என் மலர்tooltip icon

    ஈரோடு

    கோபி அருகே இன்று குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படாததை கண்டித்து ரோட்டில் காலி குடங்களுடன் பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கோபி:

    சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதி இண்டியம்பாளையம். இங்கு கடந்த சில நாட்களாகவே ஆற்று குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லையாம்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

    இந்த நிலையில் இண்டியம் பாளையம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள்- பெண்கள் அப்பகுதியில் உள்ள சத்தி- ஈரோடு மெயின் ரோட்டில் காலி குடங்களுடன் திரண்டனர்.

    திடீரென அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து கொண்டும் நின்று கொண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், கடத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காந்திமதி ஆகியோர் விரைந்து சென்றனர். பி.டி.ஓ.வும் சென்றார். அவர்கள் சாலைமறியல் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தான் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

    விரைவில் அது சரி செய்யப்பட்டு சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். இதை தொடர்ந்து சாலைமறியல் நடத்திய பொதுமக்கள் சமாதானமாகி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இடைநிலை ஆசிரியர்களுக்கு உரிய ஊதிய விகிதம் அளிக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு குமலன்குட்டை தொடக்க பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் சிறப்பு மாவட்ட பொதுக் குழு கூட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் ப.சரவணன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் அணி செயலாளர் மார்க்ரெட் சில்லியா கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு உரிய ஊதிய விகிதம் (7-வது ஊதியக்குழு) அளிக்கப்பட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை முறைபடுத்த வேண்டும்.

    ஓய்வூதியம் செய்ய ஏற்படுத்திய குழுவின் காலத்தை நீடிக்காமல் உடனடியாக அறிக்கை பெற்று உரிய முறைப்படுத்தி பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குட்கா ஊழலை பொருத்தவரை ஆளுங்கட்சியை சேர்ந்த முதலமைச்சர் தொடங்கி சட்ட மன்ற உறுப்பினர் வரை பலருக்கு தொடர்பு உள்ளது. முதலமைச்சர் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த வி‌ஷயத்தில் அமைதி காத்து வருகிறார்.

    இன்று தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    அடுத்த வாரம் த.மா.கா. இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள எண்ணை நிறுவனங்கள் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்.

    மத்திய அரசு உடனடியாக விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜி. எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.

    ஈரோடு பெரும்பள்ளம் ஓடை ஏரி, குளங்கள், கீழ் பவானி வாய்க்காலில் சாயக்கழிவுநீர் கலந்து வரு கிறது. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் அந்தப் பகுதிகளில் ஆய்வு செய்து சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பவானி ஆற்றங்கரை பகுதிகளில் திருடப்பட்ட 1000 மணல் மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து கண்காணிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    கோபி:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்த போது பவானி ஆற்றங்கரை பகுதிகளில் மணல் திருட்டு நடப்பதாக புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து ஆற்றங்கரையோரம் சோதனை நடத்த கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். அதன்படி கோபி ஆர்.டி.ஓ. அசோகன் தலைமையில் 70 பேர் அடங்கிய குழுவினர் பவானி ஆற்றங்கரைகளில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை நேற்று அதிகாலை வரை விடிய விடிய நடந்தது. இந்த சோதனையில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் யாரும் சிக்கவில்லை.

    ஆனால் பல இடங்களில் திருடப்பட்ட மணல் மூட்டைகளாக வைக்கப்பட்டு இருந்தன. இதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த மணல் மூட்டைகள் கைப்பற்றப்பட்டன.

    இது தொடர்பாக கோபி ஆர்.டி.ஓ. அசோகனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    மணல் திருட்டு நடப்பதாக வந்த புகாரில் அடிப்படையில் பவானி ஆற்றங்கரையோர பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.பவானி, ஆப்பக்கூடல், கீழ்பவானி, ஜம்பை, தளவாய்பேட்டை, அத்தாணி, வைரமங்கலம், திப்பிசெட்டிபாளையம், மூலப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    இந்த திடீர் சோதனையில் கீழ்பவானி பகுதியில் பவானி ஆற்றின் கரையோரம் மணல் திருடப்பட்டு மூட்டை மூட் டையாக வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அங்கு சுமார் 1000 மூட்டை மணல் இருந்தது. அவை கைப்பற்றப்பட்டன. அந்த மூட்டைகளில் இருந்த மணல் ஆற்றின் கரையில் கொட்டப்பட்டன. அந்த மணல் இருந்த பைகள் அழிக்கப்பட்டன.

    தொடர்ந்து இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பவானி தாசில்தார் சிவகாமி, பவானி டி.எஸ்.பி. சார்லஸ் தலைமையில் 3 குழுக்களாக போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    திப்பிசெட்டிபாளையம் அருகே நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஆற்றங்கரையோரத்தில் நடமாடிய இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொதுமக்கள் புகார் அளித்ததும் அதிகாரிகள் நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்த்த மணல் திருடர்கள் மணல் எடுக்க ஆற்றங்கரைக்கு வரவில்லை என்றும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் மினி ஆட்டோ, டிராக்டர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை ரகசிய இடத்தில் வைத்ததும் தெரிய வந்துள்ளது.

    அவர்கள் அதிகாரிகளிள் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. மணல் திருட்டை தடுக்கும் நடவடிக்கையை வருவாய் துறையினர் கைவிட்டு பிற பணிகளில் கவனம் செலுத்தும்போது மீண்டும் மணல் கடத்தலை அவர்கள் தொடங்கலாம் என கருதப்படுகிறது.

    எனவே ஆற்றங்கரை பகுதியில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட கோரிக்கை எழுந்துள்ளது. #tamilnews
    சென்னிமலை அருகே குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அதிகாரியின் ஜீப்பை சிறை பிடித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் ஊராட்சி மற்றும் ஓட்டப்பாறை ஊராட்சி பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    நாள் ஒன்றுக்கு முகாசி பிடாரியூர் ஊராட்சி பகுதிக்கு 5 லட்சம் லிட்டரும். ஓட்டப்பாறை ஊராட்சிக்கு 2.75 லிட்டரும் சப்ளை செய்யப்பட வேண்டும். கடந்த 20 நாட்களாக காவிரியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் மின் மோட்டார்கள் நீரில் முழ்கி குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டனர்.

    இந்த நிலையில் தற்போது மின் மோட்டார் சரி செய்யப்பட்டு தண்ணீர் சப்ளை ஆகிறது. இதில் முகாசிபிடாரியூர் ஊராட்சி பகுதிக்கு மட்டும் குடிநீர் சப்ளை ஆகி உள்ளது. ஓட்டப்பாறை கிராம பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படவில்லை. இதற்கு ஓட்டப்பாறை கிராமமக்கள் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

    அதில் முகாசிபிடாரியூர் ஊராட்சி பகுதியில் வீட்டு இணைப்புகள் அனைத்தும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட மெயின் குழாய்களில் கொடுத்துள்ளதால் ஓட்டப்பாறை ஊராட்சி பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை என கூறி உள்ளனர்.

    இதை ஆய்வு செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் ஜீப்பில் வந்து என்.பி.என்., காலனி பகுதியில் உள்ள நீர் ஏற்றும் தரை தொட்டியை பார்வையிட்டனர்.

    அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் எங்களுக்கு வழங்க வேண்டிய நீரில் அளவினை சரியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அதிகாரிகள் வந்த ஜீப்பை சிறை பிடித்து பெண்கள் கோரிக்கை வைத்தனர்.

    ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் பொதுமக்களை சமாதானம் செய்து இனி வரும் நாட்களில் கூடுதல் தண்ணீர் கொடுத்து குறிப்பிட்ட அளவு தண்ணீர் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    விவாகரத்து செய்த பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோபி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கோபி:

    கோபி அருகே உள்ள உக்கரம் மில் மேட்டை சேர்ந்தவர் ஸ்ரீதர். கூலி தொழிலாளி. இவர் நந்தினி (வயது 28) என்ற பெண்ணை திருமணம் செய்தார். தரணிதரன் என்ற மகன் உள்ளார்.

    கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீதரும், நந்தினியும் பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் 2 பேரும் கோர்ட்டு மூலம் விவாகரத்து பெற்றனர்.

    இந்த நிலையில் கடந்த 2.4.2017 அன்று உக்கரத்தில் உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்தில் நந்தினி சோளத்தட்டு பயிர்களை அறுத்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஸ்ரீதர் தகாத வார்த்தைகளால் பேசி தான் கொண்டு வந்த கத்தியால் குத்தினார். இதில் நந்தினி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த ஸ்ரீதரை கைது செய்தனர்.

    பின்னர் கோபி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. ஸ்ரீதருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீதிபதி மணி தீர்ப்பு கூறினார்.
    எம்.எல்.ஏ.வுக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசம் என்பதால் திருமணம் பிடிக்கவில்லை என்று மணப்பாறையில் மீட்கப்பட்ட இளம்பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். #EswaranMLA
    கோபி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன்.

    இவருக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (வயது 23) என்ற எம்.சி.ஏ. பட்டதாரி பெண்ணுக்கும் வருகிற 12-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.

    பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணத்தை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டன. திருமண பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு கொடுத்து அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மணமகள் சந்தியா வீட்டில் இருந்த வெளியே சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

    பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் மாயமானது குறித்து கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    புகாரில் தனது மகளுக்கும், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கொளத்தூர்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (25) என்பவருடன் பழக்கம் இருந்ததாகவும் மகளை மீட்டு தரும்படியும் கூறி இருந்தார்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது எம்.எல்.ஏ.வுடனான திருமணம் பிடிக்காததால்தான் சந்தியா வீட்டை விட்டு வெளியேறி மாயமானது தெரிய வந்தது.

    இந்த நிலையில் சந்தியாவின் செல்போன் எண் மூலம் விசாரித்தபோது அவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், சப்-இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையில் போலீசார் மணப்பாறைக்கு சென்றனர்.

    மணப்பாறை மஸ்தான் வீதியில் உள்ள சத்யா என்பவரது வீட்டில் சந்தியா இருப்பது தெரியவந்தது. அவர் சந்தியாவின் தோழி ஆவார்.



    போலீசார் அங்கு சென்றபோது வீட்டில் சந்தியாவும், சத்யாவும் இருந்தனர். இதையடுத்து போலீசார் சந்தியாவை மீட்டு கோபிக்கு அழைத்து வந்தனர்.

    நேற்று மாலை கோபி ஜே.எம்.-1 கோர்ட்டில் சந்தியா ஆஜர்படுத்தப்பட்டார். தனி அறையில் வைத்து சந்தியாவிடம் மாஜிஸ்திரேட்டு பாரதிபிரபா விசாரித்தார்.

    அப்போது திருமணம் பிடிக்காததால்தான் வீட்டை விட்டு வெறியேறியதாக சந்தியா கூறினார். மேலும் பெற்றோருடன் செல்ல மாட்டேன் என்று கூறிய அவர் கோவையில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு தன்னை அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.

    பின்னர் சந்தியாவின் பெற்றோரிடம் மாஜிஸ்திரேட்டு விசாரித்தார். அப்போது அவர்களிடம் சந்தியா கூறிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் சந்தியாவின் பெற்றோர் தனது மகளை தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்றனர்.

    இதைத்தொடர்ந்து முதலில் மறுப்பு தெரிவித்த சந்தியா பின்னர் தனது பெற்றோருடன் செல்ல சம்மதம் தெரிவித்தார். அதன்படி சந்தியாவை திருமணத்துக்கு கட்டாயப்படுத்தக்கூடாது.

    அவரை அடித்து துன்புறுத்துவதோ, உறவினர்கள் அவரிடம் விசாரிக்க அனுமதிக்கவோ கூடாது என்று சந்தியாவின் பெற்றோருக்கு மாஜிஸ்திரேட்டு அறிவுரை கூறினார். பின்னர் சந்தியா அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

    முன்னதாக சந்தியா கடத்தூர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    எனக்கும் எம்.எல்.ஏ.வுக்கும் 20 வயது வித்தியாசம் இருந்ததால் திருமணம் செய்ய பிடிக்கவில்லை என எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் திருமணம் செய்ய வற்புறுத்தினர்.

    மேலும் திருமணம் செய்யாவிட்டால் நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் என அவர்கள் மிரட்டினர்.

    ஆகையால் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன். ஆனால் எனக்கு திருமணம் செய்ய பிடிக்கவில்லை. எனவே பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றேன்.

    மணப்பாறையில் உள்ள எனது தோழி சத்யா வீட்டில் தங்கியிருந்தேன். அங்கு என்னை போலீசார் மீட்டு கோபி கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர்.

    இவ்வாறு சந்தியா கூறியுள்ளார். #EswaranMLA
    பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப்பட்டு, காணாமல் போன புதுப்பெண் மணப்பாறையில் உள்ள தோழி வீட்டில் இருந்து மீட்கப்பட்டார். #EswaranMLA
    கடத்தூர்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வுக்கும், கோபி அருகே உள்ள உக்கரம் பெரியார் நகரை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. சந்தியா எம்.சி.ஏ. பட்டதாரி. இவர்கள் 2 பேருக்கும் வருகிற 12-ந் தேதி சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி சந்தியா, உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக வீட்டில் உள்ள தன்னுடைய பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அன்று இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண்ணின் பெற்றோர் கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சந்தியாவை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சந்தியா, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அவருடைய தோழி வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து போலீசார் மணப்பாறைக்கு விரைந்து சென்று சந்தியாவை மீட்டனர். விசாரணையின்போது சந்தியா கூறுகையில், ‘எனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை. எனவே, கடந்த 1-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருச்சி அருகே மணப்பாறையில் உள்ள எனது தோழி வீட்டுக்கு சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் என் இருப்பிடத்தை கண்டுபிடித்து விட்டனர்’ என்றார்.

    இதையடுத்து சந்தியாவை போலீசார் கோபி கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பாரதி பிரபா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து சந்தியா தனது பெற்றோரிடம் சென்றார்.  #EswaranMLA
    தோட்டத்தில் 5 மயில்கள் ஆங்காங்கே மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து அதற்கு யாராவது விஷம் வைத்தார்களா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரச்சலூர்:

    அரச்சலூர் அருகே உள்ள சில்லாகாட்டுப்புதூரில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோட்டத்தில் 5 மயில்கள் ஆங்காங்கே மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கிராம நிர்வாக அலுவலர் கோபி நேரில் சென்று பார்வையிட்டார். இந்த மயில்கள் இறந்து 2, 3 நாட்கள் இருக்கும் என்று தெரிகிறது.

    இந்த மயில்கள் வேறு எங்கேயாவது இருக்கும்போது அதற்கு யாராவது வி‌ஷம் வைத்தார்களா? வி‌ஷம் கலந்த உணவை அந்த மயில்கள் தின்று தென்னந்தோப்புக்குள் வரும் போது ஆங்காங்கே இறந்துள்ளதா? என்பது குறித்து தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்து பார்வையிட்டு இறந்த மயில்கள் உடலை கைப்பற்றினர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சில மயில்களை நாய்கள் கடித்து குதறி இருந்தது.
    சென்னிமலை அருகே ரோடு ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள சாய திடக்கழிவுகள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட, கிழக்கு புதுப்பாளையம் ஊருக்கு அருகில் மைலாடி செல்லும் ரோட்டின் ஓரத்தில் அடுப்பு சாம்பல் உடன் சாய பட்டறைகளில் உருவாகும் அடர் சாயக் கழிவுகளை கலக்கி மூட்டை, மூட்டையாக கட்டி ரோட்டின் ஓரமாக மர்ம நபர்கள் கொட்டி சென்று உள்ளனர்.

    இந்த சாயப்பட்டறை அடர் கழிவுகளை சேகரித்து வைத்து இதை சுத்தரிப்பு செய்ய கும்முணி பூண்டியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை அனுப்ப வேண்டும் அப்படி செய்யாமல் இப்படி பொறுப்பு இன்றி ரோட்டின் ஓரத்தில் கொட்டி செல்லப்பட்டுள்ளது. இது இந்த பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே இந்த பகுதிகளில் சாயப்பட்டறைகள் சம்பந்தமாக பலமுறை மக்கள் புகார் கொடுத்தும், இரண்டு முறை கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சாயப்பட்டறை முதலாளிகள் தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் கூறினர்.



    பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப்பட்டு, காணாமல் போன புதுப்பெண் மணப்பாறையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். #EswaranMLA
    கோபி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன் (வயது 43).

    இவருக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (வயது 23) என்ற எம்.சி.ஏ. பட்டதாரி பெண்ணுக்கும் வருகிற 12-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது.

    திருமண ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்தது. உறவினர்களுக்கு பத்திரிகை கொடுக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் எம்.எல்.ஏ.வுடனான திருமணம் பிடிக்காமல் சந்தியா வீட்டை விட்டு வெளியேறி அக்காள் வீட்டுக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றவர் மாயமாகி விட்டார்.

    திருமணம் செய்ய இருந்த ஈஸ்வரன் எம்.எல்.ஏ-சந்தியா ஜோடியாக எடுத்த படம்.

    மணப்பெண் திடீரென மாயமானதால் இருவர் வீட்டிலும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. இது குறித்து மணப்பெண்ணின் தாய் தங்கமணி கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரில் தனது மகளுக்கும், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கொளத்துப்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (25) என்பவருடன் பழக்கம் இருந்ததாகவும் மகளை மீட்டு தரும்படியும் கூறி இருந்தார். இதையொட்டி கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மணமகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மணமகள் சந்தியாவின் செல்போன் எண்ணை வைத்து செல்போன் டவர் மூலம் விசாரித்தபோது திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருப்பதாக காட்டியது.

    இதனால் சந்தியா தனது ஆண் நண்பர் விக்னேசுடன் மணப்பாறையில் தங்கி இருப்பது தெரியவந்தது. எனவே கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையில் தனிப்படை போலீசார் மணப்பாறைக்கு விரைந்துள்ளனர். #EswaranMLA
    பவானி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் கலெக்டர் கதிரவனிடம் மனு கொடுத்தனர்.
    ஈரோடு:

    பவானி அடுத்த ஜம்பையை சேர்ந்த மக்கள் சிலர் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர் கதிரவனிடம் மனு கொடுத்தனர்.

    ஜம்பை பகுதியில் 3000 பேர் வசித்து வருகிறோம் எங்கள் ஊரில் பவானி ஆறு ஓடுகிறது ஜம்பைக்கு வடக்கில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் பவானி ஆற்றை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பவானி ஆற்றில் பவானி டவுனில் ஆரம்பித்து சத்தியமங்கலம் வரை சட்டவிரோதமாக இரவு பகல் பார்க்காமல் ஒரு சிலர் மணல் அள்ளி வருகிறார்கள்.

    இதனால் ஆறு மாசுபட்டு சாக்கடை நீராக மாறிவிடுகிறது தற்போது பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு ஓரளவு மணல் கவனத்திற்கு வந்துள்ளது. இதை சாதகமாக்கிக் கொண்டு ஒரு கும்பல் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வருகிறது.

    இதனால் ஆறு மாசடைந்து குடிநீர் திண்டாட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது இது சம்பந்தமாக நாங்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தி உள்ளோம். எனவே ஜம்பை பவானி ஆற்றை பாதுகாக்கவும் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோன்று ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் கலெக்டர் கதிரவனிடம் மாதம் ஒருமுறை நூல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கூட்டுறவு நூற்பாலைகளில்ராயன் நூல்களை உற்பத்தி செய்து குறைந்த விலையில் நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும். விசைத்தறிக்கான தனி ரக ஒதுக்கீடு தேவை என்றும் கூறி உள்ளனர். #tamilnews
    ×