search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    குடியாத்தம் அருகே வேன் கவிழ்ந்து 3 பெண்கள் பலி

    குடியாத்தம் அருகே மினிவேன் பின்பக்க டயர் வெடித்த விபத்தில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    குடியாத்தம் அடுத்த பரதராமி வி.டி. பாளையம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்தனர். இதற்காக ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியில் மாப்பிள்ளை வீடு பார்க்க நேற்று உறவினர்கள் மினி வேனில் புறப்பட்டனர்.

    நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மாலையில் மினி வேனில் ஊருக்கு திரும்பினர். காட்பாடி அருகே திருவலம் இ.பி கூட்ரோட்டில் வந்தபோது திடீரென மினிவேன் பின்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் வேன் டிரைவர் உட்பட 31 பேர் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த 4 பேரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குடியாத்தம் வி.டி.பாளையத்தை சேர்ந்த வெண்ணிலா (வயது35) பிச்சனூர் கே.எஸ். நகரை சேர்ந்த வசந்தா (45) ஆகியோர் இறந்தனர். மேலும் இரவில் வி.டி‌.பாளையத்தை சேர்ந்த ரஞ்சிதம் (55) என்பவரும் பலியானார்.

    இதன்மூலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. திருமணம் பேசி முடிக்க மகிழ்ச்சியாக சென்ற குடும்பத்தினர் விபத்தில் சிக்கி 3 பேர் பலியானதால் சோகத்தில் மூழ்கினர்.

    இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×