என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • தேர்விற்கு பயிற்சி பெற புத்தகங்கள் மற்றும் இணைய வழி கூப்பன்களை வழங்கினார்.
    • மாணவர்கள் தங்களுக்கென ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொள்ள வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் நாகையில் ஓரு தனியார் கல்லூரியில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்துக்கான போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது.

    போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பினை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்து மாணவர்களுக்கு தேர்விற்கு பயிற்சி பெற புத்தகங்கள் மற்றும் இணைய வழி தேர்வுக்கான கூப்பன்களை வழங்கினார்.

    தொடர்ந்து பேசி அமைச்சர், மாணவர்கள் அனைவரும் தங்களுக்கென ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், தங்களையும்தங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள இந்த பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கும்.ஒவ்வொருவரும் வாழ்வில் முன்னேற்றம் பெற போட்டித் தேர்வுகளை எதிர் கொண்டு வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் தாட்கோ தலைவர் மதிவாணன், தமிழக மீன் வளர்ச்சி தலைவர் கௌதமன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு, மாவட்ட வருவாய் அலுவலர் வீ.சகிலா உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • பல மணிநேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.
    • வீடுகளில் இருந்த தளவாட பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள வண்டலூர் ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது45). நேற்று மின்கசிவு காரணமாக இவரது கூரை வீட்டில் தீப்பிடித்தது.

    அப்போது காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென பரவி வண்டலூர் மாரியம்மன் கோவில் மேலத்தெருவை சேர்ந்த தமிழரசி , வெங்கடேசன், பாப்பையன், ராஜேந்திரன், ராஜேஷ் கண்ணா, மதீஷ் ராஜ், சுப்பிரமணியன், அரவிந்த் , பெரியசாமி, ராகுல் ஆகியோ ரின் கூரைவீடுகளுக்கும் பரவியது.

    இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகை, கீழ்வேளூர், வேளா ங்கண்ணி, தலைஞாயிறு உள்ளிட்ட 4 தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து பல மணிநேரம் போராட்ட த்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.

    ஆனாலும் இந்த தீவிபத்தில் 11 கூரைவீடுகளும் முழுமையாக எரிந்து சாம்பலானது. மேலும் வீடுகளில் இருந்த தளவாட பொருட்கள் எரிந்து சேதமானது.

    இந்த தீவிபத்தில் ஒரு ஆடும் இறந்தது.

    இதன் சேதமதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    தகவல் அறிந்ததும் அமைச்சர் ரகுபதி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினர்.

    இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் ஜல்லிக்கற்கள் முற்றிலும் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
    • சாலையில் மழைநீர் தேங்கினால் பள்ளம் இருப்பது தெரியாமல் போகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை கடைத்தெருவில் நடுக்கடை-தண்டாளம் இடையே திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட இணைப்பு சாலை உள்ளது.

    இந்த சாலையை கட்டுமாவடி, தண்டாளம், ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த சாலை சேதம் அடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது.மேலும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் நடந்து செல்பவர்கள் தவறி விழுந்து அடிக்கடி காயம் அடைகின்றனர்.

    இது குறித்து திட்டச்சேரி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    எனவே பழுதான இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புகையிலை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
    • புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

    முகாமிற்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் தலைமை தாங்கினார்.

    சுகாதார ஆய்வாளர் பரமநாதன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூகப் பணியாளர் மதுமிதா கலந்துகொண்டு புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் அதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்து விளக்கினர்.

    இதில் பகுதி சுகாதார செவிலியர் பானுமதி, ஊராட்சி செயலர் பாலசுந்தரம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

    முடிவில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    • 1,100 மாணவிகள் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.
    • எம்.பி.ஏ படிப்பதற்கு நீண்டதூரம் சென்று அதிக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பாரதிதாசன் மாதிரி உறுப்பு கல்லூரி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இக்கல்லூரியில் பி.ஏ., பி.எஸ்.சி., போன்ற பட்ட படிப்புகள் உள்ளன.

    மேலும், இக்கல்லூரியில் கடந்த 2014-ம் ஆண்டு எம்.பி.ஏ வகுப்புகள் தொடங்கப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு வரை நடைபெற்றது.

    இதில் 240 மாணவர்கள் எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு இக்கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு முதல் இக்கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பு நிறுத்தப்பட்டது.

    இக்கல்லூரியில், தற்போது 1,270 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    அதில் 1,100 மாணவிகள் பட்டப்ப டிப்பு படித்து வருகின்றனர்.

    கிராமப்புறத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் இக்கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பு நிறுத்தப்பட்ட தால் இங்கு பயிலும் மாணவ- மாணவிகள் எம்.பி.ஏ படிப்பதற்கு நீண்டதூரம் சென்று அதிக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    எனவே, கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி மீண்டும் இக்கல்லூரியில் எம்.பி.ஏ. பாடத்தை தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின்கம்பிகள் சீரமைக்கபடாமல் மிகவும் தாழ்வான நிலையில் செல்கின்றன.
    • போா்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியப் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடி,மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இந்த மழையில் திட்டச்சேரி, திருமருகல்,போலகம்,இடையாத்தங்குடி,ஏனங்குடி,கருப்பூர்,வடகரை,திருப்புகலூர், கணபதிபுரம்,நெய்குப்பை, மருங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்து மின்கம்பிகள் அருந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் சேதமடைந்தது.

    இதனால் ஒன்றிய பகுதிகளில் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சேதம் அடைந்த மின்கம்பிகள் மற்றும் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்ற மின் இணைப்பு வழங்கப்பட்டது.

    ஆனால் ஒன்றிய பகுதிகளில் பல இடங்களில் சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள் சீரமைக்க ப்படாமலும், மின்கம்பிகள் முழுவதுமாக சீரமைக்காமல் மிகவும் தாழ்வாகவும் உள்ளன.

    இதனால் காற்று சற்று வேகமாக வீசும்போது மின்கம்பிகள் அறுந்து கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது நேரிடுகிறது.

    இதனால் மனிதர்கள் உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடி க்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே அதிகாரிகள் போா்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின்கம்பங்க ளை சீரமைப்பதுடன், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயரத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விலையில்லா புத்தகங்கள் நோட்டுகள் சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகூர் அரசு தேசிய துவக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், பள்ளி துணைத் தலைவர் அமுதா ஆறுமுகம், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பேரணில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் பதாகைகளை ஏந்தி பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும்படி கோஷங்கள் எழுப்பி சென்றனர்.

    முன்னதாக நடைபெற்ற விலையில்லா புத்தகங்கள் நோட்டுகள் சீருடைகள் இவற்றை சிறப்பு விருந்தினர்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கினர்.

    தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.

    உதவி தலைமை ஆசிரியை மாலதி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சித்ரா மேகலா, தேவி, தையல்நாயகி, செந்தில், பாலா சத்துணவு ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • குறுஞ்செய்தியை அனுப்பிய வரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
    • திருமுல்லைவாயில் பவானி தெரு பகுதியை சேர்ந்த கோபி கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அருகே கீழையூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் ரூ.5 ஆயிரம் தராவிட்டால் சிறுமியின் புகைப்படத்தை இணையதளத்தில் பரப்பி விடுவதாகவும், இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி சிறுமிக்கு குறுஞ்செய்தி வந்தது.

    இதைத் தொடர்ந்து குறுஞ்செய்தியை அனுப்பிய வரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் விசாரணை நடத்தியதில் சென்னை திருமுல்லைவாயில் பவானி தெரு பகுதியை சேர்ந்த கோபி (வயது20) என்பவர் சிறுமியின் ஆபாச படத்தை இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதுபோன்ற குற்ற செயல்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க 8428103090 என்ற எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ் சிங் தெரிவித்தார்.

    • படகில் சென்ற ஆறுமுகம், மைக்கேல் சந்தோஷ், கண்ணன் ஆகிய 4 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர்.
    • மீனவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அடுத்த அக்கரைப்பேட்டையில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தடைக்காலம் முடிவு பெற்றதால் ஏராளமான மீனவர்கள் நேற்று நள்ளிரவுகடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    இதில் கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அஞ்சப்பனுக்கு என்பவரும் சொந்தமான படகில் 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

    நாகையில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகில் கடல்நீர் உட்புகுந்து கடலில் படகு மூழ்கியது.

    இதனால் படகில் சென்ற ஆறுமுகம், மைக்கேல் சந்தோஷ், கண்ணன் ஆகிய 4 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். இதனை தொடர்ந்து மற்றொரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் நாகை மாவட்டம் நாகராஜன் என்பவரும் சொந்தமான படகும் கடலில் மீன் பிடிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது. படகில் சென்ற ரெத்தினம், குஞ்சாலு, சிவக்குமார் ஆகிய 3 பேரும் சக மீனவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச்சென்ற முதல் நாளே இரண்டு படகுகள் கவிழ்ந்து கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விசைப்படகுகளில் ஜி.பி.எஸ் கருவி, வாக்கி டாக்கி போன்றவற்றை பொருத்தி சென்றனர். வலைகளை பழுது நீக்கி மீனவர்கள் படகில் ஆர்வமுடன் ஏற்றி சென்றனர்.
    • தடைக்காலத்திற்கு பின்னர் தொழிலுக்கு சென்றதால் அதிகமான மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் எதிர்பார்ப்புடன் சென்று உள்ளனர்.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் படி மீன்களின் இனப்பெருக்க காலத்தை கணக்கில் கொண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ம் தேதி நள்ளிரவு வரை ஆழ்கடலில் மீன் பிடிக்க விசை படகுகளுக்கு தடை விதிக்கப்படும். இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கிய மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது.

    இதையடுத்து 2 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க விசைப்படகுகளில் புறப்பட்டு சென்றனர்.

    அதன்படி நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க சென்றனர்.

    நாகை, வேதாரண்யம், தரங்கம்பாடி, பூம்புகார், சீர்காழி, மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 5000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவில் கடலுக்குச் சென்றனர். நாகை துறைமுகத்தில் இருந்து 100-க்கணக்கான விசைப்படகுகளுக்கு பூஜை செய்தும், கடலை வழிபட்டும் பின்னர் சென்றனர். இயந்திரம் பழுது நீக்கம் செய்யப்பட்டு வர்ணம் தீட்டி புது பொலிவுடன் படகுகள் சென்றன.

    விசைப்படகுகளில் ஜி.பி.எஸ் கருவி, வாக்கி டாக்கி போன்றவற்றை பொருத்தி சென்றனர். வலைகளை பழுது நீக்கி படகில் ஆர்வமுடன் ஏற்றி சென்றனர்.

    தடைக்காலத்திற்கு பின்னர் தொழிலுக்கு சென்றதால் அதிகமான மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் எதிர்பார்ப்புடன் சென்று உள்ளனர்.

    • சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
    • இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதா வது:-

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருக்குவளை மற்றும் செம்போடை அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கு 20.06.2023 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

    www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள்.20.06.2023.

    இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மேற்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி. விண்ணப்பக் கட்டணம் ரூ.50 - தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள் தொழிற் பிரிவுகள் இவற்றிற்கான கல்வித் தகுதி வயது வரம்பு இடஒதுக்கீடு ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04365-250129 04369-276060 9487160168 மற்றும் மின்னஞ்சல் முகவரி govtitinagai@gmail.comதொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருமருகல் கடைவீதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
    • அனைத்து கடைகளும் காப்பீடு செய்யப்பட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு திருமருகல் வர்த்தக சங்கத் தலைவர் ஜெயபால் சங்கர் தலைமை வகித்தார்.

    செயலாளர் காமராஜ், துணைத் தலைவர் காசி அறிவழகன், பொருளாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். அனைவரையும் தகவல் தொழில் நுட்ப அமைப்பாளர் ரஞ்சித் வரவேற்றார்.

    கூட்டத்தில் திருமருகல் கடைவீதியில் சங்கத்தின் பெயர் பலகை வைக்க வேண்டும், அனைத்து கடைகளும் காப்பீடு செய்யப்பட வேண்டும்,

    விபத்துக்கள் நடை பெறாமல் இருக்க திருமருகல் கடைவீதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    மேலும் புதிய செயற்குழு உறுப்பினர்கள் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் சங்க நிர்வாகி ஹரிஹரன் நன்றி கூறினார்.

    ×