என் மலர்tooltip icon

    வேலூர்

    குடியாத்தம் தபால் அலுவலகத்தில் ஊழியர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தத்தை அடுத்த கீழ்ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 53). குடியாத்தம் தலைமை தபால் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலையில் வீட்டிலிருந்து இரவு பணிக்கு விஜயகுமார் சென்றுள்ளார். நேற்று காலையில் அவரது மனைவி மீரா, விஜயகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை. இதுகுறித்து தபால் அலுவலகம் அருகே வசிக்கும் தெரிந்த நபருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் சென்று பார்த்தபோது அறையின் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு விஜயகுமார் தூங்கிய நிலையில் இருந்துள்ளார். கதவை தட்டியும் எழுந்திரிக்கவில்லை.

    இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூங்கிய நிலையில் விஜயகுமார் இறந்துள்ளார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் மீரா புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் சென்று விஜயகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூரில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கடையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூரில் பல கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக வேலூர் மாநகராட்சி கமிஷனருக்கு புகார்கள் சென்றது. அவரது உத்தரவின் பேரில் 2-வது மண்டல உதவி கமிஷனர் பாலு, சுகாதார அலுவலர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று மண்டித்தெரு, சுண்ணாம்புக்கார தெரு போன்ற இடங்களில் உள்ள கடைகளில் திடீர் சோதனை செய்தனர்.

    அப்போது சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள ஒரு கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அங்கு சுமார் 1,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த கடையை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். கடையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    குடியாத்தம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி பேரணாம்பட்டு பஸ் நிலையம் அருகில் நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு கோஷமிட்டனர்.
    பேரணாம்பட்டு:

    நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய இணைச்செயலாளர் மசிகம் பரிதா என்பவரை கட்சி தலைமை அறிவித்துள்ளது.

    இந்தநிலையில் வேட்பாளரை மாற்றக்கோரி நேற்று பேரணாம்பட்டு பஸ் நிலையம் அருகில் நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு கோஷமிட்டனர். நகர துணை செயலாளர் சிவாஜி, மாவட்ட பிரதிநிதிகள் திருமால், தேசமுத்து, இன்பரசன், பொருளாளர் ஆனந்தன், இலக்கிய அணி செயலாளர் அறிவுடை நம்பி, வார்டு செயலாளர் பாரத், வழக்கறிஞர் வாசுகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    குளிப்பதை வீடியோ எடுத்து தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை மிரட்டி அறையில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் நேற்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறேன். நானும் எனது தாயாரும் வீட்டில் உள்ள குளியலறையில் குளித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் எங்களுக்கு தெரியாமல் அதனை வீடியோ எடுத்தார். ஒருநாள் அதை என்னிடம் காட்டி அவரது ஆசைக்கு இணங்காவிட்டால் எனது தாயாரின் வீடியோவை வெளியிடுவேன் என என்னை மிரட்டினார்.

    இதனால் பயந்து போன நான் அவரை வேலூர் ஓட்டேரி பகுதியில் சந்திக்கச் சென்றேன். அப்போது என்னை அறையில் அடைத்து வைத்து நிர்வாணப்படுத்தி 2 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    அதை செல்போனில் படம் எடுத்து அந்த படத்தை என்னிடம் காட்டி மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்து வந்தார். மாதந்தோறும் மிரட்டி ரூ.10 ஆயிரம் பறித்தார். அவரது செயல் எல்லை மீறி போகவே நான் இதைப்பற்றி கடந்த நவம்பர் மாதம் புகார் கொடுத்தேன். அவனை போலீசார் கைது செய்தனர்.

    ஆனால் அவன் தற்போது ஜெயிலில் இருந்து வெளியே வந்து எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறான். நான் சென்னையில் வேலை பார்த்து வரும் மருத்துவமனைக்கு வந்து என்னை அவமானப்படுத்தி பாலியல் தொல்லை தருகிறார். நீ எங்கு போனாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. உன் குடும்பத்தில் யாரையாவது வெட்டி கொலை செய்து விடுவேன் என தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். அவரிடமிருந்து என்னையும் என் குடும்பத்தினரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பரிசுகளுடன் பட்டங்களை வழங்கி பாராட்டினார்.
    வேலூர்:

    வேலூர் சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 16 வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது.

    இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியிலிருந்து சென்னை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்து இறங்கினார். அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. பல்கலைக்கழக வேந்தர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். துணைவேந்தர் தாமரைச்செல்வி வரவேற்று பேசினார். மேலும் ஆண்டறிக்கை வாசித்தார்.

    இந்த ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மொத்தமாக 80 ஆயிரத்து 176 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றுள்ளனர்.

    இதில் நேரில் அனுமதிக்கப்பட்ட 217 முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கும், 35 இளங்கலை மற்றும் 31 முதுகலை பாடப்பிரிவுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பரிசுகளுடன் பட்டங்களை வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) சயதுசபி, தேர்வுக் கட்டுப்பாட்டாளர் (பொறுப்பு) விஜயராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மாலையில் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி வேலூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    திமுக பொதுச்செயலாளராக இருக்கும் துரைமுருகனை தொடர்ந்து ஐந்து முறை சட்டசபை உறுப்பினராக்கிய காட்பாடி தொகுதி கண்ணோட்டம்.
    வேலூர் மாநகராட்சியின் முக்கிய பகுதி காட்பாடி ஆகும். ஆன்மிகத்திற்கு பெயர் பெற்ற திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த ஊர் காங்கேயநல்லூர் முருகன் கோவில், கிருபானந்த வாரியார் சாமிகள் நினைவகம், வள்ளிமலை முருகன் கோவில் போன்ற ஆன்மிகத் தலங்கள் உள்ளன. இங்குதான் வேலூர் காட்பாடி சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வி.ஐ.டி.பல்கலைக்கழகம் உள்ளது.

    காட்பாடி தொகுதி

    இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 428 வாக்காளர் உள்ளனர். ஆண்கள் 1,19,583, பெண்கள் 1,27,813, மூன்றாம் பாலினத்தவர் 32 பேர் உள்ளனர்.

    தெங்கால், பாலேகுப்பம், கொண்டாரெட்டிபள்ளி, பொன்னை, பரமசாத்து, மாதண்டகுப்பம், கீரைசாத்து, கொல்லபள்ளி, அம்மவாரிபள்ளி, மகிமண்டலம், பெருமாள்குப்பம், எருக்கம்பட்டு, வள்ளிமலை, மேல்பாடி, முத்தரசிகுப்பம், விண்ணம்பள்ளி, கொடுக்கந்தாங்கல், இளையநல்லூர், தேம்பள்ளி, வெப்பாலை, ஸ்ரீபாதநல்லூர், குகையநல்லூர், ஏராந்தாங்கல், சேர்க்காடு, ஒட்டந்தாங்கல், கரிகிரி(சக்கராகுட்டை,கம்மவார்புதூர், வரதராசபுரம்,கசம்), கண்டிபேடு, புதூர், செம்பராயநல்லூர், பிரம்மபுரம், சேவூர், அரும்பருத்தி, கார்ணாம்பட்டு,

    காட்பாடி தொகுதி

    அம்முண்டி, வண்டறந்தாங்கல், கரசமங்கலம், உண்ணாமலைசமுத்திரம், தலையாரம்பட்டு, தண்டலம்கிருஷ்ணாபுரம், விருதம்பட்டு, மற்றும் மாநகராட்சியில் உள்ள தாராபடவேடு, கழிஞ்சூர் காட்பாடி காங்கேயநல்லூர் காந்திநகர் திருவலம் மற்றும் சேனூர்,சேண்பாக்கம் ஆகிய 15 வார்டுகள்,வசூர், பல்லேரி, கொண்டகுப்பம், மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம், கத்தாரிகுப்பம் மற்றும் லாலாப்பேட்டை கிராமங்கள் இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.

    காட்பாடி தொகுதியில் வன்னியர் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். முதலியார், நாயுடு ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர்.

    காட்பாடி தொகுதி

    தொகுதியில் விவசாயம் நெசவு ஆகியவை பிரதானமாக உள்ளது. ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதிகளில் காட்பாடியும் ஒன்று. 1971-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட துரைமுருகன் வென்றார். பின்னர் 1977-ல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெயவேலு, 1980ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட பூங்காவனம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    1984-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த ரகுபதி வென்றார். அதன் பிறகு 1989-ல் மீண்டும் திமுக சார்பில் களம் இறங்கிய துரைமுருகனும் தொடர்ந்து 1991-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கலைச்செல்வி வெற்றி பெற்றனர்.
    பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதாவது 1996, 2001, 2006, 2011, 2016 என்று தொடர்ந்து 5 முறை துரைமுருகன் வெற்றி பெற்றுள்ளார்.

    கோரிக்கை

    விவசாயத்தை நம்பியே இந்த தொகுதி மக்கள் உள்ளனர். ஆந்திர எல்லையை ஒட்டி ஏராளமான மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. ஆந்திராவில் உள்ள மாம்பழச்சாறு தொழிற்சாலைகளுக்கு மாம்பழங்களை எடுத்துச் செல்கின்றனர். இதனை தடுக்க காட்பாடி தொகுதியில் ஒரு மாம்பழ தொழிற்சாலை கொண்டு வரவேண்டும்.

    இந்த தொகுதியில் ஏற்கனவே இருந்த தமிழ்நாடு வெடி மருந்து தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. அதனை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சிப்காட் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.

    கோரிக்கை

    பல ஆண்டுகளாக தாலுகா மருத்துவமனை வசதி இல்லாத பகுதியாக உள்ளது. நீண்டநாள் கோரிக்கையான தாலுகா மருத்துவமனை விரைவில் அமைக்கவேண்டும். காட்பாடி பகுதியிலிருந்து வேலூர் சத்துவாச்சாரி பகுதிக்கு பாலாற்றின் குறுக்கே மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு தினசரி ரெயில் இயக்க வேண்டும்.

    காட்பாடி தொகுதி

    இது தவிர அரக்கோணம் சென்னை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களை காட்பாடி வரை நீட்டிக்க வேண்டும். காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட வேண்டும். காட்பாடி தொகுதியிலேயே நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். நகரில் பிரதானமாக நிற்கும் ரெயில்வே மேம்பாலத்தை இடித்துவிட்டு புதியதாக ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    காட்பாடி தொகுதி

    1962- ராஜகோபால் நாயுடு- (காங்கிரஸ்)
    1967- நடராஜன்- (தி.மு.க.)
    1971- துரைமுருகன்- (தி.மு.க.)
    1977- எம்.ஏ.ஜெயவேலு- (அ.தி.மு.க.)
    1980- பூங்காவனம்- (இ.கம்யூ)
    1984- ரபகுதி- (அ.தி.மு.க.)
    1989- துரைமுருகன்- (தி.மு.க.)
    1991- கலைச்செல்வி- (அ.தி.மு.க.)
    1996- துரைமுருகன்- (தி.மு.க.)
    2001- துரைமுருகன்- (தி.மு.க.)
    2006- துரைமுருகன்- (தி.மு.க.)
    2011- துரைமுருகன்- (தி.மு.க.)
    2016- துரைமுருகன்- (தி.மு.க.)
    குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளால் தேர்தலின்போது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார்.
    வேலூர்:

    தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    ஏற்கனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளால் தேர்தலின்போது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டம் முழுவதும் ஏராளமான ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் வேலூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் 10 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் மக்கானை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது25), சத்துவாச்சாரியை சேர்ந்த சவுந்தர்ராஜன், தோட்டப்பாளையத்தை சேர்ந்த ரவுடி சின்ன அப்பு (29) உள்பட 5 பேரை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கைது செய்தார். இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் சமூக விரோதிகளின் செயல்கள் அதிகமாக உள்ளதாக வந்த புகாரை அடுத்து அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    ரங்காபுரம் பகுதியில் ரவுடி பாஸ்கரன் என்ற சுக்ரி (24) என்பவரை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சத்துவாச்சாரி போலீசார் கைது செய்தனர்.
    முதல்முறை வாக்காளர்கள் கண்டிப்பா ஓட்டு போடுங்க. ஜக்கம்மா சொல்றா 100 சதவீதம் எல்லோரும் ஓட்டு போடுங்க என்று கூறி அவர் குடுகுடுப்பை முழங்கியபடி சென்றார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    வேலூர் டி.கே.எம். மகளிர் கல்லூரியில் 100 சதவீத வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் அங்கன்வாடி பணியாளர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் நாட்டுப்புற நடனம் ஆடி 100 சதவீத வாக்களிக்க கோரி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குடுகுடுப்பைக்காரர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    குடுகுடுப்பைக்காரர் ஒருவர் ஜக்கம்மா சொல்றா.. ஜக்கம்மா சொல்றா... நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது... ஏப்ரல் 6-ந்தேதி எல்லாரும் ஓட்டு போடுங்க.

    முதல்முறை வாக்காளர்கள் கண்டிப்பா ஓட்டு போடுங்க. ஜக்கம்மா சொல்றா 100 சதவீதம் எல்லோரும் ஓட்டு போடுங்க என்று கூறி அவர் குடுகுடுப்பை முழங்கியபடி சென்றார்.

    இந்த நிகழ்ச்சி மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல் கல்லூரி வளாகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் 100 சதவீதம் வாக்கு என்ற வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு காட்பாடி தொகுதி மற்றும் குடியாத்தம் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட பகுதிகள் இணைத்து உருவாக்கப்பட்ட கே.வி.குப்பம் தொகுதி கண்ணோட்டம்.
    வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையோரம் உள்ள அதிக கிராமங்களை கொண்டது கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி. தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு காட்பாடி தொகுதி மற்றும் குடியாத்தம் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட பகுதிகள் இணைத்து கே.வி.குப்பம் (தனி) தொகுதி உருவாக்கப்பட்டது.

    மகாதேவமலை கோவில், ராஜாதோப்பு அணை, விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி மையம் ஆகியவை இந்த தொகுதியின் அடையாளமாக உள்ளது.

    தனகொண்டப்பள்ளி, விலுதோனபாளையம், தட்சிணபதபாளையம், ரெங்கசமுத்திரம், பரதராமி, புட்டவாரிபள்ளி, செங்குன்றம், கோடிகுப்பம், தட்டப்பாறை, சின்னாளபள்ளி, முக்குன்றம், பாக்கம், ராமாலை, தத்திமாணபள்ளி, கல்லபாடி, கொண்டசமுத்திரம், பிச்சனூர், ராஜகுப்பம், நெல்லூர்பேட்டை, செருவங்கி, தாழையாத்தம், செதுக்கரை, மேலாலத்தூர், மேல்முட்டுக்கூர், செட்டிக்குப்பம், போஜனபுரம், செம்பேடு, சிங்கல்படி, கூடநகரம், அனங்காநல்லூர், கொத்தகுப்பம், பட்டு, ஒலகாசி மற்றும் சித்தாத்தூர் கிராமங்கள்.

    கே.வி. குப்பம் தொகுதி

    காட்பாடி வட்டம் (பகுதி), தொண்டான்துளசி, செஞ்சி, பனமடங்கி, மாளியப்பட்டு, மேல்மாங்குப்பம், மேல்மாயில், கீழ்முட்டுக்கூர், காளாம்பட்டு, அரும்பாக்கம், லத்தேரி, விளுந்தக்கல், ஜாபராபேட்டை, வஞ்சூர், ஒழையாத்தூர், அனங்குடி, பொம்மிநாயக்கன்பாளையம், அங்காரன்குப்பம், அலங்கனேரி, முருக்கம்பட்டு, காங்குப்பம், தேவரிஷிகுப்பம், நாகல், கீழ் ஆலத்தூர், சேத்துவண்டை, அம்மணாங்குப்பம், வேப்பூர், நெட்டேரி, பசுமாத்தூர், சென்னாங்குப்பம், மாச்சனூர், பழையகிருஷ்ணாபுரம், காவனூர், கீழ்வைத்தியணான்குப்பம், வேப்பங்கணேரி, துத்திதாங்கல், மேல்விலாச்சூர், பில்லாந்திபட்டு, மேலூர், கீழுர், முதினாம்பட்டு, கீழ்விலாச்சூர், வடுகன் தாங்கல், விக்ரமாச்சி, வேலம்பட்டு, வாழ்வான்குன்றும், வடவிரிஞ்சிபுரம், கொத்தமங்கலம், சோழமூர் மற்றும் திருமணி கிராமங்கள் இந்த தொகுதியில் அடங்குகிறது.

    இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 24,230 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,09,836 பேர், பெண்கள் 1,14,389 பேர், மூன்றாம் பாலினத்தினர் 5 பேர் உள்ளனர்.

    இந்த தொகுதியில் ஆதி திராவிடர்கள், வன்னியர், நாயுடு சமூகத்தினர் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர். ரெட்டியார், அருந்ததியினர் சமூகத்தினர் கணிசமாக உள்ளனர்.

    2011-ல் முதல் தேர்தலை கே.வி. குப்பம் (தனி) சந்தித்தது. அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன் வெற்றிபெற்றார். 2011 தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்களின் முதல் சட்டப் பேரவையின் தற்காலிக சபாநாயகராக செ.கு. தமிழரசன் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முழுக்க முழுக்க கிராமங்களை மட்டுமே கொண்ட மிக மிக பின்தங்கிய தொகுதியாகும். விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. 10-க்கும் மேற்பட்ட பொறி உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. அதிகளவில் மாம்பழம் விளைச்சல் உள்ளது.

    தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள்

    இந்த தொகுதி மக்களுக்கு வடுகன்தாங்கல் மற்றும் லத்தேரியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும். வேலூர் மாவட்டம் முழுவதும் செயல்படுத்திய காவிரி குடிநீர் திட்டத்தில் புறக்கப்பட்ட கே.வி.குப்பம் ஒன்றியத்தை இணைக்க வேண்டும். கே.வி.குப்பத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். வடுகன்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

    கே.வி. குப்பம் தொகுதி

    மோர்தானா அணையில் இருந்து ராஜாதோப்பு அணைக்கு கட்டப்பட்ட கால்வாயை சரி செய்து வேப்பனேரி, பில்லாந்திப்பட்டு, சின்ன வடுகன்தாங்கல், வடுகன்தாங்கல், பி.என்.பாளையம் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும்.

    கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடன் திட்டங்கள், கால்நடை மற்றும் கோழி வளர்ப்புக்கு சிறப்பு திட்டங்கள், சாலை மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
    குடியாத்தம் அருகே மினிவேன் பின்பக்க டயர் வெடித்த விபத்தில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    குடியாத்தம் அடுத்த பரதராமி வி.டி. பாளையம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்தனர். இதற்காக ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியில் மாப்பிள்ளை வீடு பார்க்க நேற்று உறவினர்கள் மினி வேனில் புறப்பட்டனர்.

    நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மாலையில் மினி வேனில் ஊருக்கு திரும்பினர். காட்பாடி அருகே திருவலம் இ.பி கூட்ரோட்டில் வந்தபோது திடீரென மினிவேன் பின்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் வேன் டிரைவர் உட்பட 31 பேர் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த 4 பேரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குடியாத்தம் வி.டி.பாளையத்தை சேர்ந்த வெண்ணிலா (வயது35) பிச்சனூர் கே.எஸ். நகரை சேர்ந்த வசந்தா (45) ஆகியோர் இறந்தனர். மேலும் இரவில் வி.டி‌.பாளையத்தை சேர்ந்த ரஞ்சிதம் (55) என்பவரும் பலியானார்.

    இதன்மூலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. திருமணம் பேசி முடிக்க மகிழ்ச்சியாக சென்ற குடும்பத்தினர் விபத்தில் சிக்கி 3 பேர் பலியானதால் சோகத்தில் மூழ்கினர்.

    இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) தனி விமானத்தில் சென்னைக்கு வருகிறார்.
    வேலூர்:

    இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) தனி விமானத்தில் சென்னைக்கு வருகிறார். அன்று இரவு கவர்னர் மாளிகையில் ஜனாதிபதி ஓய்வெடுக்கிறார். 10-ந்தேதி (புதன்கிழமை) காலை சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூர் வருகிறார்.

    முதல் நிகழ்ச்சியாக சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்கிறார்.

    பின்னர் ஸ்ரீபுரம் தங்ககோவிலில் உலக மக்கள் அமைதி, நலம், வளத்திற்காக சக்தி அம்மா தலைமையில் மகாலட்சுமியின் மகா மந்திரத்தை ஒரு லட்சம் முறை படித்து பிரமாண்டமான முறையில் யாகம் நடத்தப்படுகிறது. அதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று நாட்டு மக்களின் நலத்திற்காகவும், வளத்திற்காகவும் பிரார்த்தனை செய்து வழிபட உள்ளார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி, ஜனாதிபதி வருகையையொட்டி திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீபுரம் தங்ககோவிலில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து பல்கலைக்கழகம் மற்றும் தங்ககோவில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். அதே போன்று பாதுகாப்பு பணிகள், முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி.சங்கர் தலைமையில் 6 போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

    பட்டமளிப்பு விழா நடைபெறும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீபுரம் தங்ககோவிலில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விழா முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக செய்யும்படி கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதில், வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், நல அலுவலர் சித்ரசேனா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
    வேலூர்:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் நடைபெறுகிறது. தேர்தல் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நடைபெறவும், 100 சதவீதம் வாக்களிப்பதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை அரசியல் கட்சியினர் வழங்குவதை தடுக்கவும், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்வதை கண்காணிக்கவும் 18 பறக்கும்படை, 18 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சட்டமன்ற தொகுதியின் முக்கிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதேபோன்று அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு மதுபானங்கள் வழங்குவதை தடுக்க வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிறமாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவது மற்றும் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது, பீர்வகைகள் விற்பனை செய்வதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிவடையும் வரை டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வழங்க கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வேலூர் கோட்ட டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், வேலூர் கோட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது, 21 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு மதுபானங்கள் வழங்க கூடாது என்று கடையின் மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் வாக்குப்பதிவு முடியும்வரை ஒருவருக்கு 2 புல் அல்லது 4 ஆப் அல்லது 8 குவாட்டர் அல்லது 3 பீர் மட்டுமே வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதையும்மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் அந்த கடையின் மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு கடையின் விற்பனை வழக்கத்தை விட 30 சதவீதம் அதிகமானால் அந்த கடை தணிக்கைக்கு உட்படுத்தப்படும். தேர்தலின்போது வாக்காளர்களுக்கு மதுபானங்கள் வழங்குவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
    ×