என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கன்னியகோவில் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    பாகூர்:

    பாகூர் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் பண்டசோழநல்லூர் மின்பாதையில் நாளை (புதன்கிழமை) சில பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. 

    எனவே காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கன்னியகோவில், புதுநகர், முள்ளோடை, மதிகிரு‌‌ஷ்ணாபுரம், உச்சிமேடு, கல்லியான்குப்பம், கொரவள்ளிமேடு, ஆராய்ச்சிகுப்பம், கொமந்தான்மேடு, குருவிநத்தம், சோரியாங்குப்பம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

    மேற்கண்ட தகவலை மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
    தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவான அலை மக்கள் மத்தியில் வீசுகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.
    புதுச்சேரி:

    சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி இன்று மதியம் தாராபுரத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

    அதன்பின் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 

    மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ.220 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவம், தொழில்நுட்ப கல்வியை மாநில மொழியில் கற்பிக்க நடவடிக்கை எடுப்போம். மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க மீன்வளத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் காங்கிரஸ் அரசு ஊழல் புரிந்தது. நாராயணசாமிக்கு இந்த தேர்தலில் போட்டியிட கூட வாய்ப்பு தரப்படவில்லை.
    கடந்த கால ஆட்சி மோசமாக இருந்ததே காரணம். 5 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு என்ன செய்தது என்பது குறித்து மக்களுக்கு தெரிவிக்கவில்லை.

    தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவான அலை மக்கள் மத்தியில் வீசுகிறது. புதுச்சேரியில் ஒரு ஈர்ப்பு சக்தி உள்ளது, அது என்னை மீண்டும் இங்கு வர வைத்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 50 சதவீதம் பேர் முக கவசம் அணிவதில்லை என புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 50 சதவீதம் பேர் முக கவசம் அணிவதில்லை என புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

    கடந்த இரண்டு வாரங்களாக புதுச்சேரியில் நோய் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.
    புதுவையில் தொற்று பாதிப்பு குறைந்து இருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தினமும் அதிகரிப்பது வாடிக்கையாகி விட்டது.
    காரைக்கால்:

    புதுச்சேரியில் மேலும் 125 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அசனா எம்.எல்.ஏ. தொற்றால் பாதிக்கப்பட்டார்.

    புதுவையில் தொற்று பாதிப்பு குறைந்து இருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தினமும் அதிகரிப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,464 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 125 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. மாகி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 67 வயது முதியவர் பலியானார். இதனால் உயிரிழப்பு 681 ஆக உயர்ந்துள்ளது.

    மாநிலத்தில் இதுவரை 41 ஆயிரத்து 226 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 39 ஆயிரத்து 554 பேர் குணமடைந்துள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 1.65 சதவீதமாகவும், குணமடைவது 95.94 சதவீதமாகவும் உள்ளது.

    காரைக்கால் தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக அசனா உள்ளார். தற்போதைய சட்டமன்ற தேர்தலிலும், இதே தொகுதியில் களம் காண்கிறார். இதற்காக கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.இந்தநிலையில் புதுவை ரோடியர் திடலில் இன்று நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அசனா எம்.எல்.ஏ. திட்டமிட்டு இருந்தார்.

    இதனையொட்டி மாவட்ட நலவழித்துறை சார்பில் நேற்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் அசனாவுக்கும், அவரது உதவியாளருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    அசனா எம்.எல்.ஏ.வுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உளளது.
    பிரதமர் மோடி புதுச்சேரி மற்றும் தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கான நாளை இரு மாநிலங்களுக்கும் வருகை தருகிறார்.
    தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    புதுச்சேரி சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜனதா சார்பில் தலைவர்களின் சுற்றுப்பயண திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி, புதுச்சேரி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் என தகவல் வெளியானது.  இந்த பட்டியலில் பிரதமர் மோடி தவிர்த்து, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி, நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி உள்ளிட்டோரும் இடம் பெற்று உள்ளனர்.

    முதல் மந்திரிகள் யோகி ஆதித்யநாத், சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இதேபோன்று பா.ஜ.க.வில் முக்தர் அப்பாஸ் நக்வி, இல.கணேசன், நடிகைகள் கவுதமி, விஜயசாந்தி, தேஜஸ்வி சூர்யா ஆகியோரும் பிரசார பட்டியலில் இடம் பிடித்து உள்ளனர்.

    கோப்புப்படம்

    தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி வரும் நாளை புதுச்சேரி வருகை தரவுள்ளார். அங்கு அவர் ஏ.எப்.டி மைதானத்தில் நடைபெறும் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடி நாளை புதுச்சேரி செல்வதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    இதனை முன்னிட்டு, புதுச்சேரி வான்எல்லையில் இன்றும், நாளையும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு 144 பிரிவின் கீழ் அரசு இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.
    புதுவைக்கு பா.ஜ.க. வந்ததுமே காங்கிரசுக்கு பயம் வந்து தோல்வி பயத்தில் பா.ஜ.க.வை ரவுடி கட்சி என பச்சை பொய்யை சொல்கின்றனர் என முன்னாள் எம்.பி. கண்ணன் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. கண்ணன் சமீபத்தில் பாரதிய ஜனதாவில் இணைந்தார். அவர் புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆட்சியையும், அதிகாரத்தையும் கையில் வைத்திருந்தார். பிரதமர் அலுவலகத்தில் அதிகார உச்சத்தில் சிங்கம் போல் இருந்தார்.

    புதுவை வளர்ச்சிக்கு அவர் ஏன் எதுவும் செய்யவில்லை? நாராயணசாமியும், மத்தியில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரசும் புதுவைக்கு எதுவும் செய்யவில்லை.

    ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்த போது, வீரேந்திர கட்டாரியா என்ற கவர்னர் மூலம் ரங்கசாமிக்கு நாராயணசாமி தொல்லை கொடுத்தார்.

    புதுவையில் 2.5 லட்சம் பேருக்கு வேலை கொடுக்க போகின்ற திட்டத்தை பா.ஜ.க. அறிவித்துள்ளது. ஓராண்டு காலக்கெடுவில் ஏராளமானோருக்கு வேலை கொடுப்போம். இல்லாவிட்டால், நடுரோட்டில் நிற்க வைத்து என்னை அடியுங்கள்.

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்போவதாக அறிவித்தனர். யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. பித்தலாட்டமான ஏமாற்றும் விதத்தில் வாக்குறுதியை அளித்தனர்.

    புதுவைக்கு பா.ஜ.க. வந்ததுமே காங்கிரசுக்கு பயம் வந்து தோல்வி பயத்தில் பா.ஜ.க.வை ரவுடி கட்சி என பச்சை பொய்யை சொல்கின்றனர். கார்பரேட் என்பது ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை. காங்கிரஸ் கட்சியில் கார்ப்பரேட் இல்லையா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். காங்கிரசுக்கு வாக்களிப்பது நமது தலையில் நாமே நெருப்பை போட்டுக் கொள்வது.

    இவ்வாறு கண்ணன் கூறினார்.

    மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் கூறுகையில், "மீனவர்களை மத்திய அரசு உடனடியாக இலங்கையில் இருந்து மீட்டுள்ளது. பா.ஜ.க. கலவரத்தை தூண்டுவதாக நாராயணசாமி பிரச்சினைகளை திசை திருப்புகிறார். அதுதான் காங்கிரசின் செயல்பாடு. அனைத்து மக்களும் முன்னேற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு" என்று குறிப்பிட்டார்.

    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று ராஜ்பவன் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    ராஜ்பவன் தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளருமான எஸ்.பி.சிவக்குமார் போட்டியிடுகிறார். நேற்று வாழைக்குளம், சின்னையாபுரம் பகுதியில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் மோகன் தலைமையில், வீரையன் முன்னிலையில் வாழைக்குளம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

    வேட்பாளர் எஸ்.பி.சிவக்குமாருடன் தொகுதி செயலாளர் ஸ்ரீதர், தொண்டரணி அமைப்பாளர் ஆனந்த், சிறுபான்மை அணி அமைப்பாளர் ஜோசப் கபிரியேல், துணை அமைப்பாளர் அகிலன், மகளிரணி அமைப்பாளர் வடிவுகரசி என்கிற ஜானகி, சாமிக்கண்ணு, அய்யப்பன், காங்கிரஸ் கட்சியின் தொகுதி தலைவர் வேல்முருகன், முன்னாள் கவுன்சிலர் சரவணன், செந்தில், விடுதலை சிறுத்தை கட்சியின் பத்தராசு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    அந்த பகுதி மக்கள், ‘சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். இலவச மனைப்பட்டா வழங்கவேண்டும், குடியிருப்பு பகுதியில் அமைதியான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

    இதை கேட்ட எஸ்.பி.சிவக்குமார், நான் தேர்தலில் வெற்றி பெற்றதும் இந்த பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
    காங்கிரஸ் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் அந்த கட்சியை விட்டு தானாக விலகி சென்றுள்ளனர். அந்த அளவுக்கு மோசமான ஆட்சி நடந்துள்ளது என்று ரங்கசாமி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    என்.ஆர்.காங்கிரஸ் தலைவரான ரங்கசாமி தட்டாஞ் சாவடி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தட்டாஞ்சாவடி தொகுதி சுப்பையா நகரில் 2-வது நாளாக திறந்த ஜீப்பில் வீதிவீதியாக சென்று வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுவையில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்த காங்கிரஸ் ஆட்சியால் மக்களுக்கு எந்தவித பலனும் இல்லை. நாராயணசாமி திறமையில்லாமல் ஆட்சி நடத்தினார். அவரது ஆட்சியில் புதுச்சேரியின் வளர்ச்சி 10 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. எம்.எல்.ஏ.க்களுக்கான தொகுதி மேம்பாட்டுக்கான நிதியைக்கூட தரவில்லை.

    ஒரே ஒரு தார் சாலைகூட போடவில்லை. உட்புற நகர் பகுதியில்தான் இந்த நிலை என்றால் முக்கிய சாலைகளும் போடப்படவில்லை. இதனால் மக்கள் சாலைகளில் வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை.

    காங்கிரஸ் ஆட்சியில் முதியோர் பென்சன்கூட உயர்த்தப்படவில்லை ஆண்டுக்கு ரூ.100 உயர்த்தி இருந்தால்கூட ரூ.500 கூடுதலாக கிடைத்திருக்கும். ஆனால் அதையும் அவர்கள் செய்யவில்லை. முதியவர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ரூ.20 செலவுக்கு தேவைப்படும். அதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் நாங்கள் கடந்த காலத்தில் நிதியை உயர்த்தி வழங்கினோம்.

    காங்கிரஸ் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் அந்த கட்சியை விட்டு தானாக விலகி சென்றுள்ளனர். அந்த அளவுக்கு மோசமான ஆட்சி நடந்துள்ளது. மக்களில் ஒருவருக்குக்கூட வேலைவாய்ப்பு தரவில்லை. அதுமட்டுமா ஏற்கனவே வேலையில் இருந்தவர்களையும் வேலையைவிட்டு தூக்கினார்கள். புதிய தொழிற்சாலைகளும் வரவில்லை. அந்த தொழிற்சாலைகளை எப்படி கொண்டுவர வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. பின்னர் எப்படி வேலைவாய்ப்பு கொடுக்க முடியும்? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நமது ஆட்சிவரவேண்டும்.

    அதற்கு அந்த தேர்தலை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நான்தான் முதல்-அமைச்சராக வருவேன். கூட்டணி தலைமையும் நாம்தான். இதில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாம் ஆட்சிக்கு வந்தால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளது. நாம் ஆட்சிக்கு வந்ததும் புதிய தொழிற்சாலைகளை கொண்டுவருவோம். வேலைவாய்ப்பினை பெருக்குவோம்.

    இவ்வாறு ரங்கசாமி பேசினார்.
    புதுவையில் கொரோனா வேகம் எடுத்துள்ளதை நிரூபிக்கும் வகையில் புதிதாக 128 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதியவர் உயிரிழந்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் பாதிப்பை கொரோனா முறியடித்து வருகிறது. இதனால் தொற்று பாதிப்பு பல மடங்கு அதிகரித்து வேகம் எடுத்து வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் நேற்று ஒரே நாளில் 128 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 22 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 128 பேருக்கு தொற்று உறுதியானது. 36 பேர் குணமடைந்தனர்.

    கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோர்க்காட்டை சேர்ந்த 72 வயது முதியவர் பலியானார். இதனால் கொரோனாவினால் பலியானவர்களின் எண்ணிக்கை 680 ஆக உயர்ந்துள்ளது.

    மாநிலத்தில் இதுவரை 40 ஆயிரத்து 964 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 267 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 579 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். 39 ஆயிரத்து 438 பேர் குணமடைந்துள்ளனர்.

    2-வது அலையாக பரவி வரும் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து கொரோனா தொற்று பாதிப்பு எதுவும் புதுச்சேரியில் இதுவரை பதிவாகவில்லை என்று சுகாதார துறை ஊழியர்கள் தெரிவித்தனர். புதுவையில் நேற்று சுகாதார பணியாளர்கள் 1,012 பேரும், முன்கள பணியாளர்கள் 365 பேரும், பொதுமக்கள் 1,269 பேரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 60 ஆயிரத்து 475 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
    வில்லியனூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் செல்வம். டிரைவர். இவரது மனைவி ராதா (வயது 35). இவரது மூத்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்த முடிவு செய்தார். ஆனால் பணம் இல்லாததால் விழாவை பிறகு நடத்தலாம் என்று செல்வம் கூறி வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

    இதில் விரக்தி அடைந்த செல்வம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவையில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில காங்கிரஸ் சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    * குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

    * முதியோர், விதவைகள், ஆதரவற்றோருக்கு மாத உதவித்தொகை படிப்படியாக ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    * 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.

    * மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    * ரேசனில் மாதந்தோறும் தவறாமல் அரிசி, சர்க்கரை, பருப்பு வழங்கப்படும்.

    * சுதேசி, பாரதி, ரோடியர் மில்கள் திறக்கப்படும்.

    * மாநில அந்தஸ்து கிடைக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்.

    * மத்திய நிதி கமி‌ஷனில் புதுச்சேரியை சேர்க்க தொடர்ந்து முயற்சிக்கப்படும்.

    * மாநிலத்தில் தனி பள்ளி கல்வி வாரியம் அமைக்கப்படும்.

    * மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம், வை-பை வசதி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    புதுவையில் 323 வேட்பாளர்களில் 25 பேர் தங்களின் பான் எண்ணை தெரிவிக்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை தேர்தல் கண்காணிப்பாகத்தின் சார்பில் புதுவையில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் பிரமாண பத்திரங்கள் ஆய்வறிக்கை வெளியிடபட்டுள்ளது.

    களத்தில் உள்ள 324 வேட்பாளர்களில் (முழு ஆவணமில்லாத சுயேட்சை வேட்பாளர் ஒருவரை தவிர்த்து) 323 வேட்பாளர்களை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ் குறிப்பிட்டார்.

    இதில் 323 வேட்பாளர்களின் பொருளாதார பின்னணி சுவாரஸ்யமாக உள்ளது. அதன் விவரம்:

    புதுவையில் ஆய்வு செய்யப்பட்ட 323 வேட்பாளர்களில் 74 பேர் (23 சதவீதம்) கோடீஸ்வர வேட்பாளர்கள். கடந்த 2016-ல் 343 வேட்பாளர்களில் 96 பேர் கோடீஸ்வர வேட்பாளராக இருந்தனர்.

    அதனை ஒப்பிடுகையில் கடந்த முறையை விட கோடீஸ்வர வேட்பாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. பா.ஜனதாவில் 9 வேட்பாளர்களில் 8 பேரும் (89 சதவீதம்), காங்கிரசில் 14 வேட்பாளர்களில் 12 பேரும் (86 சதவீதம்), என்.ஆர்.காங்கிரசில் 16 வேட்பாளர்களில் 13 பேரும் (81 சதவீதம்), அ.தி.மு.க.வில் 5 வேட்பாளர்களில் நால்வரும் (80 சதவீதம்), தி.மு.க.வில் 13 வேட்பாளர்களில் 9 பேரும் (69 சதவீதம்) கோடீஸ்வர வேட்பாளர்களாக உள்ளனர்.

    புதுவை வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 2.14 கோடி. இது கடந்த 2016-ல் ரூ. 2.49 கோடியாக இருந்தது. கட்சிவாரியாக சராசரி சொத்து மதிப்பு விவரம்:

    என்.ஆர்.காங்கிரசில் 16வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 10.79 கோடி. பா.ஜனதா வேட்பாளர்கள் 9 பேரின் சொத்து மதிப்பு ரூ. 9.89 கோடி. அ.தி.மு.க. வேட்பாளர்கள் 5 பேரின் சராசரி சொத்து மதிப்பு 9.1 கோடி. தி.மு.க. வேட்பாளர்கள் 13 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 8.03 கோடி. காங்கிரஸ் வேட்பாளர்கள் 14 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 5.82 கோடி.

    உருளையன்பேட்டை சுயேட்சை வேட்பாளரும் என்.ஆர்.காங்கிரசிலிருந்து நீக்கப்பட்ட நேருவின் சொத்து மதிப்பு ரூ. 43 கோடியாக உள்ளதால் அவர் வேட்பாளரில் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

    2-வது இடத்தில் 2 தொகுதிகளில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 38 கோடி. காங்கிரஸ் மாநிலத் தலைவரும், காரைக்கால் வடக்கில் போட்டியிடும் ஏ.வி. சுப்பிரமணியன் 3-வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 27 கோடி.

    சொத்தே இல்லை என்று ஊசுடு தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அபிமன்னன் தெரிவித்துள்ளார்.

    காரைக்கால் வடக்கு தொகுதியில் இந்திய ஜனநாயகக்கட்சியில் போட்டியிடும் அருளானந்தம், காரைக்கால் தெற்கு தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் நெப்போலியன், நெட்டப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பரந்தாமன் ஆகியோர் தங்களிடம் ரூ. 500 மட்டுமே உள்ளதாக சொத்து மதிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

    புதுவையில் போட்டியிடுவோரில் 178 வேட்பாளர்கள் தங்களுக்கு கடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதில் காமராஜ் நகர் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஷாஜகான் தனக்கு ரூ. 20 கோடி கடன் உள்ளதாக குறிப்பிட்டு கடனில் முதலிடத்தில் உள்ளார்.

    2-வது இடத்தில் உருளையன்பேட்டை சுயேட்சை வேட்பாளர் நேரு ரூ. 14 கோடி கடன் உள்ளதாக குறிப்பிட்டு 2-ம் இடத்தில் உள்ளார். 3-ம் இடத்தில் தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளரும் வில்லியனூரில் போட்டியிடும் சிவா தனக்கு ரூ. 10 கோடி கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    323 வேட்பாளர்களில் 25 பேர் தங்களின் பான் எண்ணை தெரிவிக்க வில்லை.

    திருநள்ளாரில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ஆண்டு வருவாய் ரூ. 1.9 கோடி என குறிப்பிட்டு முதலிடத்திலும், வில்லியனூரில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சுகுமாரன் ஆண்டு வருவாய் ரூ. 1.11 கோடியாகவும், உருளையன்பேட்டை சுயேட்சை வேட்பாளர் நேரு ஆண்டு வருவாய் ரூ. 76 லட்சம் எனவும் தெரிவித்துள்ளனர்.

    ×