என் மலர்
சேலம்
- காவிரி கரையோர மாவட்டங்கள் வெள்ளக்காடானது.
- அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
காவிரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதனால் உபரிநீர் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த மாதம் 30-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.
தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்ததால் அது அப்படியே உபரிநீராக 16 கண் பாலம் வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக காவிரி கரையோர மாவட்டங்கள் வெள்ளக்காடானது.
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
பின்னர் மீண்டும் கடந்த வாரம் நீர்வரத்து அதிகரித்தது. அதிகபட்சமாக வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தால் அணை இந்தாண்டில் 2-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து மீண்டும் உபரிநீர் 16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து வழக்கம் போல் நீர்வரத்து குறைந்ததால் உபரிநீரும் நிறுத்தப்பட்டது. அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து விட்டதால் அணைக்கு நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 8 ஆயிரத்து 563 கனஅடியாக குறைந்தது. ஆனால் தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் அணையின் நீர்மட்டம் 119.76 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருவதால் நீர்மட்டம் குறைய தொடங்கியது.
- தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
- ஓமலூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
குறிப்பாக சேலம் மாநகரில் நேற்று கோரிமேடு, சாரதா கல்லூரி சாலை, புதிய பஸ் நிலையம், அத்வைத ஆசிரம ரோடு உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது . தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் பல இடங்களில் சாக்கடை கழிவு நீரும் மழை நீரும் சேர்ந்து சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகள், சாலைகளில் நடந்து சென்றவர்கள் தவியாய் தவித்தனர்.
மேலும் திடீரென பெய்த மழையால் பள்ளி, கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவ-மாணவிகள் போக்குவரத்து நெரிசலால் பல மணி நேரம் தாமதத்திற்கு பின்பே வீடு திரும்பினர். குறிப்பாக சாரதா கல்லூரி சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவியதால் வாகன ஓட்டிகள், மற்றும் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதே போல சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஓமலூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இதனால் அந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓமலூரில் 15 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 1.3, ஏற்காடு 3.6, வாழப்பாடி, ஆனைமடுவு 2, கெங்கவல்லி 4, தம்மம்பட்டி 11, ஏத்தாப்பூர் 3, கரியகோவில் 3, எடப்பாடி 1.2, மி.மீ. என மாவட்டம் முழுவதும் 46.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
ஏற்காடு:
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஏற்காடும் ஒன்றாகும். இங்கு வார இறுதி நாட்களிலும் அரசு விடுமுறை தினங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
தற்போது தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர். ஏற்காட்டில் தொடர் மழை பெய்து குளுமையான சீதோசன நிலை நிலவி வருவதால் இதை அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இவர்கள் இங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், லேடிஸ் சீட், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் குகை கோவில், ஐந்திணை பூங்கா போன்ற இடங்களை குடும்பத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
குறிப்பாக படகு இல்லத்தில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு பயணச் சீட்டு பெற்று இயற்கை அழகை ரசித்தவாறு படகு பயணம் செய்தனர்.
தொடர் மழை காரணமாக ஏற்காடு மலையின் பல்வேறு பகுதிகளில் அருவிகள் உருவாகி உள்ளது. அதில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை ஏற்காட்டில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஏற்காடு மலை பாதை 18-வது கொண்டை ஊசி வளைவு அருகில் ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நீண்ட நேரம் மலைப்பாதையில் அணிவகுத்து நின்றன. பலத்த மழை பெய்து கொண்டே இருந்ததால் மரத்தை வெட்டி அப்புறப்படுத்த நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் வரவில்லை.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஏற்காடு வாழ் இளைஞர்கள் தாங்களாகவே மரங்களையும் மரக்கிளைகளையும் அகற்றினர். இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கு பின்பு போக்குவரத்து தொடங்கியது.
- அகில இந்திய மருத்துவ சங்கம் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
- நீண்ட வரிசையில் வெகு நேரம் நோயாளிகள் காத்து நின்று சிகிச்சை பெற்று சென்றனர்.
சேலம்:
மேற்கு வங்காள தலைநகர் கோல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பணியில் இருந்த 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய கேட்டு நாடு முழுவதும் டாக்டர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அகில இந்திய மருத்துவ சங்கம் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. அதன் படி நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்படும் 200-க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் இன்று காலை 6 மணி முதல் வெளி நோயாளிகள் பிரிவு மூடப்பட்டது.
அவசர சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பெரும்பாலான ஆஸ்பத்திரிகள் வெளி நோயாளிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வெளி நோயாளிகள் பிரிவு மூடப்பட்டதால் காய்ச்சல் தலைவலி, வயிற்று வலி உள்பட சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் கடும் அவதிப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளி நோயாளிகள் பிரிவில் அதிக நேரம் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வெகு நேரம் நோயாளிகள் காத்து நின்று சிகிச்சை பெற்று சென்றனர்.
இதேபோல் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கொல்கத்தா மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், சம்பவத்தில் தொடர்புடையவர்களை தூக்கிலிட வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.தொடர்ந்து மருத்துவமனை யில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை மட்டும் நடைபெறுகிறது.
- 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது.
சேலம்:
கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த மாதம் 30-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து அணைக்கு வந்த உபரிநீர் 16 கண் பாலம் வழியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
இதன் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு வசித்த பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் வெளியேற்றப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
இதற்கிடையே மீண்டும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து உபரிநீர் மீண்டும் 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டு வந்தது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதனால் 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டு வந்த உபரிநீர் நேற்று இரவு 10.30 மணியளவில் நிறுத்தப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து பவர்ஹவுஸ் வழியாக டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியும், கால்வாய் வழியாக வினாடிக்கு 500 கனஅடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120 அடியாக இருந்தது.
சேலம்:
கர்நாடகாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை கடந்த மாதம் 30-ந் தேதி நிரம்பியது. பின்னர் நீர்வரத்தை விட அதிகளவில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் இந்த ஆண்டில் மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியது. மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று அது வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று அது வினாடிக்கு 26 ஆயிரத்து 864 கனஅடியாக குறைந்து காணப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 26 ஆயிரத்து 864 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவர்ஹவுஸ் வழியாக 21500 கனஅடியும், 16 கண்பாலம் வழியாக 2500 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 123.06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரத்து 512 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல் கபினி அணைக்கு வினாடிக்கு 5960 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 19 ஆயிரத்து 512 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.
- ஷ்ரவன் பண்டிகையால் ஜவ்வரிசி ஏற்றுமதி தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி பண்டிகைகள் காரணமாக ஜவ்வரிசி விற்பனை மேலும் அதிகரிக்கும்.
சேலம்:
சேலம் குரங்குச்சாவடியில் சேகோசர்வ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தருமபுரி, ஈரோடு, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விற்பனைக்காக ஜவ்வரிசி, ஸ்டார்ச் ஆகியவை அதிக அளவில் கொண்டு வரப்படுகிறது.
மற்ற மாநிலங்களை விட சேலத்தில் கிடைக்கும் ஜவ்வரிசி தரமாக இருப்பதால் வடமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் சேலம் ஜவ்வரிசியை வாங்கி செல்கிறார்கள. இந்த ஜவ்வரிசியை வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் முக்கிய உணவு பொருளாக உண்டு வருவதால் அதிக அளவில் வட மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகி வருகிறது.
இந்த நிலையில் வடமாநிலங்களில் பெரும்பாலோனோர் கொண்டாடும் முக்கிய பண்டிகையான ஷரவன் பண்டிகை நோன்பு தற்போது தொடங்கி உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமானோர் தற்போது ஷரவன் பண்டிகை நோன்பு இருந்து வருகிறார்கள்.
இவர்கள் ஜவ்வரிசியை மட்டும் உணவு பொருளாக சாப்பிடுவது வழக்கம். அதனால் ஜவ்வரிசி தேவை அதிகரித்துள்ளதால் தற்போது சேலம் மாவட்டத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு ஜவ்வரிசி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 90 கிலோ எடை கொண்ட ஜவ்வரிசி மூட்டை கடந்த மாதம் 5 ஆயிரத்திற்கு விற்ற நிலையில் தற்போது அதன் விலை குறைந்து 4 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், ஸ்டார்ச் ஒரு மூட்டை 3 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இது குறித்து ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் கூறியதாவது:- வட மாநிலங்களில் கொண்டாடப்படும் ஷரவன் பண்டிகையால் ஜவ்வரிசி ஏற்றுமதி தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒரு நாளைக்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை ஜவ்வரிசி மூட்டைகள் தற்போது விற்பனையாகிறது. இனி வரும் நாட்களில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் விற்பனையாக வாய்ப்பு உள்ளது.
மேலும் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி பண்டிகைகள் காரணமாக ஜவ்வரிசி விற்பனை மேலும் அதிகரிக்கும். 2 மாதத்திற்குள் 7 முதல் 8 லட்சம் டன் ஜவ்வரிசி மூட்டைகள் விற்பனையாக வாய்ப்புள்ளது. தேவை அதிகரிப்பால் விலையும் உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மேட்டூர் அணை கடந்த 30-ந் தேதி 120 அடியை எட்டி நிரம்பியது.
- அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
சேலம்:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக தமிழக காவிரி ஆற்றில் அதிகளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை கடந்த 30-ந் தேதி 120 அடியை எட்டி நிரம்பியது. பின்னர் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதிக பட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வரை வெளியேற்றப்பட்டதால் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து மழை குறைந்து நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் திறப்பும் நிறுத்தப்பட்டது.
ஆனாலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதற்கிடையே கர்நாடகாவில் மீண்டும் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து மேட்டூர் அணை நடப்பாண்டில் 2-வது முறையாக மீண்டும் நிரம்பியது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.41 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்து இருந்தது. அணையில் இருந்து பவர் ஹவுஸ் வழியாக 21 ஆயிரத்து 500 கனஅடியும், 16 கண் பாலம் வழியாக 14 ஆயிரம் கனஅடியும், கால்வாய் மூலம் வினாடிக்கு 500 கனஅடியும் என மொத்தம் அணையில் இருந்து 35 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- சாக்கடை கழிவு நீருடன் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
- 4 நாட்கள் கன மழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது.
இேதபோல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. சேலம் மாநகரில் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை 9 மணி வரை கன மழையாக கொட்டியது. பின்னர் மழை தூறலாக நீடித்தது.
இதனால் மாநகரில் சில பகுதிகளில் சாலைகளில் சாக்கடை கழிவு நீருடன் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
நேற்றிரவு பெய்த கன மழையால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றது. இதனால் பஸ் ஏற முடியாமல் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

அதே போல சேலம் 4 ரோடு, 5 ரோடு, பழைய பஸ் நிலையம், கொண்ட லாம்பட்டி, ஜங்சன், அம்மாப்பேட்டை, கொண்ட லாம்பட்டி, கிச்சிப்பாளையம் நாராயணநகர், பச்சப்பட்டி நெத்திமேடு, அன்னதானப்பட்டி, தாதகா ப்பட்டி என மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதில் பச்சப்பட்டி, அம்மாப்பேட்டை மாருதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீருடன் சாக்கடையும் கலந்து புகுந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் தூங்க முடியாமல் விடிய விடிய கடும் அவதி அடைந்தனர்.
சேலம் காந்தி விளையா ட்டு மைதானத்தில் அதிக அளவில் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் அங்கு நடை பயிற்சி சென்றவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி-சாந்தி என்பவரின் ஓட்டு வீடு மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த சேலம் டவுன் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று இடுபாடுகளை அகற்றினர். இதில் வீட்டில் உள்ளவர்கள் வேறு அறையில் படுத்து இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு 8 மணியளவில் தொடங்கிய மழை அதிகாலை 1 மணி வரை கன மழையாக கொட்டியது. இந்த மழையால் ஏற்காட்டில் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் ஏற்காட்டில் மலைப்பாதைகளில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது கண் கொள்ளா காட்சியாக உள்ளது. இந்த திடீர் அருவிகளில் ஏற்காடு செல்லும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
மேலும் ஏற்காடு அடிவாரப்பகுதியில் உள்ள 3 தடுப்பணைகள் நிரம்பி உள்ளன. இந்த தண்ணீர் வாணியங்காடு வழியாக கன்னங்குறிச்சி புது ஏரிக்கு வருகிறது. இதனால் புது ஏரி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் நெல் நடவு பணிகளை தொடங்கி உள்ளதுடன் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பலத்த மழை காரணமாக ஏற்காட்டில் இரவு 8 மணி முதல் மின்தடை ஏற்பட்டது. இன்று காலை 9 மணி வரை மின் விநியோகம் செய்யப்பட வில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதே போல சேலம் புறநகர் பகுதிகளான ஆனை மடுவு, ஆத்தூர், கரியகோவில், எடப்பாடி, மேட்டூர், ஓமலூர் பகுதிகளிலும் கன மழை பெய்தது . இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியது. எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது .
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காடடில் 79 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 65.7, ஆனைமடுவு 39, ஆத்தூர் 28, கெங்கவல்லி 8, தம்மம்பட்டி 6, ஏத்தாப்பூர் 8, கரியகோவில் 72, சங்ககிரி 37, எடப்பாடி 61.4, மேட்டூர் 58.4, ஓமலூர் 46, டேனீஸ்பேட்டை 27 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 535,5 மி.மீ. மழை பெய்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, நாமக்கல் நகரம் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு கன மழை பெய்தது. இந்த மழையால் அந்த பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக திருச்செங்கோட்டில் 45 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
குமாரபாளையம் 6.8, மங்களபுரம் 17, மோகனூர் 22, நாமக்கல் 38, பரமத்தி 31, புதுச்சத்திரம் 22, ராசிபுரம் 6.6, சேந்தமங்கலம் 9, கலெக்டர் அலுவலகம் 12, கொல்லிமலை 15 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 224.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
இதற்கிடையே தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை மேலும் 4 நாட்கள் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடதக்கது.
- இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 123.10 அடியாக இருந்தது.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.
கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 123.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 21ஆயிரத்து 60கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 37ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் கபினி அணையின் நீர்மட்டம் 82.84 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4ஆயிரத்து 782 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு 42ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 2-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
- காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கிருந்து திறக்கப்படும் உபரிநீரும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடியில் இருந்து 26 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 2-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் நீர் இருப்பு 93.47 மில்லியன் கனஅடியாக உள்ளது.
இதையடுத்து சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் நீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றில் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- கூடைப்பந்து போட்டியில் பள்ளியின் மாணவர்கள் தோற்றதால் திட்டி தீர்த்த ஆசிரியர்.
- செல்போனில் வீடியோவாக பார்த்த பெற்றோர் அதிர்ச்சி.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடைப்பந்து போட்டியில் அந்த பள்ளியின் மாணவர்கள் தோற்றதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, மாணவர்களை தரையில் அமர வைத்து தகாத வார்த்தைகளால் திட்டி ஷூ காலால் ஆவேசமாக எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்துள்ளார். இதுதொடர்பான அதிர்ச்சிகர வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
இதனை செல்போனில் வீடியோவாக பார்த்த பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகி அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மாணவர்களை ஷூ கால்களால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா உத்தரவிட்டுள்ளார்.






