என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • நாகர்கோவில் மற்றும் நெல்லை பஸ் நிலையங்களில் இருந்து ஏறும் பயணிகளிடம் முன்னதாகவே வேறு எந்த இடத்திலும் பஸ் நிற்காது என்று கண்டக்டர்கள் தெரிவித்து விடுகின்றனர்.
    • பல்வேறு கிராம மக்களும் அரசு பஸ் சேவை கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பெரும்பாலான பஸ்கள் நாங்குநேரி ஊருக்குள் செல்லாமலும், அதேபோல் நான்கு வழிச்சாலையை ஒட்டி அமைந்துள்ள தாலுகா அலுவலக பகுதிகளில் நிற்காமலும் சென்று வருகிறது.

    இதனால் நாங்குநேரி பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். பொதுமக்களை புறக்கணித்து பஸ் நிலையத்திற்கு செல்லாமலும், புறவழிச்சாலை வழியாக அரசு அனுமதி இன்றி இடைநில்லா சேவை என்ற பெயரில் சட்ட விரோதமாகவும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

    நாகர்கோவில் மற்றும் நெல்லை பஸ் நிலையங்களில் இருந்து ஏறும் பயணிகளிடம் முன்னதாகவே வேறு எந்த இடத்திலும் பஸ் நிற்காது என்று கண்டக்டர்கள் தெரிவித்து விடுகின்றனர். மேலும் இடைப்பட்ட ஊர்களில் உள்ள பொதுமக்களை அவர்கள் பஸ்சை நிறுத்தி ஏற்ற மறுக்கின்றனர் என்றும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

    மேலும் கூடுதல் கட்டணங்கள் வசூலித்து விட்டு உரிய நிறுத்தங்களில் நிறுத்தாமல் நடுவழியில் இறக்கிவிட்டு செல்வதால் அடிக்கடி டிரைவர் மற்றும் பொதுமக்கள் இடையே மோதல்கள் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் வருகின்றன. இதனால் நாங்குநேரி, வள்ளியூர், பணகுடி உள்ளிட்ட சிறு நகரங்கள் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலையை யொட்டி இருக்கும் பல்வேறு கிராம மக்களும் அரசு பஸ் சேவை கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என பலமுறை புகார் அளித்தும் நீதிமன்ற உத்தரவுகள், வருவாய்த்துறையினருடனான சமாதான பேச்சுவார்த்தை முடிவுகள், மாவட்ட கலெக்டர் உத்தரவு ஆகிய அனைத்தும் இருந்தும், இவை எதையும் மதிக்காமல் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தங்கள் இஷ்டத்திற்கு வெவ்வேறு பெயர்களில் அரசு பஸ்களை கூடுதல் கட்டணங்களுடன் இயக்கி வருகின்ற னர்.

    இதனை கண்டித்தும், அரசு அனுமதி இன்றி இயங்கும் இடைநில்லா சேவை என்று இயங்கும் பஸ்களின் வழித்தடங்களை தடை செய்யவும், சட்ட விரோதமாக முறைகேட்டில் ஈடுபடும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாங்குநேரியில் இன்று கடை அடைப்பு போராட்டம் நடந்தது.

    அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள் தரப்பில் இருந்து போக்குவரத்து கழக அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 100-க்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அமைச்சர் பொன்முடி மீது 12 ஆண்டுகளுக்கு முன்னாள் உள்ள வழக்கை தோண்டி எடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது.
    • மிரட்டல் உருட்டல்களுக்கு தமிழக தலைவர்கள் ஒருபோதும் பணியமாட்டார்கள்.

    நெல்லை:

    கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை 23-ந்தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நெல்லையில் நடத்திய அமைதி ஊர்வலத்தில் போலீசார் நடத்திய தடியடியில் 17 பேர் இறந்தனர்.

    இதன் நினைவுதினத்தையொட்டி காங்கிரஸ் சார்பில் நெல்லை தாமிரபரணி ஆற்றில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கமிட்டி தலைவரும், தமிழ்நாடு மாநில தணிக்கை பொதுக்குழு தலைவருமான செல்வப் பெருந்தகை எம். எல்.ஏ., மாநில காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் பிரசாத் ஆகியோர் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    உரிமைக்காக போராடிய போராளிகள் 17 பேருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளோம். உயிர்நீத்த போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    நிதிநிலையை கருத்தில் கொண்டு அதற்கான வாய்ப்பு இல்லை என்றால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செலவில் உயர்நீத்த 17 பேருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான ஏற்பாட்டை செய்வோம்.

    மணிப்பூரில் அங்குள்ள மக்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். மணிப்பூர் மக்களின் உரிமையை மீட்டெடுப்பதுதான் தலைவர் ராகுல் காந்தியின் முக்கிய பணியாக உள்ளது.

    ஜாதியாக, மதமாக, இனமாக மக்களை பிரித்தாலும் பா.ஜ.க.விற்கு விடுக்கும் எச்சரிக்கை என்னவென்றால் ஒருபோதும் இந்திய மக்கள் ஏமாறமாட்டார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

    அமைச்சர் பொன்முடி மீது 12 ஆண்டுகளுக்கு முன்னாள் உள்ள வழக்கை தோண்டி எடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, விஜயபாஸ்கர் மீது உள்ள வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கேட்டால் அதற்கு ஆளுநர், சி.பி.ஐ. விசாரணை நடப்பதாக மறுக்கிறார். இதே நடைமுறைதான் அமைச்சர் பொன்முடிக்கும் பொருந்தும்.

    நீதிமன்ற நிலுவையில் இருக்கும் வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது பழிவாங்கும் நடவடிக்கை. மிரட்டல் உருட்டல்களுக்கு தமிழக தலைவர்கள் ஒருபோதும் பணியமாட்டார்கள். குறிப் பாக காங்கிரஸ், தி.மு.க. தலைவர்கள் இதனை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தடியடியில் உயிர் தப்பிப்பதற்காக தாமிரபரணி ஆற்றில் 17 பேர் குதித்து இறந்தனர்.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஸ்ரீராம், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் பணியாற்றிய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை 23-ந்தேதி ஊர்வலம் சென்றனர்.

    நினைவு தினம்

    அப்போது நடந்த தடியடியில் உயிர் தப்பிப்பதற்காக தாமிரபரணி ஆற்றில் 17 பேர் குதித்து இறந்தனர். இதன் 24-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் தாமிரபரணி ஆற்றுக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னர்.

    பா.ஜனதா சார்பில் நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்டத் தலைவர் மகாராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம், சுரேஷ் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் பிரேம்குமார், பாலமுருகன், முத்து கருப்பன் உள்பட ஏராள மானோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலா ளர் லட்சுமணன் தலைமை யில் காசி விஸ்வநாதன் உள்பட பலர் மலரஞ்சலி செலுத்தினர். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகே சன் மற்றும் நிர்வாகிகள் மாரித்துரை, சிந்தா சுப்பிரமணியன், திருமலை மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஸ்ரீராம், மோகன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தமிழர் உரிமை மீட்புகளம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் சுந்தர்ராஜ், ரமேஷ் மற்றும் பலர் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநிலத் துணைப் பொதுச் செயலா ளர்கள் சண்முக சுதாகர், நெல்லையப்பன், மாநகர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன், மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்து பாண்டி யன், மகளிர் அணி நளினி சாந்தகுமாரி, மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் மணிமாறன், மேலப்பாளையம் பகுதி தலைவர் டிக் முத்து, மேலப் பாளையம் பகுதி இணைச் செயலாளர் முருகேஷ், மேலப்பாளையம் பகுதி இளைஞரணி செய லாளர் உலகநாதன், சிந்து, பேராச்சி, காட்டுராணி, கருப்பசாமி, பாலசந்தர், மணி, இசை செல்வா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆதித்தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செய லாளர் கலைக்கண்ணன் தலைமையிலும், ஆதித்தமி ழர் பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் ராம மூர்த்தி தலைமையிலும், திராவிட தமிழர் கட்சி சார்பில் கதிரவன் தலைமை யிலும் மரியாதை செலுத்தப் பட்டது. நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பா ளர் சத்யா உள்பட திரளான நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

    தமிழர் விடுதலைக் களம் நிறுவனத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் முத்துக்குமார், வண்ணை முருகன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.


    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்திய காட்சி.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்திய காட்சி.


     


    • ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கடந்த 20-ந்தேதி திடீரென தீப்பற்றியது.
    • தீ காரணமாக எழுந்த புகையானது மாநகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் ராமையன்பட்டி யில் உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள குப்பைகள் ஒரு சில நேரங்களில் தீப்பிடித்து வருகிறது. இந்நிலையில் ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கடந்த 20-ந்தேதி திடீரென தீப்பற்றியது.

    5 கிலோ மீட்டர்

    அப்போது காற்றின் வேகத்தால் மளமளவென பற்றி எரிந்தது. இதைத்தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் பாளை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். பெரும்பகுதி தீ அணைக்கப்பட்ட நிலையில் தீ காரணமாக எழுந்த புகையானது மாநகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 4 நாட்களாக மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டனர். இன்று 4-வது நாளாக குப்பைகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் கிளறி அதில் தீப்பிடித்திருந்தால் தண்ணீர் பீய்ச்சி அடித்து அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அதேபோல் லாரிகள் மூலம் மணல் கொண்டு வரப்பட்டு அதனை கொட்டும் பணியிலும் ஈடுபட்டனர்.

    இதனால் பெரும்பாலான இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று குறிப்பிட்ட சில இடங்களில் புகை மூட்டம் காணப்பட்டது.  

    • தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
    • முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    அம்பை யூனியன் சிவந்திபுரம் ஊராட்சியில் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பாக கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். அதன் பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மூலிகை மற்றும் உணவு பொருட்கள் கண்காட்சியையும் வக்கீல் பிரபாகரன் பார்வையிட்டார்.இந்த நிகழ்ச்சியில் அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர், சிவந்திபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அருண் தபசு பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பூலம்மாளுக்கும், ராஜதுரைக்கும் இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது.
    • சில நுண்ணறிவு போலீசார் தங்களது சொந்த வியாபார வேலைகளில் தான் அதிக ஆர்வம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பேட்டை போலீஸ் நிலைய நுண்ணறிவு போலீசாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மாநகர ஆயுதப்படையில் பணியாற்றிய செந்தில்குமார் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.

    தொடர்ந்து அவர் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று அவரை மீண்டும் மாநகர ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தர விட்டுள்ளார். அவர் திடீரென மாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பேட்டையை சேர்ந்த கொம்பையா என்பவரது மனைவி பூலம்மாளுக்கும், போலீஸ்காரர் செந்தில்கு மாரின் தந்தை ராஜதுரைக்கும் இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த பிரச்சனை குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இரு வீட்டாரும் செயல்படுமாறு தெரி விக்கப்பட்டு இருந்தது.

    தற்போது அந்த இடப்பிரச்சினை மீண்டும் நடந்து வருவதால், செந்தில்குமார் ஆயுதப்படைக்கு மீண்டும் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

    மாநகர பகுதியில் ஒரு சில நுண்ணறிவு பிரிவு போலீசார் நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணிபுரிவதால், அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், சில நுண்ணறிவு போலீசார் தங்களது சொந்த வியாபார வேலைகளில் தான் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் சில அமைப்பினர் புகார் கூறுகின்றனர்.

    எனவே மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இதனை கவனத்தில் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் யாரேனும் பணியாற்றினால் அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • தொடக்க பள்ளியின் கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி புதிய வகுப்பறை கட்ட ரூ. 30 லட்சம் ஒதுக்கப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் அந்த பள்ளியின் கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தது.

    இதனால் பள்ளி கட்டிடத்தை சீரமைத்து புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் இஷா என்ற மாணவி முதல்- அமைச்சருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி புதிய வகுப்பறை கட்டுவதற்கு ரூ. 30 லட்சம் ஒதுக்கப்பட்டது.இதனைதொடர்ந்து தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றிய குழு தலைவர் பரணி சேகர் தலைமையில் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதில் புதிய கட்டிடம் கட்ட முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்த மாணவி இஷா அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவ- மாணவிகள் உள்பட 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • ராஜஸ்தானை சேர்ந்த மெஹரா ராம் என்பவர் கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வருகிறார்.
    • கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை:

    ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் சிவாணா பகுதியை சேர்ந்தவர் அனுமந்தர் ராம் (வயது 45). இவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் தங்க நகைகளை வாங்கி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள நகை கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.

    1½ கிலோ நகை கொள்ளை

    இதற்காக அவர் நெல்லை சிந்துபூந்துறை செல்விநகர் பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் கடந்த 10 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். தற்போது நெல்லையில் அவரது உறவினரான ராஜஸ்தானை சேர்ந்த மெஹரா ராம் என்பவர் தங்கியிருந்து கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வருகிறார்.

    இந்நிலையில் அவர் தனது வீட்டின் பூஜை அறையில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள சுமார் 1½ கிலோ நகைகளை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துள்ளார். நேற்று காலை அவர் வீட்டை பூட்டிவிட்டு உடன்குடி சென்ற நிலையில் மாலையில் வந்து பார்த்தபோது வீட்டு கதவு உடைக்கப்பட்டு அங்கு 1½ கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    3 தனிப்படை

    இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார், நெல்லை சந்திப்பு உதவி கமிஷனர் ராஜேஷ்வரன், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து சந்திப்பு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளை கும்பலை பிடிக்க துணை போலீஸ் கமிஷனர் சரவணக் குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் அதாவது மெஹரா ராமிற்கு நன்கு தெரிந்த நபர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் மெஹரா ராமுடன் தொழில் ரீதியாகவும், நட்பின் அடிப்படையிலும் பழக்கத்தில் உள்ள வடமாநில வியாபாரிகள், வடமாநில வாலிபர்களின் விபரங்களை போலீசார் சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் அப்பகுதியில் சந்திப்பு பஸ் நிலையம் வரையிலும் உள்ள கடைகள், வீடுகளில் பொருத்தப்ப ட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை என்பது நரேந்திர மோடி விசாரணை என்று தான் சொல்ல வேண்டும்.
    • தஞ்சாவூர் வழக்கை தொடர்புபடுத்தி விசாரணை நடத்தியதாக கூறுகின்றனர்.

    என்.ஐ.ஏ. சோதனை தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை என்பது நரேந்திர மோடி விசாரணை என்று தான் சொல்ல வேண்டும். தஞ்சாவூர் வழக்கை தொடர்புபடுத்தி விசாரணை நடத்தியதாக கூறுகின்றனர்.

    சிறுபான்மை இயக்கங்களை அடக்க, அரசியல் காழ்புணர்ச்சியோடு விசாரணை நடத்தப்பட்டது. எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கும், இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னுடைய மொபைல் போன் தவிர வேறு எதையும் எடுத்து செல்லவில்லை.

    அமலாக்கத்துறை போல் என்.ஐ.ஏ.வை வைத்து சிறுபான்மை அமைப்புகளை அச்சுறுத்த நினைக்கிறார்கள். இந்த வழக்கினை நீதிமன்றம் மூலம் நாங்கள் சந்திப்போம். மக்கள் மன்றம் மூலம் என்.ஐ.ஏ.யின் முகத்திரையை கிழிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகத்தில் இன்று ஒரே நேரத்தில் 24 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை:

    கடந்த 2019-ம் ஆண்டு கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை பிரிவு(என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது. இதில் 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகத்தில் இன்று ஒரே நேரத்தில் 24 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் ஹக் காலனியில் அமைந்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி இன்று அதிகாலை சென்னை தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையில் ஒரு பெண் உள்பட 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர் நெல்லை முபாரக் வீட்டிற்கு வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த முபாரக்கிடம் சோதனைக்கு ஒத்துழைக்குமாறு தெரிவித்தனர். அவரும் சம்மதம் தெரிவித்த நிலையில், அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நடக்கும் பகுதியில் நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் வீட்டில் சோதனை நடைபெறும் நிலையில் அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அவரது வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர்.

    • சம்பவம் தொடர்பாக மணிப்பூரை சேர்ந்த ஹுய்ரெம் மொய்தே என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    மணிப்பூர் சம்பவத்தில் கைதான வாலிபரின் உருவபொம்மையை தூக்கிலிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் போராட்டம் நடத்திய போது எடுத்தபடம்.***நெல்லை, ஜூலை.22-

    மணிப்பூரில் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக கலவரம் நடந்து வருகிறது.

    இதையடுத்து அங்கு ஆளும் பா.ஜனதா அரசை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சமீபத்தில் அங்கு குகி பழங்குடி யினத்தை சேர்ந்த 2 பெண் களை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் வன்கொ டுமை செய்யப்பட்டது போன்ற வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூரை சேர்ந்த ஹுய்ரெம் மொய்தே என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் மத்திய அரசு மணிப்பூர் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று திட்டமிடப்பட்டிருந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக திடீரென மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையிலான காங்கிரசார் மணிப்பூர் பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் கைதான ஹுய்ரெம் மொய்தேவின் உருவ பொம்மையை எடுத்து வந்தனர்.

    பின்னர் அந்த உருவ பொம்மையை நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மேற்கூரை பகுதிக்கு சென்று தூக்கிலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகி கள் கவிபாண்டியன், பரணி இசக்கி, கெங்கராஜ், பிவிடி.ராஜேந்திரன், ரசூல் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • ஆசிய ஆக்கி போட்டியில் இந்தியா இதற்கு முன்பு 3 முறை பட்டம் வென்றுள்ளது.
    • இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் அரங்கில் பொதுமக்களுக்கு கோப்பை காட்சிப்படுத்தப்பட்டது.

    நெல்லை:

    ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஸ் டிராபி போட்டி ஆகஸ்ட் 3-ந்தேதி சென்னையில் தொடங்க உள்ளது.

    இந்தியா 3 முறை பட்டம்

    ஆகஸ்ட் 12-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆக்கி போட்டியில் ஆசியாவில் இருந்து 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த ஆசிய ஆக்கி போட்டியில் இந்தியா இதற்கு முன்பு 3 முறை பட்டம் வென்றுள்ளது. இந்த முறையும் வெற்றி பெறுவதற்கு வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆசிய ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று வர வேண்டும் என்பதற்காக சமீபத்தில் சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    நெல்லை வந்தது

    தொடர்ந்து நேற்று கன்னியாகுமரிக்கு வந்தடைந்த இந்த கோப்பை யானது இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் அரங்கில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. முன்னதாக, கன்னியா குமரியில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த டிராபியை அர்ஜுனா விருது பெற்ற வீரர் மணத்தி கணேசன் பெற்றுக்கொண்டார்.

    பின்னர் மேடையில் இருந்த சிறப்பு விருந்தினர்களிடம் அதனை ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மேயர் சரவணன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் கிருஷ்ண சக்கர வர்த்தி வரவேற்றார். ஆசிய ஆக்கி கோப்பை பற்றிய வரலாறை முன்னாள் விளையாட்டு அலுவலர் ஆக்கி யூனிட் ஆப் நெல்லை தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் எடுத்துரைத்தார்.

    அதனைத் தொடர்ந்து டிராபியை அம்பைக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கும், வீரர்களுக்கும் கலெக்டர் கார்த்திகேயன் மரக்கன்று கள் வழங்கினார். மேலும் வீரர்களுக்கு ஆக்கி மட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆக்கி தொடர்பான காட்சி போட்டி நடைபெற்றது.

    ×