search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காதலியுடன் ஏற்பட்ட சண்டையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள சொகுசு காருக்கு தீ வைத்து எரித்த காதலன்
    X

    காதலியுடன் ஏற்பட்ட சண்டையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள சொகுசு காருக்கு தீ வைத்து எரித்த காதலன்

    • காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி கார் முழுவதும் பற்றி எரிந்தது.
    • போலீசார் அங்கிருந்த காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் உள்ள குளக்கரை அருகே பென்ஸ் சொகுசு கார் ஒன்று நேற்று இரவு நின்றது. அதில் இருந்த காதல் ஜோடி தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த காதல் ஜோடி காரில் இருந்து இறங்கி கடும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.

    இதில் ஆவேசம் அடைந்த காதலன் திடீரென காருக்கு தீவைத்தார். காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி கார் முழுவதும் பற்றி எரிந்தது.

    இரவு நேரத்தில் கார் தீப்பற்றி எரிவதை கண்டு சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அப்போது காதல் ஜோடிக்குள் ஏற்பட்ட தகராறில் கார் எரிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். எனினும் சொகுசு கார் முழுவதும் எரிந்து நாசமானது.

    போலீசார் அங்கிருந்த காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர். இதில் காதலன் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் என்பது தெரியவந்தது. அவர் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கடந்த ஆண்டு மருத்துவம் படித்து முடித்து உள்ளார். இவரும் அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்தனர்.

    நேற்று மாலை மாணவியை சந்திக்க காதலன் வந்து உள்ளார். பின்னர் அவர்கள் காரில் சுற்றியபடி காஞ்சிபுரம் ராஜகுளம் குளக்கரை அருகே வண்டியை நிறுத்திவிட்டு பேசியபடி இருந்து உள்ளனர். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த மாணவி பேச மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த காதலனான டாக்டர் தனது ரூ.70 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை தீவைத்து எரித்து இருப்பது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் எரிப்பு தொடர்பாக எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.

    காதலி பேச மறுத்ததால் காதலன் தனது சொகுசு காரை தீவைத்து எரித்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×