என் மலர்tooltip icon

    சிவகங்கை

    நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு வீடியோ எடுக்கும் பணியினை அந்தந்த மாவட்ட போட்டோ, வீடியோ தொழிலாளர்களிடம் வழங்காமல் கார்பரேட் கம்பெனிகளுக்கு வழங்கியுள்ளனர்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட போட்டோ ஸ்டுடியோ, வீடியோ கடைகள் உள்ளன.

    நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு வீடியோ எடுக்கும் பணியினை அந்தந்த மாவட்ட போட்டோ, வீடியோ தொழிலாளர்களிடம் வழங்காமல் கார்பரேட் கம்பெனிகளுக்கு வழங்கியுள்ளனர்.

    இதனை கண்டித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, மானாமதுரை, சிவகங்கை, காளையார்கோவில் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள போட்டோ ஸ்டுடியோ, வீடியோ எடிட்டிங் சென்டர், கலர் லேப் மற்றும் புகைப்பட தொழில் சார்ந்த அனைத்து நிறுவனங்களும் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து வீடியோ கடை உரிமையாளர்கள் கூறுகையில், தேர்தல் வீடியோ ஒளிப்பதிவு செய்யும் பணியை கார்பரேட் நிறுவனத்திற்கு கொடுத்து வருகிறார்கள். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கார்பரேட் கம்பெனிகள் வழங்கும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வந்தோம்.

    எங்களுக்கு நேரடியாக இந்த பணியை வழங்கினால் மட்டுமே தேர்தல் ஆணையம் வழங்கும் முழுமையான சம்பளம் கிடைக்கும்.

    எங்களது நிலையை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறோம் என்றார்.
    தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரியவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
    சிவகங்கை:

    சட்டசபை தேர்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து 1,679 வாக்குபதிவு மையங்கள் உள்ளன. இந்த வாக்கு பதிவு மையங்களில் ஒரு மையத்திற்கு 6 பேர் வீதம் பணிபுரிவார்கள். இதற்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வங்கி பணியாளர்கள் உள்பட 8 ஆயிரத்து 59 பேர் வரை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 330 பேர் மருத்துவ காரணங்களால் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க கோரியிருந்தனர்.

    இந்நிலையில் விலக்கு கோரியவர்கள் கூறிய காரணம் உண்மையானது தானா? என்பதை கண்டறிய விலக்கு கோரியவர்களுக்கு நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் தேர்தலில் விலக்கு கோரியவர்கள் கூறிய காரணங்கள் உண்மை தானா? என பரிசோதித்து சான்றிதழ் அளித்தனர். அவ்வாறு சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டும் தேர்தல் பணியி்ல் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
    சிவகங்கை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு முகாம் நடத்த கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பரவிய கொரோனா மாவட்டத்தில் உள்ள மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியது. பின்னர் படிபடியாக கொரோனாவின் தாக்கம் குறைந்தது. ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தின வேல், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி, குடும்பநலத்துறை துணை இயக்குனர் டாக்டர் யோகவதி மற்றும் மருத்துவ கல்லூரி கொரோனா பிரிவு பொறுப்பாளர் டாக்டர் சூரியநாராயணன் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை மூலம் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்த வேண்டும்.. ஒரு வீட்டில் 3 பேரோ, அல்லது ஒரு தெருவில் 3 பேரோ கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியபட்டால் அந்த பகுதியி்ல் சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய அரசு மருத்துவமனையை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம். மேலும் கொரோனா நோயாளிகளை 7 நாட்கள் வரை மருத்துவமனையில் வைத்திருந்து முழுவதும் குணமடைந்த பின்னரே அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஊராட்சி செயலர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையால் கல்லல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    கல்லல்:

    சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் பொய்யலூர் ஊராட்சி ஆளவந்தான்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 45). இவர் செவரக்கோட்டை ஊராட்சியில் செயலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆனந்தவல்லி அ.தி.மு.க. பிரமுகராக உள்ளார்.

    தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக இவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக சிவகங்கை தேர்தல் அலவலர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.

    இதைத் தொடர்ந்து பறக்கும் படை அதிகாரி காளிமுத்து (வேளாண்மை துறை) தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் காரைக்குடி வருமான வரித்துறை ஆய்வாளர் பெருமாள், நிகில்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அவரது வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    வீட்டில் இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அங்கு இருந்த ஊராட்சி மன்ற செயலர் நாகராஜன், அவரது மனைவி ஆனந்தவல்லி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே அவரது வீட்டுக்கு வெளியே கத்தை கத்தையாக பணம் கிடந்தது. அந்த பணத்தை வருமான வரி துறையினர் எடுத்து எண்ணி பார்த்தனர். மொத்தம் ரூ. 70 ஆயிரத்து 600 இருந்தது. அந்த பணம் குறித்து அவர்கள் 2 பேரிடமும் விசாரித்தபோது சரிவர பதில் அளிக்கவில்லை.

    இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து சிவகங்கை தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். இருப்பினும் கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது? வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கப்பட்ட பணமா? அதிகாரிகள் வந்ததை அறிந்து வீட்டில் இருந்து வெளியே வீசப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையால் கல்லல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



    பல மாநிலங்களில் அரசியலை சில்லறை வியாபாரமாக செய்து வரும் பா.ஜனதா, தமிழகக்தில் மொத்த வியாபாரமாக செய்ய முயன்று வருகிறது என்று ப சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

    காரைக்குடி:

    காரைக்குடியில் நடந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற திசையை நோக்கி அனைவரும் பயணிக்கின்றனர். நமது லட்சியமும் ஆட்சி மாற்றம்தான். 10 ஆண்டுகால அவலத்தை முழுமையாக உடைதெறிய வேண்டும். இந்த சரித்திர நிகழ்வை படைக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.

    தற்போது தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும், தமிழ்மொழிக்கும் பேராபத்து ஏற்பட்டு வருகிறது என எச்சரிக்க விரும்புகிறேன்.

    பேராபத்தை ஏற்படுத்தும் நச்சுச்செடிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தேர்தலையே திருடும் கட்சி பா.ஜனதா கட்சி. இதனை உயர்ந்த கலையாகவே நினைத்து செயல்பட்டு வருகிறது.

    பல மாநிலங்களில் அரசியலை சில்லறை வியாபாரமாக செய்து வரும் பா.ஜனதா, தமிழகக்தில் மொத்த வியாபாரமாக செய்ய முயன்று வருகிறது. அ.தி.மு.க. தலைமை ஆட்சியையும், கட்சியையும் அவர்களிடம் அடமானம் வைக்கிறது.

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு பல்வேறு அவசர அறிவிப்புகளை வெளியிட்டார். வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கியிடம் அனுமதிபெற வேண்டும். இவை அனைத்தும் மக்களை ஏமாற்றும் அறிவிப்புகள்.

    பா.ஜனதா இந்துக்களை, முஸ்லிம்களை, கிறிஸ்தவர்ளை வேறுபடுத்தி பிரித்து பார்க்கிறது. என்னை கண்ட துண்டமாக வெட்டிப்போட்டாலும் இதனை நான் ஏற்க மாட்டேன். பா.ஜனதா ஆட்சியில் சிறுபான்மையினர், பெண்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கும், சட்ட நீதிமன்றங்களுக்கும், சமூகத்திற்கும் பாதுகாப்பின்மை, தமிழ்மொழியை, தமிழ் இனத்தை பாதுகாக்க வெகுண்டெழுந்து வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கொந்தகையில் வாய் பகுதி மூடிய நிலையில் உள்ள முழுமையான முதுமக்கள் தாழி மற்றும் சேதமுற்ற முதுமக்கள் தாழிகள் என பல கண்டுபிடிக்கப்பட்டன.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. இந்த பணிகள் முதலில் கீழடியிலும் பிறகு கொந்தகை, அகரத்திலும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

    கீழடியில் தோண்டப்பட்ட ஒரு குழியில் பாசி மணிகள், சில்லுவட்டுக்கள் மற்றும் பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

    கொந்தகையில் வாய் பகுதி மூடிய நிலையில் உள்ள முழுமையான முதுமக்கள் தாழி மற்றும் சேதமுற்ற முதுமக்கள் தாழிகள் என பல கண்டுபிடிக்கப்பட்டன.

    அகரத்தில் ஒரு குழி தோண்டி அகழாய்வு மேற்கொண்ட போது முதலில் சேதமுற்ற நிலையில் சிறிய பானை ஓடுகள் கிடைத்தன. தொடர்ந்து குழியை ஆழமாக தோண்டிய போது சேதமுற்ற நிலையில் தானியங்கள் சேமித்து வைக்கும் மண்கலன் நேற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த கலன் சேதமுற்ற நிலையில் சுவருடன் ஒட்டிய நிலையில் உள்ளது.

    முந்தைய காலங்களில் களிமண்ணால் வட்ட உறை ஆக செய்து வீடுகளில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து பூசி இருக்கிறார்கள். இந்த கலன்களில் நெல், தானியம் சேமித்து வைத்து, தேவைப்படும் போது சிறுக, சிறுக எடுத்து மக்கள் பயன்படுத்தி இருப்பதாக தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது மக்களை கவலையடைய வைத்துள்ளது.
    கல்லல்:

    ஒரே வகுப்பில் படித்து வரும் பிளஸ்-1 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது மக்களை கவலையடைய வைத்துள்ளது.

    இதை தொடர்ந்து வருகிற 22-ந்தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மறுஉத்தரவு வரும் வரை பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடைபெறும் என அரசு அறிவித்து உள்ளது.

    இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாணவி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதையடுத்து நேற்று பள்ளியில் சக மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பிளஸ்-1 படிக்கும் இன்னொரு மாணவிக்கும், மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஒரே வகுப்பில் படித்துவரும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வகுப்பறை முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.

    பின்னர் அந்த பள்ளியில் படித்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கூட பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    அது மட்டுமின்றி அந்த பள்ளி செயல்பட்டு வரும் ஊரிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அந்த பள்ளியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் யசோதாமணி ஆகியோர் பார்வையிட்டனர்.
    கொரோனா 2-வது அலை உருவாகி வருவதால் கொரோனா பரவலை தடுக்க கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
    கல்லல்:

    கல்லல் பகுதிகளில் சொக்கநாதபுரத்தில் (செவ்வாய்க்கிழமை),பாகனேரியில் (புதன்கிழமை), மதகுபட்டி கல்லல் பகுதியில்(வியாழக்கிழமை) வாரச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைகளில் பொதுமக்கள் காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க அலைமோதுவது உண்டு. சமீப காலமாக கொரோனா தொற்று குறைந்ததால் சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் பெரும்பாலானோர் முககவசம் அணிவதில்லை. அதோடு சமூக இடைவெளியையும் பின்பற்றுவதில்லை. தற்போது கொரோனா 2-வது அலை உருவாகி வருவதால் கொரோனா பரவலை தடுக்க கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அடுத்த முறை சந்தை நடைபெறும் நாட்களில் வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
    இளையான்குடி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிறுத்தம் அருகில் சட்டவிரோதமாக மது விற்ற பில்லத்தி கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் முனியசாமி (வயது 37) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    தேவகோட்டையில் டிரைவர் கொடூரக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சரஸ்வதி வாசக சாலை வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி.

    இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களது மகன் கார்த்திக் (வயது 45).திருமணமாகாத இவர், வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற கார்த்திக் வீடு திரும்பவில்லை. அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை.

    இதற்கிடையே இன்று காலை சிலம்பணி ஊரணியில் வாலிபர் பிணம் கிடப்பதாக தேவகோட்டை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காயங்களுடன் காணப்பட்ட உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தது கார்த்திக் என்பது தெரியவந்தது. இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மருத்துவமனைக்கு வந்த அவர்கள், மகனின் உடலை பார்த்ததும் கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கொன்று உடலை ஊரணியில் வீசிச் சென்றது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலையான கார்த்திக்குக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு அய்யனார், கார்த்திக் வீட்டுக்கு சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது. எனவே இந்த சந்தேகத்தின் அடிப்படையில் அய்யனாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்குடி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக போட்டியிடும் ராசகுமார் சந்தைபேட்டை மயானத்தில் உள்ள கல்லறைகளுக்கு மாலை அணிவித்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக ராசகுமார் போட்டியிடுகிறார். இவர் இன்று காரைக்குடி சந்தை பேட்டை மயானத்தில் உள்ள கல்லறைகளுக்கு மாலை அணிவித்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    இந்த நூதன பிரசாரம் குறித்து ராசகுமார் கூறுகையில், நான் காரைக்குடி மக்கள் மன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அனாதை பிணங்களை இதே கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்துள்ளேன். அவர்கள் ஆசி கிடைக்கவும், எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அனைவரும் கடைசியில் இங்குதான் வரவேண்டும். இதை உணர்த்தும் வகையில் எனது பிரசாரத்தை இங்கிருந்து தொடங்கி உள்ளேன் என்று கூறினார்.


    கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த பெட்ரோல் பங்க் நடத்தியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருப்புவனம்:

    பூவந்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது படமாத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கை சிவகங்கை அருகே உள்ள இலந்தங்குடிபட்டி கிராமத்தை சேர்ந்த முருகானந்தம்(வயது 52) என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். 

    இதில் கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் முருகானந்தம் பெட்ரோல் பங்குக்கு பின்புறமுள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இச்சம்பவம் குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×