search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bay of Bengal"

    • வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
    • மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டும் என்று அறிவிப்பையும் விடுக்கப்பட்டுள்ளது.

    தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையானது காலை 10 மணி வரை நீடிக்கும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது இராமநாதபுரத்தில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டும் என்று அறிவிப்பையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புயல் சின்னம் வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
    • தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி தொடங்கியது. தொடா்ந்து காற்று சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சிகளால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தற்போதும் குமரிக் கடல் பகுதியில் காற்று சுழற்சியும், அரபிக்கடல் பகுதியில் சோமாலியா அருகே புயல் சின்னமும், குஜராத்தில் நிலபரப்பில் காற்று சுழற்சியும் நிலவுகிறது.

    இதனால் நிலநடுக்கோட்டு பகுதியில் இருந்தும், வங்கக் கடலில் இருந்தும் மழையைத் தரும் காற்று தமிழகத்தின் ஊடாகச் செல்வதால் வட தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆங்காங்கே பலத்த மழை கொட்டியது. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 100 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்துக் கூறியபடி, தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் திங்கள்கிழமை புயல் சின்னம் உருவாகியுள்ளது. தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இருக்கும் இந்தப் புயல் சின்னம் நாளை (புதன் கிழமை) மேலும் வலுவடையும்.

    அதன் பிறகு அந்த புயல் சின்னம் வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

    இது அடுத்த 2 நாள்களில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்தப் புயலுக்கு மியான்மா் நாடு பரிந்துரை செய்த 'மிச்சாங்' என்ற பெயா் சூட்டப்படும். இந்தப் புயல் தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு வருமா? அல்லது ஆந்திரம், வங்கதேசம் நோக்கி நகருமா? என்பது இன்னும் இரண்டு நாட்களில் துல்லியமாகத் தெரியவரும்.

    இன்று (செவ்வாய்க் கிழமை) தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது.

    நாளை (புதன்கிழமை) தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, ஆழ்கடலில் உள்ள மீனவா்கள் இன்றுக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புயல் சின்னம் தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் இன்று கேட்டபோது, அவர் கூறிய தாவது:-

    திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை பொறுத்தவரையில் அது வருகிற 2-ந்தேதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் வலுப்பெற்ற பின்னர் அது புயலாக மாறுவது எப்போது? என்பதில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் தற்போதைய சூழலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
    • காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்ற பின்னரே அது எந்த திசையை நோக்கி நகரும் என்பது தெரிய வரும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வரும் நிலையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து கொண்டே இருக்கிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாகவே இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் அந்த மான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது வருகிற 29-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை முதல் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 29-ந் தேதி அன்று தாழ்வு மண்டலமாக மாறுவதால அன்று தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    நாளை உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, அது தாழ்வு மண்டலமாக மாறிய பிறகே தெரியவரும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்ற பின்னரே அது எந்த திசையை நோக்கி நகரும் என்பது தெரிய வரும். தமிழக பகுதியை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நகர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.
    • சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந் தது.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் உருவான மேல் அடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் கடந்த ஒரு வார காலமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    புதுச்சேரியில் நேற்று காலை வானம் இருண்டு காணப்பட்டது. ஆனால் பிற்பகல் வரை மழை பெய்யவில்லை. மாலை 3.30 மணிக்கு திடீரென இடியுடன் கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் மழை கொட்டியது.

    கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. மழை நின்றதும் வெள்ள நீர் வடிந்தது. தொடர்ந்து இரவிலும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் மழை கொட்டியது. பெருத்த இடி ஒசையால் வீடுகளில் தூங்கியவர்கள் அச்சமடைந்தனர். குழந்தைகள் இடி சத்தத்தை கேட்டு அரண்டு போனார்கள்.

    வீடுகளில் உள்ள மின் சாதன பொருட்களின் இணைப்புகளை துண்டித்தனர். தொடர்ந்து காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்படுகிறது.

    தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.

    குறிப்பாக புதுச்சேரியின் நகர பகுதியான புஸ்சி வீதி, பாரதி வீதி, சின்னசுப்புராய பிள்ளை வீதி, காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.

    கனமழை காரணமாக உழவர்கரை தொகுதி மூலக்குளம் பகுதியில் வசித்து வரும் வசந்தா என்ப வர் வீட்டின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி திடீரென அதிகாலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது.

    சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந் தது. வீட்டில் வசிப்போர் யாரும் அருகில் இல்லாததால் காயம் ஏற்படவில்லை.

    இதனிடையே கடலில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்புமாறு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து மீன்வளதுறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 29-ந் தேதி தாழ்வு மண்டலமாக வலுப் பெற கூடும் என வானிலை மையம் தெரித்துள்ளது. எனவே ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் வருகிற 28-ந் தேதிக்குள் கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

    மேலும், ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு தொலை தொடர்பு உபகரணங்கள் மூலம் புதுவை மீன்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    • காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.
    • கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சென்னை:

    தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (14-ந்தேதி) உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    நாளை (14-ந்தேதி) மற்றும் 15-ந்தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

    ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 32 செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாகவும் இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா, சத்தீஸ்கர் நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    • மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 18-ந் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இத்தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா, சத்தீஸ்கர் நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 3 மாநிலங்களையொட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் என்பதால் இந்த மாநிலங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தனர். இருப்பினும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 18-ந் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாகவோ, தீவிர புயலாகவோ மாறுவதற்கு வாய்ப்பு இல்லை.
    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தரைப் பகுதிக்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.

    சென்னை:

    வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களையொட்டி வங்க கடல் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காாரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    அதே நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாகவோ, தீவிர புயலாகவோ மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 மாநிலங்களிலும் நல்ல மழையை கொடுக்க வாய்ப்புள்ளது என்பதால் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடல் பகுதியில் இருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தரைப் பகுதிக்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் தமிழகத்துக்கு எந்த வகையிலும் மழை பெய்வதற்கான வாய்பபு இல்லை என்றே வானிலை மையம் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இடி-மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் வெப்பம் குறைந்து காணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தென் தெற்கு வங்கக் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் கால கட்டத்தில் புயல் சின்னங்கள் ஏற்படுவது வழக்கம்.
    • அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மே மாதம் முடிந்துள்ள நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையாமலேயே உள்ளது. கோடை முடிந்து எப்போதும் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் பருவ மழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை மைய நிபுணர்கள் கணித்து உள்ளனர்.

    இந்த நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அரபிக்கடலில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியில் வருகிற 5-ந்தேதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தனியார் வானிலை நிபுணரான பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். இதே போன்று வங்கக் கடலிலும் புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த புயல் இன்னும் சில தினங்களில் உருவாகும் என பிரதீப்ஜான் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் கால கட்டத்தில் இது போன்ற புயல் சின்னங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில்தான் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

    இதில் அரபிக்கடலில் தான் முதலில் புயல் உருவாகிறது. பின்னர்தான் வங்கக்கடலில் புயல் உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புயல் உருவாகும் நேரத்தில் தரைகாற்று அதிகமாக வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்றும் வானிலை மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வருகிற 5-ந்தேதி அரபிக்கடலில் புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கக்கடலில் 9- ந்தேதி புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    அரபிக்கடலில் உருவாகும் புயல் தீவிரம் அடைந்து மேற்கு இந்திய கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா பகுதியை இந்த புயல் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்க கடலில் உருவாக உள்ள புயலின் தாக்கம் பற்றி தற்போது கணிக்க முடியாது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    • புதிதாக உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைப்பு.
    • 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைகிறது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. இந்நிலையில் அந்தமான் அருகே வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தகவலகள் தெரிவித்துள்ளன. இதையொட்டி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


    வரும் நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். இது வலுப்பெற்று டிசம்பர் 8ம் தேதி புயலாக மாற உள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட உள்ளது. இதனால் 8 மற்றும் 9 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

    நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

    • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சில இடங்களில் கன மழையும், மற்ற இடங்களில் பரவலான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • ஒடிசாவின் கடலோர பகுதியில் மழையின் தீவிரம், புயலின் பாதை, காற்றின் வேகம் ஆகியவை இன்னும் கணிக்கப்படவில்லை.

    தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது. இந்த வளி மண்டல சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 7.6 கி.மீ தூரம் வரை பரந்து விரிந்துள்ளது.

    வங்கக்கடலில் தென் கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகி உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்கிறது. அது நாளை மறுநாள் (சனிக் கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. அது மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும்.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேலும் வலுவடைந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வருகிற 23-ந்தேதி புயலாக வலுவடைய உள்ளது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட 'சிட்ரங்' என்ற பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த புயல் வடக்கு ஆந்திர கடலோர பகுதியை முதலில் தாக்கும்.

    வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த புயல் வடக்கு ஆந்திர கடலோர பகுதியை முதலில் தாக்கும்.

    மேலும் புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாகே, கர்நாடகாவின் தெற்கு பகுதிகள் மற்றும் லட்சத்தீவு ஆகிய இடங்களிலும் பரவலான மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சில இடங்களில் கன மழையும், மற்ற இடங்களில் பரவலான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புதிய புயல் உருவாவதை தொடர்ந்து பல கடலோர மாவட்டங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    புயல் முன்அறிவிப்பை கருத்தில் கொண்டு ஒடிசா அரசு தனது ஊழியர்களின் விடுமுறையை வருகிற 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ரத்து செய்துள்ளது.

    இந்த புயலின் பாதை ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதியை நோக்கி இருக்கும் என்பதால் ஆந்திரா மற்றும் ஒடிசாவில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒடிசா அரசு 7 கடலோர மாவட்டங்களின் நிர்வாகங்களை உஷார்படுத்தி உள்ளது.

    புயல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் கஞ்சம்பூரி, குர்தா, ஜெகத்சிங்பூர், கேந்திரபடா, பத்ரக் மற்றும் பாலசோர் ஆகிய மாவட்டங்களை புயல் தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    எனவே அங்கு அதிகாரிகள் மிகவும் உஷாராக இருக்கவும், நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வருகிற 23-ந்தேதி பூரி, கேந்திரபடா மற்றும் ஜெகந்த் சிங்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதேநேரத்தில் ஒடிசாவின் கடலோர பகுதியில் மழையின் தீவிரம், புயலின் பாதை, காற்றின் வேகம் ஆகியவை இன்னும் கணிக்கப்படவில்லை.

    • ஒடிசா மாநிலம் பாலசூருக்கு அருகே நிலை கொண்டுள்ளது.
    • மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு.

    வடக்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. இது ஒடிசா மாநிலம் பாலசூருக்கு அருகே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

    இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்க கூடும் என்று வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதன் காரணமாக சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    • பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது.

    வங்கக் கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதனையடுத்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது. 


    ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, ஏர்வாடி, வாலிநோக்கம், தொண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் 7-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

    ×