என் மலர்
நாகப்பட்டினம்
- மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து பொருட்களை கொள்ளையடித்து செல்லும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது மத்திய- மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கடலோர காவல் படையினரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் தாக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் சுப்பிரமணியன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி, முருகேசன், மகாலிங்கம், ராஜகோபால் உள்ளிட்ட 5 பேரும் நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இதேப்போல், மற்றொரு படகில் விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன், சண்முகவேல், முருகானந்தம், செல்வம் ஆகிய 4 பேரும் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மொத்தம் 2 பைபர் படகுகளில் 9 மீனவர்கள் நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென 2 விசைபடகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் சுப்பிரமணியன் படகில் ஏறி கத்தியை காட்டி மிரட்டி மீன்பிடி வலை மற்றும் தொழில்நுட்ப கருவிகளை உள்ளிட்ட பொருட்களை கேட்டுள்ளனர். அவர்கள் அதனை கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் 5 மீனவர்களையும் சராமாரியாக தாக்கினர். பின்னர், அங்கிருந்த சுமார் 600 கிலோ மீன்பிடிவலையை எடுத்து கொண்டு படகையும் சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்கொள்ளையர்கள் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகிற்கு சென்று அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை தருமாறு கேட்டுள்ளனர். அவர்கள் தர மறுத்ததால் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் 4 மீனவர்களையும் சரமாரியாக தாக்கிவிட்டு படகில் இருந்த மீன்கள், தொழில் நுட்ப கருவிகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.5 லட்சமாகும்.
இன்று காலை இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 9 மீனவர்களும் விழுந்தமாவடி கடற்கரைக்கு வந்தனர். காயங்களுடன் அவர்களை கண்ட சக மீனவர்கள் அவர்களிடம் கேட்கையில் தாங்கள் தாக்கப்பட்டு குறித்து கூறினர். தொடர்ந்து, கீழையூர் கடலோர காவல் படையில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து கடலோர காவல் படையினரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் தாக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அவர்கள் அனைவரும் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது. தொடரும் தாக்குதலால் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து பொருட்களை கொள்ளையடித்து செல்லும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது மத்திய- மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- நவராத்திரி விழா கடந்த 13-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது.
- அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள தேவூரில் தேவதுர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் நவராத்திரி பெருவிழா கடந்த 13ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து நவராத்திரி திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு லலிதா சகஸ்ர பாராயணம் நடைபெற்றது.
முன்னதாக தேவதுர்க்கை அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் ஒரு லிட்டர் 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா சண்டி ஹோமம் வருகிற 24-ம் தேதி நடைபெறுகிறது.
- மழைகாலங்களில் தண்ணீர் வயல்களுக்கு சென்று விடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
- மேலும், தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் முதல் கொத்தமங்கலம் ஊராட்சி வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு முடிக்கொண்டான் ஆறு செல்கிறது.
இந்த ஆற்றில் கட்டுமாவடி ஊராட்சி ஆற்றங்கரை தெரு முதல் துண்டம் நீர் தேக்கம் வரை ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் தண்ணீரை தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளன.
மழைக்காலங்களில் ஆற்றில் இருந்து கடலுக்கு சென்று கலக்கும் தண்ணீர் வேகமாக செல்லாமல் தேங்கி வயல்களுக்கு சென்று விடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
ஆறுகளில் ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்து ள்ளதால் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்க வும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மேலும் மழை வெள்ள காலங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிக்கொண்டான் ஆற்றை ஆக்கிரமி த்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொதுமக்களுக்கு எவ்வாறு புற்றுநோய் வருகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- முகாமில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் இன்னர் வீல் சங்கம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து முச்சந்தியில் அமைந்துள்ள எஸ்.எஸ் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாமை நடத்தியது.
முகாமை வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவி டயானா சர்மிளா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார் இந்த முகாமில் உடல் எடை, உயரம்,ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு,மற்றும் பெங்களூரில் இருந்து சிறப்பு நிபுணர்கள் கொண்டு அதிநவீன பிராஸ்டர் மூலம்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு புற்றுநோய் எவ்வாறு வருகிறது ,அதனை கட்டுப்படுத்தும் முறைகள், உணவு பழக்க வழக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சியில் மகப்பேறு மருத்துவர் ஹிரோஷா, மருத்துவர்கள் வெற்றிச்செல்வி, சித்து, மற்றும் இன்னர்வீல் சங்க தலைவர் கலைச்செல்வி சட்டநாதன் வரவேற்பு ரையாற்றினார் ரோட்டரி சங்கத் தலைவர் சுவாமிநாதன் இதில் இன்னருவில் சங்க செயலாளர் ரோட்டரி சங்க செயலாளர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது.
- ஆபத்தான நிலையில் இருந்த மரங்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது.
நாகப்பட்டினம்:
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக நாகை மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்பில் பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி சீயாத்தமங்கை ஊராட்சி மெயின்ரோடு பகுதியில் உயர் அழுத்தம் மற்றும் தாழ்வழுத்த மின் கம்பிகளை உரசி கொண்டும்,எந்நேரத்திலும் முறிந்து விழுந்து விபத்துக்க ளை ஏற்படுத்தும் ஆபத்தான நிலையில் இருந்த மரங்களையும் வெட்டி அகற்றும் பணி ஊராட்சி தலைவர் சிவகாமி அன்பழகன் தலைமையில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
- வருகிற 24-ந் தேதி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வேதநாயகி அம்மன்- வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம். நான்கு வேதங்களும் பூஜித்த தலம்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நவராத்திரி விழா நேற்று சிறப்பாக தொடங்கியது. முன்னதாக மூல ஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு பல்வேறு விதமான அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர், எழுந்தருளும் அம்மனுக்கு நவராத்திரி மண்டபத்தில் சக்தி அலங்காரம் செய்யப்பட்டு, வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, மகாலெட்சுமி அம்மன் கேடயத்தில் கோவில் பிரகாரத்தில் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
தொடர்ந்து, 10 நாட்களும் அம்மனுக்கு வேணுகோபால் அலங்காரம், மதுரை மீனாட்சி அலங்காரம், ஆண்டாள் அலங்காரம், காலிங்கன் அலங்காரம், கப்பல் அலங்காரம், சிவலிங்க பூஜை அலங்காரம், வெண்ணைத்தாழி அலங்காரம், மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் என பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
தொடர்ந்து, வருகிற 24-ந் தேதி சுந்தரமூர்த்தி சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா சென்று தோப்புத்துறை ரெயில்வே கேட் அருகில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி, பணியாளா்கள், உபயதாரா்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
- விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
- பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி மற்றும் லயன்ஸ் கிளப், ரோட்டரி சங்கம், இன்னர்வீல் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து வேளாங்கண்ணியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா தொடங்கி வைத்தார். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி பேருந்து நிலையம், பேராலயம், கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு,
உத்திரமாதா கோவில் தெரு, செபஸ்தியார் நகர் வழியாக பள்ளியில் நிறைவடைந்தது இந்த பேரணியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அவற்றின் பாதிப்புகள், எவ்வாறு தடுப்பது, சுகாதாரத்தை பேணிக்காப்பது, உணவு பழக்க வழக்கங்கள் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
மேலும் செல்லும் வழியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இந்த பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் ஈரபுல நில பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் ஈரபுல நில பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் அறிவுரையின்படி, நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் அபிஷேக் தோமர் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வேதாரண்யம் வனச்சரக அலுவலர் அயூப் கான் அனைவரையும் வரவேற்றார். சமூக ஆர்வலர் டாக்டர். சிவகணேசன் முன்னிலை வகித்தார்.
கோடியக்கரை சரணா லயம், ஈரபுல நிலம் ராம்சார் சைட் ஆகியவை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோடியக்கரை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து, கடற்கரை பகுதியில் குப்பைகள், கழிவுகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது.நிகழ்ச்சியை ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதில் விமானப்படை ஊழியர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்களை வனஉயிரின காப்பாளர் அபிஷேக் தோமர் வழங்கினர்.
- புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு திருக்கல்யாணம் வைபவம் நடந்தது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங் கண்ணியை அடுத்த விழுந்தமாவடி கன்னித்தோப்பில் பழமை வாய்ந்த ஸ்ரீ சௌந்தரராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு திருக்கல்யாணம் வைபோகம் நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி , பூதேவி சமேத சௌந்தரராஜ பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு ஹோமங்கள் மாலை மாற்றும் நிகழ்வு, காப்புகட்டுதல் கன்னிகாதாரனம்,வஸ்திரம் சாத்துதல், பூநூல் அணிவித்தல்,நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கிராம மக்கள் சீர்வரிசை எடுத்துவர பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மாங்கல்ய தாரணம் நிகழ்ச்சி நடைபெற்றது அதனை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
- சுமார் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.
- வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடைமடைக்கு போதிய அளவு கிடைக்காததாலும், அணையின் தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குளம், வாய்க்கால் போன்ற நீர் நிலைகளில் டீசல் மோட்டார் பம்பு செட்டு மூலம் தண்ணீர் இறைத்து பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.
ஒரு சில பகுதிகளில் மோட்டார் மூலம் இறைப்பதற்கு கூட தண்ணீர் இல்லை என பாதித்த பயிர்களை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் 50,000 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு குறுவை அறுவடை பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். தாமதமாக சாகுபடி பணியில் ஈடுபட்ட குறுவை சாகுபடி விவசாயிகளும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சம்பா பணியை மேற்கொண்ட விவசாயிகளும் தண்ணீர் இன்றி பயிர் பாதித்துள்ளதாக கவலை அடைந்துள்ளனர்.
திருப்பூண்டி அருகே கீழையூரில் இருந்து திருப்பூண்டி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை அருகே சந்திரநதி வாய்க்கால் பாசனத்தில் காரப்ப பிடாகை, சிந்தாமணி, திருப்பூண்டி, பிஆர்பபுரம், காமேஸ்வரம், காரைநகர் உள்ளிட்ட பகுதிகளில் 700 மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் திருப்பூண்டி அருகே சந்திரநதி வாய்க்காலில் தேங்கிய மழைநீரை டீசல் மோட்டார் மூலம் இறைத்து ஒரு சில விவசாயிகள் விவசாயப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வாய்காலை ஆழப்படுத்தி தண்ணீர் எடுத்தால் வரும் காலங்களில் அதில் சீராக தண்ணீர் வராது. எனவே வாய்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி என 3 நாட்கள் மட்டும் கப்பல் இயக்கப்படும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
- மறுமார்க்கமாக மதியம் 2 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து 23 பயணிகளுடன் புறப்பட்டு மாலை 5 மணிக்கு நாகை துறைமுகம் வந்தடைய உள்ளது.
நாகப்பட்டினம்;
இந்தியா-இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை கடந்த 14-ந் தேதி காலை நாகையில் இருந்து தொடங்கப்பட்டது. இந்த கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த கப்பலில் 150 பேர் பயணம் செய்யலாம். முதல் நாளில் 50 பயணிகள் நாகையில் இருந்து இலங்கைக்கு பயணம் செய்தனர். தொடர்ந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து 30 பயணிகள் நாகைக்கு வந்தடைந்தனர்.
இந்நிலையில், 7 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாலும், நிர்வாக காரணங்களாலும் நேற்று இந்த கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி என 3 நாட்கள் மட்டும் கப்பல் இயக்கப்படும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, இன்று 2-வது நாளாக முன்பதிவு செய்திருந்த 15 பயணிகளுடன் காலை 7 மணிக்கு நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் புறப்பட்டது.
பின்னர், மறுமார்க்கமாக மதியம் 2 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து 23 பயணிகளுடன் புறப்பட்டு மாலை 5 மணிக்கு நாகை துறைமுகம் வந்தடைய உள்ளது.
- அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
- ஈரப்பதத்துடன் குறுவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் நடப்பாண்டு காலத்தோடு திறந்துவிடப்பட்ட காவிரி நீர் காரணமாக மகிழ்ச்சியோடு சாகுபடி தொடங்கிய விவசாயிகளுக்கு அடுத்த சில நாட்களிலேயே துயரம் காத்திருந்தது.
மேட்டூரில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடைமடை வரை சீராக வந்து சேராத காரணத்தால் குறுவை சாகுபடி பெருமளவு பாதிக்க தொடங்கியது.
தண்ணீர் கேட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் விவசாயிகள் நடத்திய நிலையில் பயிர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்து அவர்கள் டீசல் இன்ஜின் வாடகைக்கு எடுத்து கூடுதல் செலவு செய்து குளம், குட்டை, வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து குறுவைப் பயிர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட அவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 மூட்டை வரை கிடைக்க வேண்டிய நிலையில் 10 முதல் 15 முட்டை வரையே தண்ணீர் இல்லாத காரணத்தால் அறுவடையில் கிடைத்ததாக கவலை தெரிவிக்கும் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.
ஒரத்தூர், அகர ஒரத்தூர், வேர்க்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு காலத்தோடு நேரடி நெல் கொள்முதல் திறக்க வேண்டும் என கடந்த 10 கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது பெய்த கனமழை காரணமாக ஒரத்தூர், வேர்க்குடி, அகர ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் ஆயிரம் மூட்டை குருவை நெல்கள் நனைந்து பாதிப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
தங்களுக்கு உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறப்பதோடு ஈரப்பதத்துடன் குருவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






