என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள நாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (50). டெய்லர். இவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
தி.மு.க. வார்டு செயலாளராக இருந்த வடிவேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதாவில் இணைந்து விட்டார். இதனால் வடிவேலுக்கும் அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் தம்பி என்கிற ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு நாகராஜபுரம் பகுதியில் உள்ள தலவுமலை விநாயகர் கோவிலில் வடிவேல் மற்றும் சிலர் இருந்தனர். அப்போது அங்கு வந்த ஈஸ்வரமூர்த்திக்கும் வடிவேலுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
அப்போது திடீரென அவர்கள் மோதிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரமூர்த்தி கீழே கிடந்த கல்லால் வடிவேலை சரமாரியாக தாக்கி உள்ளார்.
இதில் வடிவேல் மயக்கம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கம் தெளிய வைத்தனர். பின்னர் 2 பேரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் வீட்டிற்கு சென்று வடிவேல் இரவு படுத்து தூங்கினார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திரிக்கவில்லை. இதையடுத்து சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவர் அருகே சென்று பார்த்தபோது வடிவேல் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
இதையடுத்து வடிவேலின் குடும்பத்தினர் அறச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வடிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரமூர்த்தியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னிமலை :
ஈரோடு மாவட்டம் சென்னிமலை போர்வைகள் மற்றும் வீட்டு உபயோக துணி உற்பத்தியில் சிறந்து விளங்கி வருகிறது. இங்கு கைத்தறி மற்றும் விசைத்தறிகளில் போர்வைகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.
இந்தியாவின் 60 சதவீத போர்வை தேவைகளை சென்னிமலை பகுதியில் விசைத் தறியில் உற்பத்தியாகும் போர்வைகள் தான் பூர்த்தி செய்து வருகிறது. இங்கு சொந்தமாக விசைத்தறி வைத்து உற்பத்தி செய்யும் முதலாளிகளும் அடைப்புதறி என்று சொல்லக்கூடிய தறி உரிமையாளர்களும் உள்ளனர்.
அடைப்பு தறி, விசைத்தறி உரிமையாளர்கள் பெரிய ஜவுளி உற்பத்தி நிறுவனத்திடம் நூல் பெற்று கூலிக்கு போர்வைகளை உற்பத்தி செய்து வழங்குகிறார்கள். இங்கு மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் போர்வைகள் தயாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் போர்வைகள் உற்பத்தி செய்யும் விசைத்தறிகளுக்கு 20 சதவீதம் கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக ரூ.2 கோடி போர்வை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு சென்னிமலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் ஜக்காடு போர்வை ஒன்றுக்கு ரூ.4 கூலி உயர்வும், 10-ம் நெம்பர் நூலை பயன்படுத்தி தயாராகும் போர்வை ஒன்றுக்கு 1 ரூபாய் முதல் 2 ரூபாய் வரை ரகத்துக்கு ஏற்றாற் போல் கூலி உயர்வு வழங்க உடன்பாடு ஏற்பட்டது.
இதனை அடுத்து 7 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று முதல் சென்னிமலை பகுதியில் வழக்கம்போல் விசைத்தறிகள் இயங்கும் என விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார். இதையடுத்து இன்று வழக்கம் போல் சென்னிமலை பகுதியில் விசைத்தறிகள் செயல்பட தொடங்கியது.இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பரப்பில் அமைந்துள்ள மலைக் கிராமங்களில் பல அரிய தொல்லியல் சின்னங்கள் பரவி கிடக்கின்றன.
பர்கூர், கடம்பூர் தாளவாடி, கேர்மேளம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் வரலாற்றிற்கு முந்தைய கால சின்னங்கள், பாறை ஓவியங்கள், தொன்மைத் தமிழ் எழுத்து வடிவங்கள் கிடைத்துள்ளன. அதிலும் குறிப்பாக பர்கூர் மலைப்பகுதியில் பொதுயுகம் ஐந்து, 6-ம் நூற்றாண்டு எழுத்தமைவு கொண்ட நடுகல் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கூத்தம்பாளையம் வனப்பகுதிக்கு உட்பட்ட நெல்லூர் கிராமத்தின் அருகே உள்ள வனத்தில் 8-ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாக்கை தன்னார்வ அமைப்பை சேர்ந்த சித்தலிங்கன், சுதாகர் நல்லியப்பன், குமரவேல் ராமசாமி ஆகியோர் நெல்லூர், கடம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டபோது இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நடுகல் 86 செ.மீ உயரமும் 75 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது. அக்கல்வெட்டின் எழுத்துக்கள் முழுமையாக படித்தறியக் கூடிய வகையில் இல்லை. எனினும் சில வார்த்தைகள் மட்டும் அடையாளம் காணக்கூடிய அளவில் உள்ளன. ஊர் பகுதியில் நடைபெற்ற கால்நடை கவர்தல் பூசலில் அவற்றை மீட்டு இறந்து போன வீரனின் நினைவாக இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
வீரன் தனது வலது கையில் குறுவாள் கொண்டு, இடது கையில் வில்லம்பு ஏந்திய நிலையில் பகைவர்களை தீரத்துடன் எதிர்கொள்ளும் காட்சி சிற்பமைப்பில் உள்ளது. இந்த வகையான சிற்பமைப்பு தமிழகத்திற்கே உரிய அமைப்பாகும். குறிப்பாக பல்லவர் கால நடுகல் சிற்ப விவரிப்பில் குறிப்பிட்ட காட்சிகளை அதிகமாக காணலாம்.
இதுகுறித்து யாக்கை தன்னார்வ அமைப்பினர் கூறியதாவது:-
கர்நாடக மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள பகுதியானாலும் நடுகல் மரபில் பண்பாட்டு கலப்பு இல்லாமல் காணப்படுவதும் தமிழ் எழுத்து வடிவத்தை பின்பற்றி இருப்பதும், நடுகல் சிற்பங்கள் வடிக்கும் தொழிற்முறை கலைஞர்கள் பல்லவர் நாட்டிலிருந்து சென்றவராக இருக்கலாம் என்றும் கருத தோன்றுகிறது.
மேற்கண்ட நடுகல் கல்வெட்டு உள்ள இடத்தின் அருகாமையில் உள்ள வனப்பகுதியில் ஆங்காங்கே நடுகற்கள் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் 12-ம் நூற்றாண்டிற்கு பிற்பட்டவையாக காணப்படுகின்றன.
ஈரோடு மாவட்டத்தின் வனப்பகுதிகளாக இன்று நாம் அறியப்படும் பகுதிகளில் இருந்து தொடர்ந்து கிடைத்து வரும் தொல்லியல் தடயங்கள் அனைத்தும் காலங்காலமாக மக்கள் புழக்கத்தில் இந்த பகுதிகள் இருந்துள்ளதை காட்டுகின்றன.
மேலும் பர்கூர், தாமரைகரை, ஈரெட்டி மலை வழியாக இன்று நடைமுறையில் இருக்கும் வழிப்பாதையில் 1,500 ஆண்டுகளுக்கு முன் பிருந்தே முக்கிய வணிகப் போக்குவரத்து தொடங்கி நடைபெற்றுள்ளது என்பதை வலுப்படுத்தும் சான்றுகள் கிடைத்த வண்ணம் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஈரோடு:
தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்பு கொரோனா தாக்கம் காரணமாக இந்த பணியில் தொய்வு ஏற்பட்டது.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் சுற்றுச்சூழல் பாதுகாப்புகாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பிளாஸ்டிக் பை சுற்றுச்சூழலுக்கு கேடு என்ற பரப்புரை தீவிரப்படுத்தப்பட்டது.
இதையடுத்து மீண்டும் துணிப்பைகளை கொண்டு செல்லும் பழக்கம் அதிகரித்தது. தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24-ந் தேதி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம் உள்பட 20 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. பொங்கல் தொகுப்புகள் மஞ்சப் பைகளில் வைத்து வழங்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதில் 2 கோடிக்கும் மேற்பட்ட அட்டை தாரர்களுக்கு ஜனவரி 3-ந் தேதி முதல் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.
இதையொட்டி பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக மஞ்சப்பை தயாரிக்கும் பணி ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம் ஊராட்சிக்கோட்டை உள்ளி ட்ட பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பெண் தொழிலாளர்கள் அதிக அளவில் பைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சிலர் வீடுகளிலும் மேலும் பலர் குழுவாக சேர்ந்து பைகளை தயாரித்து வருகின்றனர்.
பவானி சுற்றுவட்டார பகுதியில் மட்டும் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட துணி பைகள் தயாரிக்க ஆர்டர்கள் வந்து உள்ளது. இங்கு தயார் செய்யப்படும் பைகள் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி மற்ற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என பைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மஞ்சள் பை தயாரிக்கும் ஆர்டர் பெற்றிருக்கும் நாகராஜ் என்பவர் கூறும் போது:-
தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளது. இந்த மஞ்சள் பையை பொங்கல் தொகுப்புடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 80 லட்சம் மஞ்சள் பைகள் தயாரிக்கும் ஆர்டர் கிடைத்து உள்ளது. தற்போது வரை 50 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது. 20 வகையான பொருட்கள் வழங்கப்பட உள்ளதால் பைகள் கனமாக இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மஞ்சள் பைகள் ஒவ்வொன்றும் 15 முதல் 20 கிலோ எடையுள்ள பொருட்கள் தாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதி பெட்ஷீட்கள், மற்றும் வீட்டு உபயோக துணி உற்பத்திகளில் சிறந்து விளங்குகிறது. இங்கு கைத்தறி மற்றும் விசைத்தறிகளில் பெட்ஷீட்கள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.
இந்தியாவின் 60 சதவீத பெட்ஷீட் தேவைகளை சென்னிமலை பகுதியில் விசைத்தறிகளில் உற்பத்தியாகும் பெட்ஷீட்கள் தான் பூர்த்தி செய்கிறது.
இங்கு சொந்தமாக விசைத்தறி வைத்து உற்பத்தி செய்யும் முதலாளிகளும், அடைப்புதறி என்று சொல்ல கூடிய தறி உரிமையாளர்களும் உள்ளனர். அடைப்பு தறி விசைத்தறி உரிமையாளர்கள் பெரிய ஜவுளி உற்பத்தி நிறுவனத்திடம் நூல் பெற்று கூலிக்கு பெட்ஷீட்களை உற்பத்தி செய்து வழங்குகிறார்கள்.
இதில் 2-க்கு 17 நூல் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் ஜக்காடு விசைத்தறி உரிமையாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க சம்மதம் தெரிவித்து விட்டனர்.
ஆனால் பனியன் வேஸ்ட் பஞ்சில் இருந்து 10-ம் நெம்பர் கலர் நூல் உற்பத்தி செய்து அதில் இருந்து 10-ம் நெம்பர் பெட்ஷீட்கள் மிக குறைந்த விலையில் உற்பத்தி செய்யப்பட்டு வட இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.
பெட்ஷீட்கள் உற்பத்தி செய்யும் விசைத்தறிகளுக்கு கூலி மிக குறைவாக கொடுப்பதால் மிகவும் தொழில் நசிந்து வருகிறது. அதனால் தற்போது வழங்கும் கூலியில் 20 சதவீதம் உயர்வு வழங்க வேண்டும் என பெரிய ஜவுளி உற்பத்தி நிறுவனத்திடம் கோரிக்கை வைத்து கடந்த 5 நாட்களாக அடைப்புதறி விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 6-வது நாளாகவும் போராட்டம் நீடித்து வருகிறது.
அடைப்பு விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தால் ரூ.2 கோடி மதிப்பிலான பெட்ஷீட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.
10-ம் நெம்பர் பெட்ஷீட்கள் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களுக்கு ஆதரவாக தற்போது 2 க்கு 17 நூல் பெட்ஷீட்கள் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், 3 ஆயிரத்திற்கும் அதிகமான விசைத்தறி தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
6 நாட்களாக போராட்டம் தொடந்து வரும் சூழ்நிலையில், ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளர்கள் பேச்சுவார்த்தைக்கு இதுவரை அழைக்கவில்லை.
இந்நிலையில் இன்று சென்னிமலை பகுதியில் செயல்பட கூடிய பெரிய ஜவுளி உற்பத்தி நிறுவனமான பூம்புகார் டெக்ஸ், ஆந்திரா டெக்ஸ், அஜாம் டெக்ஸ், மேகலா டெக்ஸ், சேகர் டெக்ஸ், நந்தி டெக்ஸ், ஆகிய 6 ஜவுளி உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர்களிடம், அடைப்புதறி விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். தற்போது குளிர் காலம் தொடங்கி விட்டதால் வடமாநிலங்களில் பெட்ஷீட் தேவை அதிகரித்துள்ள நிலையில் விசைத்தறிகள் போராட்டம் காரணமாக தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.






