என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ஏகனாபுரம் எல்லைக்குட்பட்ட நிலங்களை பதிவு செய்வதற்கு எந்த பதிவு நடவடிக்கையும் நிறுத்திவைக்கப்படவில்லை.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 4,750 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய விமான நிலையத்துக்காக குடியிருப்பு நிலம், விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம், மேலேறி, நாகப்பட்டு, நெல்வாய், குணகரம்பாக்கம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரப்பதிவு துறையின் சார்பில் வெளியிட்ட தகவலில், பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைய உள்ளதால் சுற்றி உள்ள 13 கிராம பகுதிகளில் உள்ள இடங்களை வாங்கவோ, விற்கவோ, தான செட்டில்மென், அடமானம் போன்ற பத்திரபதிவுக்கு தடையில்லா சான்று பெற்ற பின்னரே பத்திரப்பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே ஏகனாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஏகனாபுரம் கிராம பகுதிக்குட்ட நன்செய், புன்செய், கிராம நத்தம் ஆகியவற்றில் அடங்கியிருக்ககூடிய சர்வே எண்கள் கொண்ட எந்த நிலத்தையும் கிரையமோ, தான செட்டில்மென்ட்டோ, பாகப்பிரிவினை, அடமானம் போன்ற எல்லாவித பத்திரப்பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எதற்காக? அந்த உத்தரவை பிறப்பித்த அரசு அதிகாரியின் விவரம், அதற்கான நகல், எந்த தேதியில் இருந்து ஏகனாபுரம் பகுதியில் பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விபரங்களை கேட்டு இருந்தார்.

    இதற்கு அதிகாரிகள் அளித்து உள்ள பதிலில், ஏகனாபுரம் எல்லைக்குட்பட்ட நிலங்களை பதிவு செய்வதற்கு எந்த பதிவு நடவடிக்கையும் நிறுத்திவைக்கப்படவில்லை. எந்த அதிகாரிகளிடம் இருந்தும் அந்த உத்தரவானது வரவில்லை.1.09.22 முதல் 28.12.022 வரை மூன்று ஆவணங்கள் பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
    • பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மீனம்பாக்கம் :

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடமிருந்து ரூ.25 லட்சத்து 43 ஆயிரம் மதிப்புள்ள 510 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    மேலும் சிங்கப்பூரில் இருந்து வந்த பெண்ணின் கைப்பையில் இருந்த ரூ.27 லட்சத்து 43 ஆயிரம் மதிப்புள்ள 550 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். இதையடுத்து சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த வாலிபரின் காலில் இருந்த 'ஷூ'வில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.24 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 484 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    அதேபோல் கொழும்பில் இருந்து விமானத்தில் வந்த வந்த வாலிபரின் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.31 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள இருந்து 625 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    இதைத்தொடர்ந்து பெண் உள்பட 4 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 8 லட்சத்தி 15 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 169 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் கடத்தலில் பிண்ணனியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

    • நடிகை குஷ்பு விபத்தில் சிக்கி காலில் அடிபட்டு கட்டு போட்டுள்ளார்.
    • ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினர்.

    சென்னை

    நடிகை குஷ்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியூர் செல்லும் பயணத்துக்கான ஏற்பாடுகளில் இருந்தபோது விபத்தில் சிக்கி காயமடைந்ததாக வலைத்தளத்தில் தெரிவித்து முழங்காலில் கட்டுப்போட்டு இருந்த புகைப்படத்தையும் பகிர்ந்து இருந்தார்.

    அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினர்.

    இந்த நிலையில் வெளியூர் செல்ல காலை சென்னை விமான நிலையத்துக்கு சென்ற குஷ்பு அங்கு கால் வலியோடு இருந்த தனக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் உடனடியாக சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து தரவில்லை என்று சாடி உள்ளார்.

    டுவிட்டரில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டேக் செய்து குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், "முழங்காலில் காயத்துடன் இருக்கும் பயணியை அழைத்து செல்ல சக்கர நாற்காலி கூடவா உங்களிடம் இல்லை. சக்கர நாற்காலிக்காக சென்னை விமான நிலையத்தில் அரைமணிநேரம் காத்து இருந்தேன்.

    அதன்பிறகு வேறு விமான நிறுவனத்திடம் இருந்து சக்கர நாற்காலியை வாங்கி வந்து என்னை அழைத்துச் சென்றனர். நீங்கள் சிறந்த சேவை செய்ய முடியும் என்று என்னால் உறுதி சொல்ல முடியும்'' என்று பதிவிட்டு இருந்தார். இது பரபரப்பானது.

    இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டு டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விவகாரம் உடனடியாக சென்னை விமான நிலையை குழுவுக்கு கொண்டு செல்லப்படும்'' என்று தெரிவித்து உள்ளது.

    • மாண்டஸ் புயல் காரணமாக வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்த பாலப்பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது.
    • கன்னிகாபுரம் பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் முருகன் காலனிக்கு செல்லும் கன்னிகாபுரம் பகுதியில் வேகவதி ஆற்று தரைப்பாலம் உள்ளது. பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்த பாலப்பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது. இதனால் கன்னிகாபுரம் மக்கள் சுற்றுப்பாதையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் பருவமழை முடிந்த பின்னரும் சேதம் அடைந்த வேகவதி ஆற்றுத்தரைப் பாலம் இன்னும் சீரமைக்கப்படவில்லை. இது குறித்து கன்னிகாபுரம் பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளது. சேதம் அடைந்த இந்த தரை பாலத்தின் வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். பொதுமக்களும் நீண்ட தூரம் சுற்றி செல்வதற்கு பதிலாக சேதமடைந்த இப்பாலம் வழியாக ஆபத்தான முறையில் செல்வதினால் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே சேதம் அடைந்த இந்த பாலத்தை உடனே சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து வருகிறது.
    • இலங்கையின் பெரிய ரக விமானங்கள் எரிபொருள் நிரப்பி தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்கின்றன.

    ஆலந்தூர்:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த ஆண்டு பொது மக்களின் போராட்டத்தையடுத்து அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ரனில் விக்ரமசிங்கே புதிய அதிபராக பொறுப்பேற்றார். எனினும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நிலவிவருகிறது. இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து வருகிறது.

    கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஜுன் இறுதிவரை இலங்கையில் விமானங்களுக்கான எரி பொருள் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது சென்னையில் இலங்கை விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. பின்னர் நிலைமை ஓரளவு சீரானது.

    இந்த நிலையில் இலங்கையில் மீண்டும் விமானங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு எரிபொருள் கையிருப்பு இல்லை. இதனால் இலங்கையில் இருந்து மெல்பேர்ன், சிட்னி, டோக்கியோ போன்ற தொலைதூர நாடுகளுக்கு செல்ல விமானங்களுக்கு போதுமான எரிபொருள் இல்லாத நிலை நீடித்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து இலங்கை விமானங்கள் மீண்டும் சென்னை, திருவனந்தபுரம், கொச்சின் ஆகிய விமான நிலையங்களுக்கு வரத் தொடங்கி உள்ளன.

    சென்னை விமான நிலையத்தில் இலங்கை விமானத்தின் பெரிய ரக ஏ330 விமானத்தில் எரிபொருள் நிரப்பப்படுகிறது. ஆளில்லாத இந்த பெரிய ரக விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டு மீண்டும் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த பெரிய ரக விமானத்தில் இருந்து மற்ற இலங்கை விமானங்களுக்கு அது பயன்படுத்தப்படுகிறது. இதற்காக கடந்த ஆண்டு இலங்கை விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஒப்பந்தம் செய்தது போல இந்த முறையும் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதேபோல் இலங்கையின் அருகில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி ஆகிய விமான நிலையங்களில் இருந்தும் இலங்கையின் பெரிய ரக விமானங்கள் எரிபொருள் நிரப்பி தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்கின்றன.

    இதுபோன்ற எரிபொருள் தட்டுப்பாட்டை இதுவரை பார்த்தது இல்லை என்று 1988-ம் ஆண்டு முதல் 8 விமான நிறுவனங்களில் பணிசெய்த பிரிட்டிஷ் விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி ரமணி.
    • போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி ரமணி. இவர்களது மகன் கார்த்திக். இவர் மது போதையில் தனது பெற்றோரை சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து சிவகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.

    • ஊராட்சி தலைவர் அதே கிராமத்தில் 3 இடங்களில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார்.
    • ஒரு கிராமத்தில் பல இடங்களில் குடியரசு தின விழா நடைபெற்றால் அனைத்து இடங்களிலும் ஒரே நபர் தேசியக் கொடியை ஏற்ற முடியாது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுகுணா. பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணான இவர் திருப்புட்குழி ஊராட்சியில் பொது வார்டில் போட்டியிட்டு ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளார். இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்.

    இவர் குடியரசு தின விழாவில் பங்கேற்க திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தேசிய கொடியை ஏற்றச் சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்கள் தடுத்துள்ளனர்.

    இதனால் அங்கு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தேசியக்கொடியை ஏற்றவில்லை.

    இதுபற்றி ஊராட்சி தலைவர் சுகுணா பாலுசெட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் தன்னை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்ததாக பாலசந்தர், செல்வம் ஆகியோர் மீது புகார் செய்தார். இதுகுறித்து சுகுணா கூறுகையில், என்னை எதிர்த்து போட்டியிட்டவர்களின் ஆதரவாளர்கள் என்னை பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். பள்ளியில் என்னை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்தனர். அவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளேன். தலைமை ஆசிரியர் விஜயகுமாரி மீது பள்ளிக் கல்வித்துறையில் புகார் கொடுக்க உள்ளேன் என்றார்.

    இதுகுறித்து தலைமை ஆசிரியர் விஜயகுமாரி கூறுகையில், "நான் எனது விளக்கத்தை கலெக்டரிடம் தெரிவித்துவிட்டேன்" என்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி கூறுகையில், "ஊராட்சி தலைவர் ஆரம்ப பள்ளியில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை ஏற்ற வரும்போது முன் விரோதத்தில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் சுகுணா அங்கிருந்து வெளியேறினார். எனவே வேறு நபரை வைத்து தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர்" என்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    ஊராட்சி தலைவருக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தான் கொடி ஏற்ற முழு அதிகாரம் உள்ளது. பள்ளிக்கூடம் என்பது முழுக்க முழுக்க தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு அவர் தேசியக்கொடியை ஏற்றுவார். அவர் இல்லை என்றால் வேறு யாராவது ஏற்றலாம்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஊராட்சி தலைவர் அதே கிராமத்தில் 3 இடங்களில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார். ஒரு கிராமத்தில் பல இடங்களில் குடியரசு தின விழா நடைபெற்றால் அனைத்து இடங்களிலும் ஒரே நபர் தேசியக் கொடியை ஏற்ற முடியாது. பள்ளிகளில் ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று எந்த விதியும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மடத்துக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத் தருமாறு கோர்ட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
    • அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைத்துவிட்டு சென்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில் கிழக்கு கோபுரம் அருகே ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் மடம் அமைந்துள்ளது.

    இந்த மடத்திற்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தேனம்பாக்கம் கிராமம் பெரிய தோட்டம் பகுதியில் சுமார் 8.76 ஏக்கர் நிலம் உள்ளது. இதை பல ஆண்டு காலமாக தாமஸ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து அவரது மகன் பிரின்ஸ் என்பவர் கையகப்படுத்தி வைத்திருந்தார்.

    இந்நிலையில் ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் மடத்திற்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமும், கோர்ட்டிலும் மடத்தின் சார்பில் வழக்கு தொடுத்திருந்தனர். மடத்துக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத் தருமாறு கோர்ட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி இன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அதிரடியாக நுழைந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து நிலத்தை மீட்டு மடத்தின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் அங்கு அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைத்துவிட்டு சென்றனர். கோர்ட்டு உத்தரவின்படி இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளால் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 6 கோடி ஆகும்.

    • கொல்கத்தாவில் இருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.
    • சென்னை விமான நிலையத்தில் 6 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு ஐதராபாத் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், நேற்று இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து கொல்கத்தா செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டது.

    அதேபோல் ஐதராபாத்தில் இருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கொல்கத்தாவில் இருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.

    இலங்கையில் இருந்து வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று அதிகாலை 2 மணிக்கு, சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து, அதிகாலை 3.15 மணிக்கு, இலங்கைக்கு புறப்பட்டு செல்லும். அந்த இரு விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்னை விமான நிலையத்தில் 6 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதற்கு காரணம் இரவு நேரம் கடுமையான குளிர் நிலவுகிறது. எனவே இரவு விமானங்களிலும், அதிகாலை விமானங்களிலும், பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதேபோல் நேற்று இரவு ஐதராபாத் மற்றும் கொல்கத்தா செல்ல வேண்டிய 2 விமானங்களும், இன்று அதிகாலை ஐதராபாத், கொல்கத்தா, இலங்கை ஆகிய இடங்களில் இருந்து சென்னை வர வேண்டிய 3 விமானங்களிலும் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இதையடுத்து புறப்பாடு, வருகை ஆகிய 6 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    பெரிய ரக விமானங்கள் அதற்குத்தகுந்த, பயணிகள் எண்ணிக்கை இல்லாமல், மிகவும் குறைவாக இருக்கும் சூழ்நிலையில், விமானங்களை காலியாக இயக்க முடியாது. அதே நேரத்தில் அந்தப் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

    இந்த தகவலை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் நேற்று இரவு விமானம் தரையிறங்க அனுமதி வழங்கினர்.
    • மருத்துவக் குழுவினர், அவசரமாக விமானத்துக்குள் ஏறி பயணியை பரிசோதித்தனர். ஆனால் பயணி சஜித் அலி ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

    ஆலந்தூர்:

    அசாம் மாநிலம் கவு காத்தியில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று இரவு 134 பயணிகளுடன், சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது.

    அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது, விமானத்தில் வந்த கவுகாத்தியை சேர்ந்த சஜித் அலி (46) என்ற பயணிக்கு, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு விமானத்திற்குள் அவதிப்பட்டார். அவருடன் வந்த அவருடைய சகோதரர் ராஜேஷ் அலி, இதுபற்றி விமான பணிப்பெண்களுக்கு தெரிவித்தார்.

    உடனடியாக அவர்கள் விமானிக்கு தகவல் கொடுத்தனர். விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் கொடுத்தார். விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் நேற்று இரவு விமானம் தரையிறங்க அனுமதி வழங்கினர்.

    சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், அவசரமாக விமானத்துக்குள் ஏறி பயணியை பரிசோதித்தனர். ஆனால் பயணி சஜித் அலி ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

    இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சஜித் அலி ஏற்கனவே, கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். அதற்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், மேல் சிகிச்சை பெறுவதற்காக, விமானத்தில் தனது சகோதரர் ராஜேஷ் அலியுடன் வந்தபோது திடீரென உடல்நிலை மோசமாகி உயிரிழந்தது தெரிய வந்தது.

    இதற்கிடையே வழக்கமாக, இந்த விமானம் இரவு 9.40 மணிக்கு கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் இரவு 10.15 மணிக்கு பெங்களூர் புறப்பட்டு செல்லும். ஆனால் இந்த விமானத்திற்குள், பயணி ஒருவர் உயிரிழந்து விட்டதால், விமானத்தை முழுமையாக சுத்தப்படுத்திய பின் இரண்டு மணி நேரம் கழித்து நள்ளிரவு 12.30 மணிக்கு 106 பயணிகளுடன் பெங்களூர் புறப்பட்டு சென்றது.

    • விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
    • பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    மீனம்பாக்கம்

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

    அவரது காலில் அணிந்திருந்த ஷூ சாக்ஸை கழற்றியபோது, தங்கத்தை பேஸ்ட் போல் மாற்றி அதை கறுப்பு நிற பாலித்தீன் பையில் மறைத்து கால் பாதத்தில் பேஸ்ட் போட்டு ஒட்டி அதன் மேல் சாக்சை அணிந்து நூதன முறையில் கடத்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரிடம் இருந்து ரூ.66 லட்சத்து 82 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 340 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    துபாயில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 2 பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் இருந்த லேப்டாப் சார்ஜர் பின்னில் உருளை வடிவ தங்க கம்பிகளை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவர்களிடம் இருந்து ரூ.27 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள 548 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் 3 பேரிடம் இருந்து ரூ.94 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 888 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கோடை விடுமுறையைெயாட்டி ஏப்ரல், மே மாதங்களுக்கான விமான டிக்கெட்டுகள் பாதிக்கு மேற்பட்டவை விற்று தீர்ந்து விட்டது.
    • விடுமுறை, பண்டிகை விடுமுறைகளை கணக்கில் கொண்டு டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி வருகிறது.

    ஆலந்தூர்:

    கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு சகஜநிலை திரும்பி உள்ளதால் விமான சேவைகளும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளன. சுற்றுலா, வெளிநாடு செல்வோர், சொந்த ஊருக்கு செல்வோர் என உள்நாட்டு, வெளிநாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளால் கோடை விடுமுறையையொட்டி வருகிற ஏப்ரல், மே மாதங்களில் வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலா இடங்களுக்கு செல்ல விமான பயணிகள் திட்டமிட்டு வருகிறார்கள்.

    சுற்றுலா செல்வோர் மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்வோர் தங்களுடைய விமான டிக்கெட்டுகளை இப்போதே முன் பதிவு செய்து வருகின்றனர்.

    இதனால் கோடை விடுமுறையைெயாட்டி ஏப்ரல், மே மாதங்களுக்கான விமான டிக்கெட்டுகள் பாதிக்கு மேற்பட்டவை விற்று தீர்ந்து விட்டது. குறிப்பாக ஒரு குழுவாக செல்வோர்கள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்துவிட்டனர். இதனால் வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது.

    வருகிற ஏப்ரல், மே மாதத்தில் சென்னையில் இருந்து கோவா செல்வதற்கு ரூ.4,500 முதல் ரூ.6 ஆயிரம் விமான கட்டணம் உயர்ந்து உள்ளது. டெல்லிக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம், மதுரைக்கு ரூ.3500 - 4500, துபாயில் இருந்து சென்னைக்கு வர ரூ.25ஆயிரம் முதல் ரூ.35ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. வழக்கமாக துபாய்- சென்னை விமான கட்டணம் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் இருக்கும். மும்பை விமான கட்டணமும் அதிகரித்து உள்ளது.

    இது குறித்து டிராவல்ஸ் ஏஜென்சியை சேர்ந்தவர்கள் கூறும்போது, பொதுவாகவே ஏப்ரல் மாதத்தில் தமிழ் வருட பிறப்பின் போது விமான டிக்கெட் கட்டணங்கள் உயர்வது வழக்கம் .தற்போது இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை தமிழ் வருட பிறப்பு வருவதினால் வார விடுமுறை சேர்த்து சொந்த ஊர், சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . இதனால் வெளிநாடு மற்றும் கோவா,டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளது.

    விமான பயணிகளுடைய எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து விமான நிறுவனங்கள் கோடை விடுமுறை, வார விடுமுறை, பண்டிகை விடுமுறைகளை கணக்கில் கொண்டு டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி வருகிறது. இது பயணிகளுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரித்தாலும் அது பயணிகளை வெகுவாகவே பாதிக்கும். இருந்தாலும் கடைசி நேரத்தில் பயணத்தை மேற்கொள்வோர் விமான சேவையே நம்பி உள்ளனர். இதனால் அதிக கட்டணத்தை செலுத்தி செல்கின்றனர் என்றனர்.

    ×