search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது
    X

    பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை படத்தில் காணலாம்.

    சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

    • சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
    • சுங்க இலாகா அதிகாரிகள், கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

    மீனம்பாக்கம் :

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக விமானத்தில் இருந்து வந்திறங்கிய பயணிகளை கண்காணித்தனர். அப்போது மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அதில் மிக்சி கிரைண்டர் இருந்ததால் அதை சந்தேகத்தின் பேரில் கழற்றி சோதனை செய்தனர். அப்போது கிரைண்டரில் தங்கத்தை வளைய வடிவத்தில் மாற்றி மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டனர். இவரிடம் இருந்து ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 200 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். அதேபோல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் டிராலி சூட்கேசில் தங்கத்தை கம்பி போல் மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.19 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள 383 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    துபாயில் இருந்து சென்னைக்கு வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் டிராலி சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்ட தங்க கம்பிகளையும் கண்டுபிடித்து, அவரிடமிருந்து ரூ.70 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 370 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.நேற்று ஒரே நாளில் மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் வந்த 3 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 2 லட்சத்து 93 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 953 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக 3 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×