என் மலர்
காஞ்சிபுரம்
- சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
- சுங்க இலாகா அதிகாரிகள், கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.
மீனம்பாக்கம் :
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக விமானத்தில் இருந்து வந்திறங்கிய பயணிகளை கண்காணித்தனர். அப்போது மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் மிக்சி கிரைண்டர் இருந்ததால் அதை சந்தேகத்தின் பேரில் கழற்றி சோதனை செய்தனர். அப்போது கிரைண்டரில் தங்கத்தை வளைய வடிவத்தில் மாற்றி மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டனர். இவரிடம் இருந்து ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 200 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். அதேபோல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் டிராலி சூட்கேசில் தங்கத்தை கம்பி போல் மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.19 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள 383 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
துபாயில் இருந்து சென்னைக்கு வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் டிராலி சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்ட தங்க கம்பிகளையும் கண்டுபிடித்து, அவரிடமிருந்து ரூ.70 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 370 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.நேற்று ஒரே நாளில் மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் வந்த 3 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 2 லட்சத்து 93 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 953 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக 3 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.
- திருவள்ளூர் புதுநகரத் திட்டத்தின் கீழ் 11 வருவாய் கிராமங்கள் இணைக்கப்படுகின்றன.
- மீஞ்சூர் புதுநகரத் திட்டத்தின் கீழ், வாலூர், அத்திப்பட்டு, எண்ணூர், நந்தயம்பாக்கம், கொலாட்டி, அரியன்வாயல், மீஞ்சூர், கொளஞ்சி, காட்டுப்பள்ளி, வயலூர், நெய்தவாயல், புழுதிவாக்கம் ஆகிய கிராமங்கள் இணைக்கப்படுகின்றன.
காஞ்சிபுரம்:
வீட்டு வசதி துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் புதுநகரத் திட்டத்தின் கீழ் 11 வருவாய் கிராமங்கள் இணைக்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் முக்கிய போக்குவரத்து வழித்தடங்கள், திருப்பதி சாலை ஆகியவை வருகின்றன. மொத்தம் 37.74 சதுர கி.மீ. சுற்றளவு கொண்ட பகுதிகள் இதில் அடங்குகின்றன.
இதையடுத்து, திருவள்ளூர் புதுநகர திட்டத்தில் பாலேஸ்வரம், அத்துப்பாக்கம், அரியபாக்கம், எல்லாபுரம், ரல்லபாடி, பெரியபாளையம், சித்தாரியம்பாக்கம், மூக்கில்பட்டு, வடமதுரை, பணப்பாக்கம், வேலப்பாக்கம் ஆகியவை இணைக்கப்படுகின்றன.
அதேபோல காஞ்சிபுரம் புதுநகர திட்டத்தின் கீழ், ஏனாத்தூர், நல்லூர், பாப்பன்குழி, வையாவூர், கலையனூர், புத்தேரி, மேலாம்பி, கீழாம்பி, சித்தேரிமேடு, கோனேரிக்குப்பம், திருமால்படி தாங்கல், கீழ்கதிர்பூர், திம்ம சமுத்திரம், கருப்படி தட்டடை, அச்சுக்காடு, நெட்டேரி, அரப்பஞ்சேரி, சிறுகாவேரிபாக்கம் ஆகிய கிராமங்கள் இணைக்கப்படுகின்றன.
இந்த இணைப்பு தொடர்பான கருத்துக்களையும், ஆட்சேபனைகளையும் 2 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கலாம்.
மேலும் மீஞ்சூர் புதுநகரத் திட்டத்தின் கீழ், வாலூர், அத்திப்பட்டு, எண்ணூர், நந்தயம்பாக்கம், கொலாட்டி, அரியன்வாயல், மீஞ்சூர், கொளஞ்சி, காட்டுப்பள்ளி, வயலூர், நெய்தவாயல், புழுதிவாக்கம் ஆகிய கிராமங்கள் இணைக்கப்படுகின்றன. இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், உள்ளூர் அமைப்புகள், தங்களது ஆட்சேபனைகள், கருத்துக்களை 2 மாதங்களுக்குள் "அரசு செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, தலைமை செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009" என்ற முகவரியில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பரந்தூரில் புதிய விமான நிலைய கட்டுமானப்பணி மற்றும் பொருளாதாரம் குறித்த அறிக்கை தொடர்பான ஆலோசகரை நியமிப்பது தொடர்பாக அரசு திட்டமிட்டது.
- விரிவான அறிக்கை சமர்ப்பிக்க நிறுவனத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தன.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 4,750 ஏக்கரில் அமைய உள்ளது.
இந்த புதிய விமான நிலையத்தில் 2 ஓடுபாதைகள், 2 பயணிகள் முனையங்கள், சரக்குகள் கையாளும் முனையம் மற்றும் பராமரிப்பு, பழுதுபார்க்கும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுகிறது.
இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் புதிய விமான நிலைய கட்டுமான பணிக்கு விவசாய நிலங்கள், நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே பரந்தூரில் புதிய விமான நிலைய கட்டுமானப்பணி மற்றும் பொருளாதாரம் குறித்த அறிக்கை தொடர்பான ஆலோசகரை நியமிப்பது தொடர்பாக அரசு திட்டமிட்டது.
இதுகுறித்த விரிவான அறிக்கை சமர்ப்பிக்க நிறுவனத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தன. ஆனால் நிறுவனத்தினர் கூடுதல் அவகாசம் கேட்டதால் கடந்த திங்கட்கிழமை (6-ந்தேதி) இறுதி செய்யப்பட இருந்த டெண்டர் முடிவு செய்யப்படவில்லை. இதற்கு முன்பும் ஏற்கனவே ஒருமுறை ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 2-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பான விரிவான அறிக்கை தயாரிக்க போதுமான அவகாசம் இல்லை என்று கூறப்பட்டதால் இந்த மாத இறுதி (27-ந்தேதி) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'புதிய விமான நிலையம் அமைய உள்ள கிராம மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. எனவே திட்டத்தில் எந்த பாதிப்பும் வராது. விமான நிலையம் கட்டுவதற்கான விரிவான தொழில்நுட்ப-பொருளாதார அறிக்கையை மேற்கொள்ள ஆலோசகரை முடிவு செய்யும் டெண்டர் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த டெண்டர் கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட இருந்தது. திட்டத்தை உருவாக்கி விண்ணப்பிக்க போதுமான நேரம் இல்லை என்று அவகாசம் கேட்டதை அடுத்து வருகிற 27-ந்தேதி வரை டெண்டர் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெண்டரில் உள்ள சுமார் 10 ஷரத்துகளில் அரசு சிறிய திருத்தங்களைச் செய்துள்ளது என்றனர்.
- கடந்த 6 மாதங்களாக கோபால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
- வலி தாங்க முடியாத கோபால் பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் புல்லலூர் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 67). இவர் கடந்த 6 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வலி தாங்க முடியாத கோபால் பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ஆட்டோ மூலம் காஞ்காஞ்சிபுரம்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கோபால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து காஞ்காஞ்சிபுரம்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நடிகரின் பெயரில் போலி கணக்கை தொடங்கியது ஈரோட்டை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான அலாவுதீன், வாகித் என்பது தெரியவந்தது.
- அலாவுதீன், வாகித் ஆகியோர் காஞ்சிபுரம் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு முகநூலில் இருந்து துணை நடிகை பெயரில் நட்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் கனா தர்ஷனின் பெயரில் அவரது புகைப்படத்துடன் கூடிய பேஸ்புக் பக்கத்தில் இருந்து விடுக்கப்பட்ட நட்பு அழைப்பை ஏற்று இளம்பெண்ணும் முகநூல் வழியாக பழக தொடங்கினார்.
அப்போது முகநூல் வழியாக இளம்பெண்ணுக்கு சினிமா, தொலைக்காட்சி தொடர்பாக பல்வேறு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. நாங்கள் நினைத்தால் உங்களையும் பெரிய நடிகையாக்க முடியும் என்று ஆசை வார்த்தைகளை தெரிவித்து உள்ளனர். உங்களது போட்டோக்களை அனுப்பி வையுங்கள். நாங்கள் நடிகையாக தேர்வு செய்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.
இதனை நம்பி சினிமா நடிகையாகும் ஆசையில் இளம்பெண் தனது விதவிதமான போட்டோக்களை அனுப்பி வைத்துள்ளார்.
இதன்பிறகு இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து அவரது செல்போன் எண்ணுக்கே அனுப்பி 2 பேர் மிரட்டி உள்ளனர். இதன்பிறகே சினிமா நடிகர் பெயரில் தொடங்கப்பட்டது போலி கணக்கு என்பது தெரிய வந்துள்ளது.
நடிகரின் பெயரில் போலி கணக்கை தொடங்கியது ஈரோட்டை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான அலாவுதீன், வாகித் என்பது தெரியவந்தது. இருவரும் காஞ்சிபுரம் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
நாங்கள் கேட்கும் பணத்தை தர வேண்டும் என்று கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்து ரூ.2 லட்சம் வரை பறித்துள்ளனர். அதன் பின்னரும் தொடர்ச்சியாக பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயந்துபோன இளம்பெண் காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதன் பேரில் போலீசார் பணம் பறித்த சகோதரர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
அண்ணன்-தம்பி இருவரின் செல்போன் எண்ணை வைத்து அவர்களின் முகவரியை போலீசார் கண்டுபிடித்தனர். இருவரும் ஈரோட்டில் பி.பி.அக்ரகாரம் பகுதியில் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் 2 பேரையும் கைது செய்து காஞ்சிபுரத்துக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அலாவுதீன், வாகித் இருவரும் இதுபோன்று பல பெண்களை மிரட்டி பணம் பறித்தது அம்பலமானது. இதையடுத்து இருவரது செல்போன்கள், அவர்கள் பயன்படுத்திய லேப்-டாப் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஏராளமான பெண்களின் புகைப்படங்களும் இருந்தன.
இதனை கைப்பற்றிய போலீசார் ரகசியமாக அப்பெண்களிடமும் புகார்களை வாங்கி மேல் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
- மயங்கி விழுந்தவருக்கு முதலுதவி அளித்து ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
- நிர்மலாவின் மனித நேய உதவியை பலரும் பாராட்டினார்கள்.
காஞ்சிபுரம்:
கண்முன்னால் ஒருவர் உயிருக்கு போராடினால் கூட நமக்கேன் வீண் வேலை என்று அந்த இடத்தைவிட்டு கடந்து செல்பவர்கள்தான் அதிகம்.
அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் விஜயா நிர்மலா சிவா போன்ற மனிதாபிமானமும், பணியின் மீதான அர்ப்பணிப்பு எண்ணம் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இரவு 7.30 மணி... காஞ்சிபுரம் பஸ் நிலையம் பரபரப்பாக இருந்தது வேலைகளுக்கு சென்று விட்டு வீடு திரும்புபவர்கள் பஸ்களை பிடிப்பதற்காக அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்தார்கள்.
அவர்களில் ஒருவராகத் தான் நிர்மலாவும் பஸ்சை பிடிப்பதற்காக ஓடி கொண்டிருந்தார். 35 வயதாகும் நிர்மலா கம்மவார் பாளையத்தை சேர்ந்தவர். காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்க்கிறார். 2-வது ஷிப்டு முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது விசாரணை அலுவலகம் அறைக்கு அருகில் ஓய்வு பெற்ற பஸ் டிரைவர் ராஜேந்திரன் (68) திடீரென்று கீழே மயங்கி சாய்ந்துள்ளார். உயிருக்கு போராடிய அவரை சுற்றி நின்றவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்து கொண்டிருந்தார்கள்.
கூட்டத்தை விலக்கி கொண்டு உள்ளே சென்ற நிர்மலா உயிருக்கு போராடிய அவரை பார்த்ததும் சற்றும் தாமதிக்காமல் முதலுதவி சிகிச்சை செய்தார். சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு ராஜேந்திரன் மூச்சு விட தொடங்கினார்.
உடனே தனது சக ஊழியர்களை தொடர்புகொண்டு அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். தக்க தருணத்தில் சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் உயிர் பிழைத்தார். நிர்மலாவின் மனித நேய உதவியை பலரும் பாராட்டினார்கள்.
நவீன செவிலியர் முறையை உருவாக்கிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் மகத்தான சேவை தான் உலகம் முழுவதும் செவிலியர்களுக்கு உந்து சக்தியாக இருக்கிறது. இக்கட்டான நேரங்களில் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதே செவிலியரின் கடமை அந்த கடமையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த நிர்மலா சக ஊழியர்களாலும் பாராட்டப்பட்டார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை பனிமூட்டம் அதிகமாக இருந்தது.
- அதிகாலையில் ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனி படர்ந்து காணப்பட்டது.
ஆலந்தூர்:
வடகிழக்கு பருவமழையின்போதே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக பனியின் தாக்கம் குறைந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. புகைபோல் காலை 8 மணி வரை பனியின் தாக்கம் நீடித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலையும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. அதிகாலையில் சாலையே தெரியாத அளவுக்கு புகைபோல் காட்சி அளித்தது.
வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றன. தாம்பரம், ஓரகடம், படப்பை, ஆலந்தூர், மீனம்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் காலை 8 மணி வரை பனிமூட்டம் நீடித்தது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதிகாலையில் ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் மும்பை மற்றும் பெங்களூருவில் இருந்து வந்த விமானங்கள் சென்னைக்கு சுமார் அரைமணி நேரம் தாமதமாக வந்தது.
இதேபோல் சென்னையில் இருந்து அதிகாலையில் புறப்பட்ட சில விமானங்களும் தாமதமாக சென்றன.
- சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பயணி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர்.
- அரிய விலங்குகளை விதிமுறைப்படி நாட்டிற்குள் கொண்டுவருவதற்கான எந்த ஆவணங்களும் பயணியிடம் இல்லாதது உறுதியானது.
மீனம்பாக்கம்:
சென்னை மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பயணி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் கொண்டு வந்து உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது உடமைகளில் இருந்த கூடையில் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாக அதிகாரிகள் பையைத் திறந்து பாா்த்தனா். அதில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவை ஆப்பிரிக்க நாட்டு வனப்பகுதி மற்றும் அட்லாண்டிக் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் அரிய வகை குரங்கு குட்டிகள் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அரிய விலங்குகளை விதிமுறைப்படி நாட்டிற்குள் கொண்டுவருவதற்கான எந்த ஆவணங்களும் பயணியிடம் இல்லாதது உறுதியானது. குறிப்பாக மற்ற நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையிடமும், இந்திய வனவிலங்கு துறையிடமும் தடையில்லா சான்றிதழ் அனுமதி பெற்றதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும்.
இது போன்ற எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 2 குரங்கு குட்டிகளையும் பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், குரங்கு குட்டிகளை மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
- சென்னை விமான நிலையத்தில் எப்போதும் பாதுகாப்பு அதிகமாக இருக்கும்.
- உள்நாட்டு முனையத்தில் பயணிகள் தங்களது உடைமைகளை தள்ளி செல்லும் டிராலியில் முழுதேங்காய் ஒன்று கேட்பாரற்று கிடந்தது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் எப்போதும் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். உள்நாட்டு, வெளிநாட்டு முனையங்களில் மத்திய தொழிற்படை போலீசாரின் தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில் உள்நாட்டு முனையத்தில் பயணிகள் தங்களது உடைமைகளை தள்ளி செல்லும் டிராலியில் முழுதேங்காய் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தேங்காயை கைப்பற்றி வெடிகுண்டு சோதனை நடத்தினர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை.
பயணி தவறுதலாக தேங்காயை தவற விட்டு சென்று இருப்பது தெரிந்தது. இதனால் அதிகாரிகளும், பயணிகளும் நிம்மதி அடைந்தனர். பின்னர் வழக்கம்போல் உள்நாட்டு முனையம் சுறுசுறுப்பாக இயங்கியது. கேட்பாரற்று கிடந்த தேங்காயால் சென்னை விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பா.ஜ.க.வை பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்க்கிறார்கள்.
- பா.ஜ.க. தலையீட்டால் சசிகலா, தினகரன் ஓரங்கட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைத்தனர்.
ஆலந்தூர்:
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதாக கூறி, அதை கண்டித்து ஆலந்தூரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் முகமது முனீர் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் சித்தீக், சையத் அலி முன்னிலை வகித்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ஜமாஅத் தலைவர் பாக்கர், திருமுருகன் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசுகையில், பா.ஜ.க.வை பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்க்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளாக ஒன்று சேர மறுக்கிறார்கள். அவர்களை ஓரணியில் திரள விடாமல் பாரதிய ஜனதா கட்சி செய்கிறது. அவர்களுக்கு எதிராக கூட்டணி சேரும் கட்சிகளை சிதறடித்து விடுவார்கள். அ.தி.மு.க. தற்போது மூன்று அணியாக சிதறி கிடப்பதற்கு பா.ஜனதா தான் காரணம். பா.ஜ.க. தலையிடாமல் இருந்து இருந்தால் சசிகலா தலைமையில் ஒரே அ.தி.மு.க.வாக இருந்து இருக்கும்.
பா.ஜ.க. தலையீட்டால் சசிகலா, தினகரன் ஓரங்கட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைத்தனர். தற்போது அவர்களையும் உடைத்து விட்டார்கள். தமிழ்நாட்டில் அரசியல் சித்து விளையாட்டு களமாக மாற்றுகின்றனர். அரசியல் ஆதாயத்துக்காக எந்த எல்லைக்கும் போவார்கள். அதற்குள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். தவறினால் மீண்டும் 2024-ல் ஆபத்து ஏற்படும் என கூறினார்.
- அரிசி வியாபாரம் செய்து வைத்திருந்த ரூ.13 லட்சம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
- காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கணிகண்டீஸ்வரர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 39). இவர் காஞ்சிபுரம்-வந்தவாசி சாலை செவிலிமேடு பி. எஸ்.கே நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அரிசி வியாபாரம் செய்து வைத்திருந்த ரூ.13 லட்சம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து இளங்கோவன் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
- கூரம்-வதியூர் சாலையில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்டவர்களை பாலுசெட்டிசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த கூரம்-வதியூர் சாலையில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் கூரம்-வதியூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயற்சி செய்தனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் சோதனை செய்ததில், ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 1 கிலோ 300 கிராம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்டவர்களை பாலுசெட்டிசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் இருவரும் கூரம் கிராமத்தை சேர்ந்த அஜீத்குமார் (20), ஜனா (20) என்பதும், அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.






