என் மலர்tooltip icon

    தேனி

    • 2 ஆண்டுகளாக பரத நாட்டிய பயிற்சி பெற்றார்.
    • பரத நாட்டியத்திலும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார்.

    மேலசொக்கநாதபுரம்:

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தை சேர்ந்த சண்முகமணி-நளினி தம்பதியின் மகள் சனா (வயது11). இவர் அமெரிக்காவில் பிறந்துவளர்ந்தவர். இருந்தபோதும் தாய் தந்தையர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால் தமிழக கலைகள் மீது சிறுமிக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வந்தது.

    இதனால் தமிழகத்தின் பாரம்பரிய கலையான பரத நாட்டியம் கற்க ஆர்வம் கொண்டார். அதன்படி அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் போடியில் கடந்த 2 ஆண்டுகளாக பரத நாட்டிய பயிற்சி பெற்றார்.

    பரதநாட்டியம் பயின்று வரும் காலகட்டத்தில் பள்ளி படிப்பு கெடாமல் இருப்பதற்காக இங்குள்ள தனியார் ஆங்கில வழி கல்வியில் 5-ம் வகுப்பு வரை பயின்று வந்தார்.

    மேலும் பரத நாட்டியத்திலும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார். இதனையடுத்து உலக சாதனைக்காக பரத முத்திரைகள் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

    இவர் 27 வினாடிகளில் 52 பரத முத்திரைகள் செய்து காட்டி விருக்ஷா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

    அவருக்கு போடி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் சான்றுகள் மற்றும் பதக்கங்கள், கேடயங்களை வழங்கி வாழ்த்தினார்.

    முற்றிலும் தமிழ் பேசத் தெரியாத நிலையில் தமிழர்களின் பாரம்பரிய நாட்டியக் கலையான பரதநாட்டியம் பயில்வதற்கு அமெரிக்காவில் இருந்து போடி வந்து பரத முத்திரைகளில் உலக சாதனை படைத்து மீண்டும் அமெரிக்கா திரும்ப செல்ல உள்ளார். 

    • வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியவுடன் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் முக்கிய நீர்வரத்து பகுதியாக வருசநாடு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. அரசரடி, பொம்மிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் ஓடைகள் வழியே சிற்றாறுகளாக மாறி மூல வைகையாக உருவெடுக்கிறது.

    மேலும் வைகையின் துணை ஆறுகளாக சுருளியாறு, கொட்டக்குடி, வறட்டாறு, வராக நதி, முல்லையாறு, கூட்டாறு, மஞ்சளாறு, நாகலாறு, மருதாநதி, பாம்பாறு உள்ளிட்ட ஆறுகள் உள்ளன.

    இந்த ஆறுகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழை நீரை வைகைக்கு கொண்டு வந்து சேர்க்கின்றன. இந்த ஆறுகளில் பெரும்பாலும் மழைக்காலங்களில் மட்டுமே நீர்வரத்து இருக்கும்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கொட்டக்குடி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வரும் நீர் தேனி, பழனிசெட்டிபட்டி அளவீட்டு மையத்தில் கண்காணிக்கப்படுகிறது. வருசநாடு மூல வைகை ஆற்றில் இருந்து வரும் நீர் அமச்சியாபுரம் அருகே உள்ள அளவீட்டு மையத்தில் கண்காணிக்கப்படுகிறது.

    இந்த நீர்வரத்தை கணக்கில் கொண்டு வைகை அணையில் உள்ள அளவீட்டு மையத்தில் அணையின் நீர்மட்டம் கணக்கிடப்படுகிறது. மழை மற்றும் அவசர காலங்களில் நீர்மட்டத்தில் ஏற்படும் திடீர் உயர்வுக்கு தகுந்தபடி நீர் வெளியேற்றம் செய்யப்படும். கடந்த 3 நாட்களாக வைகை அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 64.34 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2273 கன அடியாக உள்ளது. நேற்று வரை மதுரை குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் பாசனத்துக்கு சேர்த்து 1199 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4484 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியவுடன் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். 68.5 அடியை எட்டியதும் 2ம் கட்ட எச்சரிக்கை விடப்படும். 69 அடியை எட்டியதும் 3ம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் வெளியேற்றப்படும்.

    கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் ஓரிரு நாளில் 66 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் நீர் வளத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 3 ஷிப்டுகளாக 24 மணி நேரமும் அணைக்கு வரும் தண்ணீர் அளவு, திறக்கப்படும் தண்ணீரின் அளவு ஆகியவற்றை கண்காணித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் இந்த அணை மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.95 அடியாக உள்ளது. வரத்து 2022 கன அடி. திறப்பு 1100 கன அடி. இருப்பு 3608 மி.கன அடி. மஞ்சளாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 55 அடியிலேயே உள்ளது. இதனால் அணைக்கு வரும் 184 கன அடி முழுவதும் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டமும் முழு கொள்ளளவை எட்டி 126.28 அடியிலேயே உள்ளது. இதனால் அணைக்கு வரும் 357 கன அடி முழுவதும் உபரியாக வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கும்பக்கரை அருவியிலும் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்க இன்று 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வீரபாண்டி 12.4, பெரியகுளம் 25, மஞ்சளாறு 13, சோத்துப்பாறை 36, போடி 7.2, ஆண்டிபட்டி 2.8, பெரியாறு 5.4, சண்முகாநதி அணை 2, அரண்மனைபுதூர் 1.6, உத்தமபாளையம் 1.8, கூடலூர் 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்.
    • மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    பெரியகுளம்:-

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது அகமலை ஊராட்சி.

    இப்பகுதி போடி தாலுகாவிற்கு உட்பட்டது என்றாலும் சாலை வசதி என்பது பெரியகுளம் சோத்துப்பாறை அணை வழியாகவே உள்ளது.

    இந்த ஊராட்சியில் கண்ணகரை, அலங்காரம், பட்டூர், பரப்பம்பூர், அண்ணா நகர், கரும்பாறை, குறவன் குழி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது.

    இந்த மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த சாலை 2 கி.மீ.தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து இன்று பள்ளிகளுக்கு செல்லும் மலை கிராம பள்ளி மாணவ-மாணவிகள் சாலையில் தேங்கியுள்ள மண் மற்றும் சகதிகளை கடந்தும், சாலையில் சரிந்துள்ள புதர்கள் மற்றும் மரங்களைக் கடந்து 10 கி.மீ. தூரத்திற்கு உள்ள பாதையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் மலை கிராம மக்களின் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்குவதற்கும், விவசாய விளை பொருட்களை விற்பனைக்காக பெரியகுளத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, நடந்து செல்லவும் வழியில்லாத நிலை உள்ளதால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மலைகிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சாலையில் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு கடந்த மாதம் அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    அதிகாரிகள் சமரசம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். ஆனால் அதன்பிறகும் சாலை ஏற்படுத்தி தராததால் தற்போது பெய்த கனமழைக்கு மலைகிராம மக்கள் பாதிக்கப்பட்டு ள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

    எனவே விரைந்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கனமழை காரணமாக அணை அருகே உள்ள அகமலை, கண்ணக்கரை பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது.
    • நீரை சுத்திகரித்தாலும் அணை நீர் செந்நிறமாகவே இருப்பதால் மக்கள் அதிர்ச்சி.

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை 25 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

    இந்நிலையில், சோத்துப்பாறை அணைக்கு மேல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று பெய்த கனமழை காரணமாக அணை அருகே உள்ள அகமலை, கண்ணக்கரை பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது.

    இதன் காரணமாக, அணை நீர் செந்திறமாக மாறியுள்ளது. பெரியகுளம் நகராட்சியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் நீரை சுத்திகரித்தாலும் அணை நீர் செந்நிறமாகவே இருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து பொது மக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    • முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 124.30 அடியாக உள்ளது. அணைக்கு 3402 கன அடி நீர் வருகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கடந்த 2 நாட்களில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி 62.30 அடியாக உள்ளது. நீர்வரத்து 2745 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. எனவே இன்று மாலைக்குள் 63 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனால் விவசாய பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 124.30 அடியாக உள்ளது. அணைக்கு 3402 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 3479 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 534.70 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி 20, அரண்மனைப்புதூர் 0.4, பெரியகுளம் 52, மஞ்சளாறு 10, சோத்துப்பாறை 123.2, வைகை அணை 2.2, போடி 33.4, உத்தமபாளையம் 5.6, பெரியாறு அணை 72.8, தேக்கடி 60.4, சண்முகாநதி 10.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளிலும் மற்ற 2 பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் சென்றுள்ளனர்.
    • மற்ற 3 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் ஆசாரி மார் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் லிங்கேஷ் (வயது 24). அதே பகுதியைச் சேர்ந்த விஜயகணேசன் மகன் சேவக் (23). மணிகண்டன் மகன் சஞ்சய் (22). அச்சுதன் மகன் மோனிஷ் (22), சுந்தரம் மகன் கேசவன் (22) நண்பர்களான இவர்கள் 5 பேரும் நேற்று மாலை வீட்டில் இருந்து கம்பத்துக்கு மது குடிக்க சென்றனர்.

    இதில் 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளிலும் மற்ற 2 பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் சென்றுள்ளனர். மது குடித்து விட்டு மீண்டும் அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வீலிங் செய்தபடி வந்துள்ளனர்.

    கம்பம்-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆதி சுஞ்சனகிரி மடம் அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் லிங்கேஷ் மற்றும் சேவக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மற்ற 3 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வனிதா மணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தீபாவளி நாளில் ஒரே தெருவைச் சேர்ந்த திருமணமாகாத 3 இணை பிரியாத நண்பர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • எங்கள் கட்சியில் உள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் வெளியேற மாட்டார்கள்.
    • விஜயுடன் இருக்கும் ரசிகர்கள் பாதிக்கு மேல் எனக்குதான் வாக்களிப்பார்கள்.

    தேனி:

    தேனி அருகே மதுராபுரியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த 4 முக்கிய தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்தே சந்தித்துள்ளது. இந்த தேர்தல்களில் தோல்வியை சந்தித்தாலும் வாக்கு சதவீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    எனவே வருகிற 2026 சட்டமன்ற தேர்தலிலும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் தனித்தே போட்டியிட்டு ஆட்சியை பிடிப்போம். அடுத்து வரும் தேர்தல்களிலும் எங்கள் நிலைப்பாடு மாறாது. தி.மு.க. இதுவரை கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டதே கிடையாது.

    கல்வியை மாநில உரிமையில் இருந்து எடுத்தது காங்கிரஸ் கட்சி, ஜி.எஸ்.டி. வரி, நீட், என்.ஐ.ஏ. ஆகியவற்றைக் கொண்டு வந்தது காங்கிரஸ். அதனை ஊட்டமாக வளர்த்தது மோடி. எனவே எங்கள் பார்வையில் காங்கிரஸ் தமிழ் இனத்தின் எதிரி. பாரதிய ஜனதா கட்சி மானுட குலத்தின் எதிரி.

    ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க முயன்ற போதும் விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கட்சி ஆரம்பித்தபோதும் ரசிகர்கள் கூட்டம் கூடினார்கள். அதே போல்தான் தற்போது விஜய் கட்சி ஆரம்பித்தபோதும் கூட்டம் கூடியுள்ளது.

    நடிகர்கள் ரசிகர்களை தொண்டர்களாக மாற்றினார். நான் ரசிகர்களை தொண்டர்களாக மாற்றவில்லை. விஜய்யை ரசிக்கும் வாக்காளர்கள் என்னுடைய வாக்காளர்கள் இல்லை. விஜயின் கட்சிக்கு தலைவர் அவர்தான். ஆனால் என்னுடைய கட்சிக்கு தலைவர் பிரபாகரன்.

    எனவே எங்கள் கட்சியில் உள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் வெளியேற மாட்டார்கள். விஜயுடன் இருக்கும் ரசிகர்கள் பாதிக்கு மேல் எனக்குதான் வாக்களிப்பார்கள்.

    கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பதாக விஜய் குண்டு போட்டுள்ளார். இதனை நான் வரவேற்கிறேன. அந்த அறிவிப்பை ஏற்று அவரோடு கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது கொள்கை எந்த காலத்திலும் மாறாது.

    ஜனாதிபதியை மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் நிலையை உருவாக்க வேண்டும். வறட்சி வரும் போது புரட்சி வெடிக்கும். இனி வாழவே முடியாது என்ற நிலை வரும் போது மக்கள் புரட்சி செய்வார்கள். இலங்கையிலும், பங்களாதேசத்திலும் அதுதான் நடந்தது. அது போன்ற ஒரு நிலை இந்தியாவிலும் ஒரு நாள் நடக்கும்.

    சாதிய ஏற்றத்தாழ்வை ஒழிக்க கடைசி கருவி சாதிவாரி கணக்கெடுப்புதான். வகுப்பு வாத பிரதிநிதிதுவம் கொடுத்து விட்டால் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடும். ஆனால் சாதி வாரி கணக்கெடுப்பை தி.மு.க. எடுக்கவே எடுக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வைகை அணையிலிருந்து திறக்கப்படும் பாசனத்திற்கான நீர் 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1180 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து 122.95 அடியாக உள்ளது.

    அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 456 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3212 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. வருசநாடு, அரசரடி, கண்டமனூர், கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர்மழையால் மூல வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் வைகை அணைக்கு நீர்வரத்து 1191 கனஅடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 59.68 அடியாக உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகர் பகுதியில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் கடும் அவதியடைந்தனர். இதனால் பாசனத்திற்கு தண்ணீர் தேவை குறைந்தது. இதன் காரணமாக வைகை அணையிலிருந்து திறக்கப்படும் பாசனத்திற்கான நீர் 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    குடிநீருக்காக 69 கனஅடியுடன் சேர்த்து 569 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3542 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 55 அடியில் நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 224 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 64.34 கனஅடி நீர் வருகிறது. குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 30 கனஅடியும், மற்றவை உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 7.2, தேக்கடி 20.4, கூடலூர் 8.2, சண்முகாநதி அணை 4.6, உத்தமபாளையம் 4.6, வீரபாண்டி 4.6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதேனி மாவட்டத்தில் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே அரசு பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.60 அடியாக உள்ளது. அணைக்கு 326 கனஅடி நீர் வருகிறது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 55 அடியில் நீடித்து வருகிறது.

    கூடலூர்:

    புதிய 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று இரவு தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

    நேற்று இரவு பெரியகுளம், வடுகபட்டி, டி.கல்லுப்பட்டி, கைலாசபட்டி, தேவதானப்பட்டி, மேல்மங்களம், ஜெயமங்களம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. அதனை தொடர்ந்து இரவு முழுவதும் மிதமான சாரல் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதன் மூலம் ஆறு, குளம், கண்மாய், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.60 அடியாக உள்ளது. அணைக்கு 326 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 833 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2556 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 5692 அடியாக உள்ளது. 1098 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 869 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3040 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 55 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு வரும் 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.24 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 30 கனஅடி.

    ஆண்டிபட்டி 29.2, அரண்மனைபுதூர் 2.2, பெரியகுளம் 10.4, மஞ்சளாறு 9, சோத்துப்பாறை 3.8, வைகை அணை 36.8, போடி 6.6, உத்தமபாளையம் 2.2, கூடலூர் 1.2, பெரியாறு அணை 11.4, சண்முகாநதி அணை 3.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக உள்ளது. 332 கனஅடி நீர் வருகிறது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. 71 அடி உயரம் கொண்ட அணையில் பருவமழை கை கொடுத்ததால் நீர்மட்டம் உயர்ந்தது. இதனை தொடர்ந்து பெரியாறு பாசன பகுதி மற்றும் திருமங்கலம் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களான 1 லட்சத்தி 5 ஆயிரத்தி 2 ஏக்கருக்கு கடந்த செப்.15ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    மேலும் பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள 45,041 ஏக்கர் இருபோக பாசன நிலங்களின் முதல்போக பாசனத்திற்காக ஜூலை 3ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து மழை பெய்ததால் தண்ணீர் தேவை குறைந்தது. இதனால் கடந்த 14ம் தேதி வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டத்தில் மழை பொழிவு இல்லை. இதனால் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. எனவே அணையிலிருந்து பாசனத்திற்கு மீண்டும் 800 கனஅடி மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி என மொத்தம் 869 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 56.79 அடியாக உள்ளது. அணைக்கு 971 கனஅடி நீர் வருகிறது. 3018 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக உள்ளது. 332 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2648 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.24 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 30 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த வாரம் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இன்றும் 7வது நாளாக நீர்வரத்து சீராகாததால் தடை தொடர்வதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • 8 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
    • டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 5 பேர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் குள்ளப்புரம் ஊராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு கோபுர தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மோகித்குமார் (வயது 10). ஆண்டிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த வாரம் மோகித்குமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதால் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 8 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    சிகிச்சையில் இருந்த மோகித்குமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குள்ளப்புரம் ஊராட்சிக்குட்பட்ட சங்கமூர்த்திபட்டியில் சுகாதார சீர்கேடு இருப்பதாகவும் இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜெயமங்கலம் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதாக தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். தற்போது தங்கள் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி சுகாதார சீர்கேட்டை களைய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 5 பேர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×