search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆற்றில் குதித்த போலீஸ்காரர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்
    X
    ஆற்றில் குதித்த போலீஸ்காரர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்

    சாராய வியாபாரியை பிடிக்க ஆற்றில் குதித்த போலீஸ்காரர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்

    தப்பி ஓடிய சாராய வியாபாரியை பிடிக்க ஆற்றில் குதித்த போலீஸ்காரர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
    நாகை:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே வெட்டாறு செல்கிறது. அங்கு உள்ள சுடுகாடு பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக நேற்று முன்தினம் மாலை கீழ்வேளூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ்காரர் மாஸ்கோ (வயது 32) உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    போலீசாரை பார்த்ததும் சாராய வியாபாரி தனராஜ் (21) என்பவர் அங்கிருந்து தப்பி ஓடி அந்த பகுதியில் உள்ள வெட்டாற்றில் குதித்துள்ளார்.

    இதை கண்ட போலீஸ்காரர் மாஸ்கோ, தனராஜை பிடிப்பதற்காக ஆற்றில் குதித்துள்ளார். அப்போது கனமழையால் ஆற்றில் அதிக அளவில் சென்ற தண்ணீரில் போலீஸ்காரர் அடித்து செல்லப்பட்டு, முட்புதருக்குள் சிக்கி கொண்டார். இதை கண்ட மற்ற போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், கீழ்வேளூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் போலீஸ்காரர் உயிருடன் மீட்கப்பட்டார்.
    Next Story
    ×