என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
வேலூரில் கல்குவாரி குட்டையில் மூழ்கி மெக்கானிக் பலி
வேலூரில் கல்குவாரி குட்டையில் மூழ்கி மெக்கானிக் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த ரபீக் மகன் இக்பால் (வயது 18), மெக்கானிக். இவர் நேற்று மதியம் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் வேலப்பாடி அருகேயுள்ள கன்னிகாபுரம் சாஸ்திரிநகரில் உள்ள கல்குவாரிக்கு சென்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் கல்குவாரி குட்டையில் தண்ணீர் காணப்பட்டது. அதில் இறங்கி இக்பால் மற்றும் நண்பர்கள் குளித்துள்ளனர். அப்போது குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்ற இக்பால் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். அதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை தேடியனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து அவர்கள் உடனடியாக வேலூர் தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் தணிகைவேலு தலைமையில் வீரர்கள் சென்று குட்டையில் இறங்கி தேடினர். அப்போது இக்பால் பிணமாக மீட்கப்பட்டார். போலீசார், இக்பால் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிரு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






