என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    அண்ணாபண்ணை துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
    அன்னவாசல்:

    இலுப்பூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அக்கினிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிப்பதாவது:-

    அண்ணாபண்ணை துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் வயலோகம், மாங்குடி, மண்வேளாம்பட்டி, அண்ணாபண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    பாண்டிக்குடி கிராமத்தில் 60 ஏக்கர் குளத்தில் ஆயிரக்கணக்கான பனைமரங்களை பொதுமக்கள் வளர்த்து சாதனை புரிந்துள்ளனர்.
    கீரமங்கலம்:

    பனை மரங்களால் நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டு வறட்சி ஏற்படாமல் இருக்கும் என்பதால் கடந்த சில வருடங்களாக இளைஞர்கள் பனை மரங்களை நட்டு வளர்த்து வருகிறார்கள். மற்றொரு பக்கம் வளர்ந்த பனை மரங்களை செங்கல் சூலைகளுக்கு விறகுக்காக சிலர் வெட்டி வருகிறார்கள்.

    புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் மாவட்டங்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டதால் சமூக ஆர்வலர்கள் அதற்கு எதிராக போராடி வந்தனர். இந்த நிலையில் பனை மரங்களை வெட்ட தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள பாண்டிக்குடி கிராமத்தில் கடந்த 1984-ம் ஆண்டு முதல் அப்பகுதியில் உள்ள சுமார் 60 ஏக்கர் குளத்தில் பனை விதைகளை விதைத்து ஆயிரக்கணக்கான பனை மரங்களை வளர்த்துள்ளனர் கிராம மக்கள். இதுகுறித்து மகாகவி பாரதி நற்பணி மன்றத்தை சேர்ந்த திருப்பதி கூறியதாவது:-

    எனக்கு 26 வயது இருக்கும் போது ஒவ்வொரு கிராமத்திலும் தேசிய தலைவர்கள் பெயரில் நற்பணி மன்றங்கள் தொடங்கி ஏதாவது நலப்பணிகள் செய்வார்கள். அதேபோல் தான் பாண்டிக்குடி கிராமத்தில் மகாகவி பாரதி நற்பணி மன்றத்தை தொடங்கி 60 ஏக்கர் பரப்பளவுள்ள பாண்டிக்குளத்தில் பனை மரங்களை வளர்க்க திட்டமிட்டோம். இளைஞர்களும் முன்வந்தார்கள்.

    ஊர் ஊராக சென்று பனை விதை சேகரித்து சிறுவர்களுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து பனை விதைகளை விதைக்கச் செய்தோம். இப்படியே சுமார் 37 வருடங்களில் ஆயிரக்கணக்கான பனைமரக்காட்டை உருவாக்கிவிட்டோம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.

    இப்போது நாங்கள் நட்ட பனை மரங்களில் இருந்தே விதை சேகரித்து மீண்டும் விதைக்கிறோம். இப்போதைய இளைஞர்களும் ஆர்வமாக பனை விதை விைதக்கிறார்கள். பனைமரக்காடு உருவான பிறகு பல உயிரினங்களும் இங்கே வாழ்கிறது. எங்கள் கிராமத்தில் உள்ளவர்களில் நுங்கு தேவையும் பூர்த்தியாகிறது. இதேபோல் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் முன்வந்து பனை விதை விதைத்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    சத்தமில்லாமல் பல ஆயிரம் பனைமரங்களோடு பனைமரக்காட்டை உருவாக்கிய மகாகவிபாரதி நற்பணி மன்றத்தினரை இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
    கோரோனோ தடுப்பூசி முகாமில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று வட்டாட்சியர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை தாலுகாவில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெறும் கோரோனோ தடுப்பூசி முகாமில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று வட்டாட்சியர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சி மன்றங்களில் நாளை 12-9-21 அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து கிராமங்களில் உள்ள துணை சுகாதார நிலையம் அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன் வாடி மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அனைவரும் தவறாது கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    தடுப்பூசி போட்டுக் கொள்ள வருபவர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். மேலும், தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டையில் 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நேற்று புதிதாக 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 38 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 222 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 394 ஆக உள்ளது.
    ஆலங்குடியில் வாலிபரிடம் ரூ.45 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே பூவரசக்குடி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 25). இவர் தனது முகநூலில் புதிய ரக மோட்டார்சைக்கிள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட விளம்பரத்தை பார்வையிட்டார். அதன் லிங்கை அஜித்குமார் கிளிக் செய்த நிலையில் மர்ம ஆசாமி, வாட்ஸ்அப் மூலம் அஜித்குமாரை தொடர்பு கொண்டார்.

    மேலும் தான் ராணுவ வீரர் எனவும், தற்போது விஜயவாடா விமானநிலையத்தில் பணியாற்றிவருவதாகவும் கூறினார். மோட்டார் சைக்கிளுக்கானபணத்தை கூகுள் பே மூலம் அனுப்ப கூறினார்.

    இதையடுத்து, அஜித்குமாரும் ரூ.44 ஆயிரத்து500ஐ அனுப்பினார். ஆனால் தெரிவித்தப்படி மோட்டார் சைக்கிளை அவர் விற்கவில்லை. இதுகுறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அஜித் குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    ஆலங்குடியில் வாலிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கல்லுக்குண்டு குளக்கரைப்பகுதியை சேர்ந்தவர் துப்பாக்கி முருகன். இவரது மகன் விஜய் என்கிற செல்வகணபதி (வயது 24). கடந்த மாதம் 28-ந்தேதி இரவு கஞ்சா மற்றும் மதுபோதையில் நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சிலர் செல்வகணபதியை அரிவாளால் வெட்டியதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் சிலரை கைது செய்து விசாரித்து வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெரினா பேகம், துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேலு ஆகியோர் ஆலங்குடி போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், 9 பேர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ஆலங்குடி அம்பேத்கர் நகர், கலிபுல்லா நகர் பகுதிகளை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர், அம்பேத்கர் நகர் தம்பியப்பன் மகன் பசுபதி (27) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் ஆலங்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நல்ல கண்ணன் முன் ஆஜர்படுத்தினர்.

    நீதிபதி 17 வயதுடைய 2 சிறுவர்களையும் புதுக்கோட்டை சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கவும், பசுபதியை அறந்தாங்கி சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அங்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

    தடுப்பூசி பூத்துக்கள் அமைக்கப்பட்டு ஒருபூத்திற்கு குறைந்தது 200 முதல் 300 வரையிலான பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை 12.9.21 தேதியன்று தமிழக அரசின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளின்படி, தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

    போலியோ தடுப்பூசி முகாம் நடத்தப்படும்முறையில் தடுப்பூசி பூத்துக்கள் அமைக்கப்பட்டு ஒருபூத்திற்கு குறைந்தது 200 முதல் 300 வரையிலான பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

    இம்முகாமினை சிறப்புற செயல்படுத்துவதற்காக அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்த உள்ளனர். மேலும் இம்முகாம்களை பயன்படுத்தி இதுவரை தடுப்பூசி போடாமல் விடுப்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இத்தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.

    கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் கந்தர்வகோட்டை கிளையின் சார்பாக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் கந்தர்வகோட்டை கிளையின் சார்பாக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மாதாந்திர ஓய்வூதியம் 9,000 வழங்க வேண்டும், ஒட்டுமொத்த பணப்பலன் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொருளாளர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே கொடிவயல் வடக்கையை சேர்ந்தவர் சாந்தி (வயது 45). இவர் நேற்று ரெத்தினகோட்டையில் உள்ள அவரது அண்ணன் மகனை பார்த்து விட்டு மீண்டும் ஊருக்கு செல்ல அரசு டவுன் பஸ்சில் ஏறியுள்ளார். பஸ் வல்லவாரி பாலம் அருகே வந்த போது சாந்தி, தனது ஊருக்கு செல்லாத வேறொரு பஸ்சில் ஏறிவிட்டதாக கூறி பஸ்சில் இருந்து அவசரமாக இறங்கினார்.

    அப்போது நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம் வேலாயுதநகரை சேர்ந்த வீராசாமியின் மனைவி லட்சுமி(வயது 40). இவரது மகள் அபி. பள்ளிமாணவி. அபியுடன், லெட்சுமியின் அக்காள் மகனான வினோத் (20) ஒரு மோட்டார் சைக்கிளில் உடையார்பாளையம் நோக்கி சென்றார்.

    அப்போது பாலவேலை நடந்துவரும் பகுதியில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் அபிக்கு பலத்தகாயமும், வினோத்துக்கு லேசான காயமும் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.
    ஆலங்குடி அருகே குளமங்கலம் தெற்கு உயர் நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    அறந்தாங்கி:

    தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், அதன் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.

    அதனையடுத்து கடந்த 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனையடுத்து அந்த மாணவிக்கு வீட்டுத் தனிமையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 9-ம் வகுப்பில் மொத்தம் 326 பேர் படித்து வருகின்றனர். ஒரு அறைக்கு 20 நபர்கள் வீதம் 16 அறைகளில் மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது ஒரு மாணவிக்கு தொற்று உறுதியானதைய டுத்து 9-ம் வகுப்பிற்கு இரண்டு நாட்கள் மட்டும் விடுமுறை அளித்து பள்ளித்தலைமை ஆசிரியர் காயத்திரி உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் அனைத்து மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான மாணவி படித்த அறை மட்டும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி திறக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் மாணவிக்கு தொற்று உறுதியாகியுள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதேபோல் ஆலங்குடி அருகே குளமங்கலம் தெற்கு உயர் நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    கறம்பக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் புது மாப்பிள்ளை பலியானார். சிறுவன் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
    கறம்பக்குடி:

    தஞ்சாவூர் மாவட்டம், நெய்வேலி வட தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் மதியரசன் (வயது 27). இவருக்கு திருமணமாகி 45 நாட்கள் ஆகிறது. இவர், தனது அக்கா மகன் ஆகாஷ் (12) என்ற சிறுவனை அழைத்து கொண்டு வேம்பன்பட்டியில் உள்ள அக்கா வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அம்புக்கோவில் சாலை பிலாவிடுதி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே கறம்பக்குடி அருகே உள்ள தட்டாவூரணியைச் சேர்ந்த சங்கர் (45) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மதியரசன் சம்பவ இடத்திலேயே பலியானார். சங்கர், சிறுவன் ஆகாஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 2 பேரும் மேல்சிகிச்சைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    மேலும் விபத்தில் இறந்த மதியரசன் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 45 நாட்களில் புதுமாப்பிள்ளை விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருமயம் அருகே வாகனம் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமயம்:

    திருமயம் அருகே உள்ள சின்ன குளத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கன் (வயது 70). விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு சின்ன குளத்துப்பட்டி சவேரியார் புரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், அடைக்கன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அடைக்கன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×