என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பழமையான குழம்பேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக சீரமைப்பு பணியின் போது தங்க ஆபரணங்கள், நாணயங்கள் என தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் இரண்டாம் குலோத்துங்கச்சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் குழம்பேஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்களும், கோவில் விழாக்குழுவினரும் முடிவு செய்தனர்.

    இதற்காக பழங்கால கோவிலை இடிக்க முடிவு செய்தனர். வருவாய்த்துறையிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் இந்த பணியினை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஜே.சி.பி. கொண்டு கோவில் கருவறையின் நுழைவு வாயிலின் முன் உள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளை அகற்றினர். அப்போது அதன் கீழ் இருந்த துணியால் சுற்றப்பட்ட சிறிய மூட்டையில் தங்க ஆபரணங்கள், தங்க நாணயங்கள் இருந்ததைக் கண்டறிந்தனர்.

    சுமார் 100 சவரன் அளவில் தங்க நகைகள் இருந்துள்ளன. தங்கத்தை அப்பகுதி பொதுமக்கள் சிலர் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கோவிலை முற்றிலும் இடித்துள்ளனர். கோவில் இடிப்பு மற்றும்புதையல் குறித்த தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், காவல்துறையினருடன் கோவிலுக்கு வந்து பொதுமக்களிடமிருந்த நகைகளைக் கைப்பற்றி மதிப்பீடு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட நகைகளை போலீசார் உதவியோடு கிராமமக்களிடம் இருந்து மீட்டு கருவூலத்தில் ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

    முன்னதாக, 16-ம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் தங்கம் பயன்பாட்டில் இருந்ததாகவும், அப்போது அன்னியர்கள் படையெடுப்பு காரணமாக சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட நகைகளை இந்த கோவிலின் பல்வேறு பகுதிகிளில் புதைத்து வைத்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் அம்பாளையும், பல அரிய தெய்வ சிலைகளை தற்போது காணவில்லை என்று ஊர்மக்கள் கூறுகிறார்கள்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டதால், ஆ.டி.ஓ. விசாரணை செய்து வருகிறார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிப்பட்டு பகுதியில் வசிப்பவர் ராஜசேகர். இவரது மகள் சுவேதா (வயது 24). கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசன்னா (25). இவர் ஸ்ரீபெரும்புதூரில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். சுவேதாவும், பிரசன்னாவும் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    பிரசன்னாவின் பெற்றோர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பிரசன்னா தனது காதல் மனைவி சுவேதா வீட்டிலேயே தங்கி வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு 1 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த ஒரு வருடமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்றுமுன்தினம் கணவர் பிரசன்னா வேலைக்கு சென்று விட்டநிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது, சுவேதா வீட்டில் உள்ள அறையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே கடைக்கு சென்று விட்டு சுவேதாவின் தாய் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, மகள் பிணமாக தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சுவேதாவிற்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ விசாரணை செய்து வருகிறார்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவை வழிமறித்து நகைக்கடை அதிபர் மகனிடம் 300 பவுன் நகைகளை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகரில் நகை கடை நடத்தி வருபவர் மகேந்திர். ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம், பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை மகேந்திர் மகன் ஆசிஸ், கடையில் வேலை செய்யும் ஊழியர் ராஜ்குமாருடன் ஆட்டோவில் திருவள்ளூரில் இருந்து சுங்குவார்சத்திரம் பகுதிக்கு சென்று நகைகளை விற்பனை செய்தார். திருவள்ளூர் பகுதியை சேர்ந்த சேகர் ஆட்டோவை ஓட்டி சென்றார். பின்னர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கடைகளுக்கு நகைகளை வினியோகம் செய்ய சென்றனர்.

    அப்போது ஆட்டோ ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் அருகே வந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஆட்டோவை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி ஆசிஸ் வைத்திருந்த 300 பவுன் தங்க நகைகள் வைத்திருந்த பையை பறித்தனர்.

    இதையடுத்து அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இது குறித்து மகேந்திர் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வாரணவாசி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடமலை (வயது 30). இவர் தனது குடும்பத்துடன் தென்னேரிக்கு சென்றுள்ளார். பின்பு வீடு திரும்பியதும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பீரோவை திறந்து லாக்கரை பார்த்த போது, அதில் இருந்த 2½ பவுன் நகை வெள்ளி கால் கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்செ சென்றது தெரிய வந்தது. இது சம்பந்தமாக ஆகாஷ், (வயது 18), சீரஞ்சீவி (19), அஜித் (21) ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.
    காஞ்சீபுரத்தில் குடும்பத்தகராறில் கணவன், மனைவி இருவரும் வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சீபுரம்:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை பூர்வீகமாக கொண்டவர் கதிர்வேல் (வயது 40). இவரது மனைவி மணிமேகலை (35). இவர்களுக்கு முத்து அட்சயா (7), நிவாசினி வயது (4) ஆகிய 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் காஞ்சீபுரம் விநாயகபுரம் பகுதியில் உள்ள குப்பம்மாள் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். கதிர்வேல் காஞ்சீபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் டைல்ஸ் கடை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்பத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் குடும்பத்துடன் அனைவரும் சாப்பிட்டு விட்டு வழக்கம் போல் இரவு தூங்க சென்றனர். இதற்கிடையே அனைவரும் தூங்கிய பின்னர், நள்ளிரவில் எழுந்த மணிமேகலை வீட்டில் உள்ள மற்றொரு அறைக்கு சென்று மின் விசிறியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மனைவி அருகில் காணாததை தொடர்ந்து, அவரை தேடி கதிர்வேல் அறைக்கு வந்து பார்த்த போது, மனைவி தூக்கில் தொங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் மனமுடைந்த அவர், மனைவியை இறக்கி விட்டு அதே மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    காலை விடிந்ததும் 2 பிஞ்சு குழந்தைகளும் பெற்றோரை தேடி பார்த்த நிலையில், வீட்டில் இறந்து கிடந்த தாய், தந்தையின் உடலைப் பார்த்து, செய்வதறியாது கதறி அழுதுள்ளனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டதும், பதறிய அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து உடனடியாக பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களது தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சீபுரத்தில் 2 பிஞ்சு குழந்தைகளையும் அனாதையாக தவிக்கவிட்டு கணவன், மனைவி தூக்குப்போட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த கல்லூரி காதல் ஜோடி மீது கார் மோதிய விபத்தில், காதலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காதலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
    மாமல்லபுரம்:

    சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி கார்டனை சேர்ந்தவர் கிஷோர் (வயது 19). சென்னை பெசன்ட்நகர் ஊரூர் குப்பம் பகுதியை சேர்ந்த கவுதமி (19). இவர்கள் 2 பேரும் சென்னை அடையாரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு பயின்று வந்தனர்.

    ஒரே கல்லூரியில் படித்த இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காதலர்களான இருவரும், சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    கவுதமி பின்னால் அமர்ந்து கொள்ள, கிஷோர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் பேரூர் அருகே இடது பக்கமாக சாலையை கடக்க முயன்றனர்.

    அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி எதிரே வந்து கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கர சத்தத்துடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் சுக்குநூறாக அப்பளம் போல் நொறுங்கியதில், இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் கவுதமிக்கு தலையில் பலத்த அடிபட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்த கிஷோரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை விமான நிலையத்தில் ரூ.18½ லட்சம் மதிப்புள்ள 370 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது சென்னையைச் சேர்ந்த முகமது ரபி (வயது 23) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் உடைமைகளை வைத்து தள்ளியபடி வந்த டிராலியில் கைப்பைக்கு அடியில் மர்ம பொட்டலத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டனர்.

    அதை பிரித்து பார்த்தபோது அதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் சென்னையைச்சேர்ந்த அப்துல் கரீம் (35) என்பவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 170 கிராம் தங்கத்தையும் கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் 2 பேரிடம் இருந்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 370 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக பிடிபட்ட 2 பேரிடமும் மேலும் விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள மண்டபத்தின் 4 கால்களும் மூழ்கிய நிலையில் முழுமையாக நிரம்பியது.
    108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்தசரஸ் மற்றும் பொற்றாமரைக் குளம் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற அத்தி வரதர் வைபவத்தில் பெருமாள் நின்ற மற்றும் சயன கோலத்தில் காட்சியளித்தார். உலக மக்களை திரும்பிப் பார்க்க வைத்த 48 நாட்கள் நடைபெற்ற வைபவம் முடிவடைந்து, மீண்டும் பத்திரமாக அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில், தற்போது காஞ்சீபுரத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள மண்டபத்தின் 4 கால்களும் மூழ்கிய நிலையில் முழுமையாக நிரம்பியது. கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழைக்கு பின் தற்போது தான் இந்த குளம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    தொடர் மழையால் இந்த குளம் நிரம்பி வெளியேறும் நீர் கிழக்கு ராஜகோபுரம் அருகில் உள்ள பொற்றாமரைக் குளத்துக்கு செல்லும். இதன் காரணமாக தற்போது இந்த குளமும் நிரம்பி உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதை கண்டு மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
    துபாயில் இருந்த சென்னை வந்த சிறப்பு விமானத்தின் இருக்கைக்கு அடியில் கிடந்த ரூ.59 லட்சம் ம திப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    பயணிகள் அனைவரும் இறங்கி சென்றபிறகு அந்த விமானத்துக்குள் ஏறி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு இருக்கையின் அடியில் 2 பொட்டலங்கள் கேட்பாரற்று கிடந்தது. அதை பிரித்து பார்த்தபோது தங்கத்தூள்கள் இருந்தன.

    ரூ.59 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து சென்னைக்கு அந்த தங்கத்தை கடத்தி வந்தவர்கள், விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து அதை இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்து சென்றிருக்கலாம் என தெரிகிறது.

    அந்த தங்கத்தை கடத்தி வந்தது யார்?. இருக்கைக்கு அடியில் அதை வைத்துவிட்டு பின்னர் ஊழியர்கள் உதவியுடன் அதை வெளியே கொண்டுவர திட்டமிடப்பட்டதா? என்ற கோணத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துக்கள் கேட்ட பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    காஞ்சிபுரம்:

    நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் பல்வேறு அமைச்சர்களை நியமனம் செய்து உத்தரவிட்டார். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதனையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். வடமங்கலம், உள்ளிட்ட இடங்களில், நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் மற்றும் வாழை மரத்தோப்புகளை அவர் பார்வையிட்டார். மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த அவர், பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்துக்களை கேட்ட பின்னரே பள்ளிகளை அரசு திறக்கும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது அந்த விமானத்தில் வந்த நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஜோதி சின்னராஜ் (வயது 38) என்ற பெண், ஒருவித பதற்றத்துடன் விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்றார். சந்தேகத்தின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர்.

    அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. பின்னர் அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அவர் அணிந்து இருந்த மேல் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக அந்த பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    பெருங்களத்தூரில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி மறியல் போராட்டம் நடத்திய பா.ம.க.வினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தாம்பரம்:

    வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி கடந்த 1-ந்தேதி சென்னை தீவுத்திடல் மன்றோ சிலை அருகே பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ம.க.வினரும், வன்னியர் சங்கத்தினரும் சென்னை வந்தனர். அவர்களுடைய வாகனங்களை பல்வேறு இடங்களில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    இதை கண்டித்து பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், பெருங்களத்தூரில் பா.ம.க.வினர் திடீர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் தடுப்பு தகடுகளையும், கம்பிகளையும் போட்டனர்.

    சிலர் ரெயில் மீது கற்களை வீசினார்கள். இதையடுத்து அந்த வழியாக வந்த ரெயில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட்ட 300 பேர் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் காஞ்சி கோவிலை சேர்ந்த முத்துசாமி (45), முனுசாமி (30), பழனிசாமி (36), சித்தோட்டை சேர்ந்த தமிழ்செல்வன், நந்தகுமார் (20) ஆகிய 5 பா.ம.க.வினரை போலீசார் ஈரோட்டில் கைது செய்தனர். இவர்கள் மீது அனுமதி இல்லாமல் கூடுதல், ரெயில்வே தண்டவாளத்தை கடப்பது, ரெயில் மறியலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

    ×