என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை துறைமுகத்தில் கடற்படை முகாமில் அத்துமீறி நுழைந்து புகைப்படம் எடுத்த உ.பி. வாலிபர் கைது. தீவிரவாதியா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் 
    விடுதலைப்புலிகள் ஊடுருவல், தீவிரவாதம், எரிபொருள் கடத்தல் உள்ளிட்ட உள்ளிட்டவைகளை தடுப்பதற்காக இந்தியக் கடற்படை முகம் அமைக்கப்பட்டது. 

    இங்கு 100&க்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றி வரும் நிலையில் துறைமுகத்தின் பாதுகாப்பு சுவர்களைத் தாண்டி மர்மநபர் ஒருவர் 
    கடற்படை முகாமில் நுழைந்தார்.

    அப்போது கண்காணிப்பில் இருந்த கடற்படை வீரர்கள் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் அவர் தீவிரவாதியாக இருக்கும் என்ற 
    சந்தேகத்தில் பாதுகாப்பான இடத்தில் வைத்து விசாரணையில் 
    ஈடுபட்டனர்.

    அப்போது அவரிடம் இருந்த பையை கைப்பற்றி சோதனை செய்தபோது 
    6 வரைபடங்கள், திசை காட்டும் காம்பஸ் கருவி, பணம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை இருந்தது. இதனையடுத்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்த கடற்படை வீரர்கள் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கும் தகவல் அளித்தனர்.

    இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையிலான போலீசார், க்யூ பிரிவு போலீசார், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உள்ளிட்டோர் பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

    முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அபிஷேக் சுக்லா என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் 
    சுற்றுலா வந்ததாகவும், வேலை தேடி வந்ததாகவும், உணவு தேடி 
    வந்ததாகவும் மாற்றி மாற்றி அவர்களிடம் தகவல் 
    தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து பிடிபட்ட நபர் மீது சந்தேகம் அதிகரித்துள்ளதால் 
    இந்திய உளவு அமைப்பான ரா அமைப்பின் அதிகாரிகளுக்கு கடற்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 

    இதனையடுத்து திருச்சியிலிருந்து ரா உளவு அமைப்பின் அதிகாரிகள் விரைந்துள்ளனர். கடந்த 8 நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் விசாரணையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு பின் பிடிபட்ட அபிஷேக்சுக்லா பற்றிய முழு விவரம் தெரியவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    கீழ்வேளூர் அருகே 2 மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி வந்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராய கடத்தலை தடுக்கும் 
    வகையில் போலீசார் வாகன சோதனை, ரோந்து பணியில் 
    ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நாகப்பட்டினம் வட்டம் கீழ்வேளூர் அருகே 
    காக்கழனி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது 
    மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்ததில் 
    அதில் சாராயம் இருந்தது தெரியவந்தது.

     விசாரணையில் அவர்கள் நாகை பாப்பாகோவில் சமத்துவபுரம் 
    விக்னேஷ் (வயது 21), அதே பகுதி ஜோதிபாசு (21) என தெரிய வந்தது.

    இதே போல தேவூர் கடைதெருவில் நடந்த வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த நாகை அந்தணப்பேட்டை கடைதெரு மணிகண்டன் (20), சிக்கல் ரயிலடி தெரு முகமதுரபீக் (26) ஆகிய 2 பேர் பிடிபட்டனர். 

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் 
    கைது செய்து சாராயம், 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    மாட்டுவண்டியில் சென்று நாகை கலெக்டர் பொங்கல் கொண்டாடினார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், அம்பல் கிராமத்தில் மாட்டு 
    பொங்கல் விழா நடைபெற்றது. 

    விழாவிற்கு வந்த மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், 
    முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோரை 
    மாட்டு வண்டியில் சென்று மேளதாளத்துடன் 
    கிராமத்திற்கு மக்கள் அழைத்து வந்தனர்.

    நிகழ்ச்சியில் கால்நடைகளுக்கு சூடம் ஏற்றி வணங்கி, 
    கால்நடைத்துறை சார்பாக 100-க்கும் மேற்பட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு தாது உப்பு கலவைகளை வழங்கினர். 

    தப்படித்து நடனமாடி கிராம மக்களோடு பொங்கல் 
    விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். 

    தங்களது மாடுகளுக்கு மாலையிட்டு அலங்கரித்து 
    மாட்டு பொங்கல் விழாவை கொண்டாடிய 
    அப்பகுதி மக்கள் மஞ்சள் தண்ணீரை மாடுகளின் மீது 
    தெளித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். 

    இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
    கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த இலங்கையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
    வேதாரண்யம்:

    கடந்த 2012-ம் ஆண்டு ஹெராயின் போதை வஸ்து கடத்திய வழக்கில் 
    கைது செய்யப்பட்டு ஓராண்டு ஜெயிலில் இருந்து ஜாமினில் 
    வெளிவந்தவர் சொந்த ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 4.11.21 அன்று புஷ்பவனம் கடற்கரையிலிருந்து 
    படகில் கடத்த முயன்ற 92 கிலோ கஞ்சாவை படகுடன் கைப்பற்றி 
    வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

    அப்போது இதில் கடந்த 2012-ம் ஆண்டு ஹெராயின் வழக்கில் 
    கைதாகி சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்தவர் சம்மந்தப்பட்டது தெரியவந்தது. அதுமுதல் அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இதையடுத்து தஞ்சாவூர் கியூ பிரிவு போலீஸ் துணை கண்காணிப்பாளர் சிவசங்கர் உத்தரவின் பேரில் தஞ்சாவூர் கியூ பிரிவு போலீசார் விசாரணையில் மேற்படி நபர் மல்லிப்பட்டினம் கடற்கரையில் ஒரு தனியாரிடம் மீன்பிடி தொழில் செய்து வரும் இலங்கை முல்லைதீவு 
    தீத்தகரை சிலாவட்டம் ஆனந்தசெல்வம் மகன் மதன் (எ) ஆண்டனிசென்பீட்டா¢ (45) என்பவர்தான் மேற்படி நபர் 
    என்பதை அறிந்து அவரை பிடித்து வேதாரண்யம் போலீசில் 
    ஒப்படைத்தனர்.

    வேதாரண்யம் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    கொரோனா கட்டுப்பாட்டால் வேளாங்கண்ணி கடற்கரை பொதுமக்களின்றி வெறிச்சோடியது.
    நாகப்பட்டினம்:

    கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் 
    நிலையில் மாநில அரசு வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட மூன்று 
    தினங்களும் வழிபாட்டு தலங்களை மூட பிறப்பிக்கப்பட்ட உத்தரவு 
    அமலில் உள்ளது.
     
    இந்நிலையில் தொடர் பொங்கல் விடுமுறை காரணமாக நாகை 
    மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற முக்கிய 
    சுற்றுலாத்தலங்களில் ஒன்றான வேளாங்கண்ணி புனித 
    ஆரோக்கிய அன்னைப் பேராலயத்திற்கு, ஆயிரத்துக்கும் 
    அதிகமான பக்தர்கள் வந்து, உற்சாகமாக பொழுதை கழிப்பது 
    வழக்கம்.

    இந்நிலையில் அரசின் உத்தரவின்படி, வேளாங்கண்ணி 
    பேராலயம் மூடப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை 
    வெகுவாக குறைந்துள்ளது. 

    கடலில் குளித்து மகிழும் இடம் தற்பொழுது, மிக குறைந்த 
    அளவிளான சுற்றுலாப் பயணிகளோடு வெறிச்சோடி காணப்படுகிறது. 
    வியாபாரிகள் வியாபாரம் இல்லை என வருத்தம் தெரிவித்தனர்.
    விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பிரமுகர் எரித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகை:

    நாகை மாவட்டம் பாப்பாக்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 38). இவருடைய மனைவி அனுசியா(36). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பாப்பாக்கோவில் கிளை செயலாளராக இருந்து வந்த ராஜ்குமார் நேற்று முன்தினம் அதிகாலை அவரது வீட்டு வாசலில் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே ராஜ்குமார் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடா்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், ராஜ்குமார் எரித்துக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அக்கரைப்பேட்டையில் விடிய விடிய மீன்விற்பனை மும்முரமாக நடந்தது.
    நாகப்பட்டினம்:

    பொங்கலின் 2-ம் நாளான இன்று முன்னோர்களுக்கு படையலிடுவதற்காக திரளான பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர். 

    மாட்டுப்பொங்கலான இன்று மாலையில் வீட்டு குல தெய்வத்திற்கும், முன்னோர்களுக்கும் மீன், ஆட்டிறைச்சி, கருவாடு, முட்டைகள் வைத்து படையலிடுவது பொதுமக்களின் வழக்கம்.

    இதற்காக நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நள்ளிரவு முதல் விடிய, விடிய மீன் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    வஞ்சரம், வவ்வால், இறால், சுரும்பு, பாறை, வாலை, செங்காலா நண்டு, ரால், கனவாய் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    வேதாரண்யம், காரைக்கால், திருவாரூர், மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச்சென்றனர்.

    வஞ்சிரம்& ரூ.700, ரால் &ரூ.500&700, வெள்ளை வவ்வால் ரூ.800-950, 
    நண்டு ரூ.650-750, சீலா ரூ.300-350, கருப்புவாவல் ரூ.450 - 550, பாறை ரூ.300-400 விற்பனையாகிறது.

    வேதாரண்யம்  பகுதியில் பெரும்பாலான மக்கள் மாட்டுப் பொங்கலுக்கு அசைவம் சமைத்து உண்ணுவது வழக்கம். 

    இதனால் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை கடற்கரையில்  மீன் வாங்க  வேதாரண்யம் சுற்றுவட்டார சேர்ந்த பொதுமக்கள்  அதிகாலை முதல் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். 

    இதனால் வழக்கத்திற்கு மாறாக மீன் விலை  இரு மடங்காக உயர்ந்தது. இருப்பினும்  இன்று அசைவம் சமைத்து உண்ண வேண்டும் என்பதால் விலையை பொருட் படுத்தாமல் பொதுமக்கள் காலாமீன், ஷீலாமீன், திருக்கைமீன், வாலை, வாவல் மீன்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    பொதுமக்கள் தேவை அறிந்து கோடியக்கரை மீனவர்கள் பாம்பனில் இருந்து சுமார் 5 டன் வாலை மீன்களை இறக்குமதி செய்து கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.

    இன்று ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்கி சென்றதால் மீன்களுக்கு 
    நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    நாகை மாவட்டத்தில் 60 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கும் விழா நாகையில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

    நாகை, கீவளூர், கீழையூர், வேதாரண்யம், திருமருகல், 
    தலைஞாயிறு உள்ளிட்ட மாவட்டத்தின் 6 ஒன்றியத்தைச் சேர்ந்த 
    60 பயனாளிகளுக்கு ரூ.52,11,360 மதிப்பீட்டில் தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவியை கலெக்டர் வழங்கினர். 

    ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கத்தையும், உதவித்தொகையும் அவர் வழங்கினார். விழாவில் மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், எம்.எல்.ஏ.க்கள் முகம்மது ஷாநவாஸ், நாகை மாலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்களையும், வலைகளையும் பறித்து செல்வது வாடிக்கையாக நடந்து வருவதால் மீனவர்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் மீனவ கிராமத்தை சோந்தவர் கிருஷ்ணசாமி (வயது 43). இவருக்கு சொந்தமான பைபர் படகில் புஷ்பவனத்தை சேர்ந்த மீனவர்கள் கஜேந்திரன், விஜயேந்திரன், ராஜகுரு, ஸ்டாலின் ஆகிய 4 பேரும் நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 12 நாட்டிக்கல் தொலைவில் படகை நிறுத்தி வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென மோட்டார் பொருத்திய படகில் முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு வந்த கடற்கொள்ளையர்கள் 6 பேர் புஷ்பவனம் மீனவர்கள் 4 பேரையும் கையில் வைத்திருந்த இரும்பு போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

    இதில் அதிர்ச்சியடைந்து செய்வதறியாமல் நின்ற மீனவர்கள் 4 பேரிடமும் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ வலை மற்றும் மீன்பிடி உபகாரணங்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 4 மீனவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து 4 பேரும் பைபர் படகை திருப்பிக்கொண்டு மீன் பிடிப்பதை கைவிட்டு இன்று அதிகாலை கரை திரும்பினர்.

    பின்னர் இதுபற்றி இன்று காலை வேதாரண்யம் கடலோர காவல் படையினரிடம் புகார் அளித்தனர். மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து இதுபோன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்களையும், வலைகளையும் பறித்து செல்வது வாடிக்கையாக நடந்து வருவதால் மீனவர்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    எனவே மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களின் நலன் காக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஒரத்தூரில் 60 ஏக்கரில் புதிய மருத்துவக்கல்லூரி பயன்பாட்டிற்கு வந்தது
    நாகப்பட்டினம்:

    கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணிஅடுத்த ஒரத்தூர் கிராமத்தில் 366.85 கோடி ரூபாய் 
    மதிப்பில், 60.4 ஏக்கர் பரப்பளவில் மருத்துவக்கல்லூரி 
    மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டது. 

    மருத்துவமனை கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில், 
    பணிகள் நிறைவடைந்த மருத்துவக்கல்லூரியை பிரதமர் 
    மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் மெய்யநாதன், செல்வராசு எம்பி, 
    நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மீன் வளர்ச்சி 
    கழக தலைவர் கவுதமன், எம்.எல்.ஏ.க்கள் ஆளூர் 
    முகமது ஷாநவாஸ், நாகை மாலி, எஸ்பி ஜவஹர், 
    மருத்துவமனை முதல்வர் விஷ்வநாதன் மற்றும் பலர் சமூக 
    இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர்.

    இதில் மொத்தம் 22 கட்டிடங்கள், 3 துறைகள் முதற்கட்டமாக 
    துவங்க உள்ளது. மேலும், மருந்தியல், சமூக மருத்துவத்துறை, 
    நுண்ணுயிரியல் துறை, நோயியல் துறை, தடயவியல் மருத்துவ 
    துறை, என பல்வேறு துறைகள் எதிர்காலத்தில் வர உள்ளது. மருத்துவகல்லூரியில் இந்த ஆண்டு முதல் மாணவர் 
    சேர்க்கை தொடங்க உள்ளது. 

    40 கணினிகளை கொண்ட இணையநூலம், புத்தக நூலகம், 
    தேர்வறை, செய்முறை ஆய்வகம், என நவீன பிரத்யேக 
    ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
    நாகூர் தர்கா கந்தூரி விழா இன்று சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரில் உலகப் பிரசித்திப்பெற்ற ஆண்டவர் 
    தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா 
    நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா 
    கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு 
    ஊர்வலம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். 
    இதில் ஏராளமானோர் பங்கேற்பார்கள். 

    இந்த ஆண்டு சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (வியாழக்கிழமை) 
    நடக்கிறது. ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் 
    இந்த ஊர்வலத்தில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை 
    என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவித்துள்ளார். 

    தர்கா நிர்வாகம் சார்பில் 45 பேர் மட்டுமே தர்காவுக்குள் 
    அனுமதிக்கப்பட உள்ளனர்.
     
    இவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும், 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

    சந்தனக்கூடு ஊர்வலத்தின்போது 8 மின் அலங்கார ஊர்திகள் 
    வலம் வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சந்தனக்கூடு 
    மட்டும் நாகையில் இருந்து ஊர்வலமாக நாகூர் 
    தர்காவுக்கு கொண்டு வரப்படுகிறது.
     
    இன்று இரவு 7 மணிக்கு நாகை யாஹூசைன் 
    பள்ளி தெருவில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு 
    நாகை- நாகூர் சாலை வழியாக நாகூர் அலங்கார வாசலை 
    வந்தடைகிறது.
    பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இதற்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கக் கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதற்காக பலகட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதையடுத்து நாகை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க கடந்த 2020-ம் ஆண்டில் அறிவிப்பு வெளியானது.

    இதையடுத்து, நாகையை அடுத்த ஒரத்தூரில் மருத்துவக் கல்லூரிஅமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து 2020-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. 60.4 ஏக்கரில் ரூ.366.85 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

    ரூ.123.05 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரி, ரூ.119.03 கோடி மதிப்பில் மருத்துவமனை, ரூ.124.77 கோடி மதிப்பில் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான விடுதிக்கட்டடங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

    முழு வீச்சில் நடைபெற்ற இந்த கட்டுமான பணிகளில் கொரோனா ஊரடங்கு காரணமாக, அவ்வப்போது தொய்வு ஏற்பட்டது.

    அதனால், கடந்த செப்டம்பர் மாதம் வெளியான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை அறிவிப்பில், நாகை அரசு மருத்துவக்கல்லூரி இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டது. இது பல்வேறு தரப்பினரிடையே சற்று ஏமாற்றத்தை தந்தது.

    இதனிடையே அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாகை மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்து, மத்தியக் குழுவினர் அறிவுறுத்திய அனைத்து உள்கட்டமைப்புகளையும் விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகள் தீவிரமடைந்து தற்போது நிறைவடைந்துள்ளன.

    6 அடுக்குகள் கொண்ட மருத்துவமனை கட்டிடம், மருத்துவக்கல்லூரி, நிர்வாக அலுவலகங்கள், செவிலியர்களுக்கான குடியிருப்புகள், வங்கி, அஞ்சலகம், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் நவீன மயமாக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பிணவறை உள்ளிட்டவை இதில் அடங்கும்.

    மேலும் உடற்கூறியல், உடலியங்கியல் மற்றும் உயிர்வேதியல் ஆகிய 3 துறைகளைக் கொண்டு இயங்கக் கூடியதாக இந்த மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் வகுப்பறை, ஆய்வகம், கணினி நூலகம் என அனைத்துக் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இதனிடையே, மருத்துவக் கல்லூரிகளுக்கான மத்தியக் குழு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாட்டைத் தொடங்க அனுமதி அளித்துள்ளது.

    இதையடுத்து இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் திறப்பு விழா இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

    இதனை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதற்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    ×