என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பிரமுகர் எரித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகை:

    நாகை மாவட்டம் பாப்பாக்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 38). இவருடைய மனைவி அனுசியா(36). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பாப்பாக்கோவில் கிளை செயலாளராக இருந்து வந்த ராஜ்குமார் நேற்று முன்தினம் அதிகாலை அவரது வீட்டு வாசலில் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே ராஜ்குமார் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடா்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், ராஜ்குமார் எரித்துக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அக்கரைப்பேட்டையில் விடிய விடிய மீன்விற்பனை மும்முரமாக நடந்தது.
    நாகப்பட்டினம்:

    பொங்கலின் 2-ம் நாளான இன்று முன்னோர்களுக்கு படையலிடுவதற்காக திரளான பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர். 

    மாட்டுப்பொங்கலான இன்று மாலையில் வீட்டு குல தெய்வத்திற்கும், முன்னோர்களுக்கும் மீன், ஆட்டிறைச்சி, கருவாடு, முட்டைகள் வைத்து படையலிடுவது பொதுமக்களின் வழக்கம்.

    இதற்காக நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நள்ளிரவு முதல் விடிய, விடிய மீன் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    வஞ்சரம், வவ்வால், இறால், சுரும்பு, பாறை, வாலை, செங்காலா நண்டு, ரால், கனவாய் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    வேதாரண்யம், காரைக்கால், திருவாரூர், மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச்சென்றனர்.

    வஞ்சிரம்& ரூ.700, ரால் &ரூ.500&700, வெள்ளை வவ்வால் ரூ.800-950, 
    நண்டு ரூ.650-750, சீலா ரூ.300-350, கருப்புவாவல் ரூ.450 - 550, பாறை ரூ.300-400 விற்பனையாகிறது.

    வேதாரண்யம்  பகுதியில் பெரும்பாலான மக்கள் மாட்டுப் பொங்கலுக்கு அசைவம் சமைத்து உண்ணுவது வழக்கம். 

    இதனால் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை கடற்கரையில்  மீன் வாங்க  வேதாரண்யம் சுற்றுவட்டார சேர்ந்த பொதுமக்கள்  அதிகாலை முதல் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். 

    இதனால் வழக்கத்திற்கு மாறாக மீன் விலை  இரு மடங்காக உயர்ந்தது. இருப்பினும்  இன்று அசைவம் சமைத்து உண்ண வேண்டும் என்பதால் விலையை பொருட் படுத்தாமல் பொதுமக்கள் காலாமீன், ஷீலாமீன், திருக்கைமீன், வாலை, வாவல் மீன்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    பொதுமக்கள் தேவை அறிந்து கோடியக்கரை மீனவர்கள் பாம்பனில் இருந்து சுமார் 5 டன் வாலை மீன்களை இறக்குமதி செய்து கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.

    இன்று ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்கி சென்றதால் மீன்களுக்கு 
    நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    நாகை மாவட்டத்தில் 60 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கும் விழா நாகையில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

    நாகை, கீவளூர், கீழையூர், வேதாரண்யம், திருமருகல், 
    தலைஞாயிறு உள்ளிட்ட மாவட்டத்தின் 6 ஒன்றியத்தைச் சேர்ந்த 
    60 பயனாளிகளுக்கு ரூ.52,11,360 மதிப்பீட்டில் தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவியை கலெக்டர் வழங்கினர். 

    ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கத்தையும், உதவித்தொகையும் அவர் வழங்கினார். விழாவில் மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், எம்.எல்.ஏ.க்கள் முகம்மது ஷாநவாஸ், நாகை மாலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்களையும், வலைகளையும் பறித்து செல்வது வாடிக்கையாக நடந்து வருவதால் மீனவர்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் மீனவ கிராமத்தை சோந்தவர் கிருஷ்ணசாமி (வயது 43). இவருக்கு சொந்தமான பைபர் படகில் புஷ்பவனத்தை சேர்ந்த மீனவர்கள் கஜேந்திரன், விஜயேந்திரன், ராஜகுரு, ஸ்டாலின் ஆகிய 4 பேரும் நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 12 நாட்டிக்கல் தொலைவில் படகை நிறுத்தி வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென மோட்டார் பொருத்திய படகில் முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு வந்த கடற்கொள்ளையர்கள் 6 பேர் புஷ்பவனம் மீனவர்கள் 4 பேரையும் கையில் வைத்திருந்த இரும்பு போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

    இதில் அதிர்ச்சியடைந்து செய்வதறியாமல் நின்ற மீனவர்கள் 4 பேரிடமும் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ வலை மற்றும் மீன்பிடி உபகாரணங்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 4 மீனவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து 4 பேரும் பைபர் படகை திருப்பிக்கொண்டு மீன் பிடிப்பதை கைவிட்டு இன்று அதிகாலை கரை திரும்பினர்.

    பின்னர் இதுபற்றி இன்று காலை வேதாரண்யம் கடலோர காவல் படையினரிடம் புகார் அளித்தனர். மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து இதுபோன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்களையும், வலைகளையும் பறித்து செல்வது வாடிக்கையாக நடந்து வருவதால் மீனவர்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    எனவே மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களின் நலன் காக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஒரத்தூரில் 60 ஏக்கரில் புதிய மருத்துவக்கல்லூரி பயன்பாட்டிற்கு வந்தது
    நாகப்பட்டினம்:

    கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணிஅடுத்த ஒரத்தூர் கிராமத்தில் 366.85 கோடி ரூபாய் 
    மதிப்பில், 60.4 ஏக்கர் பரப்பளவில் மருத்துவக்கல்லூரி 
    மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டது. 

    மருத்துவமனை கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில், 
    பணிகள் நிறைவடைந்த மருத்துவக்கல்லூரியை பிரதமர் 
    மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் மெய்யநாதன், செல்வராசு எம்பி, 
    நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மீன் வளர்ச்சி 
    கழக தலைவர் கவுதமன், எம்.எல்.ஏ.க்கள் ஆளூர் 
    முகமது ஷாநவாஸ், நாகை மாலி, எஸ்பி ஜவஹர், 
    மருத்துவமனை முதல்வர் விஷ்வநாதன் மற்றும் பலர் சமூக 
    இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர்.

    இதில் மொத்தம் 22 கட்டிடங்கள், 3 துறைகள் முதற்கட்டமாக 
    துவங்க உள்ளது. மேலும், மருந்தியல், சமூக மருத்துவத்துறை, 
    நுண்ணுயிரியல் துறை, நோயியல் துறை, தடயவியல் மருத்துவ 
    துறை, என பல்வேறு துறைகள் எதிர்காலத்தில் வர உள்ளது. மருத்துவகல்லூரியில் இந்த ஆண்டு முதல் மாணவர் 
    சேர்க்கை தொடங்க உள்ளது. 

    40 கணினிகளை கொண்ட இணையநூலம், புத்தக நூலகம், 
    தேர்வறை, செய்முறை ஆய்வகம், என நவீன பிரத்யேக 
    ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
    நாகூர் தர்கா கந்தூரி விழா இன்று சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரில் உலகப் பிரசித்திப்பெற்ற ஆண்டவர் 
    தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா 
    நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா 
    கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு 
    ஊர்வலம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். 
    இதில் ஏராளமானோர் பங்கேற்பார்கள். 

    இந்த ஆண்டு சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (வியாழக்கிழமை) 
    நடக்கிறது. ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் 
    இந்த ஊர்வலத்தில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை 
    என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவித்துள்ளார். 

    தர்கா நிர்வாகம் சார்பில் 45 பேர் மட்டுமே தர்காவுக்குள் 
    அனுமதிக்கப்பட உள்ளனர்.
     
    இவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும், 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

    சந்தனக்கூடு ஊர்வலத்தின்போது 8 மின் அலங்கார ஊர்திகள் 
    வலம் வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சந்தனக்கூடு 
    மட்டும் நாகையில் இருந்து ஊர்வலமாக நாகூர் 
    தர்காவுக்கு கொண்டு வரப்படுகிறது.
     
    இன்று இரவு 7 மணிக்கு நாகை யாஹூசைன் 
    பள்ளி தெருவில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு 
    நாகை- நாகூர் சாலை வழியாக நாகூர் அலங்கார வாசலை 
    வந்தடைகிறது.
    பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இதற்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கக் கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதற்காக பலகட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதையடுத்து நாகை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க கடந்த 2020-ம் ஆண்டில் அறிவிப்பு வெளியானது.

    இதையடுத்து, நாகையை அடுத்த ஒரத்தூரில் மருத்துவக் கல்லூரிஅமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து 2020-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. 60.4 ஏக்கரில் ரூ.366.85 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

    ரூ.123.05 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரி, ரூ.119.03 கோடி மதிப்பில் மருத்துவமனை, ரூ.124.77 கோடி மதிப்பில் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான விடுதிக்கட்டடங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

    முழு வீச்சில் நடைபெற்ற இந்த கட்டுமான பணிகளில் கொரோனா ஊரடங்கு காரணமாக, அவ்வப்போது தொய்வு ஏற்பட்டது.

    அதனால், கடந்த செப்டம்பர் மாதம் வெளியான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை அறிவிப்பில், நாகை அரசு மருத்துவக்கல்லூரி இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டது. இது பல்வேறு தரப்பினரிடையே சற்று ஏமாற்றத்தை தந்தது.

    இதனிடையே அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாகை மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்து, மத்தியக் குழுவினர் அறிவுறுத்திய அனைத்து உள்கட்டமைப்புகளையும் விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகள் தீவிரமடைந்து தற்போது நிறைவடைந்துள்ளன.

    6 அடுக்குகள் கொண்ட மருத்துவமனை கட்டிடம், மருத்துவக்கல்லூரி, நிர்வாக அலுவலகங்கள், செவிலியர்களுக்கான குடியிருப்புகள், வங்கி, அஞ்சலகம், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் நவீன மயமாக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பிணவறை உள்ளிட்டவை இதில் அடங்கும்.

    மேலும் உடற்கூறியல், உடலியங்கியல் மற்றும் உயிர்வேதியல் ஆகிய 3 துறைகளைக் கொண்டு இயங்கக் கூடியதாக இந்த மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் வகுப்பறை, ஆய்வகம், கணினி நூலகம் என அனைத்துக் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இதனிடையே, மருத்துவக் கல்லூரிகளுக்கான மத்தியக் குழு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாட்டைத் தொடங்க அனுமதி அளித்துள்ளது.

    இதையடுத்து இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் திறப்பு விழா இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

    இதனை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதற்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    திருமருகலை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி தென்னமரக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைப்பெற்றது.

    இதற்கு கட்சியின் மூத்த நிர்வாகி கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் சந்திரசேகர் வரவேற்றார்.ஒன்றிய செயலாளர் பாபுஜி கட்சியின் கொடி ஏற்றி வைத்தார்.விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் மாநாட்டை தொடக்கி வைத்தார்.

    இந்த மாநாட்டில், தென்னமரக்குடியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும், கீழப்பூதனூரில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்.

    மேலப்பூதனூரில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்,திருமருகலை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் இளைஞர் மன்ற ஒன்றிய தலைவர் பழனிவேல்,கிளை செயலாளர் முனுசாமி, கிராம சங்க செயலாளர் கலைச்செல்வன், கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தாமரைச் செல்வி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அழிந்து வரும் மண்பாண்ட தொழிலை காக்க அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    பண்டைய தமிழர்களின் வாழ்வியலுடன் இணைந்திருந்த பொருட்களில் பிரதானமானது மண்பாண்டங்கள். மேலை நாட்டு கலாச்சாரங்கள்
    மீதான பற்று காரணமாக சில ஆண்டுகளாக மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்த நிலையில் பொங்கலுக்கு மட்டும் அதன் மதிப்பு குறைவதில்லை.

    இந்நிலையில் திருமருகல் பகுதிகளில் பொங்கல் பானை மற்றும் அடுப்புகள் தயாரிக்கும் பணி மிகவும் மந்தமாகவே உள்ளது.பொங்கல் பண்டிகை 
    வருகிற 14-ம் தேதி நடைபெற உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பொங்கல் பானை அடுப்பு, சட்டி உள்ளிட்டவைகளை மண்பாண்ட தொழிலாளர்கள் செய்து தயாராக வைத்திருப்பார்கள். 

    அண்மையில் தொடர்ந்து பெய்த தொடர் மழை காரணமாக பொங்கல் பானை அடுப்பு செய்யும் பணி இந்த ஆண்டு கால தாமதமாகவே தொடங்கியது.

    இருப்பினும் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 1 நாள் மட்டும் உள்ள நிலையில் திருமருகல் ஒன்றியத்தில் திட்டச்சேரி கொந்தகை, கணபதிபுரம் திருச்செட்டாங்குடி, திருக்கண்ணபுரம், கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மண்பாண்டங்கள் செய்யும் பணியை செய்து வந்தனர்.

    இந்நிலையில் தொடர்மழை காரணமாக பொங்கல் பானை அடுப்புகள் தயாரிப்பு பணி மிகவும் மந்த நிலையில் உள்ளது.

    இந்நிலையில் இத்தொழிலை செய்து வந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தொழில் ரீதியாக எந்த வித சலுகைகளும் மானியங்களும் செய்ய முன்வராததால் பொருளாதாரத்தில் மிகவும் நலிந்த நிலையில் உள்ள இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த சிரமத்திற்கு இடையே தொழில் செய்து வருகின்றனர்

    குறிப்பாக பொங்கல் பானை, அடுப்பு, அகல்விளக்கு செய்யும் பொழுது பருவமழை பெய்ததால் கடந்த சில ஆண்டாக மண்பாண்ட தொழில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு வருவதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தங்கள் வேதனையை தெரிவித்து வந்தனர். 

    இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறும் தொழிலாளர்கள் குறைந்த அளவு பொருட்களை கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மண்பானையில் உணவு சமைத்தால் புற ஊதாக் கதிர்கள் உணவை தாக்காமல் இருப்பதாகவும் அதன் காரணமாக உணவு சத்துள்ளதாகவும் சுவையுள்ளதாகவும் இருக்கும் என்பது வாழ்வியல் உண்மை நகரத்தில் வாழும் பலர் இன்றும் மீன் குழம்பு வைக்க மண் சட்டியை தான் விரும்பி வாங்கி செல்கின்றனர். 

    மண்சட்டி, மற்றும் மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து குடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    மேலும் தைத் திருநாளான முதல் நாள் புது பானை புது அடுப்பு பயன்படுத்தி பொங்கல் செய்வது காலங்காலமாய் தமிழர்களிடையே இருந்து வரும் பழக்கம் இதனால் இந்த தொழிலை தொடர்ந்து செய்து வருகிறோம் என தொழிலாளர்கள் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் அழிந்து வரும் இந்த மண்பாண்ட தொழிலுக்கு அரசு உதவி செய்து அவர்களது வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
    தொழிலாளி வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற கொள்ளையன் பொதுமக்கள் தாக்கியதில் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை டாடா நகரை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 35) கூலித்தொழிலாளி. நேற்று இரவு இவர் மற்றும் இவரது மனைவி மலர்கொடி (26), தாயார் கண்ணம்மாள் (56) ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவில் 28 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு அங்கு வந்தார். பின்னர் அவர் கதவை உடைத்து உள்ளே புகுந்தார். சத்தம் கேட்டு காளிதாஸ் எழுந்து பார்த்தபோது அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். சுதாரித்து கொண்ட காளிதாஸ் உடனே மனைவி மலர்கொடி, தாய் கண்ணம்மாளை எழுப்பினார். பின்னர் 3 பேரும் சேர்ந்து அந்த வாலிபரை பிடித்து தாக்க தொடங்கினர். சிறிது நேரத்தில் ஒன்று திரண்ட பொதுமக்களும் வாலிபரை தெருவுக்கு இழுத்து சென்று சரமாரியமாக தாக்கினர். இதில் அவர் ரத்த காயங்களுடன் மயங்கி விழுந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த நாகை நகர போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த கொள்ளையனை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து காளிதாஸ், மலர்கொடி, கண்ணம்மாள் மற்றும் பொதுமக்கள் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    நாகை அரசு மருத்துமனைக்கு தேவையான வசதிகள் செய்துதரக்கோரி அமைச்சரிடம், நாகை எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
    நாகப்பட்டினம்:

    மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம், நாகை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இல்லாததாலும், ஸ்கேன் எடுக்கும் பிரிவு சீராக இயங்காததாலும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர்.

    பல்வேறு சிகிச்சை களுக்காக நாகப்பட்டினம் பொதுமருத்துவமனைக்கு செல்பவர்களை, பெரும்பாலும் திருவாரூர் அல்லது தஞ்சாவூர் மருத்துவமனைக்கு பரிந்துரைத்து அனுப்பிவிடும் சூழ்நிலை நிலவுகிறது. இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக முறையீடுகள் வந்த வண்ணம் உள்ளன.

    பலமுறை இதை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற பிறகும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே அமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு உரிய தீர்வு காணவேண்டும், மேலும் நாகை தொகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    உடனடியாக இதுகுறித்து விசாரிப்பதாகவும், தேவையெனில் நாகப்பட்டினத்திற்கே நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.
    வேதாரண்யத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம், மணியன்தீவு கடற்கரைக்கு தெற்கே கோடியக்காடு, முனங்காட்டுக்கு வடக்கு பகுதியில் கடற்கரையில் பிரிந்த நிலையில் சாக்குமூட்டை ஒதுங்கியிருப்பதாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கடலோர காவல் குழும போலீஸ் துணை கண்காணிப்பாளர் குமார், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது கிழிந்த நிலையில் காணப்பட்டதை கைப்பற்றி பார்த்ததில் அதில் 2 கிலோ எடைக் கொண்ட 18 கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
     
    இந்த கஞ்சா மூட்டை இலங்கைக்கு கடத்தி செல்லும் போது படகிலிருந்து தவறி விழுந்து கரை ஒதுங்கியதா அல்லது ஏற்றுமதி செய்யும் போது தவறியதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ×