என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை தமிழக அரசு குறைக்கக்கோரி நாகையில், பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வெளிப்பாளையம்:

    நாகை அவுரித்திடலில் பா.ஜ.க சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு நாகை மாவட்ட பட்டியல் அணி ்தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். பா.ஜ.க மாவட்ட தலைவர் நேதாஜி முன்னிலை வகித்தார்.

    இதில் மாநில செயலாளர் தங்க.வரதராஜன், நகரத்தலைவர் இளஞ்சேரலாதன், நகர பொதுச்செயலாளர் அறிவழகன் மற்றும் அமைப்பு சாரா மாவட்ட துணைத்தலைவர் ரவிச்சந்திரன், தொழிலாளர் பிரிவு மாவட்ட தலைவர் இளமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை குறைத்துள்ள நிலையில், தமிழக அரசு வாட் வரியை குறைக்கவில்லை. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
    கடல் சீற்றம் சற்று குறைந்த நிலையில் மீன்வளத்துறையினரிடம் நேற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி சீட்டு பெற்று நேற்று மாலை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
    நாகப்பட்டினம்:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பரப்பில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீன்வளத்துறை மூலம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. மறு அறிவிப்பிற்காக காத்திருந்த மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.

    இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள 27 மீனவ கிராமத்தை சேர்ந்த 500 விசைப்படகு மற்றும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 5 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

    கடல் சீற்றம் சற்று குறைந்த நிலையில் மீன்வளத்துறையினரிடம் நேற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி சீட்டு பெற்று நேற்று மாலை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்களுக்கு தேவையான வலைகளை வெயிலில் காய வைத்து பராமரிப்பு செய்து வரும் மீனவர்கள் டீசல், ஐஸ் கட்டிகள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை படகுகளில் சேகரித்து சென்றனர்.

    ஏற்கனவே நவம்பர் மாதத்தில் 12 நாட்கள் கடலுக்கு செல்லாமல் இருந்த நிலையில் மேலும் 5 நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லும் போது தங்களுக்கு தேவையான மீன்கள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
    வேதாரண்யம் அருகே விபத்தில் படுகாயம் அடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி நயனார் குத்தகை பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் சுரேஷ் (வயது38). விவசாயி. இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் நெய்விளக்கு கடைத்தெருவில் இருந்து மோட்டார் சைக்கிளில் அண்டர்காட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் உள்ள பனை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுரேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகலட்சுமி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பத்மசேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தப்பி ஓடிய சாராய வியாபாரியை பிடிக்க ஆற்றில் குதித்த போலீஸ்காரர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
    நாகை:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே வெட்டாறு செல்கிறது. அங்கு உள்ள சுடுகாடு பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக நேற்று முன்தினம் மாலை கீழ்வேளூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ்காரர் மாஸ்கோ (வயது 32) உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    போலீசாரை பார்த்ததும் சாராய வியாபாரி தனராஜ் (21) என்பவர் அங்கிருந்து தப்பி ஓடி அந்த பகுதியில் உள்ள வெட்டாற்றில் குதித்துள்ளார்.

    இதை கண்ட போலீஸ்காரர் மாஸ்கோ, தனராஜை பிடிப்பதற்காக ஆற்றில் குதித்துள்ளார். அப்போது கனமழையால் ஆற்றில் அதிக அளவில் சென்ற தண்ணீரில் போலீஸ்காரர் அடித்து செல்லப்பட்டு, முட்புதருக்குள் சிக்கி கொண்டார். இதை கண்ட மற்ற போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், கீழ்வேளூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் போலீஸ்காரர் உயிருடன் மீட்கப்பட்டார்.
    ஒமிக்ரான் பரவலை தடுக்க வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு 7 நாள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    உலகமெங்கும் மிரட்டிய கொரோனா வைரஸ் தொற்று இப்போது உருமாறி, புதிய வகை ஒமிக்ரான் தொற்றாக பரவ தொடங்கி உள்ளது. ஒமிக்ரான் கொரோனா வீரியம் மிக்கது என்றும், இதன் பாதிப்பு முந்தைய பாதிப்பை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கணித்து உள்ளனர்.

    இந்தநிலையில் கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேரளாவில் ஒமிக்ரான் கொரோனா பரவல் இல்லை. என்றாலும் மாநிலத்தில் புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து கேரளா வருவோர் 7 நாள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும்.

    ஒமிக்ரான் வைரஸ்

    குறிப்பாக தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்காளதேசம், சீனா, மொரீசியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் உள்பட அனைவரும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேதாரண்யம் அருகே முன்விரோதம் காரணமாக மீனவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மணியன் தீவு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 57). மீனவர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் மணிராஜா (43) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று சோமசுந்தரம் இருசக்கர வாகனத்தில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த போது மணிராஜா வழிமறித்து தரக்குறைவாக திட்டி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சோமசுந்தரத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்டிக்கடைக்காரர் மணிராஜாவை கைது செய்தனர்.
    கே.பி.சி நகர் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு காய்ச்சல் இருந்துள்ளது.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் பகுதியில் தொடர்ந்து  மழை பெய்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கி நிற்கின்றது. பொதுமக்கள் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கே.பி.சி நகர் பகுதியை  சேர்ந்த 8 வயது சிறுமிக்கு காய்ச்சல் இருந்துள்ளது.

    இதனால் திருப்பூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை  செய்தனர். அப்போது அந்த சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    டெங்கு பரவுவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.எனவே சுகாதாரப்பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    நாகை:

    தென்தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

    இதற்கிடையே, கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், புதுக்கோட்டை, அரியலூர், தேனி, தென்காசி, பெரம்பலூர், விருதுநகர்  மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை எதிரொலியால் நாகை, கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுகிறது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

    மேலும் திருச்சி, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை,  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
    தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 29ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற கூட்டத் தொடரை முன்னிட்டு, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற வியூகக் குழு கூட்டம் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர்  சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் குளிர்கால கூட்டத்தொடரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்ப  ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். ஆதார விலைக்கு தனிச்சட்டம், கொரோனா இழப்பீடு உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    வேதாரண்யத்தில் கிராம நிர்வாக அதிகாரியை தரக்குறைவாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் காவல் சரகத்திற்கு உட்பட்ட துள்ளு வெட்டி அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்த சாவித்திரி (வயது 50) என்பவர் இறந்துவிட்டார். அவரது உடலை தகனம் செய்ய அவருக்கு உரிமை உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல உப்பனாறு மேல்கரை வழியாக செல்வதற்கு உள்ள பாதை சுனாமி காலத்தில் இருந்து உடைப்பு ஏற்பட்டு சாலை வசதி இல்லாமல் போய்விட்டது.

    இதை சரி செய்ய பலமுறை நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் இன்று வரை நடைபெறவில்லை. இதனால் அந்த உடலை ரோட்டிலேயே வைத்து தகனம் செய்து விடுவோம் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்கள், இதுகுறித்து தோப்புத்துறை கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் (54) என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று மாற்று வழியில் உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்ய சென்றுள்ளார். 

    அப்போது குடிபோதையில் இருந்த துள்ளு வெட்டி அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (26) என்பவர் கிராம நிர்வாக அதிகாரியை தரக்குறைவாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததோடு, உயர் அதிகாரிகளையும் தரக்குறைவாக பேசியுள்ளார். 

    இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நாகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பத்ம சேகர், தலைமை காவலர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இறந்தவர் உடலை மாற்று பாதையில் எடுத்துச் சென்று தகனம் செய்வதற்கு போலீசார் ஏற்பாடு செய்தனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மழை நீர் தேங்கியுள்ளது இதுவே முதன்முறையாகும்.
    தூத்துக்குடி:

    நெல்லை மற்றும்  திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய இடைவிடாத பலத்த கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கன மழையினால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

    கனமழை காரணமாக திருச்செந்தூர் கோவிலுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது. பக்தர்கள் கோவிலை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் தவித்து வருகின்றனர். 

    கோவிலின் உள் மற்றும் வெளி ப்ரகாரங்களில் மழை நீர் வரத்து அதிகரித்து கொண்டேயிருப்பதால் ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மழை நீர் தேங்கியுள்ளது இதுவே முதன்முறையாகும்.

    ஊதிய பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தினர் நேற்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பணிமனை தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். மத்திய சங்க துணைத்தலைவர் சரவணன் கலந்து கொண்டு பேசினார்.

    ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு பண பலன்கள், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு ஆகியவற்றை உடனே அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் ஓய்வு பெற்ற ஊழியர் சங்க தலைவர் கணபதி, செயலாளர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல வேதாரண்யம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வேதாரண்யம் போக்குவரத்து கிளை செயலாளர் கவுதமன் தலைமை தாங்கினார்.

    ஊதிய பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் கோவை சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    ×