என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
பிரதமர் மோடி வருகை: புதுச்சேரியில் இன்றும், நாளையும் விமானங்கள் பறக்க தடை
பிரதமர் மோடி புதுச்சேரி மற்றும் தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கான நாளை இரு மாநிலங்களுக்கும் வருகை தருகிறார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜனதா சார்பில் தலைவர்களின் சுற்றுப்பயண திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, புதுச்சேரி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் என தகவல் வெளியானது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி தவிர்த்து, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி, நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி உள்ளிட்டோரும் இடம் பெற்று உள்ளனர்.
முதல் மந்திரிகள் யோகி ஆதித்யநாத், சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இதேபோன்று பா.ஜ.க.வில் முக்தர் அப்பாஸ் நக்வி, இல.கணேசன், நடிகைகள் கவுதமி, விஜயசாந்தி, தேஜஸ்வி சூர்யா ஆகியோரும் பிரசார பட்டியலில் இடம் பிடித்து உள்ளனர்.

தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி வரும் நாளை புதுச்சேரி வருகை தரவுள்ளார். அங்கு அவர் ஏ.எப்.டி மைதானத்தில் நடைபெறும் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடி நாளை புதுச்சேரி செல்வதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இதனை முன்னிட்டு, புதுச்சேரி வான்எல்லையில் இன்றும், நாளையும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு 144 பிரிவின் கீழ் அரசு இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.
Next Story






