என் மலர்tooltip icon

    சேலம்

    • படகு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
    • விசைப்படகிற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் ஆண்டுக்கு 70 லட்சம் மீன் குஞ்சுகள் மீன்வளத்துறை சார்பில் விடப்பட்டு அணையில் வளர்க்கப்படுகிறது. மீன் குஞ்சுகள் பெரிதானவுடன் உரிமம் பெற்ற 2016 மீனவர்களை கொண்டு மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அணையில் தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பதை தடுக்கவும், மீன்பிடி உரிமம் இல்லாத பரிசல்களை பறிமுதல் செய்தல், நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மீன்வளத் துறையினருக்கு ரோந்து செல்ல விசைப்படகு வழங்கப்பட்டது.

    இந்நிலையில் கீரை காரனூர் காவிரி ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்ட மீன்வளத்துறைக்கு சொந்தமான விசைப்படகு நள்ளிரவில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் படகு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

    இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நள்ளிரவில் விசைப்படகிற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஏற்காட்டில் பனிப்பொழிவு பெய்து வருவதால் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுகிறது.
    • மலைகளில் மேகமூட்டம் படர்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

    ஏற்காடு:

    ஏற்காடு கிழக்கு தொடர்ச்சி மலை சேர்வராயன் மலைத் தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ளது.

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி (சனிக்கிழமை), 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய வார இறுதி நாள் மற்றும் 23-ந்தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, இன்று (24-ந்தேதி) விஜயதசமி உள்ளிட்ட பண்டிகை என தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் 21-ந்தேதி முதலே ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    வழக்கத்தை விட இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். காலையில் இருந்தே கார், மோட்டார் சைக்கிள், சொகுசு வேன், பஸ்களில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்பட்டது.

    ஏற்காட்டில் பனிப்பொழிவு பெய்து வருவதால் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுகிறது. மேலும் மலைகளில் மேகமூட்டம் படர்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒவ்வொரு சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனர். குறிப்பாக ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரி இயற்கையாக அமைந்துள்ள ஏரி ஆகும். இதைச்சுற்றிலும், மான் பூங்கா, பொழுதுபோக்கு பூங்கா, அண்ணாபூங்கா போன்றவைகளால் சூழப்பட்டுள்ளது.

    இங்கு சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய குவிந்தனர். படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகில் சென்று சிலு சிலு இயற்கை காட்சிகளை ரசித்தனர்.

    ஏரிக்கு அருகாமையில் அண்ணா பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள அழகு செடிகள், வண்ண வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். இங்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் நின்று செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் உற்சாகமாக விளையாடினர். கிளியூர் நீர்வீழ்ச்சியில் உற்சாகமாக குளியல் போட்டனர்.

    இந்திய தாவரவியல் கழகத்தால் பராமரிக்கப்படுகின்ற தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் உள்ளது. இவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் இயற்கையாகவே காட்சித்தளங்களாக அமைந்துள்ள லேடிஸ் சீட், ஜென்ஸ், சில்ரன்ஸ் சீட் பாறைகளில் நின்று சேலம் நகரத்தின் அழகை கண்டு ரசித்தனர்.

    ஏற்காட்டின் கிழக்கு முனையில்அமைந்துள்ள பகோடா காட்சி முனை பிரமிட் பாய்ன்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ராமர் கோவில் ஒன்றுள்ளது. இங்கிருந்து அயோத்தியாபட்டணம் பகுதிகளை கண்டுகளித்தனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் மிளகாய் பஜ்ஜி கடைகள் களை கட்டியது. பனி மூட்டம், மழை பொழிவு காரணமாக குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் டீ, பஜ்ஜி வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இன்று காலை முதல் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் ஏற்காடு அண்ணா பூங்கா சாலை, படகு இல்ல சாலை, மற்றும் ஒண்டிக்கடை பகுதிகள் ஸ்தம்பித்தது.

    • வீட்டிற்கு சென்று பார்த்த போது 3 பைகளில் ஒரு பை மாயமாகி இருந்தது.
    • மனோகரன் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கோவை கோட்ட போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (55), முன்னாள் கவுன்சிலரான இவர் தற்போது 39-வது வார்டு அ.தி.மு.க. செயலாளராக உள்ளார்.

    நேற்று முன்தினம் மனைவி பரமேஸ்வரி 52 மற்றும் குடும்பத்துடன் கோவையில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்றார். மாலையில் கோவையில் இருந்து அரசு பஸ்சில் சேலத்திற்கு வந்தனர். அப்போது 3 பைகளை எடுத்து வந்தனர்.

    பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்த போது 3 பைகளில் ஒரு பை மாயமாகி இருந்தது. அந்த பையில் துணியுடன் 20 பவுன் நகைகளும் இருந்தது. இதையடுத்து மனோகரன் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கோவை கோட்ட போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.

    அவர்கள் பஸ் டிரைவர் பூபதியை தொடர்பு கொண்டு பை குறித்து விசாரித்தனர். அவர் பஸ்சை சோதனை செய்து விட்டு பை எதுவும் இல்லை என்று கூறினார். இதனால் அந்த பை எங்கு வைத்து மாயமானது என்பது மர்மமாக உள்ளது. இதனால் பள்ளப்பட்டி போலீசார் புகாரை வாங்க மறுத்து விட்டனர். தொடர்ந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 10-ந் தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
    • தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வாரமாக பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது.

    இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை சரிவர பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் குறைந்தது.

    இதையடுத்து கடந்த 10-ந் தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வாரமாக பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 10-ந் தேதி அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில் நீர்வரத்தின் காரணமாக இன்று காலை 48.86 அடியாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. கடந்த 2 வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் 18 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 138 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    • இறைச்சி கடைகள், மீன் கடைகளில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வியாபாரமும் விறு விறுப்பாக நடைபெறும்.
    • ஆயுதப் பூஜையையொட்டி வீடு மற்றும் கடைகள் சுத்தம் செய்யும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்தனர்.

    சேலம்:

    சேலம் 4 ரோடு, குகை, தாதகாப்பட்டி, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் இறைச்சி கடைகள், மீன் கடைகளில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வியாபாரமும் விறு விறுப்பாக நடைபெறும். இந்த நிலையில் ஆயுதப் பூஜை நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்படும். ஆயுதப் பூஜையையொட்டி வீடு மற்றும் கடைகள் சுத்தம் செய்யும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்தனர்.

    சேலம் சூரமங்கலம் மீன் மார்க்கெட்டில் ஏராளமான மீன் கடைகள் உள்ளன. இன்று காலை முதலே இங்கு மக்கள் கூட்டம் இன்றி மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. ஒரு சிலர் மட்டுமே மீன்களை வாங்கி சென்றனர். இதேபோல் கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மீன்கள், இறைச்சிகள் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் குறைந்து உள்ளது.

    • ஆயுத பூஜை நாளில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பட்டறைகள் என அனைத்து இடங்களிலும் பூஜை செய்வது வழக்கம்.
    • அதன்படி சேலம் கடைவீதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

    சேலம்:

    ஆயுத பூஜை பண்டிகை நாளை (திங்கட்கிழமை) மற்றும் விஜயதசமி நாளை மறுநாள் (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை நாளில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பட்டறைகள் என அனைத்து இடங்களிலும் பூஜை செய்வது வழக்கம். மேலும், வீடுகளிலும் பூஜை செய்து கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கு திருஷ்டி சுற்றி சாம்பல் பூசணி உடைப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    பூஜை பொருட்கள் விற்பனை

    அதன்படி சேலம் கடைவீதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் பூஜைக்கு தேவையான பழங்கள், தேங்காய், இலை, விபூதி, குங்குமம், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம், விளக்கு எண்ணெய், அலங்கார தோரணங்கள், பொரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை, கடலை உருண்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி சென்றனர்.

    இதனால் பூஜை பொருட்களின் வியாபாரம் மும்முரமாக நடந்தது. சின்னக்கடை வீதியில் ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் அதிகளவில வாங்கி சென்றனர்.

    சேலம் மாநகரில் செவ்வாய்ப்பேட்டை, பால் மார்க்கெட், கடைவீதி, அம்மாபேட்டை, பட்டைக்கோவில், வ.உ.சி மார்க்கெட், ஆனந்தா இறக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாம்பல் பூசணி விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தன. ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்பல் பூசணியை பொதுமக்கள் பலர் வாங்கி சென்றனர்.

    இதேபோல், பால் மார்க்கெட் பகுதியிலும் பொரி விற்பனை மும்முரமாக நடந்தது. ஒரு பக்கா பொரி ரூ.15-க்கும், 7½ கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.550-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், பொட்டுக்கடலை ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120-க்கும், நிலக்கடலை ரூ.150-க்கும், அவுல் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும், குரங்குச்சாவடி, அஸ்தம்பட்டி, செரிரோடு உள்பட பல்வேறு இடங்களிலும், சாலையோரத்திலும் தற்காலிக பொரி, பூசணி உள்ளிட்ட கடைகளை சிலர் வைத்து வியாபாரம் செய்தனர். மேலும், சேலத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளிலும் பூக்கள், வாழைக்கன்று, மாவிலை உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை ஜொராக நடந்தது. இதுகுறித்து செவ்வாய்பேட்டையை சேர்ந்த பழ வியாபாரி ஆறுமுகம் கூறுகையில், ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.150க்கும், மாதுளை கிலோ ரூ.150 முதல் ரூ.250 வரையும், திராட்சை கிலோ ரூ.100-க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.80-க்கும், கமலா ஆரஞ்சு கிலோ ரூ.80-க்கும், கொய்யாப்பழம் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆயுத பூஜையை முன்னிட்டு வழக்கத்தைவிட பழங்கள் விற்பனை கூடுதலாக நடந்தது.

    ரூ.700 ஆக உயர்வு

    இந்த நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் மற்றும் ஈரடுக்கு பஸ் நிலையம் யொட்டி உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு கிலோ குண்டு மல்லிகை பூ கிலோ ரூ.700 ஆக உயர்ந்துள்ளது.

    சன்ன மல்லிகை ரூ.800-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், ஜாதி மல்லிகை கிலோ ரூ.280-க்கும், சாமந்தி கிலோ ரூ.120 முதல் 200-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், பட்டன் ரோஸ் ரூ.100-க்கும், அரளி பூக்கள் ரூ. 300 முதல் ரூ. 500 வரை விற்பனை ஆகிறது.

    இது குறித்து சேலத்தை சேர்ந்த பூ வியாபாரி செந்தில்குமார் கூறியதாவது:-

    இந்த மார்க்கெட்டுக்கு பூசாரிப்பட்டி, அரியனூர், சீரகாபாடி, ராயக்கோட்டை, மாரண்டஹள்ளி, கடத்தூர், பொம்மிடி ஆகிய பகுதியில் இருந்து விற்பனைக்கு விவசாயிகள் சாமந்தி பூக்கள் கொண்டு வருகின்றனர். பட்டர் ரோஸ் பெங்களூருவில் இருந்து வருகிறது. அரளிப்பூக்கள் பனமரத்துப்பட்டி, திருமனூர் வேப்பிலைப்பட்டி, வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மல்லிகை பூ மல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், குண்டுமல்லி பனமரத்துப்பட்டி பகுதியில் இருந்தும் முல்லை பூக்கள், கன்னங்குறிச்சி, வீராணம் பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பூக்களை விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர். பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்கள் விலை உயரும். அதேபோல் ஆயுத பூஜையை முன்னிட்டு வ.உ.சி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம் ஊராட்சியில் உள்ள பங்களா கார்டு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்.
    • கணவன் -மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம் ஊராட்சியில் உள்ள பங்களா கார்டு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு திருமணமாகி கவுசல்யா என்ற மனைவியும், 10 வயதில் ஸ்ரீ ரமேஷ், 7 வயதில் தீபக்குமார் ஆகிய மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

    மாணிக்கம் கல் உடைக்கும் தொழில் செய்து வருகின்றார். மனைவி கவுசல்யா ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார்.

    குடும்ப தகராறு

    இந்த நிலையில் கணவன் -மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு கவுசல்யா அருகில் உள்ள ஜோசியர் என்பவருடைய தோட்டத்திற்கு சென்றார். அங்குள்ள விவசாய கிணற்றில் கவுசல்யா தனது 2 மகன்களையும் திடீரென \தள்ளி விட்டு தானும் கிணற்றில் குதித்தார். இதில் இளைய மகன் தீபக்குமார் கிணற்றிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து கிணற்றில் குதித்து தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    சிகிச்சைக்காக கவுசல்யாவை ஓமலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ரமேஷ் சிறிய காயங்களுடன் நலமாக உள்ளார்.

    உருக்கமான தகவல்

    இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதி இடையே குடும்ப தகராறு ஏன் ஏற்பட்டது? என விசாரணை நடத்தியதில் போலீசாருக்கு உருக்கமான தகவல் கிடைத்துள்ளது.

    கவுசல்யாவின் கணவர் மாணிக்கத்துக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் கல் உடைக்கும் தொழில் செய்து வருவதில் கிடைக்கும் சம்பளத்தை டாஸ்மாக் கடையில் கொடுத்து மது குடித்து வந்தார். மேலும் ஒழுங்காக வேலைக்கு செல்வது கிடையாது. இதனால் கவுசல்யா தனது கணவரிடம் நமக்கு 2 குழந்தைகள் உள்ளன. அவர்களை நன்றாக படிக்க வைக்க பணம் தேவைப்படும். நமது குடும்பம் வறுமையில் உள்ளது. எனவே மது பழக்கத்தை கைவிடுங்கள். தினமும் வேலைக்கு செல்லுங்கள் என அறிவுரை கூறியுள்ளார். ஆனால் மாணிக்கம் கேட்கவில்லை. தொடர்ந்து மது குடித்து வந்தார். பலமுறை சொல்லியும் கணவர் கேட்கவில்லையே என கவுசல்யா மனவேதனையில் இருந்தார்.

    சண்டை

    வழக்கம் போல் நேற்று காலையிலேயே மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் மாணிக்கம் வீட்டில் இருந்தார். இதனால் கவுசல்யா அவரிடம் வேலைக்கு போகாமல் இப்படி குடித்து விட்டு வீட்டில் இருக்கிறீர்களே, வேலைக்கு செல்லுங்கள் என தெரிவித்துள்ளார். அப்போது மாணிக்கம் தனது மனைவிைய சத்தம் ேபாட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த கவுசல்யா தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி விட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

    சோகம்

    இந்த சம்பவம் ஓமலூர் அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு, சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள மைல் கல்லுக்கு பூ மாலை அணிவித்து தீபமேற்றி வினோத வழிபாடு நடத்தினர்.
    • பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியதோடு சமூக ஊடகங்களில் பரவி பேசு பொருளாகவும் மாறியது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு, சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள மைல் கல்லுக்கு பூ மாலை அணிவித்து வாழைமரம், மாவிலைத் தோரணங்கள் கட்டி, மஞ்சள், சந்தனம், குங்குமமும், தேங்காய், வாழைப்பழம் வெற்றிலைத் தாம்பூலமும் வைத்து, ஊதுபத்தி, கற்பூர தீபமேற்றி வினோத வழிபாடு நடத்தினர். இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை என்பதால் சாலைப் பணியாளர்கள் நேற்றே மைல் கல்லுக்கு வாழைமரம், தோரணம் கட்டி, மாலை அணிவித்து நடத்திய ஆயுத பூஜை வழிபாடு, பயணிகள் மற்றும் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியதோடு சமூக ஊடகங்களில் பரவி பேசு பொருளாகவும் மாறியது.

    • வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் ஆயுஷ் நல வாழ்வு சித்த மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • ஆயுஷ் நல வாழ்வு மைய சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தொற்றா நோய்கள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு, டெங்கு காய்ச்சல் தடுப்பில் நிலவேம்பு கஷாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சிங்கிபுரத்தில் வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் ஆயுஷ் நல வாழ்வு சித்த மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.

    பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில் வாழப்பாடி அரசு மருத்துவமனை ஆயுஷ் நல வாழ்வு மைய சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தொற்றா நோய்கள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு, டெங்கு காய்ச்சல் தடுப்பில் நிலவேம்பு கஷாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். பேளூர் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் இலக்குமணன், கர்ப்பிணிகளுக்கான யோகா பயிற்சி அளித்தார்.

    இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், வலி நிவாரணிகள் வழங்கப்பட்டன. வாழப்பாடி அரிமா சங்கத்தின் சார்பில் உடல் மற்றும் மன நல விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டன. சிங்கிபுரம் நல வாழ்வு மைய செவிலியர்கள் கிரீஷ்மா, கனகராணி, அனுராதா, அபிநயா ஆகியோர் பரிசோதனை செய்தனர். நிறைவாக சுகாதார ஆய்வாளர் ஆனந்தராஜன் நன்றி கூறினார்.

    • கூட்டணிக்கு முக்கியத்துவம் வழங்கும் முதல்வர் தண்ணீர் பெற முக்கியத்துவம் வழங்கவில்லை.
    • இரண்டரை ஆண்டுகளில் உதயநிதியை மந்திரி ஆக்கினது மட்டுமே தி.மு.க. அரசின் சாதனை.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்று எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    வேண்டும் என்றே திட்டமிட்டு அ.தி.மு.க. சிறுபான்மை மக்களுக்கு எதிராக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை கடந்த காலத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் எல்லாம் ஒரு செயற்கை தோற்றத்தை உருவாக்கினார்கள்.

    எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் சரி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணிகாக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்படுகின்றபோது பல்வேறு மாநிலங்களில் வன்முறை நிகழ்ந்தது. அப்போது தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடந்தபோது தமிழகத்தில் ஒரு சிறு பிரச்சனை ஏற்படாமல் சிறுபான்மை மக்களை பாதுகாத்த அரசாங்கம் அ.தி.மு.க.

    அ.தி.மு.க. தமிழகத்தில் சுமார் 30 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தது. அந்த 30 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் இருக்கின்ற சிறுபான்மை மக்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி ஒரு சிறிய பிரச்சனை கூட இல்லாமல் சிறப்பான ஆட்சி தந்த கட்சி அ.தி.மு.க. அரசாங்கம்.

    கூட்டணி என்பது வேறு. கூட்டணி தேர்தல் நேரத்தில் அவ்வப்போது அமைக்கப்படுகிறது. கொள்கை என்பது நிலையானது. அ.தி.மு.க. கொள்கை நிலையான கொள்கை. அ.தி.மு.க.வுக்கு மதம் கிடையாது, சாதி கிடையாது. அவரவர்கள் மதம் அவர்களுக்கு புனிதமானது. அதில் யாரும் தலையிட முடியாது. இது ஒரு ஜனநாயக நாடு. ஆகவே இந்த ஜனநாயக நாட்டிலேயே யாரும் யாருக்கும் அடிமை கிடையாது. சுதந்திரமாக அந்தந்த மதத்தை பின்பற்றி வாழக்கூடியவர்கள்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது என்று சொன்ன பிறகு தான் இஸ்லாமியர்களின் ஞாபகமே அவருக்கு வருகிறது. இஸ்லாமியர்களின் உணர்வுகளை நான் சட்டமன்றத்திலேயே எடுத்து வைக்கின்றபோது இப்போது தான் எதிர்க்கட்சி தலைவருக்கு பாசம் வந்து விட்டது என்று சொன்னார். இல்லை நான் எப்போதுமே சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்டவன். அனைத்து மதத்தையும் நேசிக்க கூடியவன்.

    எந்த சாதிக்கும், எந்த மதத்துக்கும் அ.தி.மு.க.வுக்கு விரோதம் கிடையாது. ஒரே பார்வையில் தான் நாங்கள் பார்ப்போம். இதனால் மு.க.ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது.

    பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. விலகியதுடன் சிறுபான்மை மக்கள் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து விடுவார்கள் என்ற அச்சம் மு.க.ஸ்டாலினுக்கு வந்து விட்டது. உண்மையிலேயே அந்த மக்களுக்கு நன்மைகள் செய்திருந்தால் அந்த மக்கள் உங்களை நேசித்து இருப்பார்கள். ஆனால் நீங்கள் எந்த நன்மையும் செய்யவில்லை. ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் திட்டமிட்டு ஒரு பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். இன்னமும் அ.தி.மு.க. பா.ஜ.க.வின் பி டீமாக இருந்து வருகிறது என சொல்கிறார்கள். நாங்கள் பி டீம் இல்லை. எடீம் என்னும் ஒர்ஜினல் டீம் அ.தி.முக. என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    எங்களுக்கு துணிச்சல் இருக்கிறது. அந்த துணிச்சல் உங்களிடம் இல்லை. இந்த 2 அரை ஆண்டு ஆட்சி காலத்தில் தி.மு.க. அரசால் எந்த நன்மை கிடைத்து இருக்கிறது. இங்கிருப்பவர்கள் சொல்லுங்கள்.

    மேட்டூர் அணையை நம்பி உள்ள 24 மாவட்ட மக்களை பாதுகாக்காமல், தன் பதவியை மட்டுமே தி.மு.க. அரசு பாதுகாக்கிறது. அரிசி விலை கிலோ 10 ரூபாய் உயர்ந்து விட்டது. கூட்டணிக்கு முக்கியத்துவம் வழங்கும் முதல்வர் தண்ணீர் பெற முக்கியத்துவம் வழங்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் போதை பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் காட்சி அளிக்கிறது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டது. ஆனால் பா.ஜ.க.வின் பி டீமாக அதிமுக உள்ளதாக ஸ்டாலின் பொய் செய்தியை பரப்பி வருகிறார். அ.தி.மு.க. எப்போதும் ஒரிஜினல் டீம். தி.மு.க. ஆட்சிக்கு வந்து புதிதாக ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக அனைவரிடமும் கையெழுத்து வாங்கினால் நீட் தேர்வு ரத்தாகி விடுமா? பாராளுமன்றத் தேர்தலில் மக்களை சந்திக்கும் போது நீட் தேர்வு ரத்து குறித்து மக்கள் கேள்வி எழுப்புவார்கள் என்பதற்காகவே கையெழுத்து இயக்கத்தை துவங்கி மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள். இரண்டரை ஆண்டுகளில் உதயநிதியை மந்திரி ஆக்கினது மட்டுமே தி.மு.க. அரசின் சாதனை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஓமலூர் அடுத்த காருவள்ளி சின்ன திருப்பதியில் வரலாற்று சிறப்புமிக்க பிரசன்ன வெங்கட்ரமன கோவில் உள்ளது.
    • தொடர்ந்து நேற்று தேரோட்டம் விழாவினை முன்னிட்டு காலை 10 மணி அளவில் ஸ்ரீ சுதர்சன ஹோமம், பூர்ணாஹூதி, சாமி ரதம் ஏறுதல் நடைபெற்றது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காருவள்ளி சின்ன திருப்பதியில் வரலாற்று சிறப்புமிக்க பிரசன்ன வெங்கட்ரமன கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி திருவிழா தொடங்கியது.

    நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சாமி கல்யாணம் மற்றும் கருட சேவை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று தேரோட்டம் விழாவினை முன்னிட்டு காலை 10 மணி அளவில் ஸ்ரீ சுதர்சன ஹோமம், பூர்ணாஹூதி, சாமி ரதம் ஏறுதல் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணி அளவில் தேரோட்ட விழா நடைபெற்றது.

    எம்.பி., எம்.எல்.ஏ. பங்கேற்பு

    விழாவில் சேலம் எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன், ஓமலூர் எம்.எல்.ஏ. மணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், தமிழரசு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சித்தேஸ்வரன், சுப்பிரமணியம், ராஜேந்திரன், அசோகன், கோவிந்தராஜ், மணிமுத்து, காடையாம்பட்டி ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள், தி.மு.க. ஒன்றிய செயலாளர், அறிவழகன், ரவிச்சந்திரன், நகர தி.மு.க. செயலாளர் பிரபாகரன், தி.மு.க. மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அருள் உள்ளிட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் திருத்தேர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு சாமி திருவீதி உலா புறப்பாடு மற்றும் சத்தாபரணம், நையாண்டி மேளம் நடைபெற்றது. தேரோட்டம் விழாவிற்கான ஏற்பாட்டினை கோவில் அறங்காவல் குழு தலைவர் நைனா குமார் மற்றும் அறங்காவலர்கள், இந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும் கோவில் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர். 

    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 100.32 அடியாக இருந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதையடுத்து கடந்த 10-ந்தேதி காலையுடன் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    அதே நேரம் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.86 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 288 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 100.32 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2369 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1733 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கபினி அணையின் நீர்மட்டம் 74.34 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு250 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 300கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் நேற்று வினாடிக்கு 2482 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 2033 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    ×