search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தாய் தற்கொலை முயற்சி
    X

    2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தாய் தற்கொலை முயற்சி

    • ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம் ஊராட்சியில் உள்ள பங்களா கார்டு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்.
    • கணவன் -மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம் ஊராட்சியில் உள்ள பங்களா கார்டு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு திருமணமாகி கவுசல்யா என்ற மனைவியும், 10 வயதில் ஸ்ரீ ரமேஷ், 7 வயதில் தீபக்குமார் ஆகிய மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

    மாணிக்கம் கல் உடைக்கும் தொழில் செய்து வருகின்றார். மனைவி கவுசல்யா ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார்.

    குடும்ப தகராறு

    இந்த நிலையில் கணவன் -மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு கவுசல்யா அருகில் உள்ள ஜோசியர் என்பவருடைய தோட்டத்திற்கு சென்றார். அங்குள்ள விவசாய கிணற்றில் கவுசல்யா தனது 2 மகன்களையும் திடீரென -தள்ளி விட்டு தானும் கிணற்றில் குதித்தார். இதில் இளைய மகன் தீபக்குமார் கிணற்றிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து கிணற்றில் குதித்து தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    சிகிச்சைக்காக கவுசல்யாவை ஓமலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ரமேஷ் சிறிய காயங்களுடன் நலமாக உள்ளார்.

    உருக்கமான தகவல்

    இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதி இடையே குடும்ப தகராறு ஏன் ஏற்பட்டது? என விசாரணை நடத்தியதில் போலீசாருக்கு உருக்கமான தகவல் கிடைத்துள்ளது.

    கவுசல்யாவின் கணவர் மாணிக்கத்துக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் கல் உடைக்கும் தொழில் செய்து வருவதில் கிடைக்கும் சம்பளத்தை டாஸ்மாக் கடையில் கொடுத்து மது குடித்து வந்தார். மேலும் ஒழுங்காக வேலைக்கு செல்வது கிடையாது. இதனால் கவுசல்யா தனது கணவரிடம் நமக்கு 2 குழந்தைகள் உள்ளன. அவர்களை நன்றாக படிக்க வைக்க பணம் தேவைப்படும். நமது குடும்பம் வறுமையில் உள்ளது. எனவே மது பழக்கத்தை கைவிடுங்கள். தினமும் வேலைக்கு செல்லுங்கள் என அறிவுரை கூறியுள்ளார். ஆனால் மாணிக்கம் கேட்கவில்லை. தொடர்ந்து மது குடித்து வந்தார். பலமுறை சொல்லியும் கணவர் கேட்கவில்லையே என கவுசல்யா மனவேதனையில் இருந்தார்.

    சண்டை

    வழக்கம் போல் நேற்று காலையிலேயே மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் மாணிக்கம் வீட்டில் இருந்தார். இதனால் கவுசல்யா அவரிடம் வேலைக்கு போகாமல் இப்படி குடித்து விட்டு வீட்டில் இருக்கிறீர்களே, வேலைக்கு செல்லுங்கள் என தெரிவித்துள்ளார். அப்போது மாணிக்கம் தனது மனைவிைய சத்தம் ேபாட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த கவுசல்யா தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி விட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

    சோகம்

    இந்த சம்பவம் ஓமலூர் அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×