என் மலர்
காஞ்சிபுரம்
- ஊராட்சி தலைவர் அதே கிராமத்தில் 3 இடங்களில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார்.
- ஒரு கிராமத்தில் பல இடங்களில் குடியரசு தின விழா நடைபெற்றால் அனைத்து இடங்களிலும் ஒரே நபர் தேசியக் கொடியை ஏற்ற முடியாது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுகுணா. பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணான இவர் திருப்புட்குழி ஊராட்சியில் பொது வார்டில் போட்டியிட்டு ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளார். இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்.
இவர் குடியரசு தின விழாவில் பங்கேற்க திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தேசிய கொடியை ஏற்றச் சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்கள் தடுத்துள்ளனர்.
இதனால் அங்கு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தேசியக்கொடியை ஏற்றவில்லை.
இதுபற்றி ஊராட்சி தலைவர் சுகுணா பாலுசெட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் தன்னை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்ததாக பாலசந்தர், செல்வம் ஆகியோர் மீது புகார் செய்தார். இதுகுறித்து சுகுணா கூறுகையில், என்னை எதிர்த்து போட்டியிட்டவர்களின் ஆதரவாளர்கள் என்னை பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். பள்ளியில் என்னை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்தனர். அவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளேன். தலைமை ஆசிரியர் விஜயகுமாரி மீது பள்ளிக் கல்வித்துறையில் புகார் கொடுக்க உள்ளேன் என்றார்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் விஜயகுமாரி கூறுகையில், "நான் எனது விளக்கத்தை கலெக்டரிடம் தெரிவித்துவிட்டேன்" என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி கூறுகையில், "ஊராட்சி தலைவர் ஆரம்ப பள்ளியில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை ஏற்ற வரும்போது முன் விரோதத்தில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் சுகுணா அங்கிருந்து வெளியேறினார். எனவே வேறு நபரை வைத்து தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர்" என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
ஊராட்சி தலைவருக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தான் கொடி ஏற்ற முழு அதிகாரம் உள்ளது. பள்ளிக்கூடம் என்பது முழுக்க முழுக்க தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு அவர் தேசியக்கொடியை ஏற்றுவார். அவர் இல்லை என்றால் வேறு யாராவது ஏற்றலாம்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஊராட்சி தலைவர் அதே கிராமத்தில் 3 இடங்களில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார். ஒரு கிராமத்தில் பல இடங்களில் குடியரசு தின விழா நடைபெற்றால் அனைத்து இடங்களிலும் ஒரே நபர் தேசியக் கொடியை ஏற்ற முடியாது. பள்ளிகளில் ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று எந்த விதியும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மடத்துக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத் தருமாறு கோர்ட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
- அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைத்துவிட்டு சென்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில் கிழக்கு கோபுரம் அருகே ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் மடம் அமைந்துள்ளது.
இந்த மடத்திற்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தேனம்பாக்கம் கிராமம் பெரிய தோட்டம் பகுதியில் சுமார் 8.76 ஏக்கர் நிலம் உள்ளது. இதை பல ஆண்டு காலமாக தாமஸ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து அவரது மகன் பிரின்ஸ் என்பவர் கையகப்படுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் மடத்திற்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமும், கோர்ட்டிலும் மடத்தின் சார்பில் வழக்கு தொடுத்திருந்தனர். மடத்துக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத் தருமாறு கோர்ட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அதிரடியாக நுழைந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து நிலத்தை மீட்டு மடத்தின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் அங்கு அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைத்துவிட்டு சென்றனர். கோர்ட்டு உத்தரவின்படி இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளால் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 6 கோடி ஆகும்.
- கொல்கத்தாவில் இருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.
- சென்னை விமான நிலையத்தில் 6 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு ஐதராபாத் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், நேற்று இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து கொல்கத்தா செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் ஐதராபாத்தில் இருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கொல்கத்தாவில் இருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.
இலங்கையில் இருந்து வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று அதிகாலை 2 மணிக்கு, சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து, அதிகாலை 3.15 மணிக்கு, இலங்கைக்கு புறப்பட்டு செல்லும். அந்த இரு விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் 6 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கு காரணம் இரவு நேரம் கடுமையான குளிர் நிலவுகிறது. எனவே இரவு விமானங்களிலும், அதிகாலை விமானங்களிலும், பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதேபோல் நேற்று இரவு ஐதராபாத் மற்றும் கொல்கத்தா செல்ல வேண்டிய 2 விமானங்களும், இன்று அதிகாலை ஐதராபாத், கொல்கத்தா, இலங்கை ஆகிய இடங்களில் இருந்து சென்னை வர வேண்டிய 3 விமானங்களிலும் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இதையடுத்து புறப்பாடு, வருகை ஆகிய 6 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பெரிய ரக விமானங்கள் அதற்குத்தகுந்த, பயணிகள் எண்ணிக்கை இல்லாமல், மிகவும் குறைவாக இருக்கும் சூழ்நிலையில், விமானங்களை காலியாக இயக்க முடியாது. அதே நேரத்தில் அந்தப் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
இந்த தகவலை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் நேற்று இரவு விமானம் தரையிறங்க அனுமதி வழங்கினர்.
- மருத்துவக் குழுவினர், அவசரமாக விமானத்துக்குள் ஏறி பயணியை பரிசோதித்தனர். ஆனால் பயணி சஜித் அலி ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
ஆலந்தூர்:
அசாம் மாநிலம் கவு காத்தியில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று இரவு 134 பயணிகளுடன், சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது.
அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது, விமானத்தில் வந்த கவுகாத்தியை சேர்ந்த சஜித் அலி (46) என்ற பயணிக்கு, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு விமானத்திற்குள் அவதிப்பட்டார். அவருடன் வந்த அவருடைய சகோதரர் ராஜேஷ் அலி, இதுபற்றி விமான பணிப்பெண்களுக்கு தெரிவித்தார்.
உடனடியாக அவர்கள் விமானிக்கு தகவல் கொடுத்தனர். விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் கொடுத்தார். விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் நேற்று இரவு விமானம் தரையிறங்க அனுமதி வழங்கினர்.
சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், அவசரமாக விமானத்துக்குள் ஏறி பயணியை பரிசோதித்தனர். ஆனால் பயணி சஜித் அலி ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சஜித் அலி ஏற்கனவே, கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். அதற்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், மேல் சிகிச்சை பெறுவதற்காக, விமானத்தில் தனது சகோதரர் ராஜேஷ் அலியுடன் வந்தபோது திடீரென உடல்நிலை மோசமாகி உயிரிழந்தது தெரிய வந்தது.
இதற்கிடையே வழக்கமாக, இந்த விமானம் இரவு 9.40 மணிக்கு கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் இரவு 10.15 மணிக்கு பெங்களூர் புறப்பட்டு செல்லும். ஆனால் இந்த விமானத்திற்குள், பயணி ஒருவர் உயிரிழந்து விட்டதால், விமானத்தை முழுமையாக சுத்தப்படுத்திய பின் இரண்டு மணி நேரம் கழித்து நள்ளிரவு 12.30 மணிக்கு 106 பயணிகளுடன் பெங்களூர் புறப்பட்டு சென்றது.
- விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
- பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
மீனம்பாக்கம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.
அவரது காலில் அணிந்திருந்த ஷூ சாக்ஸை கழற்றியபோது, தங்கத்தை பேஸ்ட் போல் மாற்றி அதை கறுப்பு நிற பாலித்தீன் பையில் மறைத்து கால் பாதத்தில் பேஸ்ட் போட்டு ஒட்டி அதன் மேல் சாக்சை அணிந்து நூதன முறையில் கடத்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவரிடம் இருந்து ரூ.66 லட்சத்து 82 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 340 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 2 பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் இருந்த லேப்டாப் சார்ஜர் பின்னில் உருளை வடிவ தங்க கம்பிகளை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவர்களிடம் இருந்து ரூ.27 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள 548 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் 3 பேரிடம் இருந்து ரூ.94 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 888 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- கோடை விடுமுறையைெயாட்டி ஏப்ரல், மே மாதங்களுக்கான விமான டிக்கெட்டுகள் பாதிக்கு மேற்பட்டவை விற்று தீர்ந்து விட்டது.
- விடுமுறை, பண்டிகை விடுமுறைகளை கணக்கில் கொண்டு டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி வருகிறது.
ஆலந்தூர்:
கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு சகஜநிலை திரும்பி உள்ளதால் விமான சேவைகளும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளன. சுற்றுலா, வெளிநாடு செல்வோர், சொந்த ஊருக்கு செல்வோர் என உள்நாட்டு, வெளிநாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளால் கோடை விடுமுறையையொட்டி வருகிற ஏப்ரல், மே மாதங்களில் வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலா இடங்களுக்கு செல்ல விமான பயணிகள் திட்டமிட்டு வருகிறார்கள்.
சுற்றுலா செல்வோர் மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்வோர் தங்களுடைய விமான டிக்கெட்டுகளை இப்போதே முன் பதிவு செய்து வருகின்றனர்.
இதனால் கோடை விடுமுறையைெயாட்டி ஏப்ரல், மே மாதங்களுக்கான விமான டிக்கெட்டுகள் பாதிக்கு மேற்பட்டவை விற்று தீர்ந்து விட்டது. குறிப்பாக ஒரு குழுவாக செல்வோர்கள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்துவிட்டனர். இதனால் வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது.
வருகிற ஏப்ரல், மே மாதத்தில் சென்னையில் இருந்து கோவா செல்வதற்கு ரூ.4,500 முதல் ரூ.6 ஆயிரம் விமான கட்டணம் உயர்ந்து உள்ளது. டெல்லிக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம், மதுரைக்கு ரூ.3500 - 4500, துபாயில் இருந்து சென்னைக்கு வர ரூ.25ஆயிரம் முதல் ரூ.35ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. வழக்கமாக துபாய்- சென்னை விமான கட்டணம் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் இருக்கும். மும்பை விமான கட்டணமும் அதிகரித்து உள்ளது.
இது குறித்து டிராவல்ஸ் ஏஜென்சியை சேர்ந்தவர்கள் கூறும்போது, பொதுவாகவே ஏப்ரல் மாதத்தில் தமிழ் வருட பிறப்பின் போது விமான டிக்கெட் கட்டணங்கள் உயர்வது வழக்கம் .தற்போது இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை தமிழ் வருட பிறப்பு வருவதினால் வார விடுமுறை சேர்த்து சொந்த ஊர், சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . இதனால் வெளிநாடு மற்றும் கோவா,டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளது.
விமான பயணிகளுடைய எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து விமான நிறுவனங்கள் கோடை விடுமுறை, வார விடுமுறை, பண்டிகை விடுமுறைகளை கணக்கில் கொண்டு டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி வருகிறது. இது பயணிகளுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரித்தாலும் அது பயணிகளை வெகுவாகவே பாதிக்கும். இருந்தாலும் கடைசி நேரத்தில் பயணத்தை மேற்கொள்வோர் விமான சேவையே நம்பி உள்ளனர். இதனால் அதிக கட்டணத்தை செலுத்தி செல்கின்றனர் என்றனர்.
- மக்கள் காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
- காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வேதாச்சலம் நகர் பகுதியில் ஏ.டி.எம்.மையம் உள்ளது.
வாடிக்கையாளர் ஒருவர் எந்திரத்தில் பணம் எடுத்துக்கொண்டு இருந்தபோது ஏ.டி.எம்.எந்திரத்தின் பின்பகுதியில் இருந்து கரும்புகை வந்தது.
சிறிது நேரத்தில் தீ மள,மளவென எந்திரம் முழுவதும் பரவி பற்றி எரியத்தொடங்கியது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் அலறியடித்து ஏ.டி.எம். மையத்தில் இருந்து வெளியேவந்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீணை அணைத்தனர். ஏ.டி.எம்.மின் பின்புறம் முழுவதும் எரிந்து நாசமானது. மின் இணைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
இந்த தீவிபத்தில் ஏ.டி.எம். எந்திரத்தின் உள்ளே இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி கார் முழுவதும் பற்றி எரிந்தது.
- போலீசார் அங்கிருந்த காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் உள்ள குளக்கரை அருகே பென்ஸ் சொகுசு கார் ஒன்று நேற்று இரவு நின்றது. அதில் இருந்த காதல் ஜோடி தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த காதல் ஜோடி காரில் இருந்து இறங்கி கடும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.
இதில் ஆவேசம் அடைந்த காதலன் திடீரென காருக்கு தீவைத்தார். காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி கார் முழுவதும் பற்றி எரிந்தது.
இரவு நேரத்தில் கார் தீப்பற்றி எரிவதை கண்டு சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அப்போது காதல் ஜோடிக்குள் ஏற்பட்ட தகராறில் கார் எரிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். எனினும் சொகுசு கார் முழுவதும் எரிந்து நாசமானது.
போலீசார் அங்கிருந்த காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர். இதில் காதலன் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் என்பது தெரியவந்தது. அவர் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கடந்த ஆண்டு மருத்துவம் படித்து முடித்து உள்ளார். இவரும் அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்தனர்.
நேற்று மாலை மாணவியை சந்திக்க காதலன் வந்து உள்ளார். பின்னர் அவர்கள் காரில் சுற்றியபடி காஞ்சிபுரம் ராஜகுளம் குளக்கரை அருகே வண்டியை நிறுத்திவிட்டு பேசியபடி இருந்து உள்ளனர். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த மாணவி பேச மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த காதலனான டாக்டர் தனது ரூ.70 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை தீவைத்து எரித்து இருப்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் எரிப்பு தொடர்பாக எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.
காதலி பேச மறுத்ததால் காதலன் தனது சொகுசு காரை தீவைத்து எரித்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காஞ்சிபுரம் மாநகராட்சியில் தேசியக்கொடியை மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
- செங்கல்பட்டில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் அமைந்துள்ள மைதானத்தில் கலெக்டர் ராகுல் நாத் தேசிய கொடியை ஏற்றினார்.
காஞ்சிபுரம்:
குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலா கலமாக கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஆர்த்தி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து காவல் துறையில் சிறந்து பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னா டை அணிவித்து கலெக்டர் ஆர்த்தி கவுரவித்தார். பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ரூ.2 கோடியே 3 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்களை கலெக்டர் ஆர்த்தி பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக காவல் கண்காணிப்பாளர் பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, தாசில்தார் பிரகாஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் தேசியக்கொடியை மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் வங்கி தலைவர் வாலாஜாபாத் பா. கணேசன் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் வங்கி தலைவர் பாலாஜி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பயனாளிகளுக்கு ரூ. 30 லட்சத்து 7 ஆயிரத்து 456 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
மேலும் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 23 போலீசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 373 அலு வலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள், பரிசுகள் வழங்கி கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் கவுரவித்தார். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா, திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜவகர்லால், வட்டாட்சியர் மதியழகன் கலந்து கொண்டனர்.
மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் ரவி, சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் ராசாத்தி செல்வ சேகரன், பொன்னேரி நகராட்சி அலுவலகத்தில் நகரத் தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் தலைவர் பாபு, ஆலாடு ஊராட்சியில் தலைவர் பிரசாத், அத்திபட்டு ஊராட்சியில் தலைவர் சுகந்தி வடிவேல், காட்டூர் ஊராட்சியில் தலைவர் செல்வ ராமன் உள்ளிட்டோர் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர்.
செங்கல்பட்டில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் அமைந்துள்ள மைதானத்தில் கலெக்டர் ராகுல் நாத் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாவட்ட வருவாய் துறை அலுவலர் மேனுவல் ராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் தேசிய கொடியை ஏற்றினர். செங்கல்பட்டு நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
- கடந்த 21-ந்தேதி இரவு தொழிலாளர்கள் பணியில் இருந்த போது திடீரென கோட்டிங் எந்திரம் வெடித்து தீ பரவியது.
- திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சேனாதிபதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காடரம்பாக்கம் பகுதியில் கார் சைலன்சர்களுக்கு கோட்டிங் அடிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
கடந்த 21-ந்தேதி இரவு தொழிலாளர்கள் பணியில் இருந்த போது திடீரென கோட்டிங் எந்திரம் வெடித்து தீ பரவியது. இதில் அருகில் இருந்த தொழிலாளர்களான காட்ரம்பாக்கம் பகுதியை சேர்ந்த மதன் குமார் (வயது26). திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சேனாதிபதி(36), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் (19), புத்தாராய் (26),ரஞ்சித் (26) ஆகிய 5 பேருக்கு பலத்த தீ காயம் ஏற்பட்டது.
அவர்களை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சேனாதிபதி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தாயார் குளம் அருகே பதுங்கி இருந்த பரிவட்டம் விக்கியை போலீசார் கைது செய்தனர். அப்போது தப்பி ஓட முயன்ற அவருக்கு கை முறிந்தது.
- பதுங்கி இருந்த மணிகண்டன், வசந்தகுமார் ஆகியோரையும் போலீசார் பிடித்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், மாண்டூ கணீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நாட்டு வெடிகுண்டுகள் தயார் செய்து வந்தது தெரிந்தது.
இதுதொடர்பாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த புகழேந்தி, திருத்தணியை சேர்ந்த ஜெயக்குமார் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய வெடிபொருட்கள், ஆணி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
எதிர்தரப்பை சேர்ந்த ஒருவரை தீர்த்து கட்ட அவர்கள் வெடிகுண்டு தயாரித்து வந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான காஞ்சிபுரம், தாயார் குளம் பகுதியை சேர்ந்த பரிவட்டம் விக்கி என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே தாயார் குளம் அருகே பதுங்கி இருந்த பரிவட்டம் விக்கியை போலீசார் கைது செய்தனர். அப்போது தப்பி ஓட முயன்ற அவருக்கு கை முறிந்தது.
அவருடன் பதுங்கி இருந்த மணிகண்டன், வசந்தகுமார் ஆகியோரையும் போலீசார் பிடித்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. கை முறிந்த பரிவட்டம் விக்கிக்கு அரசு ஆஸ்பத்திரியில் மாவு கட்டு போடப்பட்டது.
- வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வருகை புரிந்து பெற்றுக்கொள்ளலாம்.
- www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200/-, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/- (மாற்றுத்திறனாளிகள் பொறுத்தவரை 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ரூ.600/-), 12-ம் வகுப்பு தேர்ச்சி/ பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400/- (மாற்றுத்திறனாளிகள் பொறுத்தவரை ரூ.750/-) மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600/- (மாற்றுத்திறனாளிகள் பொறுத்தவரை ரூ,1000/-) வீதம் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் கல்வித்தகுதிகளை பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். (மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை ஓராண்டு நிறைவு பெற்றிருந்தாலே போதும்) பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.
அனைத்து தகுதிகளும், விருப்பமும் உள்ள பதிவுதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வருகை புரிந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ளவாறு வருவாய் ஆய்வாளர் அளவில் வழங்கப்பட்ட வருமானச் சான்று, மாற்றுச்சான்றிதழ், கல்விச்சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் சேமிப்பு கணக்கு புத்தக நகல் இணைத்து காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






