என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    விராலிமலை அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை:

    விராலிமலை தாலுகா ராஜாளிபட்டி பகுதியில் விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கருங்காலபட்டியை சேர்ந்த ராமசாமி மகன் செல்வம் என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்வதை கண்ட போலீசார், அவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    அறந்தாங்கி அருகே இடி விழுந்த அதிர்ச்சியில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி தாலுகா ரெத்தினக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கநாதன் மனைவி ஜோதி (வயது 60). இவரும் அதே ஊரைச் சேர்ந்த லலிதா (80) என்ற மூதாட்டியும் அருகே உள்ள மேய்ச்சல் நிலத்தில் ஆடு மேய்க்க சென்றனர்.

    அப்போது அந்த பகுதியில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக இவர்கள் நின்று கொண்டிருந்த பகுதியில் பலத்த சத்தத்துடன் இடி மின்னல் தாக்கியுள்ளது. இதில் இடி சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதைப்பார்த்த லலிதா மயக்கமடைந்தார். அதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த துறை அதிகாரிகள் ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயக்க நிலையில் இருந்த லலிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே பிரேத பரிசோதனையை விரைவாக செய்து உடலை ஒப்படைக்கக்கோரி இறந்த ஜோதியின் உறவினர்கள் சிறிது நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆடு மேய்க்க சென்று பெண் மணி ஒருவர் இடி விழுந்த அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆலங்குடி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள அறையப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35). இவருடைய மனைவி இலக்கியா (27). இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில் கண்ணன் சிங்கப்பூருக்கு சென்று வேலை பார்த்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் தனது சொந்த ஊருக்கு வந்தார்.

    குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த கண்ணன் அதுகுறித்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கூறிவந்தார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கண்ணன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    புதுக்கோட்டை அருகே மரம் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரமங்கலம்:

    புதுக்கோட்டை மாவட்டம் பாலகிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 61). மரம் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று சக தொழிலாளர்களுடன் சேர்ந்து கீரமங்கலம் கொடிக்கரம்பை பகுதியில் ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருந்த போது வெட்டப்பட்ட மரம் மனோகரன் மீது சாய்ந்துள்ளது. மரத்திற்குள் சிக்கியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் மனோகரன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    திருமயம் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமயம்:

    திருமயம் அருகே உள்ள குளிபிறை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). கொத்தனார். இவர், பெருமாநாடு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மலையகோவில் விலக்கு பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கராத்தே நிகழ்ச்சியின்போது கையில் துணியை கட்டிக்கொண்டு தீயில் சாகசம் செய்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி கராத்தே நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பாலாஜி என்ற 19 வயது வாலிபர் சாகச வகை பிரிவில் கையில் துணியை கட்டிக்கொண்டு அதில் தீயை பற்றவைத்து சாகசம் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீ பரவியது.

    இதனால் படுகாயம் அடைந்த பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கோவிலில் மது போதையில் 3 அடி அம்மன் சிலையை உடைத்த டெய்லரை போலீசார் கைது செய்தனர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அமைந்துள்ளது குளவாய்ப்பட்டி கிராமம். இங்கு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் சாலையோரம் உள்ளது. பூ கட்டும் தொழில் செய்து வருபவர்கள் இந்த கோவிலை நிர்வகித்து வருகிறார்கள்.

    காவல் தெய்வமாக கருதப்படும் இந்த கோவிலுக்கு குளவாய்ப்பட்டி மற்றும் அக்கம்பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். தற்போது சுந்தரலிங்கம் என்பவர் கோவிலில் பூஜைகள் செய்து வருகிறார். நேற்று மாலை அவர் வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டு சென்றார்.

    குளவாய்ப்பட்டி அருகே உள்ள பேராம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 41). டெய்லராக வேலை பார்த்து வரும் அவர் இரவில் குடிபோதையில் அங்கு வந்துள்ளார். திடீரென்று கோவிலுக்குள் சென்ற கண்ணன் சாமி சிலையை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதுள்ளார்.

    பின்னர் அங்காளம்மன் சாமி சிலையை உடைத்துள்ளார். இதில் அந்த சிலை இரண்டாக பிளந்தது. இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விராலிமலை போலீசார் கண்ணனை கைது செய்தனர்.

    இன்று காலை போதை தெளிந்த அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் தனக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளதாகவும், டெய்லர் தொழில் நஷ்டம் அடைந்த விரக்தியில் மது போதையில் சாமி சிலையை உடைத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

    அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அம்மன் சாமி சிலை உடைக்கப்பட்டதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    இலுப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ரேஷ்மா திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர்கள் 27 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    பல்வேறு காரணங்கள், வேண்டுகோள்கள் மற்றும் நிர்வாக ரீதியாக இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக கோட்டைப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்திற்கும், வடகாடு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் காரையூர் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதேபோல் மழையூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்திற்கும், கோட்டைப்பட்டினம் நெடுஞ்சாலை ரோந்து வாகன சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் ரெகுநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கும், இலுப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ரேஷ்மா திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 27 எஸ்.ஐ.க்கள் இடமாற்ற பட்டியலில் உள்ளனர்.

    இதற்கான உத்தரவினை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் அறிவித்துள்ளார்.

    கிராமப்புற வளர்ச்சி குறித்து திட்ட அறிக்கை தயாரித்த மாணவி கவுரி, கிராம கலெக்டர் பதவியை உருவாக்கி வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கலியரான் விடுதி கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மகள் கவுரி (வயது 16). பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 8-ம் வகுப்பு படிக்கும்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசு துறையில் பல்வேறு தகவல்களை கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் முறையான விவரங்கள் கிடைக்கவில்லை. பல அரசு துறைகளில் எந்த புள்ளி விவரங்களும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதைதொடர்ந்து அவரது பூர்வீக ஊரான தஞ்சாவூர் மாவட்டம், சின்ன அம்மங்குடி கிராமம் குறித்து தகவல்களை திரட்டினார். அதற்கான புள்ளிவிவர பதிவேட்டையும் உருவாக்கினார். தொடர்ந்து கிராமப்புற வளர்ச்சி குறித்து திட்ட அறிக்கை தயாரித்த மாணவி கவுரி, கிராம கலெக்டர் பதவியை உருவாக்கி வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். இவர் தயாரித்த ஆய்வறிக்கை குடியரசு தலைவர், பிரதமர், தமிழக கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் எந்த பதிலும் இல்லை.

    ஐகோர்ட் மதுரை கிளை

    இதைதொடர்ந்து கவுரியின் தந்தை லெட்சுமணன் மதுரை ஐகோர்ட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கடந்த 2 மாதத்திற்கு முன்பு மாணவி கவுரியிடம் காணொலி வாயிலாக விசாரணை நடத்தி கிராம மேம்பாட்டு அறிக்கை குறித்து பாராட்டு தெரிவித்தனர். வழக்கு இறுதி விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மாணவி கவுரியின் திட்ட அறிக்கையை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

    இதுகுறித்து திட்ட அறிக்கை தயாரித்த கறம்பக்குடி மாணவி கவுரி தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

    எனது திட்ட அறிக்கையை ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நல திட்டங்களை செயல்படுத்த புள்ளிவிவர பதிவேடு கட்டாயம். தமிழக நிதியமைச்சர் புள்ளி விவரங்கள் இல்லாதது குறித்து வருத்தம் தெரிவித்து உள்ளார். இதனால் குடும்ப தலைவிகளுக்கும் 1,000 வழங்கும் திட்டம் தாமதம் ஆகி உள்ளது. கிராம புற புள்ளிவிவர பதிவேடு தேச வளர்ச்சிக்கு நிச்சயம் கைகொடுக்கும்.

    பல அரசு துறை அதிகாரிகள் உதாசீனபடுத்திய நிலையில் ஐகோர்ட்டு தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. இந்த தீர்ப்பை ஏற்று எனது ஆய்வு திட்ட அறிக்கையை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஐகோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து மாணவி கவுரிக்கு சமூக ஆர்வலர்கள், சக மாணவ- மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


    வடகாடு அருகே 2 ஆடுகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடகாடு:

    வடகாடு அருகே உள்ள மாங்காடு சால்வன் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிய நேரத்தில் அவருக்கு சொந்தமான 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து வடகாடு போலீசில் அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடகாடு அருகே மதுவிற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடகாடு:

    வடகாடு அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டி பகுதிகளில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அப்பகுதிகளில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது டாஸ்மாக் கடை அருகே மோட்டார் சைக்கிளில் வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்த அனவயல் ஜீவா நகரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 30) என்பரை கைது செய்து, அவரிடம் இருந்து 41 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1,247, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    முககவசம் அணியாத வாகன ஓட்டிகள், வியாபாரிகளுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டது.
    அன்னவாசல்:

    அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் சுகாதார துணை இயக்குனரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் சேதுராமன் தலைமையில், செங்குளம் பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக தடுக்க கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிகளில் ஈடுபடுவோர் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் முககவசம் அணியாத வாகன ஓட்டிகள், வியாபாரிகளுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
    ×