என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தொழிலாளியை தாக்கியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆதனூர் ஊராட்சியில் பம்பு பிட்டராக வேலை பார்ப்பவர் உலகநாதன் (40). இவர் அந்த ஊராட்சியில் அண்டர்காடு கிழக்கு கிராமத்தில் வசித்து வருகிறார்.

    இவரது நண்பர் பாலசுப்பிரமணியன் என்பவர் ஆதனூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவரும் பம்பு பிட்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் அண்டர்காடு கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (32) என்பவர் கடந்த மாதம் உலகநாதனிடம் தகராறு செய்துவிட்டு வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டார். மீண்டும் 4.12.21 இரவு ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.

    மீண்டும் 5ம் தேதி உலகநாதனை தரக்குறைவாக பேசி கத்தியை காட்டி மிரட்டி வீட்டின் மீது கல்வீசி தாக்கியுள்ளார்.

    இதில் உலகநாதன் வீட்டின் ஜன்னல் கதவுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து உலகநாதன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர் வழக்கு பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர்.
    நாகையில் குளத்தில் கால்நடை மருத்துவ பெண் உதவியாளர் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வெளிப்பாளையம்:

    நாகை வெளிப்பாளையம் சுப்பையா முதலியார் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி உமாமகேஸ்வரி(வயது 47). இவர், வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் கால்நடை மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலையில் உமாமகேஸ்வரி, வெளிப்பாளையம் சிவன் கோவில் குளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரது உறவினர்களுக்கும், வெளிப்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உமாமகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாமகேஸ்வரி குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகையில், கால்நடை மருத்துவ பெண் உதவியாளர், குளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பொறையாறு அருகே 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    பொறையாறு அருகே திருக்கடையூர் திருமெய்ஞானம் வடக்கு தெருவைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவருடைய நாய் அதே தெருவைச் சேர்ந்த காமராஜ் என்பவரை கடித்து விட்டதாக கூறி இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் மணிகண்டன் (வயது 21), காமராஜ், சதீஷ், தினேஷ், சசிகுமார் ஆகியோர் சேர்ந்து நம்பிராஜன், அவருடைய மனைவி கவிதா, சகோதரர் கணேசன் உள்ளிட்டவர்களை அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த நம்பிராஜன் குடும்பத்தார் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து பொறையார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் வழக்குப்பதிவு செய்து. மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தார்.

    நாகையை அடுத்த பாப்பாகோவில் ஏறுஞ்சாலை பகுதியில் நாகப்பட்டினம் நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தீவிர வாகன சோதனைக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் நாகையை அடுத்த பாப்பாகோவில் ஏறுஞ்சாலை பகுதியில் நாகப்பட்டினம் நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் ஒரு மூட்டையுடன் வந்துள்ளனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்கள் கொண்டுவந்த மூட்டையை சோதனையிட்டனர். மூட்டையில் 21 கிலோ கஞ்சா இருப்பது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து மூவரிடம் விசாரணை மேற்கொண்டதில் வேதாரண்யத்தை அடுத்த நாலுவேதபதி சேர்ந்த ரெங்கநாதன், கருப்பம்புலம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் தோப்புத்துறை சேர்ந்த ஹலித் என்பது தெரியவந்தது.

    இவர்கள் வேதாரண்யத்தில் இருந்து நாகையில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    நாகையில் புதிய கடற்கரை பொலிவிழந்து காணப்படுவதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
    வெளிப்பாளையம்:

    வங்க கடலோரம் அமைந்துள்ள எழில்மிகு நகரமாக நாகை திகழ்கிறது. நாகை நகரத்தையொட்டி சிக்கல், நாகூர், வேளாங்கண்ணி போன்ற ஆன்மிக தலங்கள் அமைந்துள்ளன. இதன் காரணமாக நாகை நகர பகுதிக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

    நாகை காடம்பாடி பகுதியில் புதிய கடற்கரை அமைந்து உள்ளது. பொழுதுபோக்கு தலமாக விளங்கும் புதிய கடற்கரைக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினசரி வருகிறார்கள். நடைபயிற்சி ேமற்கொள்வதற்கும் பலர் வருகின்றனர்.

    இந்த நிலையில் புதிய கடற்கரை கடந்த சில மாதங்களாக பொலிவிழந்து காணப்படுகிறது. கன மழையால் கடற்கரையில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்து காணப்படுகின்றன. ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சத்துடனயே இங்கு வர வேண்டி உள்ளது.

    பொதுவாக மாலை நேரங்களில் நாகை புதிய கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது கடற்கரை உரிய பராமரிப்பின்றி இருப்பதால் மக்கள் வருவது குறைந்து விட்டது. மின் விளக்குகள் ஒளிராததால், சமூக விரோதிகளின் கூடாரமாக நாகை புதிய கடற்கரை மாறி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    குழந்தைகளை இங்கு அழைத்து வருவதற்கு அச்சமாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே பொலிவிழந்து காணப்படும் புதிய கடற்கரையில் உரிய முறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு மக்கள் அச்சமின்றி வந்து செல்லும் வகையில் கடற்கரையை மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் முழுவதும் வடிந்த பிறகு பயிர் சேதம் குறித்து தெரிவிக்கப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கன மழையால் மூழ்கியுள்ள நெற்பயிர்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட கருங்கண்ணி, மேலப்பிடாகை, வாழக்கரை, மடப்புரம், பாலக்குறிச்சி, இறையான்குடி சோழவித்தியாபுரம் ஆகிய கிராமங்களில் தற்போது பெய்த கனமழையால் தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர் பாதிப்புகளை 2-வது முறையாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, வருவாய்த்துறை இணைந்து கணக்கெடுத்து வருகிறது.

    முதலில் பெய்த கனமழையில் 14 ஆயிரம் 500 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்ததாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தற்போது பெய்த மழையில் 51 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. ஆனால் வயல்களில் தேங்கி உள்ள மழைநீர் முழுவதுமாக வடிந்த பிறகு தான் சரியான பயிர் சேதம் குறித்து தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    இதை தொடர்ந்து நாகூர் வள்ளியம்மை நகர், அமிர்தா நகர், அம்பேத்கர் நகர் ஆகிய இடங்களில் நடந்த மருத்துவ முகாம்களையும், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மீன்வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன், முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன், நகராட்சி பொறியாளர் ஜெயகிருஷ்ணன், தாசில்தார் ஜெயபால், நாகூர் நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    நாகையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எய்ட்ஸ் நோயாளிகளை குற்றவாளிகள் போல் பார்க்க கூடாது என கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.
    நாகப்பட்டினம்:

    நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இணை இயக்குனர் (காசநோய்) ராஜா வரவேற்றார். இதில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    எய்ட்ஸ் எனப்படும் பால்வினை நோய் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பாதுகாப்பற்ற உடலுறவால் பரவுகிறது. இதை தவிர பரிசோதனை செய்யப்படாத ரத்தம் செலுத்துவதன் வாயிலாகவும் பரவுகிறது.

    எனவே எய்ட்ஸ் நோய் என்றால் என்ன என்று கூட தெரியாதவர்களுக்கு சில காரணங்களால் பரவுகிறது. எனவே எய்ட்ஸ் நோயாளிகளை குற்றவாளிகள் போல் பார்க்க கூடாது. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

    இந்த நோய் குறித்து அனைத்து மருத்துவமனைகளிலும் ஆலோசனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு சாதாரணமான முறையில் பரவாது. கருவுற்ற காலத்தில் இருந்து தாய்மார்கள் குழந்தை பெற்ற பின் ஒன்றரை ஆண்டுகள் தாய்சேய் நல பதிவேட்டில் அனைத்து தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.

    ஏ.ஆர்.டி. எனப்படும் கூட்டு மருந்து சிகிச்சை மூலம் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. கிருமி இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். முடிவில் திட்ட இயக்குனர் சக்திவேல் நன்றி கூறினார்.

    பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை தமிழக அரசு குறைக்கக்கோரி நாகையில், பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வெளிப்பாளையம்:

    நாகை அவுரித்திடலில் பா.ஜ.க சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு நாகை மாவட்ட பட்டியல் அணி ்தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். பா.ஜ.க மாவட்ட தலைவர் நேதாஜி முன்னிலை வகித்தார்.

    இதில் மாநில செயலாளர் தங்க.வரதராஜன், நகரத்தலைவர் இளஞ்சேரலாதன், நகர பொதுச்செயலாளர் அறிவழகன் மற்றும் அமைப்பு சாரா மாவட்ட துணைத்தலைவர் ரவிச்சந்திரன், தொழிலாளர் பிரிவு மாவட்ட தலைவர் இளமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை குறைத்துள்ள நிலையில், தமிழக அரசு வாட் வரியை குறைக்கவில்லை. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
    கடல் சீற்றம் சற்று குறைந்த நிலையில் மீன்வளத்துறையினரிடம் நேற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி சீட்டு பெற்று நேற்று மாலை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
    நாகப்பட்டினம்:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பரப்பில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீன்வளத்துறை மூலம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. மறு அறிவிப்பிற்காக காத்திருந்த மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.

    இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள 27 மீனவ கிராமத்தை சேர்ந்த 500 விசைப்படகு மற்றும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 5 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

    கடல் சீற்றம் சற்று குறைந்த நிலையில் மீன்வளத்துறையினரிடம் நேற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி சீட்டு பெற்று நேற்று மாலை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்களுக்கு தேவையான வலைகளை வெயிலில் காய வைத்து பராமரிப்பு செய்து வரும் மீனவர்கள் டீசல், ஐஸ் கட்டிகள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை படகுகளில் சேகரித்து சென்றனர்.

    ஏற்கனவே நவம்பர் மாதத்தில் 12 நாட்கள் கடலுக்கு செல்லாமல் இருந்த நிலையில் மேலும் 5 நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லும் போது தங்களுக்கு தேவையான மீன்கள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
    வேதாரண்யம் அருகே விபத்தில் படுகாயம் அடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி நயனார் குத்தகை பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் சுரேஷ் (வயது38). விவசாயி. இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் நெய்விளக்கு கடைத்தெருவில் இருந்து மோட்டார் சைக்கிளில் அண்டர்காட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் உள்ள பனை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுரேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகலட்சுமி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பத்மசேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தப்பி ஓடிய சாராய வியாபாரியை பிடிக்க ஆற்றில் குதித்த போலீஸ்காரர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
    நாகை:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே வெட்டாறு செல்கிறது. அங்கு உள்ள சுடுகாடு பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக நேற்று முன்தினம் மாலை கீழ்வேளூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ்காரர் மாஸ்கோ (வயது 32) உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    போலீசாரை பார்த்ததும் சாராய வியாபாரி தனராஜ் (21) என்பவர் அங்கிருந்து தப்பி ஓடி அந்த பகுதியில் உள்ள வெட்டாற்றில் குதித்துள்ளார்.

    இதை கண்ட போலீஸ்காரர் மாஸ்கோ, தனராஜை பிடிப்பதற்காக ஆற்றில் குதித்துள்ளார். அப்போது கனமழையால் ஆற்றில் அதிக அளவில் சென்ற தண்ணீரில் போலீஸ்காரர் அடித்து செல்லப்பட்டு, முட்புதருக்குள் சிக்கி கொண்டார். இதை கண்ட மற்ற போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், கீழ்வேளூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் போலீஸ்காரர் உயிருடன் மீட்கப்பட்டார்.
    ஒமிக்ரான் பரவலை தடுக்க வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு 7 நாள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    உலகமெங்கும் மிரட்டிய கொரோனா வைரஸ் தொற்று இப்போது உருமாறி, புதிய வகை ஒமிக்ரான் தொற்றாக பரவ தொடங்கி உள்ளது. ஒமிக்ரான் கொரோனா வீரியம் மிக்கது என்றும், இதன் பாதிப்பு முந்தைய பாதிப்பை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கணித்து உள்ளனர்.

    இந்தநிலையில் கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேரளாவில் ஒமிக்ரான் கொரோனா பரவல் இல்லை. என்றாலும் மாநிலத்தில் புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து கேரளா வருவோர் 7 நாள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும்.

    ஒமிக்ரான் வைரஸ்

    குறிப்பாக தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்காளதேசம், சீனா, மொரீசியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் உள்பட அனைவரும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×