என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 55வது ஜெயந்தி உற்சவம் 3 நாட்கள் நடக்கிறது.
    • ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சங்கர மடத்தில் ஜெயந்தி உற்சவம் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சி சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 55-வது ஜெயந்தி உற்சவம் 3 நாட்கள் நடக்கிறது. இது தொடர்பாக

    காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயர் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதியாக இருந்து வருபவர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். பக்தர்களின் துயர்களை தீர்த்து வரும் இவரது 55-வது ஜெயந்தி உற்சவம் வருகிற 18-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

    இதனையொட்டி காஞ்சிபுரம் சங்கரமடத்தில் பிப்ரவரி 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்களும் சதுர்வேத பாராயணம், வித்வத் சதஸ், ஆன்மீகச் சொற்பொழிவுகள், நாமசங்கீர்த்தனம், இன்னிசைக் கச்சேரிகள் நடைபெற உள்ளது.

    18-ந்தேதி ஜெயந்தி நாளன்று ஸ்ரீருத்ர பாராயணம்,ஹோமங்கள் மற்றும் சங்கர மடத்தில் இருக்கும் மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்திலும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் விசேஷ அலங்காரங்களும் நடைபெற உள்ளது.

    தற்சமயம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சங்கர மடத்தில் விஜேயந்திரர் உள்ளார். அங்கும் ஜெயந்தி உற்சவம் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம்.

    காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் சரஸ்வதி கோவிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி உற்சவத்தையொட்டி சரஸ்வதிக்கு 18-ந்தேதி வெள்ளி வீணை சாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கல்லூரியில் பயின்ற பழைய மாணவர்கள் சரஸ்வதிக்கு வெள்ளி வீணை காணிக்கையாக கொடுத்துள்ளனர்.

    ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நாளன்று சங்கர மடத்தில் சுத்தமான விபூதி தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பசுவின் சாணத்தில் வைதீகமாக செய்யப்பட்ட சாம்பலை விபூதியாக்கி, சலித்து மிருதுவானதாகவும், சுத்தமானதாகவும் மாற்றப்பட்டு விபூதி தயாரிக்கப்படுகிறது. இவை 18-ந்தேதி மகா சிவராத்திரியன்று பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் உடன் இருந்தார்.

    • இந்த விழா நாளை வரை மொத்தம் 3 நாட்கள் நடைபெறும்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பிரசித்திபெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைபூசத்தை முன்னிட்டு தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா நேற்று மாலை மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தெப்ப குளத்தில் நடைபெற்றது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை மொத்தம் 3 நாட்கள் நடைபெறும். இந்த தெப்பத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் வெள்ளீஸ்வரர், காமாட்சி அம்மன், வைகுண்ட பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிப்பார்கள்.

    அதன்படி நேற்று இரவு வெள்ளீஸ்வரர் தெப்பத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், பின்னர் காமாட்சி அம்மன் தெப்பத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் காமாட்சி அம்மன், யானை வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகள் அனைத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் கவெனிதா மற்றும் கோவில் பரம்பரை தர்மகர்த்தா மணலி டாக்டர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ரூ.40½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது.
    • 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    மீனம்பாக்கம் :

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டனர்.

    அவரிடம் இருந்து ரூ.74 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 460 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த 2 வாலிபர்களின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்த கைப்பையில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் இருந்தன. அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள யூரோ, பவுண்டு, திர்காம்ஸ் ஆகிய வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • அ.தி.மு.க. சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினர்.
    • அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவசிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காஞ்சிபுரம்:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் காஞ்சிபுரம் பெரியார் தூணில் இருந்து அமைதி பேரணியாக சென்றனர். அவர்கள், காந்தி ரோடு, மூங்கில் மண்டபம், காமராஜர் வீதி, இரட்டை மண்டபம் வழியாக காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் சென்று அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்கள்.

    இதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.சுகுமார், எஸ்.கே.பி. சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், படுநேல்லிபாபு பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், திலகர், வெங்கடேசன், தொ.மு.ச. பேரவை நிர்வாகிகள் சுந்தரவதனம், கே.ஏ.இளங்கோவன், மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன், முத்து செல்வம்,ஜெகநாதன், சுப்புராயன் , நிர்வாகிகள் அப்துல் மாலிக், யுவராஜ் சிகாமணி மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினர். இதில் அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், , பகுதிச் செயலாளர்கள் எம்.பி. ஸ்டாலின், பாலாஜி, ஜெயராஜ்,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    மேற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு இல்லத்தில் மாவட்ட செயலாளர் வளையாபதி, நகர செயலாளர் மகேஷ், நெசவாளர் அணி ஏகாம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான பெர்ரி தலைமையில் மாவட்டத் தலைவர் தண்டபாணி, நகர தலைவர் துரைராஜ், ஒன்றிய தலைவர் முரளி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவசிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சிவருத்ரையா மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிப்பவர்கள் புதிதாக கட்டப்பட இணைப்பு பாலம் வழியாக திரையரங்கை அடையலாம்.
    • 5 திரைகள் கொண்ட இந்த திரையரங்கங்களில் ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம்.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் மல்டிலெவல் கார் பார்க்கிங், வணிக வளாகம், திரையரங்கம், ஓட்டல்கள், கடைகள் கொண்ட கட்டிட பணிகள் முடிவடைந்து விட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2,100 கார்கள் நிறுத்தக்கூடிய மல்டி லெவல் கார்பார்க்கிங் கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்தது.

    அதைதொடர்ந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு முன்கூட்டியே வந்து காத்து இருக்கும் பயணிகள், சென்னை வந்து மாற்று விமானத்துக்காக அதிக நேரம் காத்து இருக்கும் பயணிகள், வெளிநாடுகளில் இருந்து வரும் உறவினர்களை வரவேற்க வந்து காத்திருப்பவர்களுக்காக 5 திரைகள் கொண்ட திரையரங்கம் நேற்று திறக்கப்பட்டது.

    இந்த திரையரங்கை நடிகர்கள் சதீஷ், ஆனந்த்ராஜ், கூல் சுரேஷ், இயக்குனர் வெங்கி, தயாரிப்பாளர் விஜய்பாண்டி ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் நடன நிகழ்ச்சிகள், புதிய திரையரங்கில் படங்கள் திரையிடப்பட்டன.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிப்பவர்கள் புதிதாக கட்டப்பட இணைப்பு பாலம் வழியாக திரையரங்கை அடையலாம். 5 திரைகள் கொண்ட இந்த திரையரங்கங்களில் ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம். மேலும் கூடிய விரைவில் உணவு விடுதிகள், சில்லறை கடைகள் திறக்கப்பட உள்ளன.

    இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பொழுதுபோக்கிற்காக திரையரங்கம் திறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கையில் 13-வது சட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும் என்பது தமிழக பா.ஜ.க.வின் நீண்ட கால கோரிக்கை ஆகும்.
    • ஈரோடு இடைத்தேர்தல் எங்களுக்கான தேர்தல் இல்லை.

    மீனம்பாக்கம்:

    அசுர பலம் கொண்ட தி.மு.க.வை எதிர்க்க வலிமையான வேட்பாளர் வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன்பு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கையில் 13-வது சட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும் என்பது தமிழக பா.ஜ.க.வின் நீண்ட கால கோரிக்கை ஆகும். தற்போது இலங்கை சூழல் மாறி கொண்டு இருக்கிறது. வடகிழக்கு பகுதியில் உள்ள தலைவர்கள், தமிழர்கள் 13-வது அட்டவணையில் உள்ள போலீஸ், வருவாய் ஆகிய 2 அதிகாரங்களை தரவேண்டும் என கேட்டு கொண்டு உள்ளனர்.

    இலங்கை சென்றபோது ரணில் விக்கரம சிங்கேவை இந்திய வெளியுறவு துறை மந்திரி சந்தித்து விட்டு வந்தார். வெளியுறவு மந்திரியை சந்தித்து இலங்கையில் வருவாய், போலீஸ் அதிகாரத்துடன் கூடிய 13-வது அட்டவணையை விரைவாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. சார்பில் கோரிக்கை வைக்க உள்ளோம்.

    ஈரோடு இடைத்தேர்தல் எங்களுக்கான தேர்தல் இல்லை. அசுர பலம், பண பலம், படை பலம், ஆள் பலம் எல்லாவற்றுக்கும் மேலாக அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்த கூடிய தி.மு.க.வை எதிர்த்து நிற்க வேண்டும் என்றால் ஒரு வலிமையான வேட்பாளர் வேண்டும். இன்னும் 2 நாட்களில் நாங்கள் சொல்லும் வரை பொறுமையாக இருங்கள்.

    கூட்டணி பெயரை ஏன் மாற்றினார்கள்? என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். காலையில் இருந்த கூட்டணி பெயர் 6 மணி நேரத்தில் எப்படி மாறியது என்பது தெரியவில்லை?. அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் என்னிடம் பேசும் போது பிரிண்டிங் பிழை என்றார்கள். மோடி படம் இல்லை என்பதை பேனர் வைத்தவர்களிடம்தான் கேட்க வேண்டும். நிறைய பேர் களத்தில் வேட்பாளர்களை நிறுத்துகின்றனர். கட்சியின் அதிகாரப்பூர்வ பதில் விரைவில் சொல்லப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ஏகனாபுரம் எல்லைக்குட்பட்ட நிலங்களை பதிவு செய்வதற்கு எந்த பதிவு நடவடிக்கையும் நிறுத்திவைக்கப்படவில்லை.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 4,750 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய விமான நிலையத்துக்காக குடியிருப்பு நிலம், விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம், மேலேறி, நாகப்பட்டு, நெல்வாய், குணகரம்பாக்கம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரப்பதிவு துறையின் சார்பில் வெளியிட்ட தகவலில், பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைய உள்ளதால் சுற்றி உள்ள 13 கிராம பகுதிகளில் உள்ள இடங்களை வாங்கவோ, விற்கவோ, தான செட்டில்மென், அடமானம் போன்ற பத்திரபதிவுக்கு தடையில்லா சான்று பெற்ற பின்னரே பத்திரப்பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே ஏகனாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஏகனாபுரம் கிராம பகுதிக்குட்ட நன்செய், புன்செய், கிராம நத்தம் ஆகியவற்றில் அடங்கியிருக்ககூடிய சர்வே எண்கள் கொண்ட எந்த நிலத்தையும் கிரையமோ, தான செட்டில்மென்ட்டோ, பாகப்பிரிவினை, அடமானம் போன்ற எல்லாவித பத்திரப்பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எதற்காக? அந்த உத்தரவை பிறப்பித்த அரசு அதிகாரியின் விவரம், அதற்கான நகல், எந்த தேதியில் இருந்து ஏகனாபுரம் பகுதியில் பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விபரங்களை கேட்டு இருந்தார்.

    இதற்கு அதிகாரிகள் அளித்து உள்ள பதிலில், ஏகனாபுரம் எல்லைக்குட்பட்ட நிலங்களை பதிவு செய்வதற்கு எந்த பதிவு நடவடிக்கையும் நிறுத்திவைக்கப்படவில்லை. எந்த அதிகாரிகளிடம் இருந்தும் அந்த உத்தரவானது வரவில்லை.1.09.22 முதல் 28.12.022 வரை மூன்று ஆவணங்கள் பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
    • பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மீனம்பாக்கம் :

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடமிருந்து ரூ.25 லட்சத்து 43 ஆயிரம் மதிப்புள்ள 510 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    மேலும் சிங்கப்பூரில் இருந்து வந்த பெண்ணின் கைப்பையில் இருந்த ரூ.27 லட்சத்து 43 ஆயிரம் மதிப்புள்ள 550 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். இதையடுத்து சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த வாலிபரின் காலில் இருந்த 'ஷூ'வில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.24 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 484 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    அதேபோல் கொழும்பில் இருந்து விமானத்தில் வந்த வந்த வாலிபரின் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.31 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள இருந்து 625 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    இதைத்தொடர்ந்து பெண் உள்பட 4 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 8 லட்சத்தி 15 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 169 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் கடத்தலில் பிண்ணனியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

    • நடிகை குஷ்பு விபத்தில் சிக்கி காலில் அடிபட்டு கட்டு போட்டுள்ளார்.
    • ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினர்.

    சென்னை

    நடிகை குஷ்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியூர் செல்லும் பயணத்துக்கான ஏற்பாடுகளில் இருந்தபோது விபத்தில் சிக்கி காயமடைந்ததாக வலைத்தளத்தில் தெரிவித்து முழங்காலில் கட்டுப்போட்டு இருந்த புகைப்படத்தையும் பகிர்ந்து இருந்தார்.

    அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினர்.

    இந்த நிலையில் வெளியூர் செல்ல காலை சென்னை விமான நிலையத்துக்கு சென்ற குஷ்பு அங்கு கால் வலியோடு இருந்த தனக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் உடனடியாக சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து தரவில்லை என்று சாடி உள்ளார்.

    டுவிட்டரில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டேக் செய்து குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், "முழங்காலில் காயத்துடன் இருக்கும் பயணியை அழைத்து செல்ல சக்கர நாற்காலி கூடவா உங்களிடம் இல்லை. சக்கர நாற்காலிக்காக சென்னை விமான நிலையத்தில் அரைமணிநேரம் காத்து இருந்தேன்.

    அதன்பிறகு வேறு விமான நிறுவனத்திடம் இருந்து சக்கர நாற்காலியை வாங்கி வந்து என்னை அழைத்துச் சென்றனர். நீங்கள் சிறந்த சேவை செய்ய முடியும் என்று என்னால் உறுதி சொல்ல முடியும்'' என்று பதிவிட்டு இருந்தார். இது பரபரப்பானது.

    இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டு டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விவகாரம் உடனடியாக சென்னை விமான நிலையை குழுவுக்கு கொண்டு செல்லப்படும்'' என்று தெரிவித்து உள்ளது.

    • மாண்டஸ் புயல் காரணமாக வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்த பாலப்பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது.
    • கன்னிகாபுரம் பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் முருகன் காலனிக்கு செல்லும் கன்னிகாபுரம் பகுதியில் வேகவதி ஆற்று தரைப்பாலம் உள்ளது. பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்த பாலப்பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது. இதனால் கன்னிகாபுரம் மக்கள் சுற்றுப்பாதையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் பருவமழை முடிந்த பின்னரும் சேதம் அடைந்த வேகவதி ஆற்றுத்தரைப் பாலம் இன்னும் சீரமைக்கப்படவில்லை. இது குறித்து கன்னிகாபுரம் பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளது. சேதம் அடைந்த இந்த தரை பாலத்தின் வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். பொதுமக்களும் நீண்ட தூரம் சுற்றி செல்வதற்கு பதிலாக சேதமடைந்த இப்பாலம் வழியாக ஆபத்தான முறையில் செல்வதினால் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே சேதம் அடைந்த இந்த பாலத்தை உடனே சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து வருகிறது.
    • இலங்கையின் பெரிய ரக விமானங்கள் எரிபொருள் நிரப்பி தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்கின்றன.

    ஆலந்தூர்:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த ஆண்டு பொது மக்களின் போராட்டத்தையடுத்து அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ரனில் விக்ரமசிங்கே புதிய அதிபராக பொறுப்பேற்றார். எனினும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நிலவிவருகிறது. இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து வருகிறது.

    கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஜுன் இறுதிவரை இலங்கையில் விமானங்களுக்கான எரி பொருள் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது சென்னையில் இலங்கை விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. பின்னர் நிலைமை ஓரளவு சீரானது.

    இந்த நிலையில் இலங்கையில் மீண்டும் விமானங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு எரிபொருள் கையிருப்பு இல்லை. இதனால் இலங்கையில் இருந்து மெல்பேர்ன், சிட்னி, டோக்கியோ போன்ற தொலைதூர நாடுகளுக்கு செல்ல விமானங்களுக்கு போதுமான எரிபொருள் இல்லாத நிலை நீடித்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து இலங்கை விமானங்கள் மீண்டும் சென்னை, திருவனந்தபுரம், கொச்சின் ஆகிய விமான நிலையங்களுக்கு வரத் தொடங்கி உள்ளன.

    சென்னை விமான நிலையத்தில் இலங்கை விமானத்தின் பெரிய ரக ஏ330 விமானத்தில் எரிபொருள் நிரப்பப்படுகிறது. ஆளில்லாத இந்த பெரிய ரக விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டு மீண்டும் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த பெரிய ரக விமானத்தில் இருந்து மற்ற இலங்கை விமானங்களுக்கு அது பயன்படுத்தப்படுகிறது. இதற்காக கடந்த ஆண்டு இலங்கை விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஒப்பந்தம் செய்தது போல இந்த முறையும் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதேபோல் இலங்கையின் அருகில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி ஆகிய விமான நிலையங்களில் இருந்தும் இலங்கையின் பெரிய ரக விமானங்கள் எரிபொருள் நிரப்பி தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்கின்றன.

    இதுபோன்ற எரிபொருள் தட்டுப்பாட்டை இதுவரை பார்த்தது இல்லை என்று 1988-ம் ஆண்டு முதல் 8 விமான நிறுவனங்களில் பணிசெய்த பிரிட்டிஷ் விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி ரமணி.
    • போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி ரமணி. இவர்களது மகன் கார்த்திக். இவர் மது போதையில் தனது பெற்றோரை சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து சிவகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.

    ×