என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    அதிமுக கூட்டணியில் பா.ம.க.-வும், திமுக-வும் நேருக்குநேர் மோதும் கீழ்பென்னாத்தூர் தொகுதி கண்ணோட்டம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி கீழ்பென்னாத்தூர் தொகுதி ஆகும்.

    1952-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் கீழ்பென்னாத்தூர் அடங்கி இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு மறுசீரமைப்பின் போது கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

    அதிமுக கூட்டணியில் பா.ம.க.-வில் செல்வகுமார், திமுக-வில் கு. பிச்சாண்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் சுகானந்தம், நாம் தமிழரில் ரமேஷ்  பாபு, அமமுக-வில் பி.கே.எஸ். கார்த்திகேயன் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பா.ம.க. வேட்பாளர் செல்வகுமார் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 2,00,000
    2. அசையும் சொத்து- ரூ. 4,17,787.30
    3. அசையா சொத்து- ரூ. 9,00,000

    திமுக வேட்பாளர் கு. பிச்சாண்டி சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 1,06,850
    2. அசையும் சொத்து- ரூ. 32,99,546.51
    3. அசையா சொத்து- ரூ. 2,90,95,000

    திண்டிவனம்- பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள கீழ்பென்னாத்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியில் கீழ்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், ஆகிய ஒன்றியங்களும் கீழ்பென்னாத்தூர் வேட்டவலம் ஆகிய பேரூராட்சிகளும் உள்ளன.

    கீழ்பென்னாத்தூர் தொகுதியை பொறுத்த வரை வன்னியர்கள் அதிகளவில் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஆதிதிராவிடர், யாதவர், நாயுடு, முதலியார், ரெட்டியார், மற்றும் பல்வேறு சமூகத்தினரும் உள்ளனர்.

    இந்த தொகுதி விவசாயம் நிறைந்த தொகுதி ஆகும். எந்தவித தொழிற்சாலைகளும் இல்லை. விவசாயம் தவிர கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் உள்ளனர். பிழைப்புக்காக வெளிமாநிலங்களுக்கும், சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு பெறுநகரங்களுக்கும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் சென்று வரும் நிலை உள்ளது.

    இந்த தொகுதியில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. பெயர் சொல்லும் அளவுக்கு பொறியியல் கல்லூரிகளோ, பெரிய அளவிலான எந்தவொரு கல்லூரி நிறுவனங்களோ இல்லை.

    கீழ்பென்னாத்தூர் தொகுதி

    கீழ்பென்னாத்தூர் தொகுதியில் கடந்த தேர்தலில் 285 வாக்குசாவடி மையங்கள் இருந்தன. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 1000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நிறைந்த வாக்குசாவடிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதனால் தற்போது 60 வாக்கு சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்தம் 345 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கீழ்பென்னாத்தூர் தொகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் முறையாக நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஏ.கே. அரங்கநாதனும், தி.மு.க. சார்பில் கு.பிச்சாண்டியும் போட்டியிட்டனர். இதில் ஏ.கே. அரங்கநாதன் வெற்றி பெற்றார்,
    2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே. செல்வமணியும், தி.மு.க. சார்பில் கு.பிச்சாண்டியும் போட்டியிட்டனர். இதில் பிச்சாண்டி வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

    கீழ்பென்னாத்தூர் தொகுதியில் தொழிற்சாலைகள் இல்லாததால் வருமானத்திற்கு வழியின்றி பிறமாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு இளைஞர்கள் செல்கின்றனர். எனவே, இங்கு தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

    ஆவூரில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் எந்திரங்கள் மூலம் கோரைப்பாய் செய்யும் தொழிலில் பலவகை டிசைன்களை கொண்டு பாய் முடைகின்றனர். இது அனைவராலும் ஈர்க்கப்படுவதால் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இங்கு பாய் முடையும் தொழில் பூங்கா அமைக்க வேண்டும். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போன்று பாய் முடையும் தொழிலில் உள்ளவர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என பாய்முடைவோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    கீழ்பென்னாத்தூர் தொகுதி

    கீழ்பென்னாத்தூரை தலைமையிடமாக கொண்டு தாலுகா அலுவலகம் மற்றும் இதர அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளன. இங்கு சார்நிலை கருவூலம் இல்லை. இதனால் பல்வேறு சிரமங்களுக்கிடையே பொதுமக்கள் மற்றும் அரசு பணியில் உள்ளவர்கள் 18 கிலோ மீட்டர் தூரமுள்ள திருவண்ணாமலைக்கு சென்று செலான் தொகை கட்ட வேண்டிய நிலைமை உள்ளது. இதனால் பணமும், நேரமும் விரயமாகிறது. இதனை தவிர்க்க கீழ்பென்னாத்தூரில் சார்நிலை கருவூலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கீழ்பென்னாத்தூர் தொகுதி மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

    2016 தேர்தல்

    கு.பிச்சாண்டி- தி.மு.க.- 99,070
    செல்வமணி- அ.தி.மு.க.- 64,404
    எதிரொலிமணியன்- பா.ம.க.- 20,737
    ஜோதி- சிபிஐ- 4,613
    தேவேந்திரன்- பிஎஸ்பி- 1,273
    சுப்பராயன்-  பா.ஜ.க.- 1,209
    ராஜாங்கம்- சுயே- 798
    ரமேஷ்பாபு- நாம் தமிழர்- 776
    நோட்டா- 1,164

    தேர்தல் வெற்றி

    2011- ஏ.கே.அரங்கநாதன்- அ.தி.மு.க.
    2016- கு.பிச்சாண்டி- தி.மு.க.
    அதிமுக-வும் திமுக-வும் நேருக்குநேர் மோதும் தொகுதிகளில் ஒன்றான செங்கம் தொகுதி கண்ணோட்டம்.
    அதிமுக சார்பில் எம்எஸ். நயினாக்கண்ணு, திமுக சார்பில் மு.பெ கிரி, ஐ.ஜே.கே. சார்பில் சுகன்ராஜ், நாம் தமிழர் சார்பில் வெண்ணிலா, தேமுதிக சார்பில் அன்பு ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    அதிமுக வேட்பாளர் எம்எஸ். நயினாக்கண்ணு சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 1,75,000
    2. அசையும் சொத்து- ரூ. 9,09,331
    3. அசையா சொத்து- ரூ. 40,05,000

    திமுக வேட்பாளர் மு.பெ கிரி சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 60,686
    2. அசையும் சொத்து- ரூ. 58,08,685
    3. அசையா சொத்து- ரூ. 25,00,000

    செங்கம் சட்டமன்ற தொகுதி அதிகளவில் கிராம பகுதிகளை கொண்டது. சாத்தனூர் அணை இந்த தொகுதியின் அடையாளமாக உள்ளது.

    1967 முதல் இன்று வரையில் செங்கம் தனி தொகுதியாக இருந்து வருகிறது. செங்கம் தொகுதி பொருத்தமட்டில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்கள், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தொழில்கள் சார்ந்த பகுதியாகும். செங்கம் தொகுதி மிகவும் பிற்படுத்தப்பட்ட தொகுதியாகவும் இருந்துவருகிறது. இந்த பகுதியில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    செங்கம் தொகுதி

    செங்கம் பகுதியில் உள்ள படித்த இளைஞர்கள் அண்டை மாநிலங்கள் மற்றும் அண்டை மாவட்டங்களுக்கு வேலைக்காக செல்லும் நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியிலிருந்து பெண்கள், ஆண்கள் கட்டுமான பணிகளுக்காக பெங்களூரு, திருப்பூர், சென்னை போன்ற பெருநகரங்களுக்கு சென்று பணிபுரிந்து வருகின்றனர்.

    2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டதில் இருந்து செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 44 கிராம ஊராட்சிகளும், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 47 கிராம ஊராட்சிகளும், சாத்தனூர் அணையும் செங்கம் தொகுதியில் அடங்கியுள்ளன. செங்கம் தொகுதியில் ஆதிதிராவிடர்கள் அதிகளவில் உள்ளனர். முதலியார், நாயுடு, வன்னியர் உள்ளிட்ட மற்ற சமூகத்தினர் பரவலாக உள்ளனர்.

    செங்கம் தொகுதி

    செங்கம் சட்டமன்ற தொகுதியில் 232 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தது. தற்போது கொரோனா தொற்று காரணமாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நிறைந்த வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது 59 வாக்குச்சாவடி மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு மொத்தம் 382 வாக்குச்சாவடிகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    செங்கம் தொகுதி

    செங்கம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. 5 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், தே.மு.தி.க., ஜனதாதளம், பொதுநலகட்சி தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.

    மொத்த வாக்காளர்கள் : 2,73,333
    ஆண்கள் : 1,35,563
    பெண்கள் : 1,37,760
    மூன்றாம் பாலினம் : 10 பேர் உள்ளனர்.

    செங்கம் தொகுதி

    செங்கத்தில் ரூ.12 கோடி மதிப்பில் நீதிமன்ற புதிய கட்டிடம், போக்குவரத்து பணிமனை கட்டப்பட்டுள்ளது. வேளாண்மை உதவி மையம் கட்டப்பட்டுவருகிறது. தண்டராம்பட்டு ஒன்றியத்தில் எடத்தனூர் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேம்பால பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. கல்நாட்டுபுதூரில் தோட்டக்கலை துறை சார்பில் தோட்டக்கலை நாற்றாங்கல் பண்ணை சுமார் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    செங்கம் தொகுதி

    செங்கம் ஒன்றியத்தில் செங்கம் நகர் பகுதியில் புதிய பஸ்நிலையம் முதல் போளூர் சாலை வரை ஒரே சாலையை மட்டுமே மக்கள் பயன்படுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே செங்கம் நகரை கடந்து செல்ல புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது செங்கம் மக்களின் முதன்மையான கோரிக்கை ஆகும். செங்கம் தொகுதியில் நீர்வரத்து ஆதார கால்வாய்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். காய்கறி, பூ மற்றும் வாழை போன்றவைகளை பாதுகாக்க குளிர்சாதன கிடங்கு அமைக்க வேண்டும். மேற்கண்டவை உள்பட பல கோரிக்கைகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    தேர்தல் வெற்றி

    செங்கம் தொகுதி
    செங்கம் தொகுதி

    1951 ராமசாமிகவுண்டர் (பொது நலக்கட்சி)
    1957 காரியகவுண்டர் (காங்கிரஸ்)
    1962 சின்னராஜிகவுண்டர் (தி.மு.க.)
    1967 சந்தானம் (தி.மு.க.)
    1971 பாண்டுரங்கம் (தி.மு.க.)
    1977 சாமிக்கண்ணு (அ.தி.மு.க.)
    1980 சாமிக்கண்ணு (அ.தி.மு.க.)
    1984 சாமிக்கண்ணு (அ.தி.மு.க.)
    1989 சேது (ஜனதா கட்சி)
    1991 வீரபாண்டியன் (அ.தி.மு.க.)
    1996 நன்னன் (தி.மு.க.)
    2001 போளூர் வரதன் (காங்கிரஸ்)
    2006 போளூர் வரதன் (காங்கிரஸ்)
    2011 சுரேஷ்குமார் (தே.மு.தி.க.)
    2016 மு.பெ.கிரி (தி.மு.க.)

    2016 தேர்தல்

    மு.பெ.கிரி தி.மு.க.95,939
    எம்.தினகரன்- அ.தி.மு.க.- 83,248
    சி.முருகன்- பா.ம.க.- 15,114
    கலையரசி- தே.மு.தி.க.- 8,007
    எஸ்.தினகரன்- சுயே- 1,255
    ஹெச்.தினகரன்- சுயே- 1,151
    பாஸ்கரன்- பிஎஸ்பி- 948
    நோட்டா1,403
    கலசபாக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கலசபாக்கம்:

    கலசபாக்கத்தை அடுத்த சாலையனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 70), ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். நேற்று காலை வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் புறப்பட்ட அவர், கலசபாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்குச் செல்ல வந்து கொண்டிருந்தார்.

    ஓரிடத்தில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக பின்னால் கலசபாக்கத்தில் இருந்து திருவண்ணாமலையை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென அவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    அதில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை, டாக்டர் பரிசோதனை செய்து பார்த்தபோது, சத்தியசீலன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினர். கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அண்ணா மறைந்த பின்னர் குறுக்கு வழியில் முதல்வரானவர் கருணாநிதி என ஆரணியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
    ஆரணி:

    எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் ஆரணியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது வரும் என்று தெரியாமல் இருந்தது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

    அண்ணா மறைவிற்கு பின்னர் நெடுஞ்செழியன்தான் முதல்வராக வந்திருக்க வேண்டும். ஆனால் குறுக்கு வழியில் கருணாநிதி முதல்வரானார். நான் குறுக்கு வழியில் முதல்வராக பொறுப்பேற்கவில்லை. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னை முதல்-அமைச்சராக தேர்ந்தெடுத்தனர் என்றார்.

    மேலும் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று உறுதியளித்தார்.
    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
    வந்தவாசி:

    சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அவர் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு சேகரித்து வருகிறார்.

    நேற்று அவர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

    இன்று காலை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் முரளிசங்கரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    வந்தவாசி பகுதி கிராமங்கள் நிறைந்த பகுதி. பெரும்பாலானவர்கள் விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள். அனைவருமே விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நூற்றுக்கு 70 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி வாழ்கிறோம். விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பது அரசின் கடமை.

    இதற்காக அம்மாவுடைய அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 40 ஆயிரம் ஏரிகள் உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 6 ஆயிரம் ஏரிகள் ரூ‌.1300 கோடி செலவில் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் கோடை காலத்திலும் ஏரிகள் நிரம்பி வழிகிறது. கோடை காலத்தில் தண்ணீர் இல்லாமல் இருந்த குளங்கள் தற்போது தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கின்றன. இந்த திட்டத்தின் மூலம் கோடை காலத்திலும் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. குடிநீர் கிடைக்கிறது.

    நான் ஒரு விவசாயி என்பதால் இந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளேன். விவசாயிகளுக்கு உயிர் நீர். தண்ணீர் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும். பருவமழை காலங்களில் ஆறு மற்றும் ஓடைகளில் உள்ள தண்ணீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் இந்த திட்டங்களை செய்தார்களா?.

    உழவன் செயலி மூலம் விவசாயிகள் பயிர்கள் பூச்சிகளால் தாக்கப்பட்டு இருந்தால் அதனை படம்பிடித்து அனுப்பினால் அவர்கள் என்ன மருந்து தெளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

    மேலும் மார்க்கெட் கமிட்டிகளில் உள்ள விலைப்பட்டியல் அறிந்துகொள்ள முடிந்தது. விவசாயிகள் பயன்பெற அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2647 கோடி இழப்பீடு வழங்கி உள்ளது. புயல் வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு அரசு துணையாக நிற்கும். பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.9300 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இப்படி விவசாயிகளுக்கு பக்கபலமாக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் கடன் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

    பிற கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகுதான் வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள். ஆனால் நாங்கள் தேர்தலுக்கு முன்பே விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளோம். கண்ணை இமை காப்பது போல அரசு விவசாயிகளை காத்து வருகிறது.

    மின்மோட்டார் சொட்டு நீர் பாசனம் போன்றவற்றிற்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே சொட்டு நீர் பாசனத்திற்கு அதிகளவு தமிழகத்தில்தான் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    விவசாய உற்பத்தி 100 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டு தமிழகம் மத்திய அரசின் விருதைப் பெற்றுள்ளது. மு.க.ஸ்டாலின் ஒன்றுமே செய்யவில்லை என்கிறார். ஒன்றுமே செய்யவில்லை என்றால் எப்படி விருது கிடைக்கும். தொடர்ந்து 5 ஆண்டுகளாக மத்திய அரசின் விருதை பெற்றுள்ளோம். விவசாயிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட பொருட்கள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. பண்ணை குட்டைகளை அமைத்துத் தருகிறோம்.

    உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும். அதே நேரத்தில் அவர்களுக்கு போதிய விலை கிடைக்க வேண்டும். இதற்காக இரட்டிப்பு உற்பத்தியை அரசு கடைபிடித்து வருகிறது.

    மக்காச் சோளப் பயிர்கள் பூச்சிகளால் பாதிக்கப்பட்டபோது ரூ‌.48 கோடியில் பூச்சி மருந்து தெளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு அனைத்து வகையிலும் பக்கபலமாக இருந்து கஷ்ட காலத்தில் மீட்டு எடுத்து வருகிறோம்.

    ஸ்டாலின் போலி விவசாயி என்கிறார். யாராவது போலி விவசாயி இருக்கிறார்களா?. நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று மக்களைச் சந்தித்தார். தலைவாசலுக்கு சென்ற அவர் கரும்பு தோட்டத்திற்குள் கான்கிரீட் சாலை அமைத்து பேண்ட் முழுக்கை சட்டை போட்டுக் கொண்டு சென்று பார்வையிட்டார். உண்மையான விவசாயியாக இருந்தால் அவர் இப்படி செய்வாரா? ஆனால் அவர் நம் மீது பழி போடுகிறார். நான் 75 ஆண்டுகளாக விவசாயி. எனது தாத்தா அப்பா நான் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வருகிறோம்.

    தோட்டவேலை தெரியும். மம்பட்டி பிடித்த கை எனது கை. டிராக்டர் ஓட்ட தெரியும். எனது தந்தை விவசாயத்தை கற்று தந்திருக்கிறார். எந்த பயிர் எந்தபட்டத்தில் விதைக்க வேண்டும் என்பதை அறிந்து இருக்கிறேன். ஸ்டாலின் விவசாயிகளைக் கொச்சைப்படுத்தி பேசுகிறார்.

    விவசாயிகளை அவமானப்படுத்தி கொச்சைப்படுத்தி வரும் மு.க.ஸ்டாலினுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். குழந்தையை தாய் பார்ப்பது போல விவசாயிகள் பயிர்களை பார்ப்பார்கள். பயிர் வாடினால் அதுக்கு என்ன மருந்து அடிக்க வேண்டும் என்ன உரம் இட வேண்டும் என பார்த்து பார்த்து செய்வார்கள்.

    ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாது. திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு விவசாயிகள் யார் என்பதை காட்ட வேண்டும்.

    விவசாயிகளுக்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழை விவசாயிகளுக்கு அரசு நிலம் வாங்கி வீடு கட்டிக் கொடுக்கும். தாழ்த்தப்பட்டவர்கள் ஏற்கனவே அரசு வீடுகள் பெற்றிருந்தாலும் அந்த வீடுகள் சேதமடைந்திருந்தால் அவர்களுக்கும் வீடுகள் கட்டித் தரப்படும்.

    தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருக்கிறோம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

    சுய உதவிக்குழுவினர் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படும். 100 நாள் வேலை திட்டம் 150 நாட்கள் ஆக உயர்த்தப்படும். முதியோர் உதவித்தொகை ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும்.

    18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி அளித்து லைசென்ஸ் பெற்று தரப்படும். ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும். உழவர் மானியம் ரூ 7,500 வழங்கப்படும். இஸ்லாமிய அமைப்புகளுக்கு பாதுகாப்பாக அதிமுக அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் ஜாதி மத கலவரங்கள் எதுவும் இல்லை. இங்கு சட்டத்தின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஹஜ் யாத்திரை நிதி ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். சென்னையில் ஹஜ் பயணிகள் கட்டிடம் ரூ.5 கோடியில் கட்டப்படும்.

    இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருப்பது போன்று முக ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் அப்துல் கலாம் ஜனாதிபதி ஆக அவருக்கு திமுக ஓட்டு போடவில்லை. அப்துல் கலாமை ஜெயலிதா ஆதரித்தார். அவரை இந்தியாவின் முதல் குடிமகனாக அமரவைத்து அழகு பார்த்த கட்சி அதிமுக. அமைச்சர்களுக்கு அரசு தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும். அனைவரும் அதிமுகவிற்கு ஆதரவு தாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத் தொடர்ந்து செய்யாறில் அ.தி.மு.க. வேட்பாளர் தூசி மோகன், ஆரணியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், போளூரில் முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    அதிமுக சார்பில் தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் வி. பன்னீர் செல்வம் மீண்டும் களம் நிறுத்தப்பட்டுள்ளார். திமுக சார்பில் சரவணன் களம் இறங்குகிறார்.
    சொத்து மதிப்பு

    வி. பன்னீர் செல்வம்

    1. கையிருப்பு- ரூ. 5,00,000
    2. அசையும் சொத்து- ரூ. 55,82,785
    3. அசையா சொத்து- ரூ. 24,00,000

    சரவணன் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 50,000
    2. அசையும் சொத்து- ரூ. 27,31,484
    3. அசையா சொத்து-  ரூ. 1,06,14,000

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

    1951 நடராச முதலியார்- சுயே
    1967 முருகையன்- காங்கிரஸ்
    1971 முருகையன்- தி.மு.க.
    1977 திருவேங்கடம்- தி.மு.க.
    1980 திருவேங்கடம்- தி.மு.க.
    1984 பாண்டுரங்கன்- அ.தி.மு.க.
    1989 திருவேங்கடம்- தி.மு.க.
    1991 சுந்தரசாமி- காங்
    1996 திருவேங்கடம்- தி.மு.க.
    2001 ராமச்சந்திரன்- அ.தி.மு.க.
    2006 அக்ரி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி- அ.தி.மு.க.
    2011 அக்ரி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி- அ.தி.மு.க.
    2016 வி. பன்னீர்செல்வம் அ.தி.மு.க.

    2016 தேர்தல் முடிவு

    பன்னீர்செல்வம்- அ.தி.மு.க.- 84,394
    செங்கம் ஜி.குமார்-காங்- 57,980
    காளிதாஸ்- பா.ம.க.- 23,825
    நேரு- தே.மு.தி.க.- 9,932
    ராஜபிரபு- சுயே- 1,387
    ராஜ்குமார்- சுயே- 1,047
    நோட்டா- 1,510

    அதிக கிராம பகுதிகளை கொண்ட கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் தென்மாதிமங்கலத்தில் சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ள மூலிகை வாசம் கொண்ட பருவத மலை சிறப்பு வாய்ந்தது ஆகும். இங்கு மல்லிகார்ஜூனர் சாமி கோவில் உள்ளது.

    மேலும் படவேடு ரேணுகாம்பாள் கோவில், புதுப்பாளையம் ஒன்றியம் புதூர் மாரியம்மன் கோவில், கலசப்பாக்கத்தை அடுத்த எலத்தூர்- மோட்டுர் பகுதியில் நட்சத்திர சுயம்பு சிவசுப்பிரமணிய சாமி கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் அமைந்துள்ளன. கலசப்பாக்கம் அடுத்ததாக பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் ஆசிரமம் அமைந்துள்ளது.

    கலசப்பாக்கம் தொகுதியை பொறுத்தவரையில் முழுக்க முழுக்க விவசாயத்தை சார்ந்த தொகுதியாக அமைந்துள்ளது. இதில் குறிப்பாக நெல், கரும்பு, வாழை, பூச்செடிகள் போன்ற பயிர் வகைகளை நம்பியே விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

    இத்தொகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக செய்யாறு மற்றும் மேல்சோழங்குப்பம் பகுதியில் மிருகண்டா அணை, படவேடு செண்பகதோப்பு அணை உள்ளன. மேலும் சுற்றுலாத்தலமாக ஜவ்வாதுமலை, அமிர்தி மற்றும் பருவதமலை ஆகியவை உள்ளன.

    கலசப்பாக்கம், போளுர், செங்கம், ஜவ்வாது மலை ஆகிய 4 தாலுகா பகுதிகள், புதுப்பாளையம் பேரூராட்சி, 112 ஊராட்சிகள் இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.

    கலசப்பாக்கம் தொகுதியில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 50 சதவீதமும், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும், இதர சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும் உள்ளனர்.

    இந்த தொகுதியில் 2,41,981 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க 281 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கலசப்பாக்கம் தொகுதியில் கடந்த 1952-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த 13 தேர்தல்களில் தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், காங்சிரஸ் ஒரு முறையும், சுயேட்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
    தனி தாலுகாக்கள் உருவாக்கம்

    கலசப்பாக்கத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா மற்றும் மலைவாழ் மக்களின் நலன் கருதி ஜமுனாமரத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கப்பட்டது. பருவதமலைக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக மலையை சுற்றி கிரிவலப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    கலசபாக்கம் தொகுதி
    பன்னீர்செல்வம், சரவணன்

    கலசப்பாக்கம் அரசு மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தும் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. உள்பட பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன.

    எதிர்பார்ப்புகள்

    கலசப்பாக்கம் தொகுதியில் அதிகளவில் கரும்பு விவசாயிகள் உள்ளதால் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைக்க வேண்டும். தீயணைப்பு நிலையம் கொண்டு வரவேண்டும். பருவதமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு மலை மீது குடிநீர் வசதி செய்து தர வேண்டும். புதுப்பாளையம் ஒன்றிய பகுதியில் அதிகம் பூ உற்பத்தியாவதால் அப்பகுதியில் சென்ட் தொழிற்சாலை உருவாக்க வேண்டும்.

    ஜவ்வாது மலையில் இருந்து உற்பத்தியாகும் செய்யாற்றில் விவசாயிகளின் நலன்கருதி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் ஆங்காங்கே தடுப்பணைகள் அமைத்து தரவேண்டும். கலசப்பாக்கம் தொகுதியில் அதிகளவில் மணல் கொள்ளை நடக்கிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். மேற்கண்டவை உள்ளிட்ட பல கோரிக்கைகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    அதிமுக சார்பில் தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் வி. பன்னீர் செல்வம் மீண்டும் களம் நிறுத்தப்பட்டுள்ளார். திமுக சார்பில் சரவணன் களம் இறங்குகிறார். ஐ.ஜே.கே. சார்பில் ராஜேந்திரன், நாம் தமிழர் சார்பில் பாலாஜி, தேமுதிக சார்பில் நேரு ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
    பொதுமக்கள் வெளியே வரும்போது முககவசம் அணியவேண்டும், இல்லையென்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சேத்துப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் தெரிவித்தார்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவின்பேரில், வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இளங்கோவன் அறிவுரையின்படி சேத்துப்பட்டு பேரூராட்சியில் வீட்டில் இருந்து  வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே முககவசம் அணியாமல் வரும் நபர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    எனவே பொதுமக்கள் வெளியே வரும்போது முககவசம் அணியவேண்டும், இல்லையென்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சேத்துப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் தெரிவித்தார்.
    நிர்வாணமாக வந்த விவசாயிகள் சக்கரபாணி, ராஜேந்திரன் ஆகிய 2 பேர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த 12-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வந்தது.

    நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் ஏராளமான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் உள்ளிட்ட சிலர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இந்தநிலையில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவை சேர்ந்த சக்கரபாணி, கலசபாக்கம் தாலுகா மேல் சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 2 விவசாயிகளும் நேற்று திருவண்ணாமலை வந்தனர்.

    பின்னர் அவர்கள் திருவண்ணாமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் இருந்து நடந்து வந்தனர்.

    அப்போது 2 விவசாயிகளும் திடீரென தங்களின் ஆடைகளை கழற்றிவிட்டு நிர்வாணமாக சாலையில் நடந்து வந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து அவர்கள் மீது துணிகளை போர்த்தி அவர்களை வேட்புமனுதாக்கல் செய்ய செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

    இதையடுத்து அவர்கள் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மற்ற விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பாராளுமன்ற தேர்தலின்போது மத்திய மந்திரி அமித்ஷா தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் 10 பேரை டெல்லிக்கு அழைத்து சிறு குறு விவசாயிகளுக்கு அளித்த பென்‌ஷன் ரூ.6 ஆயிரத்தை அனைத்து விவசாயிகளுக்கு அளிப்பதாகவும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு 2 மடங்கு விலை தருவதாகவும், கோதாவரி-காவிரி இணைப்பை அறிவித்து நிதி ஒதுக்குவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

    ஆனால் அவர் முதல் கோரிக்கையை தவிர மற்ற எந்த கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை.

    இதனை கண்டித்தும், மேலும் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட முடிவு செய்து வந்தோம்.

    பா.ஜ.க.ஆட்சியில் பயிர்களுக்கு லாபகரமான விலை கிடைக்காமல் விவசாயிகள் சட்டை, வேட்டி, துண்டு, கோவணம் போன்றவற்றை இழந்து விட்டதை தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் அரை நிர்வாணம் மற்றும் முழு நிர்வாணமாக சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்ய வந்தோம் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் நிர்வாணமாக வந்த விவசாயிகள் சக்கரபாணி, ராஜேந்திரன் ஆகிய 2 பேர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நிர்வாணமாக வந்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவண்ணாமலை:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நிர்வாணமாக வந்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாநில தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அதையொட்டி வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் வந்தவாசி தாலுகாவைச் சேர்ந்த சக்கரபாணி, கலசபாக்கம் தாலுகா மேல்சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 2 விவசாயிகள் திருவண்ணாமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய பெரியார் சிலை அருகில் இருந்து நடந்து வந்தனர்.

    அப்போது திடீரென வேட்புமனு தாக்கல் செய்ய வந்த 2 விவசாயிகளும் தங்களின் ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக சாலையில் நடந்து வந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து, அவர்கள் மீது துணிகளால் போர்த்தி அவர்களை வேட்புமனு தாக்கல் செய்ய செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

    இதையடுத்து அவர்கள் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மற்ற விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாநில தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:-

    நாடாளுமன்ற தேர்தலின்போது மத்திய மந்திரி அமித்ஷா தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் 10 பேரை டெல்லிக்கு அழைத்து சிறு, குறு விவசாயிகளுக்கு அளித்த பென்ஷன் ரூ.6 ஆயிரத்தை அனைத்து விவசாயிகளுக்கும் அளிப்பதாகவும், விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை தருவதாகவும், கோதாவரி-காவிரி இணைப்பை அறிவித்து நிதி ஒதுக்குவதாகவும் அறிவித்து, அதை நிறைவேற்றுவதாக கூறினார்.

    ஆனால் அவர், முதல் கோரிக்கையைத் தவிர மற்ற எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்காமல் விவசாயிகளின் சட்டை, வேட்டி, துண்டு, கோவணம் போன்றவற்றை உருவி விட்டதால் விவசாயிகள் அரை நிர்வாணம் மற்றும் முழு நிர்வாணமாக சென்று சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட மனு தாக்கல் செய்ய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வந்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பா.ம.க. தேர்தல் அறிக்கை வளர்ச்சியின் ஆயுதம் என்று வந்தவாசியில் டாக்டர் ராமதாஸ் பிரசாரம் செய்தார்.
    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தேரடியில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் மு.துரை தலைமை தாங்கினார். பா.மக. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து காரில் இருந்தவாறே பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    பா.ம.க. தேர்தல் அறிக்கை வளர்ச்சியின் ஆயுதம், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை அமுதசுரபி. கல்விக்கான செலவு என்பது முதலீடு. மக்களுக்கு ரூ.4 லட்சம் வரை இலவச காப்பீடு, தமிழகத்தில் பள்ளிப் பிள்ளைகளுக்கு தரமான கட்டணமில்லாத கல்வி கொடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் படித்தாலும் அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும். சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

    தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க படாது. பெற்றோரின் பிறந்ததேதி கேட்பது உள்ளிட்ட ஆறு வினாக்கள் எழுப்பப்படாது. 15 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் சிறைவாசிகள் கருணை அடிப்படையில் சட்ட விதிகளை பின்பற்றி விடுவிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    கீழ்பென்னாத்தூரில் 11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    திருவண்ணாமலை:

    கீழ்பென்னாத்தூர் தாலுகாவை சேர்ந்தவர் ரவி (வயது 26). இவர் அதேபகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதில் அந்த மாணவி 2 மாத கர்ப்பிணியாகி இருக்கிறார்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.
    சந்தவாசல் அருகே உடல் நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகில் உள்ள நாராயணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரியான ஏழுமலையின் மகள் ராஜலட்சுமி (வயது 18) என்பவர் உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் இல்லை. இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி எலி மருந்தை சாப்பிட்டு விட்டு மயக்கமடைந்து கிடந்தார். 

    அவரை குடும்பத்தினர் மீட்டு சிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இளம்பெண் ராஜலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

    சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×