என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே கலிபுல்லா நகர் பகுதியில் கடந்த மாதம் 28-ந் தேதி இரவு மதுபோதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் விஜய் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி கல்லுக்குண்டு குளம் பகுதியில் வசித்து வருபவர் துப்பாக்கி முருகன். இவருடைய மூத்தமகன் செல்வகணபதி என்கிற விஜய்(வயது 24). ஆலங்குடி அருகே கலிபுல்லா நகர் பகுதியில் கடந்த மாதம் 28-ந் தேதி இரவு மதுபோதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் விஜய் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விஜயின் தாய் திலகவதி கொடுத்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பலரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஷெரினாபேகம், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் கடந்த 4 நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர். இந்தநிலையில் ஆலங்குடி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் செந்தில்ராஜா மற்றும் சின்னகண்ணு, போஸ் மகன் வெள்ளைச்சாமி, முருகன் மகன் விமல், நாடிமுத்து மகன் வீரமணி, நடராஜன் மகன் சம்சா கண்ணன், முருகன் மகன் கவுதம், நடராசன் மகன் சூரியா, வீரக்குமார் மகன் தபசு முருகன் ஆகிய 9 பேரை ஆலங்குடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அறந்தாங்கி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    கறம்பக்குடி தாலுகாவில் நேற்று ரெகுநாதபுரம், கருப்பட்டிபட்டி, கணக்கன்காடு, எம்.தெற்கு தெரு, பிலாவிடுதி ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி தாலுகாவில் நேற்று ரெகுநாதபுரம், புதுவிடுதி, வாண்டான்விடுதி, செங்கமேடு, அதிரான்விடுதி, பட்டத்திகாடு, கருப்பட்டிபட்டி, கணக்கன்காடு, எம்.தெற்கு தெரு, பிலாவிடுதி ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்த முகாம்களை கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன், வட்டார மருத்துவ அதிகாரி பஜ்ருல் அகமது ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நேற்று ஒரேநாளில் 2,021 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
    அறந்தாங்கி அருகே நாயக்கர்பட்டி வெள்ளாற்று பகுதியில் நேற்று அறந்தாங்கி போலீசார் ரோந்து சென்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே நாயக்கர்பட்டி வெள்ளாற்று பகுதியில் நேற்று அறந்தாங்கி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வெள்ளாற்றில் இருந்து மணல் அள்ளி கடத்தி வந்த 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக சிலட்டூரை சேர்ந்த முருகன், மூக்குடி பகுதியை சேர்ந்த இளையராஜா, கருப்பையன், ரமேஷ், விஸ்வநாதன், அழியாநிலையை சேர்ந்த குமரேசன், கருப்பையா, சிங்காரவேலு ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள எஸ்.குளவாய்ப்பட்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள எஸ்.குளவாய்ப்பட்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் நளினி பாரதி முன்னிலை வகித்தார்.

    கோவேக்சின் 32, கோவிஷீல்டு 92 என மொத்தம், 124 பேர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். இவர்கள் அனைவருமே 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆண்கள், பெண்கள் அனைவருமே சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் தங்கியிருந்த பின்னர் அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.

    அப்போது ஊராட்சி மன்ற தலைவர் நளினி பாரதி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பிஸ்கட், பால் வழங்கினார். முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

    ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வீரம்மாள் முத்தையா, கிராம நிர்வாக அலுவலர் உலகநாதன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிபுல்லா நகர் கல்லுகுண்டுகரையை சேர்ந்தவர் செல்வகணபதி என்ற விஜய் (21). டிரைவரான இவர், சம்பவத்தன்று நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் விஜயை, அரிவாளால் சிலர் வெட்டி கொலை செய்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிந்து மேலசுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த செந்தில் ராஜா, கே.வி.எஸ் தெருவைச் சேர்ந்த தபசுமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் கொலையில் தொடர்புடைய முருகேசன், ராமு, பசுபதி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
    அறந்தாங்கி அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி போலீசார் நேற்று அழியாநிலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில் வெள்ளாற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து லாரி டிரைவர் அழியாநிலையை சேர்ந்த முத்துபாண்டி (வயது 28) என்பவரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பாரதி நகர் சுண்ணாம்பு காரத்தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் விஜய் என்ற செல்வகணபதி (வயது 23). படித்துவிட்டு வீட்டில் இருந்த அவர் வைக்கோல் வியாபாரம், எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்று வந்தார்.

    இவர் தினமும் ஆலங்குடி கல்லுக்குண்டு பகுதிக்கு தனது நண்பர்களுடன் மது அருந்த செல்வது வழக்கம். நேற்றும் அதேபோல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய விஜய் இரவில் நண்பர்களுடன் கல்லுக்குண்டு பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே மது குடித்துக்கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு மது குடிக்க வந்த மற்றொரு தரப்பினருடன் மோதல் உருவானது. இதில் விஜய் தரப்பினரும், எதிர் தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். ஒருவருக்கொருவர்கையில் கிடைத்த பொருட்களால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

    இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து விஜய் தனியாக வீட்டுக்கு மது போதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கலிபுல்லாநகரில் உள்ள ஒரு கோவில் அருகே சென்றபோது திடீரென்று 10 பேர் கும்பல் விஜயை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    அவர்களிடம் தப்பி ஓட முயன்றபோதும் அந்த கும்பல் தொடர்ந்து துரத்தி வெட்டி சாய்த்துவிட்டு தப்பியது. இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் விஜயை மீட்டு ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜய் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், இன்ஸ்பெக்டர் அலாவுதீன், சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மது போதையில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் காரணமாக விஜய் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே கொலையுண்ட விஜய்யின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் இன்று காலை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அறந்தாங்கியில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கியில் உள்ள சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் மாலதி (வயது 31). இவர் நேற்று முன்தினம் இரவு உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், மாலதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு வேகமாக சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 979 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 285 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு தற்போது 310 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 2 பேர் பலியாகி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா பதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 384 பேர் உயர்ந்துள்ளது.
    திருமயம் அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமயம்:

    திருமயம் அருகே உள்ள மலையலிங்க புரத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 32). லாரி டிரைவரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், விராச்சிலை பகுதியில் உள்ள காட்டு பகுதியில் நடராஜன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டையில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் இறந்த சம்பவத்தில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் சமரசமடைந்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராணி (வயது 25). இவருக்கு முத்துக்குமார் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் ராணி குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டார்.

    இந்த நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமடைந்தார். குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் கர்ப்பமடைந்ததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் திடீரென இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்த ராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு நேற்று காலை அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்த ராணியின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர்கள் குருநாதன் (டவுன்), முகமது ஜாபர் (கணேஷ்நகர்) மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். மேலும் டீன் பூவதியும் விரைந்து வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உறுதி கூறினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு இறந்த ராணியின் உடலை போலீசார் பெற்றுச்சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பானது.
    குடும்ப கட்டுப்பாடு செய்த புதுக்கோட்டை பெண் மீண்டும் கருத்தரித்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது திடீரென இறந்தார். அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள கைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வீரன். இவரது மகள் ராணி (வயது 25). இவருக்கும், பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் ராணி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    இந்தநிலையில் திடீரென ராணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் சேர்த்தனர். அப்போது ராணியை பரிசோதனை செய்ததில் அவர் மீண்டும் கருத்தரித்து உள்ளதாக கூறியுள்ளனர். இதை கேட்டு ராணியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர், மீண்டும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக ராணி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று காலை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது திடீரென அவர் இறந்து விட்டதாக தெரிகிறது. மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் இறந்ததாக ராணியின் உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் ராணி இறந்து விட்டார் என கூறி அவரது உடலை வாங்க மறுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது உடல் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து ராணியின் உறவினர்கள் டவுன் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் மீண்டும் கருத்தரித்து உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×