search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்ரா
    X
    சித்ரா

    டி.வி. நடிகை சித்ரா தற்கொலை: நடிகர்-நடிகைகளிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த முடிவு

    நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் சின்னத்திரை நடிகர்-நடிகைகளிடமும் விசாரணை நடத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார்.
    சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். சித்ரா தற்கொலைக்கு கணவர் ஹேம்நாத்தே காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஜனவரி மாதம் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் சித்ராவும், நானும் கடந்த அக்டோபர் மாதமே பதிவு திருமணம் செய்து கொண்டதாக ஹேம்நாத் கூறியிருந்தார்.

    இதையடுத்து சித்ராவுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆகி இருப்பதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி வருகிறார்.

    சித்ராவின் தாய்-தந்தையிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நேற்று ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், தாய் வசந்தா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    வரதட்சணை கொடுமையால் சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. இது தொடர்பாகவே ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது. ஹேம்நாத்தின் தாய்-தந்தை இருவரிடமும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள், சித்ராவிடம் நாங்கள் வரதட்சணை எதையும் கேட்கவில்லை என்று கூறியுள்ளனர்.

    இதனை தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத் பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து விசாரணைக்காக ஹேம்நாத்தை நேரில் ஆஜர்படுத்துமாறு சிறைத்துறை அதிகாரிக்கு பொன்னேரி ஆர்.டி.ஓ. கடிதம் அனுப்பியுள்ளார். இதனை ஏற்று சிறைத்துறை அதிகாரிகள் நாளை ஹேம்நாத்தை, ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முன்பு ஆஜர்படுத்த உள்ளனர்.

    இந்த விசாரணையின் போது சித்ரா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டது தெரிய வந்தால் அது தொடர்பான வழக்கிலும் ஹேம்நாத் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.

    இதற்கிடையே சித்ரா தற்கொலை வழக்கில் சின்னத்திரை நடிகர்-நடிகைகளிடமும் விசாரணை நடத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார்.

    ஹேம்நாத்திடம் நாளை காலை விசாரணை நடத்தப்பட்ட பிறகு சித்ராவின் நெருங்கிய தோழிகளாக இருந்த நடிகைகளிடமும் அவருடன் நடித்த சக நடிகர்களிடமும் விசாரணை நடைபெற உள்ளது.

    இந்த விசாரணை முடிவடைந்த பிறகு இது தொடர்பான அறிக்கையை ஆர்.டி.ஓ. தாக்கல் செய்ய உள்ளார். அப்போது சித்ரா தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது தெரிய வரும்.
    Next Story
    ×