என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அருகே முன்விரோதம் காரணமாக மீனவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மணியன் தீவு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 57). மீனவர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் மணிராஜா (43) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று சோமசுந்தரம் இருசக்கர வாகனத்தில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த போது மணிராஜா வழிமறித்து தரக்குறைவாக திட்டி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சோமசுந்தரத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்டிக்கடைக்காரர் மணிராஜாவை கைது செய்தனர்.
    கே.பி.சி நகர் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு காய்ச்சல் இருந்துள்ளது.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் பகுதியில் தொடர்ந்து  மழை பெய்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கி நிற்கின்றது. பொதுமக்கள் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கே.பி.சி நகர் பகுதியை  சேர்ந்த 8 வயது சிறுமிக்கு காய்ச்சல் இருந்துள்ளது.

    இதனால் திருப்பூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை  செய்தனர். அப்போது அந்த சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    டெங்கு பரவுவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.எனவே சுகாதாரப்பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    நாகை:

    தென்தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

    இதற்கிடையே, கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், புதுக்கோட்டை, அரியலூர், தேனி, தென்காசி, பெரம்பலூர், விருதுநகர்  மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை எதிரொலியால் நாகை, கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுகிறது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

    மேலும் திருச்சி, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை,  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
    தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 29ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற கூட்டத் தொடரை முன்னிட்டு, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற வியூகக் குழு கூட்டம் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர்  சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் குளிர்கால கூட்டத்தொடரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்ப  ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். ஆதார விலைக்கு தனிச்சட்டம், கொரோனா இழப்பீடு உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    வேதாரண்யத்தில் கிராம நிர்வாக அதிகாரியை தரக்குறைவாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் காவல் சரகத்திற்கு உட்பட்ட துள்ளு வெட்டி அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்த சாவித்திரி (வயது 50) என்பவர் இறந்துவிட்டார். அவரது உடலை தகனம் செய்ய அவருக்கு உரிமை உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல உப்பனாறு மேல்கரை வழியாக செல்வதற்கு உள்ள பாதை சுனாமி காலத்தில் இருந்து உடைப்பு ஏற்பட்டு சாலை வசதி இல்லாமல் போய்விட்டது.

    இதை சரி செய்ய பலமுறை நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் இன்று வரை நடைபெறவில்லை. இதனால் அந்த உடலை ரோட்டிலேயே வைத்து தகனம் செய்து விடுவோம் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்கள், இதுகுறித்து தோப்புத்துறை கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் (54) என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று மாற்று வழியில் உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்ய சென்றுள்ளார். 

    அப்போது குடிபோதையில் இருந்த துள்ளு வெட்டி அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (26) என்பவர் கிராம நிர்வாக அதிகாரியை தரக்குறைவாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததோடு, உயர் அதிகாரிகளையும் தரக்குறைவாக பேசியுள்ளார். 

    இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நாகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பத்ம சேகர், தலைமை காவலர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இறந்தவர் உடலை மாற்று பாதையில் எடுத்துச் சென்று தகனம் செய்வதற்கு போலீசார் ஏற்பாடு செய்தனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மழை நீர் தேங்கியுள்ளது இதுவே முதன்முறையாகும்.
    தூத்துக்குடி:

    நெல்லை மற்றும்  திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய இடைவிடாத பலத்த கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கன மழையினால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

    கனமழை காரணமாக திருச்செந்தூர் கோவிலுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது. பக்தர்கள் கோவிலை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் தவித்து வருகின்றனர். 

    கோவிலின் உள் மற்றும் வெளி ப்ரகாரங்களில் மழை நீர் வரத்து அதிகரித்து கொண்டேயிருப்பதால் ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மழை நீர் தேங்கியுள்ளது இதுவே முதன்முறையாகும்.

    ஊதிய பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தினர் நேற்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பணிமனை தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். மத்திய சங்க துணைத்தலைவர் சரவணன் கலந்து கொண்டு பேசினார்.

    ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு பண பலன்கள், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு ஆகியவற்றை உடனே அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் ஓய்வு பெற்ற ஊழியர் சங்க தலைவர் கணபதி, செயலாளர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல வேதாரண்யம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வேதாரண்யம் போக்குவரத்து கிளை செயலாளர் கவுதமன் தலைமை தாங்கினார்.

    ஊதிய பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் கோவை சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    தக்கலையில் இறைச்சி கடையில் நூதன முறையில் ரூ.38 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    பத்மநாபபுரம்:

    தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி கரும்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜான் சத்தியராஜ் (வயது 46). இவர் தக்கலை பேட்டை சந்தை சாலையில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் மதியம் காரில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்களில் ஒருவர் காரில் இருந்து இறங்கி இறைச்சி கடைக்கு சென்று, ‘நான் இத்தாலி நாட்டை சேர்ந்தவன்’ என ஆங்கிலத்தில் பேசினார். அத்துடன் ரூ.500-க்கு சில்லறைகளை கொடுத்து விட்டு 500 ரூபாய் நோட்டு கேட்டார். உடனே, ஜான்சத்தியராஜ் மேஜையை திறந்து அங்கு இருந்த பணத்தில் இருந்து ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்தார். இதை அந்த வாலிபர் நோட்டமிட்டு கொண்டிருந்தார்.

    தொடர்ந்து அந்த வாலிபர் ஒரு சிறிய கோழியை இறைச்சியாக வெட்டி கொடுக்கும்படி கேட்டார். அதன்படி ஜான்சத்தியராஜ் ஒரு சிறிய கோழியை எடைப்போட்டு இறைச்சியாக வெட்டத்தொடங்கினார்.

    இறைச்சியை வெட்டி முடித்த பின்பு திரும்பி பார்த்த போது அந்த வாலிபரை காணவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த ஜான் சத்தியராஜ் கடையில் இருந்த மேஜையை திறந்து பார்த்த போது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.38 ஆயிரத்தையும் காணவில்லை. பணத்தை அந்த வாலிபர் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த வாலிபர் இறைச்சி கடையின் உள்ளே புகுந்து பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வாலிபரை தேடி வருகிறார்கள். மேலும், அந்த வாலிபர் வெளிநாட்டை சேர்ந்தவரா? அல்லது வடமாநில நபரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகையில் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா ? என போலீசாரும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாகை நகர் பகுதியில் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெரிய கடைத்தெரு பகுதியில் சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவரிடம் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் அந்தணப்பேட்டையை சேர்ந்த முகமது பயாஸ் (வயது 26) என்பதும், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளுக்கு வினியோகம்செய்ய மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது பயாசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 10 கிலோ புகையிலை பொருட்களையும் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
    நேற்றிரவு மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
    திருப்பூர்:

    திருப்பூரில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் பொதுமக்களை மீட்டனர்.    

    கடந்த 2 நாட்களாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மழை பெய்யவில்லை.

    இந்தநிலையில் நேற்றிரவு மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

    திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையானது சகதிக்காடாக மாறியது. இதன் காரணமாக இன்று காலை சந்தைக்கு சென்ற பொதுமக்கள், வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். 
    விபத்தில் நண்பர்கள் இறந்த துக்கத்தில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    நாகை மாவட்டம் நாகூர் பெருமாள் மேலவீதியை சேர்ந்தவர் சந்தனசாமி. இவருடைய மகன் இன்பராஜ் (வயது 22). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பர்களான நாகூரை சேர்ந்த தனுஷ், ஏபினேஷ் ஆகியோர் கடந்த 7-ந் தேதி வேளாங்கண்ணி அருகே நடந்த சாலை விபத்தில் பலியானார்கள். இதனால் துக்கத்தில் இருந்து வந்த இன்பராஜ் நேற்று முன்தினம் இரவு குளிர்பானத்தில் தலைக்கு பூசும் சாயத்தை(டையை) கலந்து குடித்துள்ளார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்பராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக டிரக்கில் பயணித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
    ஐசால்:

    மிசோரம் மாநிலம், காஜால் மாவட்டம், ரபங் கிராமத்தை நோக்கி பயணிகளை ஏற்றி வந்த டிரக், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த வாகனத்தில் இருந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ரபங் கிராமத்தில் உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சுமார் 19 பேர் டிரக்கில் வந்ததாகவும், பிரேக் செயலிழந்து விபத்து ஏற்பட்டதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார்.
    ×