என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    காரைக்குடி:

    சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவருக்கும், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரைச் சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன.

    இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரேணுகாதேவி தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

    தற்போது அவர் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் சித்ரவதை செய்ததாகவும், இதற்கு உடந்தையாக அவரது தாயார் கல்யாணி, சகோதரர் சந்திரபோஸ் ஆகியோர் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுந்தரி விசாரணை நடத்தி, இளைய ராஜா உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
    மானாமதுரை அருகே வாலிபரை கத்தியால் குத்திய தாய்–மகனை போலீசார் கைது செய்தனர்.
    மானாமதுரை:

    சிவகங்கை குமரன் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம் மகன் மாரிபாண்டி (வயது 36). இவரிடம் மானாமதுரை பட்டறை தெருவை சேர்ந்தவர் கணேசன்(42) என்பவர் ரூ.1 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இதற்கிடையில் மாரிபாண்டிக்கும், கணேசன் மனைவிக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணேசனுக்கு தெரியவர, 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

     இந்தநிலையில் நேற்று மாரிபாண்டி கொடுத்த கடனை வாங்குவதற்காக மானாமதுரை சென்றுள்ளார். அப்போது கணேசனும், அவரது தாயார் காயாம்பு(62) ஆகியோர் சேர்ந்து மாரிபாண்டியை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

    இதுகுறித்த புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன், காயாம்பு ஆகியோரை கைது செய்தனர்.
    தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய பயன்படும் நவீன வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருவில் இருந்து சிவகங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
    சிவகங்கை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின்போது வாக்களிக்கும் வாக்காளர்கள் தாங்கள் எந்த சின்னத்திற்கு வாக்களித்தார்களோ, அந்த சின்னத்தில் தான் வாக்குகள் பதிவாகி உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் புதிதாக வாக்குகள் சரிபார்க்கும் நவீன எந்திரம் பொருத்தப்படவுள்ளது.

    இந்த எந்திரம் தேர்தலின்போது வாக்குப்பதிவு கட்டுபாடு எந்திரத்துடன் சேர்த்து இணைக்கப்படும். அப்போது நாம் வாக்களித்தவுடன் எந்த சின்னத்தில் அது பதிவாகியுள்ளது என்ற விவரம் திரையில் தெரிந்து, மறையும். இதை வாக்களித்தவர்கள் மட்டுமே பார்த்து உறுதி செய்துகொள்ள முடியும்.

    அதற்காக பெங்களூருவில் இருந்து 1,800 எந்திரங்கள் பாதுகாப்பாக லாரிகள் மூலம் சிவகங்கை கொண்டுவரப்பட்டன. பறக்கும் படை தாசில்தார் கந்தசாமி, தேர்தல் பிரிவு தாசில்தார் ரமேஷ் ஆகியோர் தலைமையில் சென்ற அதிகாரிகள் இதை பாதுகாப்பாக கொண்டு வந்தனர்.

    இந்த எந்திரங்கள் அனைத்தையும், சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், மாவட்ட வினியோக அதிகாரி ராமபிரதீபன், சிவகங்கை தாசில்தார் ராஜா, தாலுகா வினியோக அதிகாரி கண்ணன் ஆகியோர் பாதுகாப்பாக அறையில் வைத்தனர்.

    இந்த அறை முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்தலின் போது பயன்படுத்த கடந்த மாதம் புதிதாக 3 ஆயிரத்து 310 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 1,800 கட்டுப்பாட்டு எந்திரங்களும் பெங்களூருவில் இருந்து கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
    எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு காரைக்குடி காவேரி மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கிளை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
    காரைக்குடி:

    எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு காரைக்குடி காவேரி மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கிளை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    என்.சி.சி. கமாண்டிங் ஆபீசர் அஜய் ஜோசி கொடியசைத்து தொடங்கி வைத்தார். காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து காவேரி மருத்துவமனை வரை சுமார் 4 கி.மீ. சாலை வழியாக நடந்தது.

    வழி நெடுகிலும் சாலை விழிப்புணர்வு குறித்த கோ‌ஷங்களை எழுப்பிக் கொண்டும் கைகளில் விழிப்புணர்வு பலகைகளை ஏந்தியும் மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனை செயல் இயக்குநர் சலீம், மருத்துவ இயக்குநர்கள் ராதா, காமாட்சி சந்திரன், டாக்டர். சரவணன், இந்திய மருத்துவ கழகத்தின் மாநில செயலாளர் ஸ்ரீதர், காரைக்குடி காவேரி கிளை தலைவர் செய்யது அன்சாரி, செயலாளர் உதயகுமார், பொருளாளர் பிரேம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    திருப்பத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

    தேவகோட்டையில் இருந்து புறப்பட்டு காரைக்குடி வழியாக திருப்பத்தூர் வந்தது. இதில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோகன் ஆகியோர் அமைச்சர் உதயகுமாருடன் சைக்கிளை ஓட்டி வந்தனர். இதில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    அண்ணா சிலை அருகே அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், இந்த பேரணியால் எதிர்க்கட்சியினர் மிரண்டு போய் உள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாயில் பல திட்டங்களை ஜெயலலிதாவைப்போல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார்.

    17 மாதங்களில் 32 ஆயிரம் போராட்டங்களை கண்டு தளர்ந்து விடாமல் சோதனைகளை உடைத்தெறிந்து சாதனைகளாக மாற்றியுள்ளார் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிர்லா கணேசன், ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், துணைச் செயலாளர் முருகேசன், நகர செயலாளர் இப்ராகிம் ஷா, துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் நாகராஜன், சிதம்பரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    திருப்பத்தூரில் கத்தியால் மனைவியின் கழுத்தை கணவனே அறுத்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டை பெருமாள் கோவில் அருகில் உள்ள டி.எம்.சுலைமான் தெருவைச் சேர்ந்தவர் அல்டாப். இவருக்கும், திருப்பத்தூர் ஆரீப் தெருவைச் சேர்ந்த நஷீமா (வயது 22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. அவர்கள் தற்போது திருப்பத்தூரில் அப்பாஸ் என்பவர் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள ஒரு அறையில் வாடகைக்கு வசித்து வந்தனர்.

    திருமணமான நாள்முதலே கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இளம்பெண் நஷீமாவுக்கு திருமணத்தின்போது, பெற்றோர் அணிவித்த நகைகளை அல்டாப் வாங்கி, அதனை விற்று ஊதாரித்தனமாக செலவழித்து விட்டதாக கூறப்படுகிறது. அவர், பலரிடம் கடன் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சமீப காலமாக அல்டாப் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு, வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே கடையை மூடிவிட்டு 2 மாதங்களுக்கு முன்பு சென்னைக்குச் சென்றுவிட்டார். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். சென்னையில் இருந்து அவ்வப்போது திருப்பத்தூருக்கு வந்து மனைவி, குழந்தைகளுடன் தங்கிவிட்டு செல்வார்.

    நஷீமாவிடம் மேலும் தாயார் வீட்டில் இருந்து நகை வாங்கி வரும்படி கேட்டு வந்தார். அது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் நேற்று இரவு 9.30 மணியளவில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அல்டாப், மனைவியை அடித்து உதைத்து, வீட்டில் இருந்த கத்தியால் அவரது கழுத்தை சரமாரியாக அறுத்துக் கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    நஷீமாவை வெறித்தனமாக கொலை செய்த தகவலை, அல்டாப் தனது செல்போன் மூலமாக தாயாரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த இரு வீட்டாரும், சம்பவ இடத்தில் திரண்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும், திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுராஜ், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நஷீமாவின் பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தப்பியோடிய அல்டாப்பை போலீசார் கைது செய்தனர். கொலை தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
    நாடு முழுவதும் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசுவதால் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்று ப.சிதம்பரம் கூறினார். #Congress #PChidambaram #Modi BJP
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மந்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தற்போது மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் பல்வேறு திட்டங்களால் ஏழை-எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். நீட் தேர்வு, சேலம் 8 வழிச்சாலை, மீத்தேன் எரிவாயு திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது.


    தமிழகம் உள்பட நாடு முழுவதும் மோடிக்கு கடும் எதிர்ப்பு அலை வீசி வருகிறது. இதனால் வருகிற 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Congress #PChidambaram #Modi BJP
    தேவகோட்டையில் தமிழக அரசின் சாதனையை விளக்கி அ.தி.மு.க. சைக்கிள் பேரணி தொடக்க விழா நடைபெற்றது. பேரணியை அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார்.

    தேவகோட்டை:

    தேவகோட்டையில் தமிழக அரசின் சாதனையை விளக்கி அ.தி.மு.க. சைக்கிள் பேரணி தொடக்க விழா நடைபெற்றது. அ.தி.மு.க அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் தெரிவிக்கும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது.

    முதல் கட்டமாக மதுரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    தற்போது 2-ம் கட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை சிலம்பனி விநாயகர் கோவிலில் இருந்து சைக்கிள் பேரணி தொடங்கியது. அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட பேரவை செயலாளர் அசோகன் வரவேற்றனர். பேரணியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

    இன்று காலை தேவகோட்டையில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட சைக்கிளில் இளைஞர்கள் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட பேரவை செயலாளர் அசோகன் ஆகியோர் ராம்நகர் கண்ட தேவி, ஆறாவயல் வழியாக காரைக்குடியை நோக்கி சென்றனர்.

    இந்த பேரணி சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி, பிள்ளையார்பட்டி, திருப்பத் தூர், சிவகங்கை, மானா மதுரை சென்றடைகிறது.

    இதில் தேவகோட்டை நகரச் செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் பிர்லா கணேசன், மாவட்ட தொழில் நுட்ப பிரிவு துணைச்செயலாளர் கணேசன் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் மாணவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    காரைக்குடி:

    சென்னை வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவ ரது மனைவி சுமதி (வயது48). இவர் ராமநாதபுரம் மாவட் டம் கீழக்கரையில் உள்ள குலதெய்வம் கோவில் வழி பாட்டிற்காக காரில் புறப் பட்டார்.

    அவருடன் உறவினர் கள் சென்னை திருமுல்லை வாயலைச் சேர்ந்த முருகன் மகன் அஸ்வின் (17) மற்றும் தங்கராஜ், நாகவள்ளி ஆகி யோரும் வந்தனர். சென் னையை சேர்ந்த டிரைவர் ஆனந்தன் காரை ஓட்டினார்.

    இன்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் அமராவதியை அடுத்த சங்கரபதிகோட்டை அருகே கார் வந்தபோது திடீரென நிலைதடுமாறியது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காரில் சென்ற அஸ்வின், தங்கராஜ், சுமதி, டிரைவர் ஆனந்தன் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ஆனால் வழியிலேயே அஸ்வின் பரிதாபமாக இறந்தார். அவர் பிளஸ்-2 மாணவர் என்பது குறிப் பிடத்தக்கது.

    விபத்து குறித்து சோம நாதபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சின்னச் சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றார்.

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்தது.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று காலை முதலே வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது. மாலையில் திடீரென பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கீழநெட்டூர் கிராமத்தில் 10–க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. மேலும் 10–க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    வீடுகள் சேதமடைந்து விழுந்ததில் வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. மேலும் வீட்டு ஓடு விழுந்ததில் ஆறுமுகம் என்பவரது மகன் மதியரசனுக்கு (வயது 7) பலத்த காயம் ஏற்பட்டது. அவன் சிகிச்சைக்காக இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.

    இதையடுத்து பரமக்குடியில் இருந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் வேரோடு சாய்ந்த மரங்களையும், வீட்டின் மேல் பகுதியில் விழுந்து கிடந்த மரங்களையும் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த கிராமத்தில் உள்ள ஒரு கோவில் கட்டிடம் மீது மரம் ஒன்று சாய்ந்தது. இதில் அந்த கோவில் கோபுரம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு அரசு அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நிவராணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
    சிவகங்கையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை நகரின் முக்கிய வர்த்தக வீதியான நேருபஜார் பகுதியில் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதனால் ஆக்கிரமிப்புகளை வர்த்தகர்கள் முன்வந்து உடனடியாக அகற்ற வேண்டும், இல்லையென்றால் அதிகாரிகள் அகற்றுவார்கள் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த 28-ந்தேதி நேருபஜாரில் கடைகளின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள். அப்போது அதிகாரிகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் செயலுக்கு அந்த பகுதி வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய அவகாசம் தராமல் திடீரென்று அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அந்த வீதியில் இருந்த ஆக்கிரமிப்பு முழுவதையும் அதிகாரிகள் அகற்றினர். மேலும் நகரின் மற்ற பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சிவகங்கை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனையொட்டி நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதியுற்றனர்.

    மேலும் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில், சங்க தலைவர் அறிவுதிலகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கந்தசாமி, மதி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பைசல், அ.ம.மு.க. நகர செயலாளர் அன்புமணி, காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், தி.மு.க. சார்பில் அயூப்கான், ஜெயகாந்தன், வர்த்தகர் சங்க செயலாளர் வடிவேல், பொருளாளர் சுகர்னொ, துணைத்தலைவர் முகமது இலியாஸ், முன்னாள் நகர் மன்ற தலைவர் அர்ச்சுனன், த.மா.கா. நகரச் செயலாளர் செல்வரங்கன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் துணைச் செயலாளர் வெள்ளையப்பன் நன்றி கூறினார்.
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கடகம்பட்டியைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 36). கோவையில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது நண்பர்கள் புதியராஜ் (35), உதயகுமார் (33) ஆகியோருடன் காமராஜ் நேற்று இரவு கடகம்பட்டியில் இருந்து தேவகோட்டைக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களுக்காக டீசல் வாங்கிக் கொண்டு ஒரு வேன் வந்து கொண்டிருந்தது.

    களக்காவயல் என்ற இடத்தில் வந்தபோது மோட்டார் சைக்கிளும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் காமராஜ் சம்பவ இடத்துலேயே பரிதாபமாக இறந்தார். புதியராஜின் 2 கால்களும் நசுங்கின. உதயகுமாருக்கு ஒரு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    விபத்து பற்றி அறிந்ததும் தேவகோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வேனை ஓட்டி வந்த வேன் டிரைவர் வெங்கட்ராமன் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    ×