என் மலர்
செய்திகள்

திருவண்ணாமலையில் நிர்வாணமாக வந்த விவசாயிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு
திருவண்ணாமலை:
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த 12-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வந்தது.
நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் ஏராளமான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் உள்ளிட்ட சிலர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்தநிலையில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவை சேர்ந்த சக்கரபாணி, கலசபாக்கம் தாலுகா மேல் சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 2 விவசாயிகளும் நேற்று திருவண்ணாமலை வந்தனர்.
பின்னர் அவர்கள் திருவண்ணாமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் இருந்து நடந்து வந்தனர்.
அப்போது 2 விவசாயிகளும் திடீரென தங்களின் ஆடைகளை கழற்றிவிட்டு நிர்வாணமாக சாலையில் நடந்து வந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து அவர்கள் மீது துணிகளை போர்த்தி அவர்களை வேட்புமனுதாக்கல் செய்ய செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அவர்கள் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மற்ற விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாராளுமன்ற தேர்தலின்போது மத்திய மந்திரி அமித்ஷா தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் 10 பேரை டெல்லிக்கு அழைத்து சிறு குறு விவசாயிகளுக்கு அளித்த பென்ஷன் ரூ.6 ஆயிரத்தை அனைத்து விவசாயிகளுக்கு அளிப்பதாகவும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு 2 மடங்கு விலை தருவதாகவும், கோதாவரி-காவிரி இணைப்பை அறிவித்து நிதி ஒதுக்குவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
ஆனால் அவர் முதல் கோரிக்கையை தவிர மற்ற எந்த கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை.
இதனை கண்டித்தும், மேலும் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட முடிவு செய்து வந்தோம்.
பா.ஜ.க.ஆட்சியில் பயிர்களுக்கு லாபகரமான விலை கிடைக்காமல் விவசாயிகள் சட்டை, வேட்டி, துண்டு, கோவணம் போன்றவற்றை இழந்து விட்டதை தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் அரை நிர்வாணம் மற்றும் முழு நிர்வாணமாக சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்ய வந்தோம் .
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் நிர்வாணமாக வந்த விவசாயிகள் சக்கரபாணி, ராஜேந்திரன் ஆகிய 2 பேர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






