search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ரகுபதி
    X
    அமைச்சர் ரகுபதி

    7 பேர் விடுதலை-நீட் தேர்வு விலக்கில் தமிழக அரசின் சட்ட போராட்டம் தொடரும்: அமைச்சர் ரகுபதி

    விரைவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 1,933 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையை முழுமையாக செலுத்தியுள்ள 376 பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகளை தேர்வு செய்யும் திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று தங்களுடைய பங்களிப்பு தொகையை செலுத்திய 376 பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் தேர்வு செய்யப்பட்டது. தமிழக அரசின் முன்னோடித் திட்டமாக விளங்கும் இந்த திட்டத்தின்கீழ் குடிசையில் வாழும் பொது மக்கள் இங்கு பயன்பெறுவார்கள்.

    இந்த குடியிருப்பு பகுதிகளின் கட்டுமான பணி முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த குடியிருப்பின் தரம் குறித்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. தரம் நன்றாக இருந்தால் மட்டுமே பயனாளிகளிடம் வீடு ஒப்படைக்கப்படுகிறது.

    கட்டுமான பணியின் தரம் குறைவு கண்டுபிடிக்கப்பட்டால் ஒப்பந்தகாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பாக சட்டமன்றத்தில் சட்ட முன் வடிவு தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் தமிழக அரசின் அட்டார்னி ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து மேல்முறையீடு செய்யலாம் என்று கூறியதால் தற்போது சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு கொண்டு வரப்படவில்லை

    விரைவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்.

    நீட் தேர்வு

    இதேபோன்று 7 பேர் விடுதலை மற்றும் நீட் தேர்வு ரத்து தொடர்பாகவும், தமிழக அரசின் சட்டப் போராட்டம் தொடரும். சட்டப்போராட்டம் என்பது நீண்ட கால தீர்வு, குறுகிய காலத்தில் இதில் தீர்வு காண முடியாது. இறுதியில் நியாயம் கிடைக்கும், நியாயம் வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 கைதிகள் விடுதலை செய்வது தொடர்பாக சர்ச்சையான கருத்துக்கள் நிலவி வருகிறது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, சட்டத்திற்கு உட்பட்டு நன்னடத்தை காரணமாக அண்ணா பிறந்தநாளையொட்டி கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொடும் குற்றங்கள், குண்டு வெடிப்பு தொடர்பாக சிறையில் உள்ள கைதிகள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை.

    திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாமில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்துள்ள அகதிகள் போராட்டம் செய்து வருகின்றனர். ஆனால் அவர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. சிறை துறைக்கும் சிறப்பு முகாமிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை

    இவர்கள் விவகாரத்தில் தமிழக அரசு தலையிட முடியாது. அவர்களின் விடுதலை நீதிமன்றத்தின் கையில்தான் உள்ளது. மேலும் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவது தொடர்பாக நீதிமன்றமும், மத்திய அரசும் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

    Next Story
    ×