என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    மோடி தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்றுள்ள நிலையில், புதிய மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் விவரம் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றார். அவருடன் புதிய மந்திரி சபையில் இடம்பெற்ற மந்திரிகளும் பதவியேற்றனர். அவர்கள் பெயர் வருமாறு:-

    கேபினட் மந்திரிகள்

    நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், அர்ஜூன் முண்டா, அரவிந்த் சாவந்த், தர்மேந்திர பிரதான், டாக்டர் ஹர்ஷ் வர்தன், சதானந்த கவுடா, கஜேந்திர சிங் ஷெகாவத், கிரிராஜ் சிங், ஹர்சிம்ரத் கவுர் பாதல், மகேந்திர நாத் பாண்டே, முக்தார் அப்பாஸ் நக்வி, நரேந்திர சிங் தோமர், நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், பிரகலாத் ஜோஷி, ரமேஷ் பொக்ரியால் நிஷாங், ராம் விலாஸ் பாஸ்வான், ரவி சங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தாவர்சந்த் கெலாட்.

    இணை மந்திரிகள்

    அர்ஜூன் ராம் மேக்வால், அனுராக் சிங் தாக்கூர், அங்காடி சுரேஷ் சன்னபசப்பா, அஷ்வினி குமார் சவுபே, பாபுல் சுப்ரியோ, தான்வே ராவ்சாகேப் தாதாராவ், தோத்ரே சஞ்சய் ஷாம்ராவ், பகன் சிங் குலாஸ்தே, ஜெனரல் வி.கே.சிங் (ஓய்வு), கிஷன் ரெட்டி, கைலாஷ் சவுத்ரி, கிரிஷன் பால், நித்யானந்த் ராய், பர்ஷோத்தம் ரூபாலா, பிரதாப் சந்திர சாரங்கி, ரத்தன் லால் கட்டாரியா, ராம்தாஸ் அத்வாலே, ராமேஸ்வர் தேலி, ரேணுகா சிங் சருதா, சாத்வி நிரஞ்சன் ஜோதி, சஞ்சீவ் குமார் பால்யன், சோம் பர்காஷ், முரளீதரன், தேவஸ்ரீ சவுத்ரி,

    இணை மந்திரிகள் (தனி பொறுப்பு)

    டாக்டர் ஜிதேந்திர சிங், கிரன் ரிஜிஜு, ஹர்தீப் சிங் பூரி, மன்சுக் எல்.மாண்டவியா, பிரகலாத் சிங் பட்டேல், ராஜ் குமார் சிங், ராவ் இந்தர்ஜித் சிங், சந்தோஷ் குமார் கேங்வார், ஸ்ரீபாத் யெஸ்சோ நாயக். 

    இன்று பதவியேற்றுள்ள மந்திரிகளுக்கான இலாகா விவரம் பின்னர் அறிவிக்கப்படும். 
    முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் மத்திய மந்திரியாக இன்று பதவியேற்றார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. 

    ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற கோலாகலமான பதவியேற்பு விழாவில், புதிய அரசு பொறுப்பேற்றது. நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்தார். மோடியைத் தொடர்ந்து அவரது மந்திரி சபையில் இடம்பெற்ற மந்திரிகள் பதவியேற்றனர்.

    மோடி மந்திரிசபையில் முன்னாள் வெளியறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கரும் இடம் பெற்றுள்ளார். அவரும் இன்று பதவியேற்றார். 

    மோடி அரசில் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2018 ஜனவரி மாதம் வரை வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றியவர் ஜெய்சங்கர். 2017ல் டோக்லாம் எல்லையில் இந்திய படைகளும், சீன படைகளும் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவியபோது, போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட ஜெய்சங்கர் முக்கிய பங்காற்றினார். அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராகவும் ஜெய்சங்கர் பணியாற்றி உள்ளார். ஓய்வுக்குப் பிறகு டாடா குழுமத்தின் உலகளாவிய பெருநிறுவன விவகாரங்கள் பிரிவு தலைவராக பொறுப்பேற்றார். 

    அரசுப் பணியில் அவரது சேவையை கவுரவிக்கும் வகையில் மோடி அரசு அவருக்கு கடந்த ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
    நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்றதை, அவரது தாயார் தன் வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி மூலம் கண்டுகளித்தார்.
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. 

    ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற கோலாகலமான பதவியேற்பு விழாவில், புதிய அரசு பொறுப்பேற்றது. நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்தார். 

    இந்நிலையில் மோடியின் தாயார் ஹீராபென், குஜராத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியில் பதவியேற்பு விழாவை கண்டுகளித்தார். தன் மகன் மீண்டும் பிரதமராக பதவியேற்றதை பார்த்து, உற்சாகமாக கைதட்டி மகிழ்ந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. 
    நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி இன்று பதவியேற்றார். அவரது மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மந்திரிகளும் பதவியேற்றனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.பி.க்களின் கூட்டத்தில் பாராளுமன்ற கட்சி தலைவராக (பிரதமர்) நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார். 

    இதையடுத்து அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி பிரதமர் மோடி இரண்டாவது முறையாக இன்று பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். 

    ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மோடியின் புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகள் பதவியேற்றனர்.

    முதலில் ராஜ்நாத் சிங் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து பாஜக தலைவர் அமித் ஷா பதவியேற்றார். குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் வெற்றி பெற்ற அமித் ஷாவுக்கு நிதித்துறை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமித் ஷாவைத் தொடர்ந்து, நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன், ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட பிற மந்திரிகளும் பதவியேற்றனர்.
    நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி இன்று பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.

    புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.பி.க்களின் கூட்டத்தில் பாராளுமன்ற கட்சி தலைவராக (பிரதமர்) நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். 30-ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டது. 

    இதைத் தொடர்ந்து பதவியேற்பு விழாவிற்கான நடைமுறைகள் தொடங்கின. ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதுடெல்லி மாநகராட்சியின் தோட்டக்கலை துறை சார்பில், ஜனாதிபதி மாளிகை வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளிலும் அலங்கரிக்கப்பட்டன.

    இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு 7 மணிக்கு கோலாகலமாக பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மோடியுடன் அவரது புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகளும் பதவியேற்றனர்.

    பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், குலாம் நபி ஆசாத், தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் மற்றும் பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.

    வங்காள தேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான், கிர்கிஸ்தான், மொரிஷியஸ், கஜகஸ்தான் உள்பட 14 நாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவையொட்டி ஜனாதிபதி மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
    எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசை கலைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மீண்டும் மத்தியில் அமைய உள்ளது. மோடி அரசு இன்று மாலை பதவியேற்க உள்ள நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 

    பா.ஜனதா மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும் முன்னதாகவே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுக்கு தொல்லை கொடுக்கிறது, அரசை கலைக்க முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். 

    பிரதமர் மோடியின் தலைமையிலான புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அசோக் கெலாட், புதிய அரசை அமைப்பதற்கு முன்னதாகவே வெற்றி பெற்ற பா.ஜனதா, மேற்கு வங்காளம், கர்நாடகம், மத்திய பிரதேசம் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு தொந்தரவை கொடுக்கவும், கலைக்கவும் முயற்சிகளை மேற்கொள்கிறது எனக் கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று காங்கிரஸ் அரசை பா.ஜனதா வலியுறுத்துகிறது. 
    கார்த்தி சிதம்பரம் சம்பந்தப்பட்டுள்ள ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. 

    ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆகி உள்ளார். எனவே, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில், கார்த்தி சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கும் நடைபெறும். இதற்காக வழக்கை இன்று சிறப்பு நீதிமன்றத்திற்கு சிபிஐ மாற்றி உள்ளது. 
    கேரளாவில் பிரதமர் மோடியை புகழ்ந்து பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல்லா குட்டியிடம் விளக்கம் கேட்டு கட்சி மேலிடம் நோட்டீசு அனுப்பி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏ.பி. அப்துல்லா குட்டி. இவர், கடந்த 1999 முதல் 2004 வரை கண்ணூர் தொகுதி எம்.பி. யாக இருந்தார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அப்துல்லா குட்டி, பாரதீய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடி யையும் அடிக்கடி பாராட்டி வந்தார். இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மோடிக்கு புகழாரம் சூட்டி பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பிரதமர் மோடியே காரணம்.

    காந்திய கொள்கைகளை முன் எடுத்து செல்வதுதான் மோடியின் வெற்றி ரகசியம். மத்திய அரசு கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. உஜ்வாலா திட்டம் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கிய திட்டமும் மக்களின் பாராட்டை பெற்றது.

    பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா யாரும் எதிர் பார்க்காத வெற்றியை பெற்றது. இதனை எதிர்க் கட்சிகள் மட்டுமல்ல, பாரதீய ஜனதா கட்சியில் உள்ளவர்களே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

    இவ்வாறு பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டிருந்தார்.

    காங்கிரஸ் தலைவராக இருந்து கொண்டு பாரதீய ஜனதா கட்சியை பாராட்டியதும், பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டி பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதும் கேரள காங்கிரசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


    இது தொடர்பாக அவர்கள் மாநில நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தனர். கட்சி மேலிடத்தின் கவனத்திற்கும் இதனை கொண்டு சென்றனர். இதையடுத்து கட்சி மேலிடம் அப்துல்லா குட்டியிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. இதனை கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து மோடியை புகழ்ந்ததால் இப்போது சிக்கலில் சிக்கி உள்ள அப்துல்லா குட்டி ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்தவர். 2009-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகொண்டு அப்போது குஜராத் முதல்- மந்திரியாக இருந்த மோடியை பாராட்டி பேசினார்.

    இதற்காக கடந்த 2009-ம் ஆண்டே அப்துல்லா குட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இப்போது இங்கும் அதே சிக்கலில் மாட்டிக் கொண்டார்.

    பாராளுமன்றத்தில் தமிழக மக்கள் நலனுக்காக போராடி திட்டங்களை பெறுவோம் என்று வசந்தகுமார் எம்பி கூறியுள்ளார்.

    நெல்லை:

    வசந்தகுமார் எம்.பி. நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்குநேரி தொகுதியில் 5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை 3 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளேன். மேலும் தொகுதியில் உள்ள படித்த இளைஞர்களுக்கு கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்புகள், தொகுதிக்கு தேவையானவற்றை தொடர்ந்து செய்து கொடுப்பேன்.

    கன்னியாகுமரி தொகுதி மக்களுக்காக பாராளுமன்றத்தில் பேசும்போது, நாங்குநேரி தொகுதி மக்களின் பிரச்சினை குறித்தும் குரல் கொடுப்போம். குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன். குமரி மற்றும் நெல்லையை சிறந்த சுற்றுலா தலமாக்க முயற்சி மேற்கொள்வேன். குமரி மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்வதில் சில சிக்கல்கள் உள்ளது.

    இதுகுறித்து மீனவர்களிடமும், தமிழக அரசிடமும் பேசி முடிவு செய்யப்படும். கடல் அரிப்பை தடுக்க கூடுதல் தூண்டில் வளைவு அமைக்கப்படும். எனது எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மீனவர் நலனுக்காக ஒதுக்கப்படும். செயல்படாமல் உள்ள நாங்குநேரி சிறப்பு பொருளாதார திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொள்வேன். ரூ.150 கோடியில் பாளையில் விளையாட்டு கிராமம் அமைக்கும் திட்டம் காலதாமதம் ஆகிறது. இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இரட்டை ரெயில் பாதை பணிகளை துரிதப்படுத்துவேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை செய்து விட்டு தான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தேன். நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பது எனது விருப்பம். எனினும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பேசி நல்ல முடிவை எடுப்பார்கள். குமரி தொகுதியில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஓட்டுகள் விடுபட்டிருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மத்திய அரசு தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. ஆனாலும் நாங்கள் தமிழக மக்கள் நலனுக்காக போராடி திட்டங்களை பெறுவோம். மக்களின் குரலாக பாராளு மன்றத்தில் ஒலிப்போம். பாராளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை பெற்று தந்தவர் குமரி அனந்தன். குமரி மாவட்ட ரெயில்வே பகுதிகளை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். அல்லது நெல்லையை தனி கோட்டமாக்கி அதனுடன் இணைக்க வேண்டும்.

    இதுகுறித்து மத்திய ரெயில்வே அமைச்சருடன் பேசுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்கேஎம்.சிவகுமார், நிர்வாகிகள் ராஜகோபால், டியூக் துரைராஜ், சுப்பிரமணியன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    பாராளுமன்றத் தேர்தலில் முலாயம் சிங்கிற்கு வாக்களிக்காத மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் வெற்றி பெற்றார். அவர் 94 ஆயிரத்து 389 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பிரேம்சிங் ஷக்யாவை தோற்கடித்தார். 

    இந்நிலையில், மெயின்புரி தொகுதிக்குட்பட்ட உன்னாவ் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களை நேற்று யாதவ சமூகத்தைச் சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கினர். முலாயம் சிங்கிற்கு ஓட்டு போடாததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. 

    இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, காவல்துறை அதிகாரிகளுக்கு மாநில தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆணைய தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், தாக்குதல் நடந்த கிராமத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
    காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற கட்சி தலைவரை தேர்வு செய்வதற்காக வரும் ஜூன் 1ம் தேதி கட்சியின் எம்பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு முதல் கூட்டத் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற கட்சி தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில், பாராளுமன்ற கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    பாராளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி, தலைவர் பதவியில் இருந்து விலக விரும்புகிறார். எனினும், அவர் மக்களவையில் கட்சியை தலைமை தாங்கி வழிநடத்த தயங்கவில்லை என்பதால், அவர் மக்களவை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நாளை பதவியேற்கும் விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நாளை (30-ம் தேதி) மாலை 7 மணியளவில் இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொள்கிறார்.

    இவ்விழாவில் பங்கேற்க வருமாறு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

    இந்த அழைப்பையேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மத்திய முன்னாள் மந்திரி குலாம் நபி ஆசாத் ஆகியோர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை நாளை பதவியேற்கும் விழாவில் பங்கேற்கிறார்கள்.
    ×