என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    திருமருகலை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி தென்னமரக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைப்பெற்றது.

    இதற்கு கட்சியின் மூத்த நிர்வாகி கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் சந்திரசேகர் வரவேற்றார்.ஒன்றிய செயலாளர் பாபுஜி கட்சியின் கொடி ஏற்றி வைத்தார்.விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் மாநாட்டை தொடக்கி வைத்தார்.

    இந்த மாநாட்டில், தென்னமரக்குடியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும், கீழப்பூதனூரில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்.

    மேலப்பூதனூரில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்,திருமருகலை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் இளைஞர் மன்ற ஒன்றிய தலைவர் பழனிவேல்,கிளை செயலாளர் முனுசாமி, கிராம சங்க செயலாளர் கலைச்செல்வன், கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தாமரைச் செல்வி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அழிந்து வரும் மண்பாண்ட தொழிலை காக்க அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    பண்டைய தமிழர்களின் வாழ்வியலுடன் இணைந்திருந்த பொருட்களில் பிரதானமானது மண்பாண்டங்கள். மேலை நாட்டு கலாச்சாரங்கள்
    மீதான பற்று காரணமாக சில ஆண்டுகளாக மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்த நிலையில் பொங்கலுக்கு மட்டும் அதன் மதிப்பு குறைவதில்லை.

    இந்நிலையில் திருமருகல் பகுதிகளில் பொங்கல் பானை மற்றும் அடுப்புகள் தயாரிக்கும் பணி மிகவும் மந்தமாகவே உள்ளது.பொங்கல் பண்டிகை 
    வருகிற 14-ம் தேதி நடைபெற உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பொங்கல் பானை அடுப்பு, சட்டி உள்ளிட்டவைகளை மண்பாண்ட தொழிலாளர்கள் செய்து தயாராக வைத்திருப்பார்கள். 

    அண்மையில் தொடர்ந்து பெய்த தொடர் மழை காரணமாக பொங்கல் பானை அடுப்பு செய்யும் பணி இந்த ஆண்டு கால தாமதமாகவே தொடங்கியது.

    இருப்பினும் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 1 நாள் மட்டும் உள்ள நிலையில் திருமருகல் ஒன்றியத்தில் திட்டச்சேரி கொந்தகை, கணபதிபுரம் திருச்செட்டாங்குடி, திருக்கண்ணபுரம், கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மண்பாண்டங்கள் செய்யும் பணியை செய்து வந்தனர்.

    இந்நிலையில் தொடர்மழை காரணமாக பொங்கல் பானை அடுப்புகள் தயாரிப்பு பணி மிகவும் மந்த நிலையில் உள்ளது.

    இந்நிலையில் இத்தொழிலை செய்து வந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தொழில் ரீதியாக எந்த வித சலுகைகளும் மானியங்களும் செய்ய முன்வராததால் பொருளாதாரத்தில் மிகவும் நலிந்த நிலையில் உள்ள இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த சிரமத்திற்கு இடையே தொழில் செய்து வருகின்றனர்

    குறிப்பாக பொங்கல் பானை, அடுப்பு, அகல்விளக்கு செய்யும் பொழுது பருவமழை பெய்ததால் கடந்த சில ஆண்டாக மண்பாண்ட தொழில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு வருவதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தங்கள் வேதனையை தெரிவித்து வந்தனர். 

    இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறும் தொழிலாளர்கள் குறைந்த அளவு பொருட்களை கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மண்பானையில் உணவு சமைத்தால் புற ஊதாக் கதிர்கள் உணவை தாக்காமல் இருப்பதாகவும் அதன் காரணமாக உணவு சத்துள்ளதாகவும் சுவையுள்ளதாகவும் இருக்கும் என்பது வாழ்வியல் உண்மை நகரத்தில் வாழும் பலர் இன்றும் மீன் குழம்பு வைக்க மண் சட்டியை தான் விரும்பி வாங்கி செல்கின்றனர். 

    மண்சட்டி, மற்றும் மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து குடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    மேலும் தைத் திருநாளான முதல் நாள் புது பானை புது அடுப்பு பயன்படுத்தி பொங்கல் செய்வது காலங்காலமாய் தமிழர்களிடையே இருந்து வரும் பழக்கம் இதனால் இந்த தொழிலை தொடர்ந்து செய்து வருகிறோம் என தொழிலாளர்கள் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் அழிந்து வரும் இந்த மண்பாண்ட தொழிலுக்கு அரசு உதவி செய்து அவர்களது வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
    தொழிலாளி வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற கொள்ளையன் பொதுமக்கள் தாக்கியதில் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை டாடா நகரை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 35) கூலித்தொழிலாளி. நேற்று இரவு இவர் மற்றும் இவரது மனைவி மலர்கொடி (26), தாயார் கண்ணம்மாள் (56) ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவில் 28 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு அங்கு வந்தார். பின்னர் அவர் கதவை உடைத்து உள்ளே புகுந்தார். சத்தம் கேட்டு காளிதாஸ் எழுந்து பார்த்தபோது அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். சுதாரித்து கொண்ட காளிதாஸ் உடனே மனைவி மலர்கொடி, தாய் கண்ணம்மாளை எழுப்பினார். பின்னர் 3 பேரும் சேர்ந்து அந்த வாலிபரை பிடித்து தாக்க தொடங்கினர். சிறிது நேரத்தில் ஒன்று திரண்ட பொதுமக்களும் வாலிபரை தெருவுக்கு இழுத்து சென்று சரமாரியமாக தாக்கினர். இதில் அவர் ரத்த காயங்களுடன் மயங்கி விழுந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த நாகை நகர போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த கொள்ளையனை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து காளிதாஸ், மலர்கொடி, கண்ணம்மாள் மற்றும் பொதுமக்கள் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    நாகை அரசு மருத்துமனைக்கு தேவையான வசதிகள் செய்துதரக்கோரி அமைச்சரிடம், நாகை எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
    நாகப்பட்டினம்:

    மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம், நாகை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இல்லாததாலும், ஸ்கேன் எடுக்கும் பிரிவு சீராக இயங்காததாலும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர்.

    பல்வேறு சிகிச்சை களுக்காக நாகப்பட்டினம் பொதுமருத்துவமனைக்கு செல்பவர்களை, பெரும்பாலும் திருவாரூர் அல்லது தஞ்சாவூர் மருத்துவமனைக்கு பரிந்துரைத்து அனுப்பிவிடும் சூழ்நிலை நிலவுகிறது. இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக முறையீடுகள் வந்த வண்ணம் உள்ளன.

    பலமுறை இதை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற பிறகும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே அமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு உரிய தீர்வு காணவேண்டும், மேலும் நாகை தொகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    உடனடியாக இதுகுறித்து விசாரிப்பதாகவும், தேவையெனில் நாகப்பட்டினத்திற்கே நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.
    வேதாரண்யத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம், மணியன்தீவு கடற்கரைக்கு தெற்கே கோடியக்காடு, முனங்காட்டுக்கு வடக்கு பகுதியில் கடற்கரையில் பிரிந்த நிலையில் சாக்குமூட்டை ஒதுங்கியிருப்பதாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கடலோர காவல் குழும போலீஸ் துணை கண்காணிப்பாளர் குமார், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது கிழிந்த நிலையில் காணப்பட்டதை கைப்பற்றி பார்த்ததில் அதில் 2 கிலோ எடைக் கொண்ட 18 கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
     
    இந்த கஞ்சா மூட்டை இலங்கைக்கு கடத்தி செல்லும் போது படகிலிருந்து தவறி விழுந்து கரை ஒதுங்கியதா அல்லது ஏற்றுமதி செய்யும் போது தவறியதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தெற்காலத்தூரை சேர்ந்த சாரதா, தேவூர் ராதாமங்கலம் பூங்கொடி, சங்கமங்கலத்தை சேர்ந்த கந்தன், சிக்கல் பனைமேட்டை சேர்ந்த ரஞ்சித் இவர்கள் 4 பேரும் நீண்ட நாட்களாக இப்பகுதிகளில் சாராயம் விற்பனை செய்து வந்தனர்.

    இவர்கள் மீது சாராயம் விற்பனை தொடர்பாக கீழ்வேளூர் போலீஸ் நிலையம் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவிலும் பல வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் சாரதா, பூங்கொடி மீது சாராயம் விற்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு திரூவாரூர் மகளிர் சிறையிலும், கந்தன், ரஞ்சித் சாராயம் விற்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கைது செய்யபட்டு நாகை மாவட்ட சிறையில் இருந்து வந்தனர்.

    அதனைத் தொடர்ந்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹருக்கு பரிந்துரை செய்தனர். 

    இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜிக்கு பரிந்துரை செய்தார். அதனைத் தொடர்ந்து 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    கருப்பம்புலத்தில் 13 குளங்கள் ரூ.3 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா, கருப்பம்புலம் ஊராட்சியில் 
    குளம், குட்டைகள் ஏலம் விடப்பட்டன. 

    இந்த ஊராட்சியில் உள்ள கருப்பம்புலம் வடகாடு பகுதியில் உள்ள வெள்ளோடை, பெரிய காஞ்சி, வெப்போடை, வெள்ளோடை, நெல்லியோடை உள்ளிட்ட 6 குளங்களும், நடுகாட்டில் ஜயனார்குளம், மருதம்புலம், ராஜம்புலம், பைங்கால்குளம் வண்ணான் விச்சலடிகுளம், மேலக்காடு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் குளம், குடைக்காரன்குளம் உள்ளிட்ட 17 குளங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் கவிதா முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. 

    இந்த ஊராட்சியில் உள்ள 17 குளங்கள் 3 லட்சத்து 34 ஆயிரத்து 290 ரூபாய் ஏலம் விடப்பட்டது. இதுகுறித்து கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் கூறியதாவது, கருப்பம்புலம் ஊராட்சிக்கு புதிதாக பதவி ஏற்ற பிறகு 2-வது முறையாக குளம், குட்டைகள் ஏலம் விடப்படுகின்றன. 

    தற்போது 3 லட்சத்து 34 ஆயிரத்து 290 ரூபாய்க்கு 
    17 குளங்களும் ஏலம் போனது. 

    இதுவரை இந்த ஊராட்சியில் இவ்வளவு தொகைக்கு குளங்கள் ஏலம் போனது இல்லை. தற்போது கூடுதலான தொகைக்கு ஏலம் போனதால் ஊராட்சியின் வருமானம் அதிகரித்துள்ளது என்றார்.

    பொங்கல் பண்டிகையையொட்டி கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமமும், இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சென்னையில் இருந்து 
    கீழ்கண்ட ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு வரும் 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 
    சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேபோல் திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கு 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படுகிறது.

    கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட 
    அனைத்து முக்கிய நகரங்களுக்கும்  11-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை 
    அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் 
    பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இயக்க 
    விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 11 முதல் 13-ந்தேதி வரை சென்னையிலிருந்து பொதுமக்கள்
    எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக 
    பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

    கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு தட பேருந்துகள், தாம்பரம் சானிடோரியம்  
    அறிஞர் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.

    கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப் பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப் பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள்
    கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். 
    பஸ் நிலையத்திலிருந்தும் இயக்கப்பட உள்ளது.

    மேலும், பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல வரும் 
    16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நாகூர் சந்தனக்கூடு ஊர்வலத்தில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் அறிவித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    மேலும் அங்கு நடைபெறும் தடுப்பூசி போடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், நாகை மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் போடும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
     
    இன்று முன் களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயது தாண்டியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் என 1451 பேருக்கு போடப்படுகிறது. வரும் 31-ந்தேதிக்குள் 11,000 பேர் பூஸ்டர் டோஸ்தடுப்பூசி போட தகுதி உடையவர் ஆகிறார்கள். 

    நாகை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 82.18 சதவீதமும், 
    இரண்டாம் தவணை 70 சதவீதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

    நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வெளியூர் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டில் பலர் வேலை செய்வதால் மாவட்டத்தில் சராசரியாக தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 90 சதவீதம் ஆகும்.

    கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை தடுக்க கூட்டம் கூடுவதை தவிர்த்து கட்டாயமாக கவசம் அணிய வேண்டும். கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகூர் ஆண்டவர் தர்கா சந்தனக்கூடு விழாவில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    வேதாரண்யத்தில் மீன்பிடிக்க மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்றனர்
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப் பள்ளம், வணவன்மகாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் முழு ஊரடங்கை முன்னிட்டு 5 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க 
    கடலுக்கு செல்லவில்லை. 

    இதனால் ஆயிரக் கணக்கான பைபர் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்திருந்தனர். இன்று காலை 6 மணியுடன் முழு ஊரடங்கு முடிவடைந்ததால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். 

    இதேபோல் வேதாரண்யத்தில் இருந்து வெளி ஊர்களுக்கு உப்பு ஏற்றி செல்லும் பணிகளும் பாதிப்படைந்தது.  இன்று லாரிகள் மூலம் வெளி ஊர்களுக்கு 
    உப்பு லோடு கொண்டு செல்லப்பட்டது.
    நாகூர் தர்காவின் 465-வது சந்தனக்கூடு நிகழ்ச்சிக்காக சந்தனக் கட்டைகளை கல்லில் வைத்து தேய்த்து சந்தனம் எடுக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
    உலகப் புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 465-வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 4-ந்தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் விழா வருகிற 13-ந்தேதி இரவு நாகை யாஹசைன் பள்ளி வாசலில் இருந்து கொடி ஊர்வலமும், 14-ந்தேதி அதிகாலை ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு நாகூர் ஆண்டவர் சன்னதி பின்புறம் பாரம்பரிய முறைப்படி விரதம் இருந்து சந்தன கட்டைகளை அரைத்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த யாத்திரீகர்கள் 10 நாட்கள் தர்காவில் தங்கி சந்தன கட்டைகளை சிறுசிறு துண்டுகளாக்கி அரைக்கும் பணி துவங்கியது.

    சந்தன கட்டைகளை ஜவ்வாது கலந்த பன்னீரில் ஊறவைத்து கருங்கற்களில் அரைத்து எடுக்கப்படும். பின்னர் அரைக்கப்பட்ட சந்தனம், குடங்களில் நிரப்பப்பட்டு, நாகை முஸ்லிம் ஜமாத்தார்களிடம் ஒப்படைக்கப்படும். பின் நாகை யாஹசைன் பள்ளி வாசலில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு அதிகாலை நாகூர் வந்தடையும்.

    பின்னர் தர்கா தலைமாட்டு வாசலில் சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, தர்கா சன்னதிக்குள் கொண்டு செல்லப்பட்டு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். இதையடுத்து சந்தனம் யாத்ரீகர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
    அமிர்தராஜ் என்பவரின் வலையில் 4 கிலோ எடை கொண்ட சிங்கி இறால் என்ற லாஸ்டர் இறால் சிக்கியது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி தளத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினம்தோறும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். 

    அதன்படி மீன்பிடித்து விட்டு மீண்டும் கரைக்கு திரும்பிய பொழுது அமிர்தராஜ் என்பவரின் விசைப்படகு வலையில் 4 கிலோ எடை கொண்ட சிங்கி இறால் என்ற லாஸ்டர் இறால் சிக்கியது.

    கைட்டின் மற்றும் கைட்டோசன் போன்ற வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சிங்கி இறாலின் விலை சர்வதேச அளவில் ஏறுமுகமாகவே உள்ளது. 

    வளரும் நாடுகளில் சிங்கி இறாலுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் இதன் விலையும் அதிகமாகவே உள்ளது. 

    1 கிலோ 3000 முதல் 5000 வரை விலை போகும் என மீனவர்கள் 
    தெரிவித்தனர். இந்த இறாலை சக மீனவர்கள் ஆர்வத்துடன் 
    பார்த்து சென்றனர்.
    ×