என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    அன்னவாசல் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் அருகே வீரப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மனைவி கவுசல்யா. அதே ஊரை சேர்ந்த மேகநாதனுக்கும், பாலசுப்பிரமணியனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னையும், தன் குடும்பத்தினரையும் மேகநாதன் உள்ளிட்ட சிலர் தாக்கியதாக பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில், மேகநாதன், மாயழகு, மனோகரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் பின்னர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மேகநாதன், மாயழகு இருவரையும் தாக்கியதுடன், அவர்கள் வீட்டையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுகுறித்து மேகநாதன் அளித்த புகாரின் பேரில் பாலசுப்பிரமணியன், பாரதிராஜா, செவ்வந்தி, ஆறுமுகம், ராம்கி, ராகுல், பொன்னுசாமி, சோலைக்குமார் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 468 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 14 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 210 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 399 ஆக உள்ளது.
    மீமிசல் அருகே 8 கடைகளின் பூட்டை உடைத்து பணம்-பொருட்களை திருடப்பட்டன. இந்த சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோட்டைப்பட்டினம்:

    புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டினம் கிராமத்தில் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்குள்ள கடைகளின் உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றிருந்தனர். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது சுமார் 8 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தன. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த கடைகளின் உரிமையாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்தக் கடைகளின் உரிமையாளர்கள் மீமிசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அந்த புகாரின் அடிப்படையில் கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் மற்றும் மீமிசல் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நவீன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து திருட்டு போன கடைகளை பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஒரேநாளில் 8 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விராலிமலை அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை:

    விராலிமலை அருகே உள்ள செவனம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 32). இவரது மனைவி கனகவள்ளி. இவர்கள் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டிற்கு முன்பு உள்ள இரும்பு கதவை திறந்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த சரவணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்கசிவு காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
    ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதியைச் சேர்ந்தவர் வீரையா(வயது 70). விவசாயியான இவர் நேற்று காலை சொந்த வேலையாக ஆலங்குடி வந்துவிட்டு ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ஆலங்குடி அரசமரம் பஸ் நிறுத்தம் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது மாங்கோட்டை வல்லக்குளத்தை சேர்ந்த அடைக்கலம் மகன் ராமராஜ் (30) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், போகும் வழியிலேயே அவர் இறந்தார். இந்த விபத்து குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    அன்னவாசல் பகுதியில் ரெயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழைநீரில் கார் சிக்கி பெண் டாக்டர் பலியானாார்.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம், துடையூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சத்தியா(வயது 35). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று மாலை மாமியாருடன் ஒரு காரில் புறப்பட்டு துடையூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை சத்தியா காரை ஓட்டினார்.

    அவர்கள் துடையூர் அருகே வந்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. அந்த வழியாக கார் வந்தபோது மழைநீரில் சிக்கிக் கொண்டது. மாமியார் கார் கதவை திறந்து கொண்டு வெளியேறினார். ஆனால், சீல்ட் பெல்ட் அணிந்து இருந்ததால் சத்தியாவால் உடனடியாக வெளியே வர முடியவில்லை.

    சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி சத்தியா உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் மற்றும் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கி இறந்த சத்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆலங்குடி அரசு பேருந்தில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கண்டக்டருக்கு தாயும், மகளும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், அவரது மகளும் மருத்துவ சிகிச்சைக்கு பட்டுக்கோட்டை செல்ல கொத்தமங்கலத்தில் இருந்து அறந்தாங்கி செல்லும் டவுன் பஸ்சில் ஏறியுள்ளனர். இருவரும் கீரமங்கலத்தில் இறங்கி பட்டுக்கோட்டை செல்லும் தனியார் பஸ்சில் ஏறி டிக்கெட் எடுக்க பையை தேடினர்.

    ஆனால் பையை காணவில்லை. அதில் இருந்த பணம், மருந்து சீட்டும், தொலைந்து போனது. இதனால் நகரம் சன்னதி சாலையில் இறங்கி அவர்கள் அழுது கொண்டு நின்றுள்ளனர். பின்னர் கீரமங்கலம் பஸ் நிலையத்திற்கு நடந்து வந்து, அங்கு இருந்தவர்களிடம் பையை பார்த்தீர்களா என்று கேட்டுள்ளனர். இதற்கிடையில் அறந்தாங்கியிலிருந்து திரும்பி வந்த அதே பஸை நிறுத்தி, டிரைவர் ஜெயராஜியிடம், பையை குறித்து கேட்டனர். அப்போது கண்டக்டர், அந்த பையில் என்ன இருந்தது என்று கேட்ட போது, ரூ.4 ஆயிரத்து 200 மற்றும் மருந்து சீட்டு இருந்ததாக கூறினர். அவர்கள் சொன்னது சரியாக இருந்ததால் பையை அவர்களிடம் ஒப்படைத்தார். பையை பெற்றுக் கொண்ட தாயும், மகளும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். 

    அறந்தாங்கி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வீடுகள் மற்றும் கடைகளில் கொள்ளை சம்பவம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி மீமிசல் கடை வீதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதனால் இப்பகுதியில் இரவு, பகல் என எந்த நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும்.

    இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் இப்பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு, கடையை பூட்டி விட்டு அதன் உரிமையாளர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    இன்று காலை வழக்கம் போல் கடை திறப்பதற்காக உரிமையாளர்கள் வந்த போது அப்பகுதிகளில் தொடர்ந்து 10 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதில் மளிகைகடைகள் 3, மருந்து கடை 1, ஷாப்பிங் சென்டர் 1, கட்டுமான வேலைக்கு பொருட்களை வாடகைக்கு விடும் கடை1, பெட்டிக்கடை 1 ஆகிய 7 கடைகளில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அள்ளிச் சென்றது தெரியவந்தது.

    மற்ற 3 கடைகளில் பூட்டை உடைத்த கொள்ளையர்கள், அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து 7 கடை உரிமையாளர்களும் தனித்தனியாக மீமிசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் வழக்கு பதிவு செய்து, கொள்ளை நடந்த பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பிறகு அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்.

    மக்கள் அதிகமாக நடமாடும் கடைவீதியில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்த 7 கடைகளில் கொள்ளை நடந்திருப்பது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் அறையில் அண்ணா சிலை மற்றும் கலைஞர் சிலை வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை பொறுப்பாளர் அறைக்குள் மர்ம நபர்கள் புகுந்து இரண்டு சிலைகளையும் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தி.மு.க. அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் உள்ளிட்ட பொறுப்பாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக பொறுப்பாளர்கள் உத்தரவின் பேரில் உடைந்த சிலைகள் உடனடியாக அகற்றப்பட்டது. மேலும், இதுகுறித்து புதுக்கோட்டை நகர காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தி.மு.க. அலுவலத்திற்கு உள்ளே நுழைந்து சிலைகளை உடைத்த மர்ம நபர் குறித்து போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினார். புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 15 பேர் குணமடைந்தனர்.

    இதனால் `டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 816 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் இறந்தனர். இதனால் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 398 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கீரமங்கலம் அருகே விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரமங்கலம்:

    புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு பகுதியில் தஞ்சாவூர் நாடார் காலனி பகுதியை சேர்ந்த லாரன்ஸ் (வயது 40) என்பவர் ஒரு வீட்டில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது மேற்பனைக்காடு கிழக்கு பகுதியில் சென்ற டவுன் பஸ் ஒன்றை முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே திருநெல்வேலி மாவட்டம் ருக்குமணி அம்பாள்புரத்தைச் சேர்ந்த அன்புராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது லாரன்ஸ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த லாரன்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அன்புராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விரைவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 1,933 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையை முழுமையாக செலுத்தியுள்ள 376 பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகளை தேர்வு செய்யும் திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று தங்களுடைய பங்களிப்பு தொகையை செலுத்திய 376 பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் தேர்வு செய்யப்பட்டது. தமிழக அரசின் முன்னோடித் திட்டமாக விளங்கும் இந்த திட்டத்தின்கீழ் குடிசையில் வாழும் பொது மக்கள் இங்கு பயன்பெறுவார்கள்.

    இந்த குடியிருப்பு பகுதிகளின் கட்டுமான பணி முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த குடியிருப்பின் தரம் குறித்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. தரம் நன்றாக இருந்தால் மட்டுமே பயனாளிகளிடம் வீடு ஒப்படைக்கப்படுகிறது.

    கட்டுமான பணியின் தரம் குறைவு கண்டுபிடிக்கப்பட்டால் ஒப்பந்தகாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பாக சட்டமன்றத்தில் சட்ட முன் வடிவு தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் தமிழக அரசின் அட்டார்னி ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து மேல்முறையீடு செய்யலாம் என்று கூறியதால் தற்போது சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு கொண்டு வரப்படவில்லை

    விரைவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்.

    நீட் தேர்வு

    இதேபோன்று 7 பேர் விடுதலை மற்றும் நீட் தேர்வு ரத்து தொடர்பாகவும், தமிழக அரசின் சட்டப் போராட்டம் தொடரும். சட்டப்போராட்டம் என்பது நீண்ட கால தீர்வு, குறுகிய காலத்தில் இதில் தீர்வு காண முடியாது. இறுதியில் நியாயம் கிடைக்கும், நியாயம் வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 கைதிகள் விடுதலை செய்வது தொடர்பாக சர்ச்சையான கருத்துக்கள் நிலவி வருகிறது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, சட்டத்திற்கு உட்பட்டு நன்னடத்தை காரணமாக அண்ணா பிறந்தநாளையொட்டி கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொடும் குற்றங்கள், குண்டு வெடிப்பு தொடர்பாக சிறையில் உள்ள கைதிகள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை.

    திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாமில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்துள்ள அகதிகள் போராட்டம் செய்து வருகின்றனர். ஆனால் அவர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. சிறை துறைக்கும் சிறப்பு முகாமிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை

    இவர்கள் விவகாரத்தில் தமிழக அரசு தலையிட முடியாது. அவர்களின் விடுதலை நீதிமன்றத்தின் கையில்தான் உள்ளது. மேலும் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவது தொடர்பாக நீதிமன்றமும், மத்திய அரசும் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

    ×