என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இலவச வேட்டி-சேலைகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட காட்சி.
ஈரோட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொங்கல் இலவச வேட்டி, சேலை அனுப்பும் பணி தொடங்கியது
ஈரோடு மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட ஆர்டரில் இதுவரை 80 சதவீத பணிகள் முடிந்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.
ஈரோடு:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது ஏழைகள், விதவைகள், ஆதரவற்றோருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக இந்த ஆண்டு 209 விசைத்தறி தொடக்க கூட்டுறவு நெசவாளர் சங்கம் மூலம் 1 கோடியே 80 லட்சத்து 41 ஆயிரத்து 698 பேருக்கு இலவச சேலையும், 1 கோடியே 80 லட்சத்து 9 ஆயிரத்து, 279 பேருக்கு வேட்டி உற்பத்தியாகிறது. ஒரு வேட்டி மூன்றே முக்கால் மீட்டர், ஒரு சேலை ஐந்தரை மீட்டர் என்ற நீளத்தில் உற்பத்தியாகி வருகிறது.
ஈரோடு மாவட்டத்திற்கு 1.32 கோடி பேருக்கு இலவச வேட்டி, சேலை ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் 48 விசைத்தறி தொடக்க கூட்டுறவு நெசவாளர் சங்கத்தில் 6 ஆயிரத்து 974 விசைத்தறிகள் மூலம் 69 லட்சத்து 74 ஆயிரத்து 170 வேட்டிகள், 8,320 விசைத்தறிகள் மூலம் 62 லட்சத்து 39 ஆயிரத்து 673 இலவச சேலைகள் உற்பத்தி ஆகி வருகிறது.
இதுவரை 80 சதவீத வேட்டி உற்பத்தி செய்யப்பட்டு அரசு வழிகாட்டுதல்படி பல்வேறு ஊர்களுக்கும், வெளிமாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதேப்போல் இலவச சேலை உற்பத்தி விரைவுபடுத்தப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதற்காக அந்தந்த சொசைட்டிகளில் உற்பத்தி செய்யப்பட்ட வேட்டிகள் சேலைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பெண்களை கவரும் வகையில் பார்டருடன் கூடிய காட்டன் மிக்ஸ்டு, பர்பிள் நிறம், ஆரஞ்சு, ரோஸ், பச்சை ஆகிய 4 நிறங்களில் சேலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
தினமும் உற்பத்தியாகும் சேலைகள் டேமேஜ் சரி பார்த்து மடித்து எண்ணிக்கைப்படி அரசு பட்டியல் வழங்கிய ஊர்களுக்கு அந்தந்த சொசைட்டி மூலம் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட ஆர்டரில் இதுவரை 80 சதவீத பணிகள் முடிந்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. மீதி உள்ள 20 சதவீத வேட்டி, சேலை தயாரிக்கும் பணியும் விரைந்து தயாரித்து இன்னும் ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு வேட்டி சேலையும் தரமான முறையில் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story






