search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "house damage"

    • தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.
    • சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந் தது.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் உருவான மேல் அடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் கடந்த ஒரு வார காலமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    புதுச்சேரியில் நேற்று காலை வானம் இருண்டு காணப்பட்டது. ஆனால் பிற்பகல் வரை மழை பெய்யவில்லை. மாலை 3.30 மணிக்கு திடீரென இடியுடன் கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் மழை கொட்டியது.

    கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. மழை நின்றதும் வெள்ள நீர் வடிந்தது. தொடர்ந்து இரவிலும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் மழை கொட்டியது. பெருத்த இடி ஒசையால் வீடுகளில் தூங்கியவர்கள் அச்சமடைந்தனர். குழந்தைகள் இடி சத்தத்தை கேட்டு அரண்டு போனார்கள்.

    வீடுகளில் உள்ள மின் சாதன பொருட்களின் இணைப்புகளை துண்டித்தனர். தொடர்ந்து காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்படுகிறது.

    தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.

    குறிப்பாக புதுச்சேரியின் நகர பகுதியான புஸ்சி வீதி, பாரதி வீதி, சின்னசுப்புராய பிள்ளை வீதி, காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.

    கனமழை காரணமாக உழவர்கரை தொகுதி மூலக்குளம் பகுதியில் வசித்து வரும் வசந்தா என்ப வர் வீட்டின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி திடீரென அதிகாலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது.

    சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந் தது. வீட்டில் வசிப்போர் யாரும் அருகில் இல்லாததால் காயம் ஏற்படவில்லை.

    இதனிடையே கடலில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்புமாறு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து மீன்வளதுறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 29-ந் தேதி தாழ்வு மண்டலமாக வலுப் பெற கூடும் என வானிலை மையம் தெரித்துள்ளது. எனவே ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் வருகிற 28-ந் தேதிக்குள் கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

    மேலும், ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு தொலை தொடர்பு உபகரணங்கள் மூலம் புதுவை மீன்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    • பலத்த மழை காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டு 2 ராட்சத பாறைகள் திடீரென கிருஷ்ணமூர்த்தி வீட்டின் மீது உருண்டு விழுந்தது.
    • மக்கள் எந்த நேரத்திலும் பாறைகள் உருண்டு விழலாம் என்று பீதி அடைந்து உள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இரட்டை கரடு பகுதியில் மலை அடிவாரத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த மலைப்பகுதியில் பெரிய, பெரிய ராட்சத பாறைகள் உள்ளன.

    மலை அடிவாரத்தில் கிருஷ்ணமூர்த்தி (வயது 48) என்பவர் வீடு உள்ளது. கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி தமிழ்ச்செல்வி, மகன் ஸ்ரீதருடன் வீட்டில் வசித்து வருகிறார். கிருஷ்ண மூர்த்தி கூலி தொழிலாளி.

    இந்நிலையில் இரட்டைக்கரடு பகுதியில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ண மூர்த்தி தனது மனைவி, மகனுடன் வீட்டில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    பலத்த மழை காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டு 2 ராட்சத பாறைகள் திடீரென கிருஷ்ணமூர்த்தி வீட்டின் மீது உருண்டு விழுந்தது.

    ஒரு பாறை வீட்டின் சமையல் அறையிலும், மற்றொரு பாறை வீட்டின் ஹாலிலும் உருண்டு விழுந்தது. இதில் சமையல் அறையின் ஒரு பகுதி மற்றும் வீட்டின் ஹால் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. சமையலறையில் இருந்த ஸ்டவ், பாத்திரம், குடம் போன்றவை முற்றிலும் சேதமடைந்தது.

    இரவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் கிருஷ்ணமூர்த்தி எழுந்து வந்து பார்த்தார். அப்போது பாறைகள் வீட்டின் மீது உருண்டு விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    நல்ல வாய்ப்பாக பாறைகள் கிருஷ்ணமூர்த்தி தூங்கிக் கொண்டிருந்த அறையில் விழாததால் அவர் குடும்பத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும் அப்பகுதி மக்கள் எந்த நேரத்திலும் பாறைகள் உருண்டு விழலாம் என்று பீதி அடைந்து உள்ளனர். 

    • வீட்டில் ஆனந்த், அவரது மனைவி மற்றும் தாயார் வேறு அறையில் இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
    • பாறை விழுந்ததில் வீட்டின் அறை முற்றிலுமாக உடைந்து சேதம் அடைந்துள்ளது.

    களியக்காவிளை:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக ஆறுகள், குளங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் விளைநிலங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    தொடர் மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பங்களும் சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் களியக்காவிளை அருகே உள்ள திருத்துவபுரம் அடுத்த தோப்புவிளை பகுதியில் ஆனந்த் என்பவரது வீட்டில் அருகில் இருந்த பெரிய பாறாங்கல் உடைந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டின் ஒரு பகுதி கடும் சேதம் அடைந்தது.

    பாறை உடைந்து விழுந்த நேரத்தில் வீட்டில் ஆனந்த், அவரது மனைவி மற்றும் தாயார் வேறு அறையில் இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். பாறை விழுந்ததில் வீட்டின் அறை முற்றிலுமாக உடைந்து சேதம் அடைந்துள்ளது.

    கஜா புயலால் வீடுகளை இழந்த சுமார் 2½ லட்சம் பேர் கடந்த 10 நாட்களாக நிவாரண முகாம்களில் தவித்தப்படி இருக்கிறார்கள். #GajaCyclone
    திருச்சி:

    கஜா புயலால் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்துள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இந்த 4 மாவட்டங்களிலும் சுமார் 3½ லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. சுமார் 1 லட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

    30 ஆயிரத்து 100 ஹெக்டேர் பரப்பளவில் வளர்க்கப்பட்டு வந்த சுமார் 50 லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சரிந்து அழிந்துள்ளன. 32 ஆயிரத்து 706 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் நாசமாகி உள்ளன. சுமார் 12 லட் சம் மரங்கள் சரிந்துள்ளன. சுமார் 1 லட்சம் மின் கம்பங்கள் சரிந்து உள்ளன.

    இதன் காரணமாக 4 மாவட்டங்களிலும் சுமார் 54 லட்சம் பேரின் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இத்தகைய வரலாறு காணாத சேதங்கள் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி விட்டது.

    கஜா புயலின் ஆக்ரோ‌ஷ தாக்குதல் எதிர்பார்த்ததை விட அதிகம் இருந்ததால் டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை பறிகொடுத்து விட்டு பரிதவித்தப்படி இருக்கிறார்கள். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழக அரசு முதலில் சுமார் 150 முகாம்களை உருவாக்கி தயார் நிலையில் இருந்தது. ஆனால் 4 மாவட்டங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து உணவு, உடை, குடிநீர் உள்பட எதுவுமே இல்லாமல் நிர்க்கதியாக நின்ற சோகத்தை கண்டதும் மளமளவென தமிழக அரசு கூடுதல் நிவாரண முகாம்களை உருவாக்கியது.

    4 மாவட்டங்களிலும் சுமார் 625 நிவாரண முகாம்கள் உருவாக்கப்பட்டன. இந்த முகாம்களில் முதலில் சுமார் 2 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டனர். பிறகு அந்த எண்ணிக்கை சுமார் 2 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்தது. புயல் பாதித்த மற்ற மாவட்டங்களில் உள்ள முகாம்களில் இருப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால் சுமார் 3 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் இருப்பதாக கூறப்படுகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 97 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் கடலோர பகுதி மக்கள் மற்றும் கிராமப்புற பகுதி மக்கள் என 12ஆயிரத்து 500 பேர் தங்கியிருந்தனர்.

    இந்தநிலையில் சேதமான வீடுகளை தாங்களாகவே சீரமைத்து அதில் குடிபுகுந்து வருகின்றனர். இதனால் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி விட்டனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 25 முகாம்கள் வரை செயல்பட்டு வருகிறது. அங்கு பொதுமக்களுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. காலையில் தங்களது வீடுகளுக்கு செல்லும் பொதுமக்கள், இரவு ஆகியதும் முகாம்களுக்கு வந்து தங்குகின்றனர். ஒவ்வொரு முகாமிலும் 300 முதல் 500 பேர் வரை தங்கியிருந்து வருகின்றனர்.

    ஆலங்குடி, கறம்பக்குடி முகாம்களில் இரவு மட்டும் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதி மற்றும் உணவுகள் அரசு மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.



    நிவாரண முகாம்களில் இருப்பவர்களுக்கு தினமும் உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நிறைய பேர் மாற்றுத் துணி இல்லாமல் அவதிப்பட்டப்படி இருந்தனர். அத்தகையவர்களுக்கு உடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை தவிர ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்எண்ணை, தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

    சுமார் 4 ஆயிரம் படகுகள் சேதம் அடைந்துள்ளதால் கடலில் மீன்பிடிக்க செல்ல இயலாத மீனவர்களும் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு மீண்டும் படகுகள் வாங்க நிதி உதவி செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. முகாம்களில் உள்ள அனைவருக்கும் ஆவின் நிறுவனம் மூலம் பால் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே ஓரளவு நிவாரணப் பணிகள் முடிந்த பகுதிகளில் மக்கள் முகாம்களில் இருந்து வெளியேறி தங்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கி உள்ளனர். அவர்கள் தங்கள் வீட்டையும், வாழ்வாதாரத்தையும் சீரமைக்கத் தொடங்கி உள்ளனர். ஆனால் வீடுகளை முற்றிலுமாக இழந்து விட்டவர்கள் இன்னமும் நிவாரண முகாம்களிலேயே தங்கி இருக்க வேண்டிய பரிதாபமான, நிர்ப்பந்தமான சூழ்நிலை நிலவுகிறது.

    இதன் காரணமாக 4 மாவட்டங்களிலும் சுமார் 2½ லட்சம் பேர் கடந்த 10 நாட்களாக நிவாரண முகாம்களில் தவித்தப்படி இருக்கிறார்கள். முகாம்களில் உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் கிடைத்தாலும், எத்தனை நாட்களுக்குத்தான் முகாம்களிலேயே தங்கி இருப்பது என்ற சலிப்பு ஏழை-எளிய மக்களின் மனதில் நிலவுகிறது. எனவே தங்கள் வீடு மற்றும் வாழ்வாதாரத்துக்கு தேவையான நிதி உதவிகளை செய்து தரும்படி பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வதற்கு தமிழக அரசு முதல் கட்டமாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நிவாரண பணிகளை முழுமையாக செய்து முடிக்க ரூ.15 ஆயிரம் கோடி தேவை என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து புயலால் பேரழிவை சந்தித்த 4 மாவட்டங்களிலும் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் குழுவை அனுப்பி உள்ளது.

    மத்தியக் குழுவினர் கடந்த சனிக்கிழமை தொடங்கி இன்று வரை 4 மாவட்டங்களுக்கும் சென்று நேரில் ஆய்வு செய்தனர். இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் இது குறித்து கூறுகையில், “நாங்கள் நினைத்ததை விட 4 மாவட்டங்களிலும் மிகப்பெரிய பாதிப்பும் இழப்பும் ஏற்பட்டுள்ளது. மக்களின் நிலையை பார்த்தபோது பரிதாபமாக உள்ளது. இதில் இருந்து மக்கள் துணிவுடன் மீள வேண்டும்” என்றார்.

    மத்திய குழுவினர் நாளை டெல்லியில் கஜா புயல் பாதிப்பு அறிக்கையை தயார் செய்ய உள்ளனர். இந்த வார இறுதிக்குள் புயல் பாதிப்பு அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் பரிந்துரை அடிப்படையில் புயல் நிவாரணத் தொகையை மத்திய அரசு, தமிழக அரசுக்கு கொடுக்கும். ஆனால் எவ்வளவு பணம் கிடைக்கும்? எப்போது கிடைக்கும்? என்பது உறுதியாக தெரியவில்லை.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் தங்கள் துயரத்தில் இருந்து மீள்வதற்காக தமிழக அரசு 100 நாள் வேலைத் திட்ட பணியை கையில் எடுத்துள்ளது. அதன்படி 4 மாவட்டங்களில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 573 பேருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இவர்களுக்கு தினமும் ரூ.224 வரை சம்பளமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெண்களிடம் சற்று நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தி உள்ளது. மற்ற அத்தியாவசிய உதவிகளும் கிடைத்து விட்டால் புயல் பாதிப்பில் இருந்து விரைவில் விடுபட்டு விட முடியும் என்று நம்புகிறார்கள்.

    புயல் பாதித்த 4 மாவட்டங்களில் 6980 கிராமங்கள் மிக அதிக பாதிப்பை சந்தித்துள்ளன. சில கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து விட்டன. அந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த கோரி சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து உதவிகள் செய்து வருகிறார்கள்.

    இன்று (திங்கட்கிழமை) 11-வது நாளாக நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார பணிகளில் நேற்று முதல் சுமார் 3 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மின்சார இணைப்புக் கொடுக்க முன்னுரிமை கொடுத்து இரவு- பகலாக பணிகள் நடந்து வருகின்றன.

    4 மாவட்டங்களில் 1 லட்சத்து 13 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் போர்க்கால அடிப்படையில் மின் கம்பங்களை நடும் பணி நடந்து வருகிறது. சுமார் 23 ஆயிரம் மின் வாரிய ஊழியர்கள் கடந்த 10 நாட்களாக 4 மாவட்டங்களிலும் முழு வீச்சில் அருமையான ஈடுஇணையற்ற சேவையாக தங்கள் பணியை செய்து வருகிறார்கள்.

    மின் வாரிய ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவை காரணமாக இன்னும் ஒரு வாரத்துக்குள் ஊரகப் பகுதிகளிலும் முழுமையான மின் இணைப்பு கொடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    என்றாலும் ஒவ்வொரு நாளும் மக்கள் கவலையில் தத்தளிக்கிறார்கள். இழந்த சொத்துக்களை மீட்க என்ன செய்வது? இருக்கும் உயிரை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் புலம்புகிறார்கள்.

    அரசு, அரசியல் கட்சிகள், அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் உதவிகள் செய்தாலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் பிறரை எதிர்பார்த்தே காலத்தை நகர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

    பல கிராமங்களில் இன்றும் மின்சாரம் வரவில்லை. மண்எண்ணை விளக்கில் பழங்கால வாழ்க்கையை வாழ வேண்டியதுள்ளதே என மக்கள் புலம்புகிறார்கள். வெளியூர்களில் இருந்து ஜெனரேட்டர்கள் வாடகைக்கு கொண்டு வரப்பட்டு பணக்காரர்கள் சமாளிக்கும் நிலையில் ஏழைகள் நிலை அவர்கள் வாழ்க்கையை போல வீட்டிலும் எப்போதும் இருள் சூழ்ந்து நிற்கிறது.

    பல பகுதிகளில் கிராம மக்கள் அருகில் உள்ள கண்மாய், ஊரணியில் இருந்து ஊற்றுநீரை குடிநீராகவும், சமைக்கவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

    உணவு தருவதற்கு யாராவது வருகிறார்களா என நிவாரண பொருட்கள் வழங்க வரும் வாகனங்களை எதிர்பார்த்து சாலை ஓரங்களில் காத்து கிடப்பவர்களை பார்ப்பவர்களுக்கு கண்ணீர் வருகிறது.

    இன்னும் 7 நாட்களில் மின் கம்பங்கள் நடும் பணி முழுமையாக முடிந்து விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் மின்சார விநியோகம், குடிநீர் விநியோகம் சீராக 7 நாட்களுக்கு மேலாகும் என்பதால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். #GajaCyclone
    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்தது.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று காலை முதலே வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது. மாலையில் திடீரென பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கீழநெட்டூர் கிராமத்தில் 10–க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. மேலும் 10–க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    வீடுகள் சேதமடைந்து விழுந்ததில் வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. மேலும் வீட்டு ஓடு விழுந்ததில் ஆறுமுகம் என்பவரது மகன் மதியரசனுக்கு (வயது 7) பலத்த காயம் ஏற்பட்டது. அவன் சிகிச்சைக்காக இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.

    இதையடுத்து பரமக்குடியில் இருந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் வேரோடு சாய்ந்த மரங்களையும், வீட்டின் மேல் பகுதியில் விழுந்து கிடந்த மரங்களையும் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த கிராமத்தில் உள்ள ஒரு கோவில் கட்டிடம் மீது மரம் ஒன்று சாய்ந்தது. இதில் அந்த கோவில் கோபுரம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு அரசு அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நிவராணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
    தஞ்சை மேட்டு எல்லையம்மன் கோவில் தெரு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 18 வீடுகள் எரிந்து சாம்பலானது. சிலிண்டர்கள் வெடித்து சிதறின. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ஆப்ரகாம் பண்டிதர் சாலை அருகில் அமைந்துள்ளது மேட்டு எல்லையம்மன் கோவில் தெரு. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அதிகளவில் கூரை வீடுகள் உள்ளன. அனைத்து வீடுகளும் அடுத்தடுத்து நெருக்கமாக அமைந்துள்ளது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கூரையில் லேசான தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென கொளுந்து விட்டு எரிந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து கூச்சலிட்டார். பின்னர் காற்றின் வேகத்தில் தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவத் தொடங்கியது. அப்போது ஒரு வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.

    இதனால் அடுத்தடுத்த வீடுகளிலும் குபீரென தீப்பற்றியது. இதனால் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அடுத்தடுத்த வீடுகளில் உள்ள சிலிண்டர்களும் வெடித்து சிதறியதால் அப்பகுதியே ஒரே களேபரமானது. இதனால் அந்த பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது.

    சத்தம் கேட்டதும் அருகில் உள்ள பகுதி மக்கள் அங்கு வந்து குவிந்தனர். உடனே அங்கு இருந்த இளைஞர்கள், பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் வீட்டின் அருகே யாராலும் செல்ல முடியவில்லை.

    இதனால் பக்கத்து வீட்டுகாரர்கள் உடனடியாக வெளியேறினர். சிலிண்டர்களை வீடுகளில் இருந்து வெளியில் கொண்டு வந்து சாலைகளில் போட்டனர்.

    உடனே இது குறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் உதவி மாவட்ட அலுவலர் இளஞ்செழியன், நிலைய அலுவலர் திலகர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    உடனே அவர்கள் தண்ணீரை பீச்சி அடித்து சுமார் 2½ மணி நேரம் பேராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் தகவலறிந்து டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள் விசாரணை நடத்தியதில் அந்த பகுதியை சேர்ந்த 1.பாலகிருஷ்ணன், 2.பால்ராஜ், 3.நாகராஜ், 4.சண்முகம், 5.ராஜா, 6.ராமகிருஷ்ணன், 7.கேசவன், 8.ராகவன், 9.தேவேந்திரன், 10.சரவணன், 11.ராமு, 12.கணேசன், 13.கிரி, 14.மாரிசாமி ஆகியோரின் வீடுகள் உள்பட 18 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

    இதில் பாலகிருஷ்ணன், பால்ராஜ், சண்முகம், மாரிசாமி, நாகராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோரின் வீடுகளில் உள்ள பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. யார் வீட்டில் முதலில் தீ விபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

    தீ விபத்து ஏற்பட்ட வுடன் வீட்டில் வசிப்பவர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்து விட்டதால் எந்த வித உயிர் பலி அசம்பாவிதங்கள் நடக்க வில்லை. ஆனால் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் கருகி விட்டன.

    இதனால் ரேசன் கார்டு, ஆதார்அட்டை, சான்றிதழ்கள் என முக்கிய ஆவணங்களும் தீயில் எரிந்து சேதமானது. மேலும் பீரோ, துணிகள், பணம் என்று அனைத்தும் தீயில் கருகின. இதனை கண்டு பெண்கள் கதறி அழுதனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் இன்று காலையில் பயங்கர சத்தம் கேட்டது உடனே தூங்கி கொண்டிருந்த நாங்கள் வெளியே வந்து பார்த்தோம். அப்போது வீடுகள் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் எங்கள் வீடுகளில் உள்ள தண்ணீரை எடுத்து தீயை அணைக்க முயற்சி செய்தோம் ஆனால் முடியவில்லை. 4 வீடுகளில் சிலிண்டர் வெடித்ததால் தீ பெரிய அளவில் பற்றி எரிந்தது. பின்னர் தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தோம். அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் உணவு வழங்கி ஆறுதல் கூறினார்.

    திருத்துறைப் பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் 5 வீடுகள் சேதம் அடைந்தன.

    திருத்துறைப்பூண்டி:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவ மழை சரியாக பெய்யவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது. மேலும் ஏரிகள், குளங்கள் வறண்டு நிலத்தடி நீர் குறைந்து போனது. ஆடு, மாடுகளுக்கு குடிக்க கூட தண்ணீர் இல்லாத நிலை நிலவியது.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ஆட்டூர், எழிலூர், நுணாக்காடு, கொத்தமங்கலம், விட்டுக்கட்டி, வரம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.

    ஆட்டூர் பண்டார ஓடை பகுதியில் மரம் முறிந்து மின்கம்பிகளில் விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்தன. மின்ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால் மின்சாரம் நிறுத்தப்பட்டு உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இதேபோல நுணாக்காடு மெயின் ரோட்டை சேர்ந்த விவசாயி சுப்பையன் (வயது 60), சந்தானம் (60), மலர் (40), பாலசுப்பிரமணியன் (29), ஜெகநாதன் (50) ஆகிய 5 பேரின் வீட்டின் கூரைகள் மீது மரம் விழுந்ததால் வீடுகள் சேதமாயின. இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி தாசில்தார் மகேஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு, உரிய இழப்பீடு பெற்று தருவதாக உறுதியளித்தார்.

    ×