என் மலர்
உள்ளூர் செய்திகள்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் 8-ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பரப்பில் அமைந்துள்ள மலைக் கிராமங்களில் பல அரிய தொல்லியல் சின்னங்கள் பரவி கிடக்கின்றன.
பர்கூர், கடம்பூர் தாளவாடி, கேர்மேளம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் வரலாற்றிற்கு முந்தைய கால சின்னங்கள், பாறை ஓவியங்கள், தொன்மைத் தமிழ் எழுத்து வடிவங்கள் கிடைத்துள்ளன. அதிலும் குறிப்பாக பர்கூர் மலைப்பகுதியில் பொதுயுகம் ஐந்து, 6-ம் நூற்றாண்டு எழுத்தமைவு கொண்ட நடுகல் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கூத்தம்பாளையம் வனப்பகுதிக்கு உட்பட்ட நெல்லூர் கிராமத்தின் அருகே உள்ள வனத்தில் 8-ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாக்கை தன்னார்வ அமைப்பை சேர்ந்த சித்தலிங்கன், சுதாகர் நல்லியப்பன், குமரவேல் ராமசாமி ஆகியோர் நெல்லூர், கடம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டபோது இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நடுகல் 86 செ.மீ உயரமும் 75 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது. அக்கல்வெட்டின் எழுத்துக்கள் முழுமையாக படித்தறியக் கூடிய வகையில் இல்லை. எனினும் சில வார்த்தைகள் மட்டும் அடையாளம் காணக்கூடிய அளவில் உள்ளன. ஊர் பகுதியில் நடைபெற்ற கால்நடை கவர்தல் பூசலில் அவற்றை மீட்டு இறந்து போன வீரனின் நினைவாக இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
வீரன் தனது வலது கையில் குறுவாள் கொண்டு, இடது கையில் வில்லம்பு ஏந்திய நிலையில் பகைவர்களை தீரத்துடன் எதிர்கொள்ளும் காட்சி சிற்பமைப்பில் உள்ளது. இந்த வகையான சிற்பமைப்பு தமிழகத்திற்கே உரிய அமைப்பாகும். குறிப்பாக பல்லவர் கால நடுகல் சிற்ப விவரிப்பில் குறிப்பிட்ட காட்சிகளை அதிகமாக காணலாம்.
இதுகுறித்து யாக்கை தன்னார்வ அமைப்பினர் கூறியதாவது:-
கர்நாடக மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள பகுதியானாலும் நடுகல் மரபில் பண்பாட்டு கலப்பு இல்லாமல் காணப்படுவதும் தமிழ் எழுத்து வடிவத்தை பின்பற்றி இருப்பதும், நடுகல் சிற்பங்கள் வடிக்கும் தொழிற்முறை கலைஞர்கள் பல்லவர் நாட்டிலிருந்து சென்றவராக இருக்கலாம் என்றும் கருத தோன்றுகிறது.
மேற்கண்ட நடுகல் கல்வெட்டு உள்ள இடத்தின் அருகாமையில் உள்ள வனப்பகுதியில் ஆங்காங்கே நடுகற்கள் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் 12-ம் நூற்றாண்டிற்கு பிற்பட்டவையாக காணப்படுகின்றன.
ஈரோடு மாவட்டத்தின் வனப்பகுதிகளாக இன்று நாம் அறியப்படும் பகுதிகளில் இருந்து தொடர்ந்து கிடைத்து வரும் தொல்லியல் தடயங்கள் அனைத்தும் காலங்காலமாக மக்கள் புழக்கத்தில் இந்த பகுதிகள் இருந்துள்ளதை காட்டுகின்றன.
மேலும் பர்கூர், தாமரைகரை, ஈரெட்டி மலை வழியாக இன்று நடைமுறையில் இருக்கும் வழிப்பாதையில் 1,500 ஆண்டுகளுக்கு முன் பிருந்தே முக்கிய வணிகப் போக்குவரத்து தொடங்கி நடைபெற்றுள்ளது என்பதை வலுப்படுத்தும் சான்றுகள் கிடைத்த வண்ணம் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






