என் மலர்tooltip icon

    ஈரோடு

    கொரோனாவால் மனிதாபிமானம் மரித்து போய்விட்டது என சொல்லும் அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாயையே வீட்டுக்குள் விட மகள் மறுத்த சம்பவம் நடந்து உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த கணவரை இழந்த 60 வயது மூதாட்டிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 2 மகன்களும் திருமணம் முடிந்து வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இதனால் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டில் மூதாட்டி வசித்து வருகிறார். இந்த நிலையில், திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்றுமுன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் அங்கிருந்து புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள தன்னுடைய மகள் வீட்டுக்கு வந்து உள்ளார்.

    கோப்புப்படம்

    ஆனால் மூதாட்டியை மகள் வீட்டுக்குள் வர அனுமதிக்கவில்லை. இதனால் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் ரோட்டில் கவலையுடன் உட்கார்ந்தார். கொரோனா பாதிக்கப்பட்டவர் என்பதால் அந்த பகுதியை சேர்ந்த யாரும் அவரின் அருகில் செல்லவில்லை. இதுபற்றி புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜெகதீசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியை வீட்டுக்குள் அனுமதிக்கும்படி வேண்டி கேட்டுக்கொண்டார். எவ்வளவோ வேண்டி கேட்டும் மூதாட்டியின் மகள் மற்றும் குடும்பத்தினர் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

    பின்னர் இதுபற்றி புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ்காரர் ஒருவர் வந்து மூதாட்டியின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் அவர்கள் வீட்டுக்குள் மூதாட்டியை அனுமதிக்கவில்லை. நீங்கள் இன்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு மட்டும் வீட்டின் முன் பகுதிக்குள் அனுமதியுங்கள். நாளை (அதாவது நேற்று) காலை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறோம் என்றார். இதில் ஓரளவுக்கு மூதாட்டியின் குடும்பத்தினர் மனம் இறங்கி வந்தனர்.

    இதையடுத்து யாரும் தொட பயந்த மூதாட்டியை போலீஸ்காரர் செந்தில் கைத்தாங்கலாக தாங்கி பிடித்து வீட்டின் முன்புறத்தில் உள்ள போர்டிகோ பகுதிக்கு இரவு 9.30 மணி அளவில் அழைத்து சென்றார். பின்னர் அங்கிருந்த ஒரு கயிற்று கட்டிலில் மூதாட்டியை படுக்க வைத்துவிட்டு காவல் பணி செய்ய செந்தில் சென்றுவிட்டார்.

    நேற்று காலை 9 மணி அளவில் மூதாட்டியின் வீட்டுக்கு 108 ஆம்புலன்ஸ் வந்து நின்றது. பின்னர் அந்த ஆம்புலன்சில் மூதாட்டியை நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்றி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே தண்ணீரில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி ஜீவா. இவர்களது மகன் ரகுநாத் (வயது 15), அந்தியூரில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணக்கம்பாளையம் கரும்பாறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.

    சம்பவத்தன்று கருப்பாறை ஓடையில் துணி துவைக்க உறவினர்களுடன் சென்ற ரகுநாத் ஓடையில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதைகண்டு உறவினர்கள் சத்தம் போட்டனர்.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் ரகுநாத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரகுநாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

    தொழிற்சாலையின் உள்ளே இருந்து சத்தம் வந்ததை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் தொழிற்சாலையின் உரிமையாளர் கண்ணையனுக்கு தகவல் கொடுத்தனர்.
    பவானி:

    பவானி புதிய பஸ் நிலையம் அருகே தனியாருக்குச் சொந்தமான சாயத் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த தொழிற்சாலையின் உள்ளே இருந்து சத்தம் வந்ததை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் தொழிற்சாலையின் உரிமையாளர் கண்ணையனுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து அவர் இதுபற்றி பவானி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது மர்மநபர்கள் 2 பேர் உள்ளே இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் பவானி அருகே உள்ள சேர்வராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் வெங்கடேசன் (42), பவானி காவிரி நகர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் குமார் (30) ஆகியோர் என்பதும், அவர்கள் 2 பேரும் தொழிற்சாலைக்குள் நுழைந்து அங்கிருந்த மின்சார ஒயரை திருடியதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
    டி.ஜி.புதூர் அருகே உடல் நலக்குறைவால் மனைவி இறந்த துயரத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    டி.என்.பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சந்தை கடை மேடு பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 65). இவர் தனது குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் டி.ஜி.புதூர் அருகே கொடிவேரி பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    அவருடைய மனைவி ராஜாமணி. இவர் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மனைவியின் பிரிவு அய்யாசாமியை மிகவும் வாட்டியது. துயரத்துடனே காணப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் அய்யாசாமி மனம் உடைந்தார். ஒரு கட்டத்தில் “இனி வாழ்வதை விட சாவதே மேல்” என்ற முடிவுக்கு வந்தார். இதனால் நேற்று முன்தினம் காலை விஷத்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அய்யாசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த அய்யாசாமிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோட்டில் நேற்று பழக்கடைகள் செயல்பட தொடங்கின. பொதுமக்கள் வந்து பழங்களை வாங்கி சென்றனர்.
    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு கடந்த 10-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் காய்கறி கடைகள், மளிகை கடைகள் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பழக்கடைகளும், நாட்டு மருந்து கடைகளும் மதியம் 12 மணி வரை திறக்கலாம் என்று தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையடுத்து ஈரோட்டில் நேற்று பழக்கடைகளும் திறக்கப்பட்டன.

    ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தையிலும் பழக்கடைகள் திறக்கப்பட்டன. அங்கு பழங்களை பொதுமக்கள் பலர் வாங்கி சென்றார்கள். இதேபோல் மாநகர் பகுதியில் மதியம் 12 மணி வரை பல்வேறு பழக்கடைகள் திறந்து இருந்தன.
    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை யூனியன், ஈங்கூர் சிப்காட் ரோடு, மேற்கு வீதியை சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவரது மனைவி ருக்குமணி. இவர்களது மகள் சவுபர்ணிகா (17). இவர் ஈங்கூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது கொரோனா தொற்று 2-வது அலை பரவி வருவதால் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆன்லைனில் நடத்தப்பட்ட கணக்கு பாடத்தில் சவுபர்ணிகா மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளார்.

    இது குறித்து தாய் ருக்குமணி நல்லா படிக்க வேண்டும். அப்போது தான் நல்ல வேலை கிடைக்கும் என அறிவுரை கூறியுள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த சவுபர்ணிகா சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி மருந்தினை (வி‌ஷம்) சாப்பிட்டார்.

    இதனையடுத்து அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த மாணவி சவுர்பணிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமீபகாலமாக காய்ச்சல் என்று அனுமதிக்கப்படுபவர்களும் மூச்சு விட சிரமமாக இருப்பதாக கூறி ஆக்சிஜன் வேண்டும் என்று கேட்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாநகர் என்றால் மிகப்பெரிய ஆஸ்பத்திரிகளை கொண்டதாக உள்ளது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக ஈரோடு வருகிறார்கள்.

    தற்போதைய கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஈரோட்டில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அனைத்து ஆஸ்பத்திரிகளின் படுக்கைகளும் நிரம்பி உள்ளன.

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் நேற்றைய நிலவரப்படி 109 பேர் கோவிட் -19 பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில் ஒரு சிலருக்கு மட்டுமே ஆக்சிஜன் தேவை என்ற கட்டாயம் இருந்தது.

    ஆனால், சமீபகாலமாக காய்ச்சல் என்று அனுமதிக்கப்படுபவர்களும் மூச்சு விட சிரமமாக இருப்பதாக கூறி ஆக்சிஜன் வேண்டும் என்று கேட்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அவர்களின் சிரமம் கருதி ஆக்சிஜன் மூலம் சுவாசம் அளித்தாலும், அதை முழுமையாக பயன்படுத்தாமல் உள்ளனர்.

    இதுபோன்ற நிலை தனியார் ஆஸ்பத்திரிகளிலும் உள்ளது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    பிரபலமான மருத்துவமனைகளிலேயே ஆக்சிஜன் எதிர்பாராத வகையில் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இது ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடையே பதற்றத்தையும், நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் விரைவாக ஆக்சிஜன் தயாரிக்கவும், மத்திய அரசிடம் இருந்து தேவையான ஆக்சிஜனை பெறவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதுபோல் மருத்துவர்களின் ஆலோசனை கேட்டு தேவை என்றால் மட்டுமே ஆக்சிஜன் படுக்கைகளை நோயாளிகள் தேர்ந்து எடுக்க வேண்டும். மருந்து மாத்திரையில் குணப்படுத்தும் நிலையில் இருப்பவர்கள் ஆக்சிஜன் வேண்டும் என்று கட்டாயப்படுத்தி, உண்மையிலேயே ஆக்சிஜன் தேவையானவர்களுக்கு கிடைக்காமல் செய்துவிடக்கூடாது என்றும் மருத்துவத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
    ஈரோட்டில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
    ஈரோடு:

    ஈரோடு அசோகபுரம் கலைமகள் வீதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (வயது 60). இரவு காவலராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 19-8-2019 அன்று மாலையில் வீட்டில் இருந்தார். அப்போது அங்குள்ள ஒரு மைதானத்தில் 6 வயது சிறுமி விளையாடிக் கொண்டு இருந்தார். குழந்தையை பார்த்த கோடீஸ்வரன் குழந்தையின் அருகில் சென்று பேச்சுக்கொடுத்தார். அப்போது அந்த சிறுமியிடம் தனது வீட்டில் சாக்லேட் இருப்பதாக கூறி வீட்டுக்குள் அழைத்துச்சென்றார்.

    அங்கு சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். அங்கிருந்து ஓட முயன்ற சிறுமிக்கு நிறைய சாக்லேட் தருவதாக கூறி மீண்டும் தொல்லை கொடுத்து இருக்கிறார். பின்னர் சிறுமி வீட்டுக்கு சென்றார்.

    கடந்த 21-8-2019 அன்று உடல் நிலை சரியில்லாமல் சிறுமி பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் இருந்தாள். அப்போது பெற்றோரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது 2 நாட்களுக்கு முன்பு கோடீஸ்வரன் செய்த நடவடிக்கைகள் குறித்து கூறினார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு கொண்டனர். மேலும் இதுபற்றி ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கோடீஸ்வரனை கைது செய்தனர். இதுதொடர்பாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை நீதிபதி ஆர்.மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி கோடீஸ்வரனுக்கு, 2 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறி இருந்தார்.

    பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசின் நிதியில் (பாலியல் தொல்லையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில்) இருந்து ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதி ஆர்.மாலதி அந்த தீர்ப்பில் கூறிஇருந்தார்.

    இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜர் ஆனார்.
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டாலும், மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான மதுவை வாங்கி சென்றார்கள்.
    ஈரோடு:

    தமிழகத்தில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த 8-ந் தேதி காலையில் வெளியானது. இந்த ஊரடங்கையொட்டி 8-ந் தேதியும், 9-ந் தேதியும் மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக 2 வாரங்களுக்கு மது கிடைக்காது என்பதால், டாஸ்மாக் கடைகளை நோக்கி மது பிரியர்கள் படை எடுத்தார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டாலும், மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான மதுவை வாங்கி சென்றார்கள். மேலும், பலர் மது பாட்டில்களை அள்ளிச்சென்றதையும் காணமுடிந்தது.

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 8-ந் தேதி ஒரே நாளில் ரூ.16 கோடியே 76 லட்சத்துக்கு மது விற்பனையானது. நேற்று முன்தினமும் மது விற்பனை ஜோராக நடந்தது. பலர் பெரிய பைகளை கொண்டு வந்து அதிக மது பாட்டில்களை வாங்கி சென்றார்கள்.

    2-வது நாளான நேற்று முன்தினமும் ஒரே நாளில் ரூ.15 கோடியே 70 லட்சத்து 8 ஆயிரத்து 650-க்கு மதுவிற்பனையாகி உள்ளது. எனவே 2 நாட்களில் சுமார் ரூ.32 கோடிக்கு மது விற்பனையானது.
    ரெயிலில் பயணம் செய்த வாலிபர் மூச்சுத்திணறி இறந்தார். இதனால் கொரோனா பீதியில் சக பயணிகள் அச்சம் அடைந்தனர்.
    ஈரோடு:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சதீஷ் (வயது 23). இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

    கேரளாவில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், சதீஷ் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். இந்த ரெயில் நேற்று அதிகாலை ஈரோடு ரெயில் நிலையம் வந்தது.

    அப்போது சதீஷ் மூச்சு விட சிரமப்படுவதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு சக பயணிகள் தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ரெயில்வே டாக்டர் வரவழைக்கப்பட்டு, சதீசை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் சதீசின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வாலிபர் சதீஷ் கொரோனா தொற்றினால் இறந்திருக்க கூடும் என்ற அச்சம் பயணிகளுக்கு ஏற்பட்டது. இதனால் அந்த பெட்டியில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர்.

    மேலும் அந்த பெட்டி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
    தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் தீ வேகமாக நார் இருந்த பகுதி முழுவதும் பரவியது. தீயின் தாக்கம் அதிகம் இருந்ததால் கரும்புகையுடன் கூடிய தீ கொழுந்து விட்டு எரிந்தது.
    கொடுமுடி:

    கொடுமுடி அருகே வெற்றிக்கோனார் பாளையத்தில் தேங்காய் நார்மில் உள்ளது. இதன் உரிமையாளர் கம்மங்காட்டு களத்தை சேர்ந்த சோமசுந்தரம் (64) ஆவார். இவரது நார் மில்லினை காங்கயம் அருகே ஆலாம்பாடியை சேர்ந்த செந்தில் (35) என்பவர் கடந்த 2 வருடங்களாக லீசுக்கு ஓட்டி வருகிறார். இந்த மில்லில் வடமாநில தொழிலாளர்கள் 8 பேர் மற்றும் உள்ளூர் பகுதியை சேர்ந்த 7 பேர் உள்பட 15 பேர் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்நிலையில் மதியம் சுமார் 1.30 மணியளவில் நார்மில்லினை ஒட்டி உள்ள மற்றொரு கட்டிடத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்கள். திடீரென நார்மில்லில் நார் கொட்டி வைக்கப்பட்டுள்ள பகுதியின் ஒரு பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது.

    இதனையடுத்து உடனடியாக கொடுமுடி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் தீ வேகமாக நார் இருந்த பகுதி முழுவதும் பரவியது. தீயின் தாக்கம் அதிகம் இருந்ததால் கரும்புகையுடன் கூடிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. புகையை பார்த்து அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது.

    மேலும் தீயை கட்டுப்படுத்த முடியாததால் மொடக்குறிச்சி தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். 2 தீயணைப்புத் துறை வீரர்களும் 6 மணி வரை போராடி தீயை முழுமையாக அணைத்தனர். 

    ஊரடங்கு காலத்தில் கடைகள் எதுவும் திறக்காதநிலையில், ரேஷன் அரிசிதான் ஒரே உணவு ஆதாரமாக உள்ளது. அரசியில் கல், நெல், குருணை என்று இருந்தால் எப்படி சாப்பிட முடியும். எனவே தரமான அரிசி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஈரோடு:

    தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) அதிகாலை முதல் 24-ந் தேதி அதிகாலை வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த காலத்தில் பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமாக இருப்பது உணவு. ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி வினியோகம் செய்ய அரசு உத்தரவிட்டு உள்ளது.

    ரேஷன் அட்டைதாரர்களுக்கு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை வழங்கப்படுகிறது. அரிசி மற்றும் கோதுமை இலவசமாக அட்டைகளுக்கு உரிய அளவு வழங்கப்படுகிறது. பிற பொருட்களும் உரிய அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

    இது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் விஷயமாகும். குறிப்பாக கூலி வேலைக்கு செல்பவர்கள், சிறு வேலைகளுக்கு செல்பவர்கள் இந்த வேலை இழப்பு காலத்தில் குடும்பத்தை ஓட்ட ரேஷன் அரிசி மிகவும் உதவிகரமாக இருக்கும். ஆனால் தற்போது ரேஷனில் வழங்கும் அரிசி பெரும்பாலும் தரமாக இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது:-

    ரேஷன் கடையில் வாங்கிய அரிசியில் ஒரு கைப்பிடி அளவுக்கு அரிசி எடுத்தால் அதில் குறைந்தது 10 நெல் மற்றும் குருணை உள்ளது. அரிசியும் பழுப்பு நிறத்தில் உள்ளது. ரேஷன் கடைகளில் ஒரு சில மூட்டைகளில் நல்ல அரிசி உள்ளது. அந்த அரிசி கிடைப்பது அதிர்ஷ்டம் என்ற நிலைதான் இருக்கிறது. அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான தரமான அரிசி வழங்க வேண்டும். இதற்கு அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊரடங்கு காலத்தில் கடைகள் எதுவும் திறக்காதநிலையில், ரேஷன் அரிசிதான் ஒரே உணவு ஆதாரமாக உள்ளது. அதுவும் துர்நாற்றம் வீசுவதுடன், கல், நெல், குருணை என்று இருந்தால் எப்படி சாப்பிட முடியும். எனவே தரமான அரிசி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×