என் மலர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அண்ணாச்சிலை அருகில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள. ஏழை எளிய மக்கள் பலரும் அங்கு வசித்து வருகின்றனர். அவர்களிடம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பணம் வாங்கி கொண்டு பட்டா கொடுத்துள்ளனர்.மேலும் மின்சாரம், குடிநீர் இணைப்பு கொடுத்துள்ளனர். அவர்கள் மழைவெள்ள காலங்களில் பாதிக்கப்படுகின்றனர்.
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் நீர்நிலைகளை இனிமேல் ஆக்கிரமிக்க விட மாட்டோம். நமது பொருளாதாரம் கிராமங்களில் உள்ளது. அதனை மீட்டெடுக்க வேண்டும். வேலை வாய்ப்பு இல்லாததால் கிராம மக்கள் நகரங்களை நோக்கி வருகின்றனர். இதனால் நகரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதற்கு தீர்வு காண கிராமங்களில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
மக்கள் நகரங்களை நோக்கி வருவதை தடுக்க வேண்டும். கிராமங்களில் விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்பு உள்ளிட்ட தொழில்வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் கிராம மக்கள் பொருளாதாரம் மேம்படும்.
விவசாயத்தையும், கிராம கைவினை பொருட்கள் தயாரிப்பு தொழிலையும் அரசு வேலையாக அறிவித்து கிராம மக்களை அரசு ஊழியர்களாக பணியாற்ற செய்ய வேண்டும்.
தற்போது ஆடு, மாடு வளர்க்க ஆட்கள் தேவை என்று விளம்பரம் வருகிறது. இதை நாங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்ளாத மக்கள் கார்ப்பரேட் கம்பெனிகள் சொன்னால் கேட்கிறார்கள்.
நம் நாட்டில் எல்லா வளமும் உள்ளது. இங்கு கிடைக்கும் பொருட்களை சந்தை படுத்த வேண்டும். இதற்காக குறிஞ்சி அங்காடி, மருதம் அங்காடி உள்ளிட்ட அங்காடிகள் செயல்படுத்தப்படும். தென் மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம் உள்ளது அதிலிருந்து கிடைக்கும் பதநீர், பனை ஓலை உள்ளிட்டவைகள் மூலம் மக்கள் வருமானம் ஈட்டமுடியும்.
தமிழக மக்களை 50ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். தமிழகத்தை தலை சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்அமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றபோது 2 அல்லது 3 வாரத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பெரும்பாலானோர் தெரிவித்தனர். ஆனால் அவர் கடந்த 4ஆண்டுஆட்சியை சிறப்பாக நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தேர்தல் அறிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மிகவும் சிறப்பாக உள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய போகிறோம் என்று முழுமையாக தெரிவித்துள்ளனர். ஆனால் தி.மு.க.வினர் அப்படி எதையும் சொல்லவில்லை.
2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சி எப்படி நடைபெற்றது என்று மக்களுக்கு தெரியும். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. தமிழக மக்கள் மின்வெட்டை விரும்பவில்லை. ஒருவேளை தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மின் தடை மீண்டும் தொடரும்.
தி.மு.க. வாரிசு அரசியல் செய்து வருகிறது. தி.மு.க. என்றால் வாரிசு, பணம், கட்டப்பஞ்சாயத்து என்றுதான் அர்த்தம். தி.மு.க. என்பது கார்ப்பரேட் கம்பெனி.
தனது குடும்பத்தினர் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவே அவர்கள் ஆட்சிக்கு வர பார்க்கிறார்கள். அவர்கள் மக்கள் நலனை கருத்தில் கொள்ளவில்லை. அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் கூட்டணியில் உள்ள கட்சியினர் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள்.
தமிழக மக்கள் கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்றவற்றை விரும்பவில்லை.
தமிழக வளர்ச்சிக்கு பாஜக உறுதுணையாக இருந்து வருகிறது. நாங்கள் 20 தொகுதியில் மட்டும் போட்டியிடவில்லை. எங்கள் கூட்டணியில் உள்ள கட்சியினர் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள். நாங்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறோம். அவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். 234 தொகுதியிலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்.
வருமான வரித்துறை என்பது யாருடைய தலையிடும் இல்லாத சுதந்திரமான துறை. அவர்களுக்கு ஏதாவது தகவல் கிடைத்து இருக்கும். அதனால்தான் சோதனை செய்கிறார்கள்.
கருப்பு பணம் வைத்திருப்பவர்கள்தான் வருமான வரித்துறையை கண்டு கவலைப்பட வேண்டும். எ.வ.வேலுவிடம் கருப்பு பணம் இருக்கிறதா? நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். முதல் 3 இடத்தில் தமிழக மாணவர்கள் தான் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 28-ந்தேதி அதிகாலை 3.22 மணிக்கு தொடங்கி 29-ந்தேதி அதிகாலை 1.29 மணிக்கு நிறைவடைகிறது.
இதற்கிடையில் தொடர்ந்து 13-வது மாதமாக இந்த மாதமும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
எனவே திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அண்ணாமலையார் கோவிலில் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி உண்டு.
மேலும் பவுர்ணமி நாளில் தடை உத்தரவை மீறி பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுக்க கிரிவலப் பாதையில் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிக்க உள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம் குட்டகரை, புளியாங்குப்பம் மலை கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்தீப் நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டார்.
குட்டக்கரை மலை கிராமத்திற்கு சென்று கிராம வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார். அங்கு சாய்வு தளம், குடிநீர், கழிவறை, மின்சாரம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து நம்மியம்பட்டு ஊராட்சி புளியாங்குப்பம் மலை கிராமத்திற்கு காரில் செல்ல முடியாததால் பைக்கில் 3 கி.மீ. தூரம் செங்குத்தான மலைப் பாதையில் பயணம் செய்து மலைக்கிராம வாக்குச்சாவடி மையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அத்திப்பட்டில் 100 சதவீத வாக்களிக்க வலியுறுத்தி மகளிர் குழுவினர் இந்தியா வரைபடத்தில் பச்சை மிளகாய் கொண்டு விழிப்புணர்வு கோலம் வரைந்திருந்தனர். அதை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.

பின்னர் ஜமுனாமரத்தூர் தாலுகா அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது சம்பந்தமாக செயல்விளக்கம் அளித்தார்.
ஜவ்வாது மலை மலையில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களால் வரையப்பட்ட வண்ணக் கோலத்தில் கையெழுத்திட்டு தேர்தல் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். மேலும் அரிசியில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வரையப்பட்ட ஓவியத்தை பார்வையிட்டார்.
பின்னர் ஜமுனாமரத்தூர் பஸ் நிலையத்திலிருந்து தேர்தல் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
இதில் மகளிர் திட்டம் இயக்குனர் சந்திரா, உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார், துணை கலெக்டர் (பயிற்சி) அஜிதா பேகம் மற்றும் தேர்தல் அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பல்வேறு இடங்களில் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொள்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. செயலாளர் எ.வ.வேலு, திருவண்ணாமலை சட்டசபை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.
பண பட்டுவாடாவுக்கு ஏற்பாடு நடைபெறுவதாக வந்த புகாரையொட்டி எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடுகள் உள்பட 18 இடங்களில், வருமானவரித்துறையினர் நேற்றுமுன்தினம் காலை 11 மணியளவில் சோதனையை தொடங்கினர். 100-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.
மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த நிலையில் இந்த சோதனை நடந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது.
2-வது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது. நேற்று மாலை 5 மணியளவில் சோதனை முடிவுக்கு வந்தது. சுமார் 30 மணி நேரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
இதேபோல் சென்னை ஆழ்வார்பேட்டையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்ற சோதனையும் நிறைவுபெற்றது.
இச்சோதனையில் ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்த எந்த தகவலையும் வருமானவரித் துறையினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர். ரூ.3½ கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எ.வ.வேலு வீட்டில் சோதனையை முடித்துக்கொண்டு கணக்கில் காட்டப்படாத வருமானம் குறித்த ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களுடன் வருமான வரித்துறையினர் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 8 வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.
அதில் பணம் பரிமாற்றம் குறித்த தகவல்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்கள் அனைத்தும் தேர்தல் கமிஷனிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளன.
அவற்றை சரிபார்த்த பின் டெல்லி தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த அறிக்கையின்படி டெல்லி தலைமை தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் திருவண்ணாமலை சட்டசபை தேர்தல் திட்டமிட்டப்படி ஏப்ரல் 6-ந்தேதி நடக்குமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற கேள்விகுறி எழுந்துள்ளது.
சோதனை குறித்து எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
“வருமான வரித்துறையினர் 110 பேர் எனக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர். பலமுறை தேர்தலில் நான் போட்டியிட்டபோது சோதனைக்கு வராத வருமானவரித்துறையினர் இப்போது வரக்காரணம், திருவண்ணாமலையில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரை வெற்றிபெற வைக்கத்தான்.
எனது நிறுவனங்களில் ரூ.3.50 கோடி கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால் ஒரு பைசா கூட அவர்கள் கைப்பற்றவில்லை” என்றார்.
திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் எ.வ.வேலு வீடு, கல்வி நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. இதனால் அவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவருடைய வீட்டில் உள்ளார். அவரது மகன்கள் கம்பன், குமரன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வந்த எ.வ.வேலு வருமான வரி சோதனை காரணமாக இன்று பிரசாரத்திற்கு செல்லவில்லை.






செய்யாறு தாலுகாவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 25). இவர், சிப்காட்டில் பணிபுரியும் 20 வயது இளம் பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அப்போது ராஜேஷ், இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் அந்த பெண் கர்ப்பமானார். இதனையடுத்து இளம்பெண், காதலனிடம் திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த ராஜேஷ் இதைப்பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






