என் மலர்
செய்திகள்

ராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்க முடியும்- ராதாகிருஷ்ணன்
கோவில் திருவிழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டு குடியிருப்புகளில் ஒருவருக்கு கவனக்குறைவால் தொற்று ஏற்பட்டால் மற்றவர்களுக்கு பரவி விடுகிறது.
சென்னை:
உலக நாடுகளை கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள் பரவி அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் 2 அலைகள் பரவி மக்களை பரிதவிக்க வைத்துவிட்டது. எனவே 3-வது அலை பரவாமல் தடுக்க வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். அவரது உத்தரவின் பேரில் அனைத்துத்துறை அதிகாரிகளும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசு எடுக்கும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால் தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்க முடியும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
கொரோனா முதல் அலை வந்தபோது 2-வது அலை வரும் என்று யாரும் நினைக்கவில்லை. தற்போது வளர்ந்த நாடுகளில் கொரோனா 3-வது, 4-வது அலை பரவி இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுத்துறை ஆகிய மாவட்டங்களில் மாநிலத்தின் ஒட்டுமொத்த சராசரி அளவை விட தொற்று பாதிப்பு அதிகம் இருக்கிறது.

கோவில் திருவிழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டு குடியிருப்புகளில் ஒருவருக்கு கவனக்குறைவால் தொற்று ஏற்பட்டால் மற்றவர்களுக்கு பரவி விடுகிறது. சில இடங்களில் பணி செய்பவர்கள் நிலையான கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாததால் கொத்து, கொத்தாக தொற்று பரவி ஒட்டுமொத்தமாக அதிர்ச்சியை தருவதாக இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை நுழையாமல் தடுப்பதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி காய்ச்சல் கண்காணிப்பு, தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்துதல், குறைந்தது 1.5 லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்வது மற்றும் முகவகவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக முககவசம் அணிவது நம் அன்றாட வாழ்க்கை நடைமுறையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் கொரோனா 3-வது அலை நுழையாமல் தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... இந்தியாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசி- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
Next Story