என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மேஜையில் வைத்தபோது துப்பாக்கி வெடிக்க காரணம் என்ன? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே வடக்கு போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் விருதம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகிய இருவரும் போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.

    நள்ளிரவில் அவர்கள் இருவரும் வடக்கு போலீஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தனர். ஜெகதீசன் கைத்துப்பாக்கியை போலீஸ் நிலையத்தில் உள்ள மேஜையில் வைத்துள்ளார். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் துப்பாக்கி வெடித்தது.

    அதிர்ஷ்டவசமாக அதில் இருந்து பாய்ந்த குண்டு யார் மீதும் படாமல் போலீஸ் நிலைய மேற்கூரையை துளைத்தது. இதனால் போலீஸ் நிலையத்தில் மேற்கூரை கடுமையாக சேதம் அடைந்தது.

    துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு போலீஸ் நிலையத்தில் இருந்த மற்ற போலீசார் பதட்டம் அடைந்தனர். இதனால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பதால் நிம்மதி அடைந்தனர்.

    இந்த சம்பவம் வேலூர் மாவட்ட போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சப்-இன்ஸ்பெக்டர் மேஜையில் வைத்தபோது துப்பாக்கி வெடிக்க காரணம் என்ன? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திராவில் இருந்து வேலூருக்கு வாகனங்களில் வரும் பொதுமக்களை மடக்கி கொரோனா பரிசோதனையை சுகாதாரத்துறை குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    வேலூர்:

    உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவ தொடங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவிதுள்ளது.

    தமிழக- ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி பகுதியில் வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஆந்திராவில் இருந்து வேலூருக்கு வாகனங்களில் வரும் பொதுமக்களை மடக்கி கொரோனா பரிசோதனையை சுகாதாரத்துறை குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்திற்கு அருகில் ஆந்திரா மாநிலம் உள்ளது. வர்த்தக ரீதியாகவும், திருப்பதி, காளஹஸ்தி, கானிப்பாக்கம் போன்ற கோவில்களுக்கும் வேலூர் மாவட்ட மக்கள் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் அதிகளவில் சென்று வருகின்றனர்.

    அப்படி சென்று வரும்போது கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதில் பைக்கில் வருபவர்களுக்கு கட்டாயமாகவும், கார்களில் வரும் சிலருக்கும் பிசோதனை செய்து வருகிறோம். அதேபோல் அடிக்கடி மருத்துவமனை சிகிச்சைக்கும், மார்க்கெட்டிற்கும் வந்து செல்பவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

    இதன்மூலம் மாவட்டத்தில் முழுமையாக கொரோனா கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    இதேபோல் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வாகனங்களில் மருந்து தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வேலூரில் மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் ரேஷன் கடை முன்னாள் ஊழியர் உயிரிழந்தார்.
    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி அவ்வைநகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 65), ரேஷன் கடையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று காலை ஸ்கூட்டரில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். சாய்நாதபுரம் அன்பு இல்லம் அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென கணேசன் ஓட்டிவந்த ஸ்கூட்டர் மீது மோதியது.

    இந்த விபத்தில் கணேசன் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 2 வாலிபர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் படுகாயமடைந்தவர்கள் வேலப்பாடியை சேர்ந்த தாமோதரன் (25), கண்ணன் (25) என்பது தெரியவந்தது.
    வேலூர் அருகே தனியார் மருத்துவமனை ஆம்புலன்சை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்று கடந்த மாதம் 31-ந் தேதி இரவு திருட்டு போனது. இதுகுறித்து மருத்துவமனை மேலாளர் சிவக்குமார் (வயது 54) அரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில், ஒரு கண்காணிப்பு கேமராவில் அரியூர் ஜீவாநகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (23) , விஜய் (24) ஆகியோர் ஆம்புலன்சை திருடி செல்வது பதிவாகியிருந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஆம்புலன்ஸ் மீட்கப்பட்டது.

    குடியாத்தத்தில் போலி கால்சென்டர் நடத்தி மோசடி நடந்துள்ளது. களிமண்ணை பார்சல் செய்து அனுப்பியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பொதுமக்களை தொடர்பு கொள்ளும் பெண்கள் நாங்கள் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்றும், 100 நபர்களின் செல்போன் எண்களை தேர்ந்தெடுத்து குலுக்கல் நடத்தியதில் தங்கள் பெயர் வந்துள்ளதாகவும், தங்களுக்கு செல்போன் மற்றும் பவர்பேங்க் குறைந்த விலையில் தருவதாக கூறுவார்கள்.

    பணத்தை செலுத்திவிட்டு தபால் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என செல்போன் மூலம் பொதுமக்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி வந்துள்ளனர். இதனை நம்பி பொதுமக்கள் பணத்தை செலுத்தி பொருட்களை பெற்ற போது அந்த பொருட்கள் தரமற்றதாகவும், களிமண்ணை வைத்தும் பார்சல் செய்து அனுப்பி உள்ளனர்.

    இதுகுறித்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் உத்தரவின்பேரில், குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நேற்று மதியம் போலீசாருடன் குடியாத்தம் புதுப்பேட்டை கோட்டா சுப்பைய்ய தெருவில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்.

    அப்போது அந்த வீட்டில் 15 இளம்பெண்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது பொதுமக்களின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு, குறைந்த விலையில் செல்போன் மற்றும் பவர்பேங்க் பரிசு விழுந்திருப்பதாக பேசி வந்ததாக கூறி உள்ளனர். இதையடுத்து போலீசார் அந்த பெண்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் அங்கு சோதனை நடத்தியபோது ஏராளமான செல்போன்கள், களிமண் பார்சல், செல்போன் எண்கள் கொண்ட புத்தகங்கள் இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர். போலி கால் சென்டர் நடத்திய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூரில் கல்குவாரி குட்டையில் மூழ்கி மெக்கானிக் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த ரபீக் மகன் இக்பால் (வயது 18), மெக்கானிக். இவர் நேற்று மதியம் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் வேலப்பாடி அருகேயுள்ள கன்னிகாபுரம் சாஸ்திரிநகரில் உள்ள கல்குவாரிக்கு சென்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் கல்குவாரி குட்டையில் தண்ணீர் காணப்பட்டது. அதில் இறங்கி இக்பால் மற்றும் நண்பர்கள் குளித்துள்ளனர். அப்போது குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்ற இக்பால் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். அதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை தேடியனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து அவர்கள் உடனடியாக வேலூர் தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் தணிகைவேலு தலைமையில் வீரர்கள் சென்று குட்டையில் இறங்கி தேடினர். அப்போது இக்பால் பிணமாக மீட்கப்பட்டார். போலீசார், இக்பால் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிரு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூரில் புத்தாண்டு தினம் அன்று தாய் திட்டியதால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் முபாரக் (வயது 26) . கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை தாயார் கண்டித்துள்ளார்.

    மனமுடைந்த முபாரக் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினம் புத்தாண்டு அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முபாரக்கின் பிணத்தை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அனுமதியின்றி மாநாடு நடத்தியது, உத்தரவை மீறி ஒன்று கூடுதல், கொரோனா காலத்தில் கூட்டம் கூடுதல், சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை என்று பாஜக மாநிலத்தலைவர் முருகன் உட்பட 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க. அணி பிரசார பிரதிநிதிகள் மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநாட்டில் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன், பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் வாசுதேவன், வேலூர் மாவட்ட பார்வையாளர் வெங்கடேசன் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மாநாட்டையொட்டி வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி தலைமையில் எஸ்.பி. விஜயகுமார், டி.எஸ்.பி.க்கள் இன்ஸ்பெக்டர் உட்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அனுமதியின்றி மாநாடு நடத்தியது, உத்தரவை மீறி ஒன்று கூடுதல், கொரோனா காலத்தில் கூட்டம் கூடுதல், சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை என்று மாநிலத்தலைவர் முருகன் உட்பட 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    கோவையில் மு.க.ஸ்டாலிடம் கேள்வி கேட்ட பெண் அவர்களுடைய கட்சியினரால் அடித்து விரட்டப்பட்டுள்ளார் என்று எல் முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பா.ஜ.க.வின் அணி, பிரிவு பிரதிநிதிகள் மாநாடு நடந்தது. இதில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன் பங்கேற்று பேசியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பா.ஜ.க.வின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.

    பெண்களின் மத்தியில் பிரதமர் மோடியின் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    விவசாயிகள் தாங்கள் விளைவிக்கின்ற பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்காக புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    இந்த புதிய சட்டத்தால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். இதனை விவசாயிகள் வரவேற்கின்றனர். ஆனால் தி.மு.க. போன்ற கட்சிகள் பொய் பிரசாரம் செய்து இந்த சட்டத்தை எதிர்த்து வருகிறது.

    மருத்துவக் காப்பீட்டு திட்டம், முத்ரா திட்டம், தனிநபர் கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றியை பெறுவதுடன் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக பா.ஜ.க இருக்கும்’’.

    தி.மு.க.வால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கோவையில் மு.க.ஸ்டாலிடம் கேள்வி கேட்ட பெண் அவர்களுடைய கட்சியினரால் அடித்து விரட்டப்பட்டுள்ளார்.

    ஸ்டாலின்.

    தி.மு.க.வை தமிழகத்தில் இருந்து அடித்து விரட்ட வேண்டிய காலம் வந்து விட்டது. வருகிற மே மாதம் தி.மு.க.வை தமிழகத்தில் இருந்து விரட்டி அடிப்போம்.

    வெற்றிவேல் யாத்திரை மூலம் தி.மு.க.வை புலம்பச் செய்துள்ளோம். வெற்றிவேல் யாத்திரை மூலம் தி.மு.க.வின் தூக்கம் தொலைந்து விட்டது.

    தி.மு.க. தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாடு தமிழகத்தில் எடுபடாது. தமிழக சட்டப் பேரவைக்கு பாஜ.க. கட்சியினர் எம்.எல்.ஏ.க்களாக செல்ல அனைவரும் அயராது பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வேலூரில் 2 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 4 கார்களின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பம்பர் கம்பிகள் அகற்றப்பட்டன.
    வேலூர்:

    வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்திவேல் ஆகியோர் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் மேற்புறம் தார்பாயால் மூடாமல் சென்றது தெரியவந்தது. அதை தொடர்ந்து அந்த லாரிகளுக்கு தலா ரூ.2, 000 வீதம் ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 4 கார்களின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பம்பர் கம்பிகள் அகற்றப்பட்டன.
    வேலூர் மாவட்டத்தில் நேற்று வெளியான முடிவில் 12 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் தினமும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வெளியான முடிவில் 12 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 255-ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
    வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அத்துமீறிய 210 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று அதிகாலை 3 மணி வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடை காரணமாக, புத்தாண்டை கொண்டாடும் வகையில் மோட்டார்சைக்கிளில் அத்துமீறும் இளைஞர்களை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் 58 இடங்களில் தடுப்புகள் கொண்ட சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது.

    நள்ளிரவு நேரத்தில் தேவையில்லாமல் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றவர்கள், மதுபோதையில் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களின் மோட்டார் சைக்கிள்கள்களையும் பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று அதிகாலை 3 மணி வரை மாவட்டம் முழுவதும் 210 மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவர்களின் வாகன ஆவணங்களை சரிபார்த்து, அபராதம் விதித்து வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
    ×