என் மலர்
நாகப்பட்டினம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பரப்பில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீன்வளத்துறை மூலம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. மறு அறிவிப்பிற்காக காத்திருந்த மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.
இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள 27 மீனவ கிராமத்தை சேர்ந்த 500 விசைப்படகு மற்றும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 5 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர்.
கடல் சீற்றம் சற்று குறைந்த நிலையில் மீன்வளத்துறையினரிடம் நேற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி சீட்டு பெற்று நேற்று மாலை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்களுக்கு தேவையான வலைகளை வெயிலில் காய வைத்து பராமரிப்பு செய்து வரும் மீனவர்கள் டீசல், ஐஸ் கட்டிகள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை படகுகளில் சேகரித்து சென்றனர்.
ஏற்கனவே நவம்பர் மாதத்தில் 12 நாட்கள் கடலுக்கு செல்லாமல் இருந்த நிலையில் மேலும் 5 நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லும் போது தங்களுக்கு தேவையான மீன்கள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

வேதாரண்யம்:
வேதாரண்யம் காவல் சரகத்திற்கு உட்பட்ட துள்ளு வெட்டி அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்த சாவித்திரி (வயது 50) என்பவர் இறந்துவிட்டார். அவரது உடலை தகனம் செய்ய அவருக்கு உரிமை உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல உப்பனாறு மேல்கரை வழியாக செல்வதற்கு உள்ள பாதை சுனாமி காலத்தில் இருந்து உடைப்பு ஏற்பட்டு சாலை வசதி இல்லாமல் போய்விட்டது.
இதை சரி செய்ய பலமுறை நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் இன்று வரை நடைபெறவில்லை. இதனால் அந்த உடலை ரோட்டிலேயே வைத்து தகனம் செய்து விடுவோம் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்கள், இதுகுறித்து தோப்புத்துறை கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் (54) என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று மாற்று வழியில் உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்ய சென்றுள்ளார்.
அப்போது குடிபோதையில் இருந்த துள்ளு வெட்டி அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (26) என்பவர் கிராம நிர்வாக அதிகாரியை தரக்குறைவாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததோடு, உயர் அதிகாரிகளையும் தரக்குறைவாக பேசியுள்ளார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நாகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பத்ம சேகர், தலைமை காவலர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இறந்தவர் உடலை மாற்று பாதையில் எடுத்துச் சென்று தகனம் செய்வதற்கு போலீசார் ஏற்பாடு செய்தனர்.






