என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருவதால் நாகை மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தின் கடலோர கிராமங்களை சூறையாடி பல ஆயிரம் உயிர்களை பறித்து சென்ற சுனாமியின் 17ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப் பேரலையில் நாகை மாவட்டத்தில் 6,060 பேர் உயிரிழந்தனர்.

    சுனாமி சூறையாடி விட்டுச் சென்று 17 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது என்றாலும் தமிழகத்தின் ஒவ்வொரு கடலோர கிராமத்திலும் சுனாமி ஏற்படுத்திச் சென்ற சுவடுகள் இன்னமும் மாறவில்லை.

    நாகை, வேளாங்கண்ணி. மாவட்டத்தில் கடற்கரை மணற்பரப்பு முழுவதும் கொத்து கொத்தாக உயிரிழந்தவர்களை அடுக்கி வைத்திருந்ததை இப்போது நினைத்தாலும் உயிர் பதைபதைக்கிறது.

    உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி சுனாமி நினைவு தின அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நாகை மாவட்டம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி, நாகை ஆரிய நாட்டு தெரு, செருதூர், நாகூர், நம்பியார்நகரில் சுனாமியின் உயிர் நீத்தவர்களின் படங்களுக்கு அவர்களது உறவினர்கள் படையலிட்டு பால் ஊற்றி, மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    இதைப்போல் கீச்சாங்குப்பம் கிராமத்தில் நினைவு ஸ்தூபி முன்பு சுனாமியில் உயிர் நீத்தவர்களுக்கு, உறவினர்கள் திதி கொடுத்து அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அக்கரைப்பேட்டை மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் மவுன ஊர்வலம் சென்று சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருவதால் நாகை மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    சுனாமி தாக்கியதில் உயிரிழந்தோரின் உறவினர்கள், மீனவர்கள் இன்று கடற்கரையில் குவிந்து கடலுக்குள் பாலை ஊற்றி பூக்களை தூவி வழிபாடு நடத்தினர். மறைந்த உறவினர்களுக்கு பிடித்த உணவுப்பண்டங்களை வைத்தும் படையலிட்டனர். மீன்பிடி இறங்குதளத்தில் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் மீனவர்கள், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.
    கிறிஸ்துமஸ் விழாவை யொட்டி உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இப்பேராலயம் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. இங்கு ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா நேற்று இரவு 11 மணிக்கு திருப்பலியுடன் தொடங்கியது. வேளாங் கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய வளாகத்தில் உள்ள சேவியர் திடலில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து மறையுரை, கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், கொங்கனி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.

    பேராலய அதிபர் இருதயராஜ் கிருஸ்துமஸ் திருப்பலிகளை நிறைவேற்றினார். பங்குத்தந்தை அற்புதராஜ் மற்றும் உதவிப் பங்குத் தந்தைகள் பூஜைகளை நடத்தினர். திருப்பலிகளின் நிறைவில் இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ் குழந்தை இயேசு சொரூபத்தை பக்தர்களுக்குக் காண்பித்தார்.

    அப்போது அனைவரும் மண்டியிட்டு இயேசு துதி வாசகங்களை ஜெபித்தனர். பேராலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வாழ்த்துச் செய்தி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் கிருஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

    கிறிஸ்துமஸ் பண்டி கையையொட்டி பேராலய கோபுரங்கள் மட்டுமின்றி வேளாங்கண்ணி நகரமே மின்னொளி பந்தலில் ஜொலித்தது.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் பேராலய விண்மீன் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் சேவியர் திடலில் வழிபாடு நடத்தப்பட்டது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

    கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் மீன்கள் சிக்கியது. இந்த மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஆண்டு தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான மீனவர்கள் கோடியக்கரையில் தங்கி மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை காரணமாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் 10 நாட்களுக்கும் மேலாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடந்ததால் வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டு வந்தனர்.

    மழை நின்றவுடன் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் கோடியக்கரையில் இருந்து ேநற்று முன்தினம் நூற்றுக்கணக்கான பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள், மீன்களை பிடித்து கொண்டு நேற்று காலையில் கரைக்கு திரும்பினர்.

    மீனவர்கள் வலையில் திருக்கை, மட்லீஸ், வாவல், காலா, நண்டு உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் சிக்கின. இந்த மீன்களை வாங்க கடற்கரையில் வியாபாரிகள் குவிந்தனர். மீன்களை வாங்கிய வியாபாரிகள், அதை கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்போது நாள் ஒன்றுக்கு 2 டன் திருக்கை, மட்லீஸ் மீன்களும், மற்ற மீன்கள் 1 டன்னும் சிக்குவதால் மீனவர்கள் தெரிவித்தனர். நேற்று காலா மீன் ஒரு கிலோ ரூ. 550-ம், வாவல் மீன் ரூ.900-க்கும் மட்லீஸ் மீன் ரூ.100-க்கும், திருக்கை ரூ.150-க்கும் நீலக்கால் நண்டுரூ.850-க்கும், புள்ளி நண்டுரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    அதிக அளவில் சிக்கிய மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    வேதாரண்யத்தில் ஜனவரி மாதத்தில் தொடங்க வேண்டிய உப்பு உற்பத்திக்கான ஆயத்த பணிகள் தற்போது முன்கூட்டியே டிசம்பர் மாதத்தில் தொடங்கி உள்ளது.
    வேதாரண்யம்:

    தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்ததாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது. உப்பு உற்பத்தி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இங்கு ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    வேதாரண்யத்தில் உற்பத்தியாகும் உப்பு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    வடகிழக்குப்பருவ மழை காலத்தில் வேதாரண்யம் பகுதியில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்குகிறது. இதன் காரணமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் உப்பு உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் மழையால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது மழை ஓய்ந்து வெயில் அடித்து வருவதால் உப்பள பாத்திகளில் தேங்கிய மழை நீர் வடிந்து வருகிறது.

    இதனால் ஜனவரி மாதத்தில் தொடங்க வேண்டிய உப்பு உற்பத்திக்கான ஆயத்த பணிகள் தற்போது முன்கூட்டியே டிசம்பர் மாதத்தில் தொடங்கி உள்ளது. இந்த பணிகளில் உப்பு உற்பத்தியாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    மழையால் பாதிக்கப்பட்ட உப்பு பாத்திகளை சரி செய்தல், வரப்பு அமைத்தல், வாய்க்கால் சீர் செய்தல், தண்ணீர் இறைப்பதற்கு மின்மோட்டார் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்து முழுவீச்சில் உப்பு உற்பத்தி ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
    நாகை அருகே வேகத்தடையில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அருகே தெற்கு பொய்கைநல்லூர் நடுத்தெருவை சேர்ந்தவர் வைரக்கண்ணு மகன் மணிமாறன் (வயது21). அதே தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ஹரிஹரன்(21).

    மணிமாறன், ஹரிஹரன் ஆகிய இருவரும் தனது நண்பர் மனோஜ்குமாருடன் இன்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் தெற்கு பொய்கைநல்லூர் பைலட் கடை அருகே சென்றபோது வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே மணிமாறன் இறந்து விட்டார்.

    படுகாயமடைந்த ஹரிஹரன் மற்றும் அவரது நண்பரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஹரிஹரனும் இறந்தார். மனோஜ்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெறும். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து திரளானோர் கலந்து கொள்வார்கள்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலயத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெறும். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து திரளானோர் கலந்து கொள்வார்கள். இதை முன்னிட்டு வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் ஏசு பிறப்பை குறிக்கும் விதமாக குடில் அமைக்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயம் அருகே உள்ள விண்மீன் ஆலயத்தில் குடில் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    நாகையில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழுடன், ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன.
    வெளிப்பாளையம்:

    நாகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு அமெச்சூர் கபடி கழகம் மாவட்ட தலைவர் ஆனந்த வடிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி செயலாளர் பரமேஸ்வரன், பொருளாளர் சந்திரன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மனோகரன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    போட்டியில் ஆண்களுக்கான சீனியர், ஜூனியர் 85 கிலோ மற்றும் 70 கிலோ எடை பிரிவில் 50 அணிகள் கலந்து கொண்டன. பெண்களுக்கான சீனியர், ஜூனியர் 75 கிலோ மற்றும் 60 கிலோ எடை பிரிவில் 10 அணிகள் கலந்து கொண்டன.

    பெண்களுக்கான ஜூனியர் பிரிவில் நடந்த இறுதி போட்டியில் நாகை கீச்சாங்குப்பம் அணியும், திருப்பூண்டி அணியும் மோதின. இதில் கீச்சாங்குப்பம் அணி அதிக புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றது. இதேபோல ஆண்கள் ஜூனியர் பிரிவில் ஆற்காட்டுதுறை அணியும், சோழவித்யாபுரம் அணியும் மோதின. இதில் ஆறுகாட்டுத்துறை அணி வெற்றி பெற்றது.

    போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழுடன், ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றன.

    கீழ்வேளூர் கடைத்தெருவில் மயங்கி கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் கடைத்தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மயங்கி கிடந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார்.இதுகுறித்து கீழ்வேளூர் கிராம நிர்வாக அலுவலர் அருண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த பெங்களூருவை சேர்ந்த சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந்தான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹரமாவு ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த தயாளன் மகன் கெல்வின்(வயது 12). இவன் அங்கு உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் தனது தாய் ஞானமணி மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தான்.

    பின்னர் வேளாங்கண்ணி வெள்ளையாற்றின் முகத்துவாரத்தில் கெல்வின் குளித்தபோது ஆற்றில் தண்ணீரின் வேகத்தில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு மூழ்கினான். இதை பார்த்த உறவினர்கள் சத்தம் போட்டனர். உடனே அருகில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் கடலில் இறங்கி தேடினர். ஆனாலும் அவன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் பிரதாபராமபுரம் கடற்கரையில் கெல்வின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கெல்வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    வேளாங்கண்ணி அருகே ரூ.1 லட்சம் திருடிய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் தெற்குதெரு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் ரமேஷ் (வயது 30). இவர் திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை அருகே பிராய்லர் கோழி கடை நடத்தி வருகிறார். இங்கிருந்து சிக்கல், நாகை, நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில்லறை கடைகளுக்கு சரக்கு வேன் மூலம் கோழிகளை விற்பனை செய்வது வழக்கம். இவரிடம் திருப்பூண்டி அருகே உள்ள சிந்தாமணி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (33) என்பவர் சரக்கு வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். மேலும், முருகானந்தம், சிவானந்தம், கார்த்திகேயன் ஆகியோர் கோழிகளை வேனில் ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி வழக்கம் போல் கோழிகளை கடைகளில் இறக்கி விட்டுவிட்டு, அதற்கான தொகை ரூ. 1 லட்சத்து 2 ஆயிரத்து 420-ஐ வசூல் செய்து கொண்டு சரக்குவேனில் வந்துள்ளனர். இவர்கள் பரவை கடைத்தெரு அருகே வேனை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றுள்ளனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வேனில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்தை காணவில்லை. இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் டிரைவர் மணிகண்டன், பணத்தை எடுத்துச் சென்று அருகில் மண்ணில் புதைத்து வைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் திருடிய ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
    நாகையில் நண்பர்களுடன் குளிக்கச்சென்ற பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
    நாகப்பட்டினம்:

    நாகை சால்ட் ரோடு பகுதியை சேர்ந்த செல்வமணி மகன் செல்வராகவன்(வயது 15). நாகையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். செல்வராகவன் மற்றும் அவனுடைய நண்பர்கள் சிலர் நேற்று முன்தினம் வெளிப்பாளையம் பகுதியில் உள்ள அக்கரை குளத்திற்கு குளிப்பதற்காக சென்றனர்.

    அப்போது நண்பர்களுடன் செல்வராகவன் குளத்தின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு நீந்தி சென்றான். பாதி தூரம் சென்றபோது தொடர்ந்து செல்வராகவனால் நீந்த முடியாததால் குளத்தில் மூழ்கினான்.

    இதையடுத்து நண்பர்கள் மற்றும் அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் செல்வராகவனை தேடினர். ஆனால் அவனை காணவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தீயணைப்பு படை வீரர்கள் குளத்தில் மூழ்கிய செல்வராகவனை தீவிரமாக தேடினர்.

    நீண்ட நேரத்துக்குப் பிறகு செல்வராகவன் இறந்த நிலையில் மீட்கப்பட்டான். அவனுடைய உடல் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி இறந்தது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
    வேளாங்கண்ணியில் மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் புத்தூர் தெற்குதெரு பகுதியை சேர்ந்தவர் பேபி (வயது 64). இவர் தனது மகன் அறிவொளி மற்றும் மருமகள், பேரக்குழந்தைகளுடன் கடந்த 12-ந்தேதி வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்தனர்.

    பின்னர் இவர்கள் இரவு 7 மணியளவில் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். கண்காணிப்பு கோபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென பேபியின் கழுத்தில் கிடந்த 13½ பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், திருடன், திருடன் என சத்தமிட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கடற்கரை மணலில் பேபி அணிந்திருந்த சங்கிலியில் இருந்த தாலி, குண்டு, காசு உள்ளிட்ட 3½ பவுன் நகை கீழே கிடந்துள்ளது.

    பேபியிடம் மர்ம நபர்கள் சங்கிலியை பறித்த போது இவைகள் சங்கிலியில் இருந்து கீழே விழுந்துள்ளது. மீதமிருந்த 10 பவுன் சங்கிலியுடன் மர்ம நபர்கள் தப்பி ஓடி உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×