என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திக் (வயது 23). சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த புதுக்கோட்டை நத்தம் பண்ணையை சேர்ந்த சன்னாசி பாண்டியன் (31) என்பவர் கார்த்திக்கிடம் பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுக்கவே ஆத்திரமடைந்த சன்னாசிபாண்டியன், தான் வைத்திருந்த அரிவாள் மற்றும் துப்பாக்கியால் மிரட்டி கார்த்திக் வைத்திருந்த ரூ.4ஆயிரம் பணத்தை பறித்து சென்று விட்டார்.
இது குறித்து கார்த்திக் திருக்கோகர்ணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சன்னாசிபாண்டியனை கைது செய்ததுடன் அவர் வைத்திருந்த அரிவாள் மற்றும் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். சன்னாசிபாண்டியன் மீது புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் நிலையங்களில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானபிரகாசம், முன்னாள் ஊராட்சி தலைவர். தற்போது அவரது மனைவி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
நேற்றிரவு ஞானபிரகாசம் அப்பகுதியில் சென்ற போது மர்மநபர்கள் சிலர் அவரை வழிமறித்து சரமாரி தாக்கியதோடு, அரிவாளால் தலையில் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஞானபிரகாசம் சம்பட்டிவிடுதி போலீசில் புகார் செய்தார். புகாரில் வடவாளம் கிராம நிர்வாக அலுவலர் அம்பிகா தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
வடவாளம் கிராம நிர்வாக அதிகாரி அம்பிகா பணிகளை சரிவர செய்யவில்லை என்று ஞானபிரகாசம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்துள்ளார். இது தொடர்பான பிரச்சனையில் ஞானபிரகாசம் தாக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனிடையே ஞானபிரகாசத்தின் ஆதரவாளர்கள் இச்சடி புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் இன்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.
தகவல் அறிந்ததும் ஆலங்குடி டி.எஸ்.பி. முத்துராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், கிராம நிர்வாக அதிகாரி அம்பிகா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை தாசில்தார் முருகு பாண்டியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வி.ஏ.ஓ. அம்பிகா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் மறவன்பட்டியைச் சேர்ந்த இந்திராணி-முத்துவீரன் தம்பதிக்கு கடந்த டிசம்பர் 19-ந்தேதி சுகப்பிரசவம் மூலம் குறைமாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை 875 கிராம் இருந்ததால் குழந்தை பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டது.
குழந்தைக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் வெண்டிலேட்டர் கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு நுரையீரல் வளர்ச்சிக்காக சர்பேக்டண்ட் மருந்தும் நுரையீரலுக்கு செலுத்தப்பட்டது. ஒரு வார கால தீவிர சிகிச்சைக்குப் பிறகு குழந்தையின் சுவாசிக்கும் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு குழந்தைக்கு குழாய் மூலம் சிறிதளவு பால் கொடுக்கப்பட்டது. குழந்தைக்கு கிருமிதொற்றுக்கான சிகிச்சையும், மஞ்சள் காமாலைக்கான போட்டோதெரபி சிகிச்சையும் வழங்கப்பட்டது. குழந்தைக்கு மூச்சுத்திணறல் முழுவதும் சரியான பிறகு தாய்ப்பால் பாலாடை மூலம் வழங்கப்பட்டு பிறகு நேரடியாக தாய்ப்பால் வழங்கப்பட்டது.
குழந்தையின் எடை அதிகரிக்க கங்காரு தாய் கவனிப்பு முறை சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. 48 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் எடை 1.1 கிலோவாக அதிகரித்தது. குறைமாத குழந்தைகளுக்கான ஆர்.ஓ.பி. கண் பரிசோதனை ஓ.ஏ.இ. எனப்படும் செவித்திறன் பரிசோதனை மற்றும் தலைக்கான ஸ்கேன் பரிசோதனை ஆகியவையும் செய்யப்பட்டு குழந்தை நல்ல முறையில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குறைவான எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் பூவதி பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
அறந்தாங்கி:
தமிழக அரசின் சார்பில் மதிய உணவாக பள்ளி மாணவர்களுக்கு உணவுடன் அவித்த முட்டை வழங்கப்படுகிறது. அதேபோல அங்கன்வாடி குழந்தைகளுக்கும் முட்டை வழங்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பால் பள்ளிகள் இயங்காத நிலையில், பள்ளிகளில் மதிய உணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கு மாதத்திற்கு 10 முட்டைகள், அரிசி, பருப்பு வழங்க அரசு உத்தரவிட்டு அதன்படி வழங்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முட்டை வழங்குவதற்காக நாமக்கல்லில் இருந்து ஒப்பந்ததாரர் மாதத்திற்கு ஒரு முறை முட்டையை அறந்தாங்கியில் கொண்டு வந்து ஒப்படைக்கிறார்.
பின்னர் அந்த முட்டை மதிய உணவு திட்ட சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அறந்தாங்கியை அடுத்த ஆயிங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டையை அவித்து முட்டையின் ஓட்டை உடைத்தபோது அந்த முட்டையின் உள்ளே இறந்த நிலையில் கோழிக் குஞ்சு இருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், இது குறித்து சத்துணவு மைய பணியாளர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்தனர். மேலும் பல முட்டைகளை அவித்து விட்டு ஓட்டை உடைத்தபோது கடுமையாக துர்நாற்றம் வீசியது.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், கொரோனா தொற்றால் முட்டைகள் தேக்கமடைந்ததால், பள்ளிகளுக்கு தேங்கிய காலாவதியான முட்டையை ஒப்பந்தக்காரர்கள் வழங்கியுள்ளனர். முட்டையில் குஞ்சு உள்ளது என்றால், நாமக்கல் பண்ணைகளில் குஞ்சு பொறிப்பதற்காக வைக்கப்பட்டு, குஞ்சு வெளிவராத வீணாகி போன முட்டைகளை அறந்தாங்கி பகுதி பள்ளிகளுக்கு அனுப்பி உள்ளனரா? எனத் தெரிய வில்லை. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, அறந்தாங்கி பகுதியில் வினி யோகம் செய்யப்பட்ட முட்டைகள் அனைத்தையும் சோதனையிட்டு அவை நல்ல முட்டைதானா? என்பதை கண்டறியவேண்டும். மேலும் காலாவதியான முட்டையை வினியோகம் செய்த ஒப்பந்தக்காரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதோடு, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை:
தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் மற்றும் மக்கள் கிராமசபை கூட்டங்களில் தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமொழி எம்.பி., பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று 2-வது நாளாக புதுக்கோட்டையில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.
முதலில் புதுக்கோட்டை பெரியண்ணன் மாளிகை தி.மு.க. அலுவலகத்தில் உள்ள மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள நூலகத்தை பார்வையிட்டார்.
இதையடுத்து புதுக்கோட்டை உழவர்சந்தைக்கு சென்ற கனிமொழி எம்.பி., அங்கு வியாபாரிகளை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுக்கோட்டை உழவர்சந்தை மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இல்லை. மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துக்கூறி தீர்வு காணப்படும்.
தற்போது தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சாரத்தின் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்களின் மனதில் உள்ள பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு காண வழிவகை ஏற்பட்டுள்ளது.
மக்கள் கடந்த 10 ஆண்டு காலமாக கடுமையான நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர். அ.தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க.விற்கு அளிக்கும்.இது பிரச்சாரத்தின் போது மக்களின் எழுச்சி வாயிலாக எங்களுக்கு உறுதியாக தெரிகிறது என்றார்.
பின்னர் முன்னாள் எம்.பி., வீரையா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து இச்சடி, சூரக்காடு, கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை , புதுக்கோட்டை, கீழக்குறிச்சி, இலுப்பூர், விராலிமலையில் பிரச்சாரம் செய்யும் அவர் இரவு கீரனூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.






