என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சீபுரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் சாந்தகுமார் இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 28), இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மனமுடைந்த புவனேஸ்வரி விஷம் குடித்து மயங்கினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கு இருந்தவர்கள் உடனடியாக மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உயிரிழந்த புவனேஸ்வரியின் தந்தை பன்னீர்செல்வம் பாலுசெட்டிசத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் சின்னத்திரை நடிகர்-நடிகைகளிடமும் விசாரணை நடத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார்.
    சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். சித்ரா தற்கொலைக்கு கணவர் ஹேம்நாத்தே காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஜனவரி மாதம் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் சித்ராவும், நானும் கடந்த அக்டோபர் மாதமே பதிவு திருமணம் செய்து கொண்டதாக ஹேம்நாத் கூறியிருந்தார்.

    இதையடுத்து சித்ராவுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆகி இருப்பதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி வருகிறார்.

    சித்ராவின் தாய்-தந்தையிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நேற்று ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், தாய் வசந்தா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    வரதட்சணை கொடுமையால் சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. இது தொடர்பாகவே ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது. ஹேம்நாத்தின் தாய்-தந்தை இருவரிடமும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள், சித்ராவிடம் நாங்கள் வரதட்சணை எதையும் கேட்கவில்லை என்று கூறியுள்ளனர்.

    இதனை தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத் பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து விசாரணைக்காக ஹேம்நாத்தை நேரில் ஆஜர்படுத்துமாறு சிறைத்துறை அதிகாரிக்கு பொன்னேரி ஆர்.டி.ஓ. கடிதம் அனுப்பியுள்ளார். இதனை ஏற்று சிறைத்துறை அதிகாரிகள் நாளை ஹேம்நாத்தை, ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முன்பு ஆஜர்படுத்த உள்ளனர்.

    இந்த விசாரணையின் போது சித்ரா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டது தெரிய வந்தால் அது தொடர்பான வழக்கிலும் ஹேம்நாத் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.

    இதற்கிடையே சித்ரா தற்கொலை வழக்கில் சின்னத்திரை நடிகர்-நடிகைகளிடமும் விசாரணை நடத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார்.

    ஹேம்நாத்திடம் நாளை காலை விசாரணை நடத்தப்பட்ட பிறகு சித்ராவின் நெருங்கிய தோழிகளாக இருந்த நடிகைகளிடமும் அவருடன் நடித்த சக நடிகர்களிடமும் விசாரணை நடைபெற உள்ளது.

    இந்த விசாரணை முடிவடைந்த பிறகு இது தொடர்பான அறிக்கையை ஆர்.டி.ஓ. தாக்கல் செய்ய உள்ளார். அப்போது சித்ரா தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது தெரிய வரும்.
    கிண்டி நகை பட்டறையில் இருந்து 106 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 78 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் தங்க சங்கிலி தயாரிக்கும் நகை பட்டறை உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர். தீபாவளிக்கு ஆர்டர்கள் அதிகமாக இருந்ததால் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து நகை தயாரிக்கும் ஊழியர்களை விமானத்தில் அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    கடந்த மாதம் 10-ந்தேதி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 4 ஊழியர்கள், நகை பட்டறையில் இருந்து 106 பவுன் தங்க சங்கிலிகளை திருடிக்கொண்டு நகை பட்டறையின் சிமெண்டு ஓட்டை உடைத்து தப்பிச்சென்று விட்டனர்.

    இதுபற்றி தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் பாபு உத்தரவின்பேரில் அடையாறு துணை கமிஷனர் விக்ரமன், உதவி கமிஷனர் சுப்பராயன் ஆகியோர் மேற்பார்வையில் கிண்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ஏட்டுகள் அச்சுதராஜ், தாமோதரன், ஐசக், சதீஷ், ஜானி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் நகைகளை திருடியவர்கள் ரெயிலில் கேரள மாநிலம் திருச்சூருக்கு தப்பிச்சென்றதும், கேரளாவில் ஒரு பவுன் நகையை அடமானம் வைத்து அதில் கிடைத்த பணத்தில் அங்கிருந்து மேற்கு வங்காளத்துக்கு விமானத்தில் தப்பி சென்றதும் தெரியவந்தது.

    பின்னர் இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையிலான போலீசார் மேற்கு வங்காளத்துக்கு சென்று வர்தமான் மாவட்ட போலீசார் உதவியுடன் சராபிந்து (வயது 24) என்பவரை கைது செய்தனர். மேலும் நகைகளுடன் தப்பிச்சென்ற பசிருல் ஷேக் (24) என்பவரை மேற்கு வங்காள மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் மடக்கி பிடித்தனர். வீட்டின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த 46 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் பதுங்கி இருந்த பர்சான் மது மண்டல் (26) என்பவரையும் கைது செய்தனர். இவரிடம் இருந்து 32 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரிடம் இருந்து 78 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் இந்த கொள்ளையில் தொடர்பு கொண்ட ரிடியோ கர்மகர் (26) என்பவரை தேடி வருகின்றனர்.

    நகைகளை திருடிவிட்டு 3 மாநிலங்களில் இருந்த கொள்ளையர்களை பிடித்த தனிப்படையினரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் தினகரன் ஆகியோர் பாராட்டினார்கள்.
    சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 23 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் தங்கம் மற்றும் ரூ.12 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த அஸ்கர் அலி (வயது 44), சரீம் பவுலத் (20), ஷேக் அப்துல்லா (43), நதீம் கான் (30), காதர் உசேன் (47), முகமது இப்ரகீம் (44), மணிகண்டன் சுப்பிரமணி (26), சமீருல் கான் (29), அஸ்ரத் பர்வேஸ் (21), திருச்சியை சேர்ந்த யாகூப் (67), அலி (28), புதுக்கோட்டையை சேர்ந்த உசேன் (26), இளையான்குடியை சேர்ந்த முகமது அனிபா (27), தமீம் அன்சாரி (23), ஆம்பூரை சேர்ந்த முகமது பாரூக் (22) ஆகிய 15 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அட்டை பெட்டி, செல்போன், கைப்பைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 15 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடியே 23 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் சென்னையில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமானத்தில் செல்ல வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சவுகத் அலி (28) என்பவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அவரது கைப்பையில் ரகசிய அறைகள் வைத்து அதில் சவுதி ரியால்கள், அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்து கடத்திச்செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் 16 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 16 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
    சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.23 லட்சத்து 56 ஆயிரம் மதிப்புள்ள 470 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மேலும் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த கலில் ரகுமான் (வயது 49) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.7 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள 160 கிராம் எடைகொண்ட தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    பின்னர் பயணிகள் இறங்கி சென்றதும் அந்த விமானத்தில் ஏறி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்த போது ஒரு இருக்கையின் அடியில் மறைத்து வைத்திருந்த ரூ.15 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ள 310 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். அதை துபாயில் இருந்து கடத்தி வந்த நபர், சுங்க இலாகா அதிகாரிகளின் கெடுபிடிக்கு பயந்து மறைத்து வைத்து சென்றிருக்கலாம் என தெரிகிறது.

    சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.23 லட்சத்து 56 ஆயிரம் மதிப்புள்ள 470 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மேலும் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 430 பேர் உயிரிழந்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 41 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 117 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 27 ஆயிரத்து 463 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதுவரை 430 பேர் உயிரிழந்துள்ளனர். 224 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 72 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 47 ஆயிரத்து 413 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 730 பேர் உயிரிழந்துள்ளனர். 504 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 72 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 41 ஆயிரத்து 709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 ஆயிரத்து 600 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 445 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 664 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.
    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பழமையான குழம்பேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக சீரமைப்பு பணியின் போது தங்க ஆபரணங்கள், நாணயங்கள் என தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் இரண்டாம் குலோத்துங்கச்சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் குழம்பேஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்களும், கோவில் விழாக்குழுவினரும் முடிவு செய்தனர்.

    இதற்காக பழங்கால கோவிலை இடிக்க முடிவு செய்தனர். வருவாய்த்துறையிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் இந்த பணியினை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஜே.சி.பி. கொண்டு கோவில் கருவறையின் நுழைவு வாயிலின் முன் உள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளை அகற்றினர். அப்போது அதன் கீழ் இருந்த துணியால் சுற்றப்பட்ட சிறிய மூட்டையில் தங்க ஆபரணங்கள், தங்க நாணயங்கள் இருந்ததைக் கண்டறிந்தனர்.

    சுமார் 100 சவரன் அளவில் தங்க நகைகள் இருந்துள்ளன. தங்கத்தை அப்பகுதி பொதுமக்கள் சிலர் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கோவிலை முற்றிலும் இடித்துள்ளனர். கோவில் இடிப்பு மற்றும்புதையல் குறித்த தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், காவல்துறையினருடன் கோவிலுக்கு வந்து பொதுமக்களிடமிருந்த நகைகளைக் கைப்பற்றி மதிப்பீடு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட நகைகளை போலீசார் உதவியோடு கிராமமக்களிடம் இருந்து மீட்டு கருவூலத்தில் ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

    முன்னதாக, 16-ம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் தங்கம் பயன்பாட்டில் இருந்ததாகவும், அப்போது அன்னியர்கள் படையெடுப்பு காரணமாக சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட நகைகளை இந்த கோவிலின் பல்வேறு பகுதிகிளில் புதைத்து வைத்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் அம்பாளையும், பல அரிய தெய்வ சிலைகளை தற்போது காணவில்லை என்று ஊர்மக்கள் கூறுகிறார்கள்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டதால், ஆ.டி.ஓ. விசாரணை செய்து வருகிறார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிப்பட்டு பகுதியில் வசிப்பவர் ராஜசேகர். இவரது மகள் சுவேதா (வயது 24). கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசன்னா (25). இவர் ஸ்ரீபெரும்புதூரில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். சுவேதாவும், பிரசன்னாவும் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    பிரசன்னாவின் பெற்றோர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பிரசன்னா தனது காதல் மனைவி சுவேதா வீட்டிலேயே தங்கி வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு 1 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த ஒரு வருடமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்றுமுன்தினம் கணவர் பிரசன்னா வேலைக்கு சென்று விட்டநிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது, சுவேதா வீட்டில் உள்ள அறையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே கடைக்கு சென்று விட்டு சுவேதாவின் தாய் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, மகள் பிணமாக தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சுவேதாவிற்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ விசாரணை செய்து வருகிறார்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவை வழிமறித்து நகைக்கடை அதிபர் மகனிடம் 300 பவுன் நகைகளை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகரில் நகை கடை நடத்தி வருபவர் மகேந்திர். ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம், பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை மகேந்திர் மகன் ஆசிஸ், கடையில் வேலை செய்யும் ஊழியர் ராஜ்குமாருடன் ஆட்டோவில் திருவள்ளூரில் இருந்து சுங்குவார்சத்திரம் பகுதிக்கு சென்று நகைகளை விற்பனை செய்தார். திருவள்ளூர் பகுதியை சேர்ந்த சேகர் ஆட்டோவை ஓட்டி சென்றார். பின்னர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கடைகளுக்கு நகைகளை வினியோகம் செய்ய சென்றனர்.

    அப்போது ஆட்டோ ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் அருகே வந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஆட்டோவை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி ஆசிஸ் வைத்திருந்த 300 பவுன் தங்க நகைகள் வைத்திருந்த பையை பறித்தனர்.

    இதையடுத்து அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இது குறித்து மகேந்திர் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வாரணவாசி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடமலை (வயது 30). இவர் தனது குடும்பத்துடன் தென்னேரிக்கு சென்றுள்ளார். பின்பு வீடு திரும்பியதும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பீரோவை திறந்து லாக்கரை பார்த்த போது, அதில் இருந்த 2½ பவுன் நகை வெள்ளி கால் கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்செ சென்றது தெரிய வந்தது. இது சம்பந்தமாக ஆகாஷ், (வயது 18), சீரஞ்சீவி (19), அஜித் (21) ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.
    காஞ்சீபுரத்தில் குடும்பத்தகராறில் கணவன், மனைவி இருவரும் வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சீபுரம்:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை பூர்வீகமாக கொண்டவர் கதிர்வேல் (வயது 40). இவரது மனைவி மணிமேகலை (35). இவர்களுக்கு முத்து அட்சயா (7), நிவாசினி வயது (4) ஆகிய 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் காஞ்சீபுரம் விநாயகபுரம் பகுதியில் உள்ள குப்பம்மாள் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். கதிர்வேல் காஞ்சீபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் டைல்ஸ் கடை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்பத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் குடும்பத்துடன் அனைவரும் சாப்பிட்டு விட்டு வழக்கம் போல் இரவு தூங்க சென்றனர். இதற்கிடையே அனைவரும் தூங்கிய பின்னர், நள்ளிரவில் எழுந்த மணிமேகலை வீட்டில் உள்ள மற்றொரு அறைக்கு சென்று மின் விசிறியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மனைவி அருகில் காணாததை தொடர்ந்து, அவரை தேடி கதிர்வேல் அறைக்கு வந்து பார்த்த போது, மனைவி தூக்கில் தொங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் மனமுடைந்த அவர், மனைவியை இறக்கி விட்டு அதே மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    காலை விடிந்ததும் 2 பிஞ்சு குழந்தைகளும் பெற்றோரை தேடி பார்த்த நிலையில், வீட்டில் இறந்து கிடந்த தாய், தந்தையின் உடலைப் பார்த்து, செய்வதறியாது கதறி அழுதுள்ளனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டதும், பதறிய அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து உடனடியாக பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களது தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சீபுரத்தில் 2 பிஞ்சு குழந்தைகளையும் அனாதையாக தவிக்கவிட்டு கணவன், மனைவி தூக்குப்போட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த கல்லூரி காதல் ஜோடி மீது கார் மோதிய விபத்தில், காதலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காதலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
    மாமல்லபுரம்:

    சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி கார்டனை சேர்ந்தவர் கிஷோர் (வயது 19). சென்னை பெசன்ட்நகர் ஊரூர் குப்பம் பகுதியை சேர்ந்த கவுதமி (19). இவர்கள் 2 பேரும் சென்னை அடையாரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு பயின்று வந்தனர்.

    ஒரே கல்லூரியில் படித்த இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காதலர்களான இருவரும், சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    கவுதமி பின்னால் அமர்ந்து கொள்ள, கிஷோர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் பேரூர் அருகே இடது பக்கமாக சாலையை கடக்க முயன்றனர்.

    அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி எதிரே வந்து கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கர சத்தத்துடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் சுக்குநூறாக அப்பளம் போல் நொறுங்கியதில், இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் கவுதமிக்கு தலையில் பலத்த அடிபட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்த கிஷோரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×