உள்ள நெற்பயிர்கள் கனமழையால் சாய்ந்து சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகி காணப்படுகிறது. வயல்களில் மழைநீர் வடிந்தாலும் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பாகூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து நேற்று வரை 173.2 செ.மீ. மழை பெய்துள்ளது. இது அதிகப்படியான மழையாகும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
7 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட மழைக்கு பிறகு தற்போது அதிகபட்சமாக மழை பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
பாகூர் பகுதிகளில் 24 ஏரிகள் மற்றும் தடுப்பணைகள் மூலம் சுமார் 750 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொது பணித்துறை உதவிப்பொறியாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பாக்குமுடையான்பேட் அனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 57). பெயிண்டர். மதுகுடிக்கும் பழக்கம் உடையவர். இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று ரவிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இது குறித்து ரவி தனது மனைவியிடம் கூறியுள்ளார். அதனை அவர் கேட்கவில்லை என தெரிகிறது. இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் 25 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.
இதற்காக புதுவை சட்டசபை சார்பில் அவருக்கு ஏனாமில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் சிறந்த எம்.எல்.ஏ.வாக 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்ட மல்லாடி கிருஷ்ணாராவிற்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் விருது வழங்கினர்.
விழாவில் ஆந்திரா மாநில சபாநாயகர் தமேனி சீத்தாராம், புதுவை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசியதாவது:-
எனக்கு ஓய்வு தேவைப்படுவதால் நான் அரசியலில் இருந்து விலக விரும்புகிறேன். மக்கள் சேவையை தொடர்ந்து செய்வேன். கவர்னருக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு முதல்- அமைச்சருடன் தரையில் அமர்ந்து போராடுவேன். ஏனாம் தொகுதியில் வருகிற தேர்தலில் போட்டியிட போவதில்லை. எனது குடும்பத்தில் இருந்தும் யாரும் போட்டியிட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






